என் கேள்வியும் ஜெயமோகனின் அவர்களின் பதிலும்

விஷ்ணுபுரம் – வாங்கினோம், படித்தோம் என்று மட்டும் முடிந்து விடும் நாவல் அல்ல. அந்த நாவல் சொல்லும் செய்திகளும், கேட்கும் கேள்விகளும் மிகவும் வித்தியாசமானவை. அதில் சில கேள்விகளுக்கு நம்மிடமே விடை கிடைத்துவிடுகிறது. சிலவற்றிக்கு நம்மால் விடை காண முடிவதில்லை. எனவே விடை தெரிந்தவரை நாட வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. விஷ்ணுபுரம் நாவலை எழுதிய ஜெயமோகன் அவர்கள் வாழும் காலக்கட்டத்திலே நாம் இருப்பதால் நேரடியாக அவரிடமே இந்த கேள்வியை கொண்டு சென்றேன். எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான பிணைப்பு நாவலைத் தாண்டி கடிதம் வரை செல்வது வரவேற்கதக்கதுதானே. எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய இரண்டாவது கடிதம் இது என்றாலும், முதல் கடிதம் நாட்டார் தெய்வங்களைப் பற்றி ஒரு சிறு தேடல் உள்ள மனிதனிடமிருந்து சென்றது. ஆனால் ஒரு வாசகனாக அவருடைய எழுத்தின் தாக்கத்தினால் எழுதிய முதல் கடிதம் இது.இதற்கும் பதில் தந்து தனது வலைதளத்திலேயே பிரசுகம் செய்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி.

 

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம்

 

அன்பு ஜெ,

வணக்கம். தங்களுடைய விஷ்ணுபுரம் நாவலை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை இத்தனை அருமையான வித்தியாசமான நாவல் தமிழில் எழுதப்படவில்லை என்பதை அறிந்தே வாங்கினேன். உங்களின் உலோகம் நாவலையும், காவல்கோட்டத்தையும் வாங்கினாலும், அது என்னை முழுவதுமாக புரட்டிப்போடப் போகிறது என்று தெரியாமல் விஷ்ணுபுரத்தினைத்தான் படிக்கக் கையில் எடுத்தேன்.

ஸ்ரீபாதம் படிக்கும்பொழுது முதலில் பொம்மைக்கடையில் தனியாக விடப்பட்ட குழந்தையொன்று எப்படி கண்ணில்படும் பொருட்களையெல்லாம் எடுத்துவைத்துக் கொள்ள இயலுமோ அப்படித்தான் நீங்கள் விஷ்ணுபுரம் என்ற நகரில் நிகழும் சம்பவங்களை எழுத்துக்களாக வடித்திருக்கின்றீர்கள் என நினைத்தேன். ஸ்ரீபாதத்தின் இறுதி அத்தியாயங்களைப் படிக்கும் பொழுதுதான் எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று எப்படி தொடர்புறுகின்றன என்பது தெரிந்தது. மிக நேர்த்தியான கட்டமைப்பினைக் கொண்ட இந்த நாவலை நான் குழந்தைக்கு ஒப்பிட்டதை எண்ணி வெட்கம் கொண்டேன். வீரன் கொல்லப்படும் இடத்தினை தவிர்த்திருக்கலாமே, ஒரு வாசகனை அழவைத்துப்பார்க்கையில் எழுத்தாளர்களுக்கு என்ன சுகமென்று நினைத்தேன். அதன் பின்தான் எல்லாமும் அந்த சம்பவத்தோடு பின்னிப் பிணைந்து நடக்கின்றன என்பதை உணர்ந்தேன். வீரனுக்காக கவலைகொண்ட மனம், அவன் காலில் மிதிபட்டு இறந்த இருபது பேருக்காக வருத்தம் அடையாதது கண்டு வியந்தேன். அப்போதே விஷ்ணுபுரம் பற்றி உங்களுக்கு எழுதியிருந்தாலோ, வலைப்பக்கத்தில் எழுதியிருந்தாலோ, அது உலகிலேயே விஷ்ணுபுரம் பற்றி ஞானமே இல்லாமல் எழுதியதாக இருந்திருக்கும். இறைவன் அருளால் அந்தத்தவறை நான் செய்யவில்லை. இந்தக்கடிதம் கூட எத்தனை தூரம் ஞானமானது எனத்தெரியவில்லை.

இப்போது ஸ்ரீபாதத்தினை முடித்தும் என்னால் அதைவிட்டு நகரமுடியவில்லை. இந்த நாவல் எழுத்தாளனைப்போல வாசகனையும் களப்பணி செய்ய கட்டளை இடுகிறது. மிகப்பெரும் தேடல்களில் இருந்து கட்டமைக்கப்பட்டவைகள் என்பதால், சிற்ப மரபுகள், யானை, குதிரை சாஸ்திரங்கள் பற்றி வரும் போது அறிவார்ந்த கற்பனை இல்லாமல் வறட்சியாக இருக்கின்றன என் கற்பனைகள். வீரனை சிறுனி என்று வாமனன் குறிப்பிடும்போது அதற்குள் இருக்கின்ற அத்தனையும் அறிந்து கொள்ள மனம் விழைகிறது. மரபுகளையும் சாஸ்திரங்களைப் பற்றியும் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு படித்தால் நாவலின் அடுத்தகட்ட பரிணாமத்தையும் நான் உணரமுடியும் என நம்புகிறேன். லலிதாம்பிகை நகைகளை வர்ணிக்கும்போதும், வைஜயந்தியும் சித்திரையும் தங்களை அழைத்துச்செல்ல வருகின்ற பெண் கூட்டத்தில் இருக்கும் இசைக் கருவிகளைப் பார்க்கும்போதும், குதிரை நாச்சியாரின் பெருமை விளங்கும் போதும் நான் கண்கள் இல்லாதவனாக உணர்கிறேன். உதாரணமாக அந்த இசைக் கருவிகள் எப்படியிருக்கும், அவைகள் எந்த இசையை எப்படி தரும் என்பதையெல்லாம் அறியாமல் ஒளி மங்கியது போல அவர்களை கற்பனை செய்தேன். அவைகளைப் பற்றி எங்கு சென்று படிக்கலாம் என்று சொன்னால் மிக்க கடமைப்பட்டவனாக இருப்பேன்.

ஸ்ரீபாதம் முழுக்க விரவியிருக்கும் கடவுள்கள் இந்து மதத்தில் இருப்பவைகள் என்பதால் கருடன், இந்திரன் என்றவுடன் என்னால் கற்பனை செய்ய இயலுகிறது. ஸ்ரீசக்கரத்தின் அமைப்புகளை உணர முடிகிறது. விஷ்ணுபுர கோவில்களின் பிரம்மாண்டத்தை அறியமுடிகிறது. ஆனால் பௌத்தம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் போதிசத்துவர் என்று வருகிறபோது என் அறிவை நாவல் கேலி செய்கிறது. சென்று அறிந்துவிட்டு பின் வந்து என்னைத் தொடு என்று சொல்வது போல இருக்கிறது. அதிகார வர்க்கத்தின் எதிர்ப்புக் குரல்களும், எளியவர்களின் வாழ்வியல் நெறிகளையும் ஏற்கனவே பல வாசகர்கள் உங்களிடம் தாங்கள் உணர்ந்ததாகக் கூறியிருக்கிறார்கள். இந்து மதத்தில் ஓரினச்சேர்க்கை இருந்ததா என்று ஆச்சரியத்தில் வினவியிருக்கின்றாரகள். என்றாலும் இவைகளை நானும் உணர்ந்தேன் என்று கூறாமல் இருக்க முடியவில்லை.

மஹாபாரதம் போன்ற உறுதியான தளத்தினை விஷ்ணுபுரத்தில் காண்கிறேன். கிளைக்கதைகளும் பெரும் நாவலாக மாற்றமெடுத்து நிற்கும் மரபை, மீண்டும் விஷ்ணுபுரம் வழிவகை செய்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களைப் பற்றியும் ஒரு தனி காவியம் உருவாக விஷ்ணுபுரம் அனுமதியும் தருகிறது. நளன் – தமயந்தி போல விஷ்ணுபுரத்தில் மூழ்கிப்போகும் ஒரு சிறந்த வாசகனால் எழுத்தாளனாகவும் மாற முடியும் என நம்புகிறேன். நமது தலைமுறையிலோ, அல்லது நம் வருங்கால தலைமுறையிலோ விஷ்ணுபுரத்தினை ஆராய்ந்து என் எண்ணத்திற்கு உயிர் கொடுக்கும் நிகழ்வு நடக்குமெனத் தோன்றுகிறது. வெறும் ஒரு பாகம் படித்த சாதாரணமான எனக்கே இந்த விஷயம் தோன்றும்போது, நிச்சயமாக இதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். விஷ்ணுபுரத்தினை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகள், நாவல்கள் வருவதை வரவேற்பீர்கள் என நம்புகிறேன். அப்படி எழுத முனைபவர்களுக்கு தாங்கள் நிச்சயம் வழிகாட்ட வேண்டும்.

நாவலைப் படித்து முடித்ததும் கடிதம் எழுதலாம், இப்போது எழுதினால் அதில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு என்று அறிவு எடுத்துக் கூறுவதை மனம் ஏற்கவில்லை. மேலும் எனக்கு முன்பு படித்தவர்களுக்கு உங்கள் நாவலை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் அவர்களும் உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள இது சந்தர்ப்பமாக இருக்கும் என நினைக்கின்றேன். எனவேதான் இக்கடிதம் எழுதினேன். என்னுடைய எண்ணம் நகைப்புக்குரியதாக இருந்தால் மன்னித்துவிடவும். விஷ்ணுபுரம் அள்ள அள்ளக் குறையாத மணிமேகலையின் அமுதசுரபியாக இருந்தும், அது இந்த நாவலோடு முடிந்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம். நான் இன்னும் இன்னும் விஷ்ணுபுரத்தில் மூழ்கக் காத்திருக்கிறேன்.

நன்றி

அன்புடன்,
ந.ஜெகதீஸ்வரன்.

அன்புள்ள ஜெகதீஸ்வரன்,

விஷ்ணுபுரம் மட்டுமல்ல, ‘கிளாஸிக்’ தன்மை உடைய எந்த நாவலும் வாசிப்புக்கு ஒரு அறைகூவலையே அளிக்கிறது. எந்நிலையிலும் அந்த வாசிப்பு முடிந்துவிடுவதில்லை. ஒரு நாவலை வாசிக்க அனைத்து நூல்களையும் வாசிக்கவேண்டும் என்ற நிலையை அது எப்படியோ உருவாக்கிவிடுகிறது.

விஷ்ணுபுரம் பேசிக்கொண்டிருப்பது நம்முடைய சொந்தப்பண்பாட்டின் உள்ளடுக்குகளைப்பற்றி. நாம் அதை இழந்துவிட்டோம் என்பதனால் இந்தத் திகைப்பு ஏற்படுகிறது. அப்படியென்றால் கோதிக் காலகட்டம் பற்றிய ஒரு ஸ்பானிஷ் நாவல் நமக்கு எவ்வளவு தூரம் அன்னியமானது?அதை வாசிக்க நாம் எவ்வளவு முயற்சிகளை எடுக்கிறோம்? அம்முயற்சிகளில் ஒரு பகுதியை எடுத்தாலே விஷ்ணுபுரத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும்.

உண்மையில் நாவல் அளிக்கும் தகவல்களை ‘முழுமையாகவும் தெளிவாகவும்’ புரிந்துகொள்ளவேண்டுமென்ற கட்டாயமேதும் இல்லை.அத்தகவல்கள் நம்முடைய ஆழ்மனத்தில் எங்கெங்கோ பதிவாகியுள்ளன. அவை நமக்கு ஒரு கனவுநிலையை அளிக்கின்றன. கற்பனையை எப்படியோ தூண்டுகின்றன. நாவல் உத்தேசிப்பதும் அதைத்தான். அந்தக் கனவெழுச்சியும், அதன் மூலம் உருவாகும் படிமங்களுமே அந்நாவல் அளிக்கும் முதல்கட்ட அனுபவம்.

தகவல்களை மேலும் மேலும் அறிந்து விரித்து எடுத்துக்கொண்டே செல்வதென்பது நாவலை மேலும் அறிய வழிவகுக்கும். நாவலின் அடுக்குகள் விரியும். அது நாம் நம்மை, நம்முள் உறையும் நம் பண்பாட்டு ஆழத்தை அறியும் முயற்சியும் கூட. அது எளிதில் சாத்தியமாகாது. நாம் எந்தளவுக்குப் பயில்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

ஆகவே முதல்முறை வாசிக்கையில் முற்றிலும் தகவல்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு வாசிக்கவேண்டுமென்பதில்லை. வாசிக்க வாசிக்க நாவல் விரியலாம். விவாதங்கள் அதற்கு உதவலாம். வாசித்தது நிறைவாகிவிட்டது என்ற எண்ணம் மட்டும் வராமலிருந்தால் போதும்.

ஜெ

மேலும் - 

முதல் கடிதம் – சகோதரனில்

முதல் கடிதம் – ஜெயமோகன் தளத்தில்

இரண்டாவது கடிதம் – ஜெயமோகன் தளத்தில்

தேவனூர் தந்த தொடக்கம்

கோவிலுக்கு செல்லும் சிலர் சடசடவென ஓடி கருவறையில் இருக்கும் கடவுளிடம் கோரிக்கைகளை வைத்து, கனநொடியில் காணாமல் போய்விடுவார்கள். இன்றும் சிலரோ நீண்ட நெடிய வரிசையில் காத்திருந்து கடவுளிடம் சரிவர பேச முடியாமல் கனத்த மனதோடு திரும்பி வருவார்கள். வெகு சிலரே கருவறையை தவிர்த்து கலையின் அழகை ரசிப்பார்கள். அந்த சிலரில் நானும் ஒருவன். சிற்பம், ஓவியம், இசை, நடனம், சொற்பொழிவு, ஆடை ஆபரண வடிவமைப்பு என்று கலைகளின் சங்கமமாக இருக்கும் கோவிலில், சமைத்து பரிமாறப்படும் பிரசாதமும் கூட கலைதான். கோவில் என்பது கலையின் வடிவம். கடவுள் இருக்கும் இடமாக மட்டுமே பார்த்தால் கோவில் பக்தி நிறைந்த இடமாக மட்டுமே தெரியும்.

இப்போது பக்தி என்பது கூட, கடவுளிடம் தனக்கு இன்னென்ன வேண்டும் என்று பட்டியல் இடுவதும், பத்து ரூபாய் உண்டியலில் போடுகிறேன், பத்து லட்சம் எனக்கு கொடு என்று பேரம் பேசுவதுமாக சுருங்கிப் போயிருக்கிறது. அதையும் குறிப்பிட்ட கோவிலுக்குள் சென்று கோரிக்கை வைத்தால் தான் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. இந்த நம்பிக்கையின் பின்புறம் மிக அழுத்தமான ஓர் அரசியல் ஒளிந்திருக்கிறது. அந்த அரசியல், வணிக ரீதியான லாபநோக்கிற்காக உண்டாக்கப்பட்டது. அதனால் கொஞ்சம் கூட சுயசிந்தனையற்ற ஒரு கூட்டத்தையே அது உருவாக்கி கொண்டிருக்கிறது. அதையும் மீறி சிந்திக்க நினைக்கின்றவர்களால் மட்டுமே கோவிலை வேறு வடிவமாக காண இயலும்.

ஏதோ எனக்கு தெரிந்த இந்த சிறு விஷயங்களை ஆவணப்படுத்தலாம் என கடந்த 2010 ஏப்ரல் மாதத்தில்http://hindutreasure.blogspot.in/ என்ற வலைப்பூவை தொடங்கி எழுதவும் செய்தேன். அந்த மாதத்தில் 5 பதிவுகளை மட்டுமே இட்டேன். அதில் ஒன்று தொடக்கம், மற்றொன்று படங்கள் மட்டுமே கொண்டது. இவைகளை தவிர்த்துப் பார்த்தால் மூன்றே இடுகைகள் கொண்ட வலைப்பூ அது. காலமாற்றத்தால் அந்த வலைப்பூவை நானே புறக்கணித்தேன். எத்தனை பேர் வந்து படிக்கின்றார்கள் என பார்க்க தெரியாததால் அந்த வலைப்பூ வாசகர்களாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று எண்ணினேன். வரவேற்பே பெறாத எழுத்துகள் எதற்கு என விலகி இருந்து, வருடம் இரண்டு ஓடிவிட்ட நிலையில்,.. ஒரு வாசகரின் மின்னஞ்சல் மூலம் அந்த வலைப்பூவின் உண்மைநிலையை உணர்ந்தேன். எழுதிய அந்த மூன்றே கட்டுரைகள் என்றாலும் அதை தங்கள் புத்தகத்தில் இணைத்துக் கொள்ள அனுமதி கேட்டார் அந்த நண்பர். மகிழ்ச்சியுடன் ஆச்சரியமும் வந்தது. அந்த தளத்தினை நான் மறந்தே போயிருந்தேன். ஆனால் என் பெயரை தாங்கி ஆர்.எஸ்.எஸ் புத்தகங்களில் கட்டுரையாக வரும் அளவிற்கு அந்தக் இடுகைகளுக்கு வலிமை இருப்பதை உணர்த்திவிட்டார் அந்த நண்பர். அதை உணர்ந்ததும் இது வரை சேகரித்தவைகளை எழுதலாம் என்ற உந்துதல் ஏற்பட்டது.

தேவனூர் கோவில் அன்றும் இன்றும்
தேவனூர் கோவில் அன்றும் இன்றும்

இதற்கிடையே முகநூல் நண்பர்கள் மூலம் தேவனூர் என்ற தளம் செஞ்சி அருகே சிதைந்த நிலையில் உள்ளது என்றும், அதை நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதுப்பிக்கின்றார்கள் என்பதையும் அறிந்தேன். ஒரு நாள் அங்கு செல்லும் வாய்ப்பும் வந்தது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி செஞ்சிக்கு போனேன். அங்கிருந்து வளத்தி, சேத்பட்டு செல்லும் பேருந்து தேவனூருக்கு கொண்டு சேர்த்தது. கோவிலை தேடி கண்டுபிடித்ததை விட கோவிலுக்குள் எப்படி செல்வது என்று வாயிலை கண்டுபிடிக்கவே பெரும் சிரமாக இருந்தது. கோவிலை சுற்றிலும் நெற்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. கோவிலுக்கான தடம் என்பதோ, சுற்றி வரும் பாதையோ விவசாயிகளுக்கு முக்கியமாக படவில்லை. ஆண்டுக்கணக்கில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கோவிலின் அத்துவரை தங்களின் தேவைக்காக ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள்.

நிறைய நண்பர்களின் அறிமுகம் கிடைத்த அந்த நாளில், நான் இதுவரை சென்று வந்த சிதையாத கோவில்கள் சொன்னதைவிட மிக அதிகமான செய்திகளை அந்த சிதைந்த கோவில் சொல்வதை உணர்ந்தேன். அங்கிருந்த கல்வெட்டில் ராஜராஜ சோழனின் பெயரும், குலோத்துங்க சோழனின் பெயரையும் கண்டேன். ஆர்காடு நவாப் நடத்திய போர்களைப் பற்றிய குறிப்புகள் இந்த கோவிலிருந்து கிடைக்கும் என்று நண்பர் ஒருவர் உறுதியாக கூறினார். கோவில் என்பது கலைகளை மட்டும் சுமந்ததல்ல. அவை மிகப்பெரும் வரலாற்று ஆவணங்கள் கூட. ஒற்றைக் கோவிலிலேயே இத்தனை வரலாறு கிடைக்கும் போது நிச்சயம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோவில்களையும் ஆய்வு செய்தால் கோடிக்கணக்கான செய்திகளும், தமிழனின் வரலாறும் தெரியும்.

இந்த நிலையிலும் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் சிலர். இப்படி வரலாற்றை அழியவிட்டுவிட்டு நாளை அதை தேடினால் எப்படி கிடைக்கும். நாளைய தலைமுறைக்கு சொல்வதற்கு நம்மிடையே சோழனைப் பற்றியும், சேரனைப் பற்றியும், பாண்டியனைப் பற்றியும் அதிகம் தகவல்கள் இல்லை. தமிழனின் விளையாட்டு, வீரம் என்பன பற்றியும் தெரிவதில்லை. ஆனால் அயல்நாட்டவன் பற்றி புத்தகம் எழுதும் அளவிற்கு நம்மிடம் செய்திகள் இருக்கின்றன. தங்கள் இனத்தவரின் பெருமையை அறிவதற்கும், அறிந்து கொண்டமையை சொல்வதற்கும் நம்மிடைய தயக்கங்கள் இருக்கின்றன. இந்த தயக்கங்களை நாம் தகர்க்க வேண்டும். அப்போதுதான் தமிழனின் பெருமையை மற்ற இனத்தவர்களும் அறிய முடியும்.

தோவனூர் கோவிலின் தூண்களில் பலவகையான வேலைபாடுடைய சிற்பங்கள் இருந்தன. அதில் சிலவற்றை எந்தக் கோவிலிலும் நான் கண்டதி்ல்லை. குறிப்பாக அந்த பிரசவ நிலையை விளக்கும் சிற்பம் அருமையானது. சுக பிரசவத்திற்கு பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற சிற்பத்தை வடித்த சிற்பிக்கு, எத்தனை பொது நல நோக்கம் இருந்திருக்க வேண்டும். இறைவனை மட்டுமே கண்மூடித்தனமாக செதுக்காகமல் மக்களின் வாழ்வியல் முறைகளையும் செதுக்கி சென்றவனின் பெயர் கூட அங்கு இல்லை. ஆனால் அவன் நோக்கம் ஆயிரம் வருடங்கள் தாண்டியும் இன்று நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன.

பழங்கால பிரசவ முறையை விளக்கும் சிற்பம்
பழங்கால பிரசவ முறையை விளக்கும் சிற்பம்

இறுகிக் கிடந்த மண்ணை கடப்பாரையை எடுத்து கொத்திவிட்டு மண்வெட்டியால் அள்ளிக் கொடுத்த எனக்கே கையில் காப்பு காய்த்து இரண்டுநாட்கள் சிரமாக இருந்தது. வாரந்தோறும் இரண்டுநாள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர்களின் நோக்கம், மீண்டும் ஒரு சிவன் கோவிலை மக்களுக்கு தருவதல்ல. மண்ணுக்குள் புதைந்திருக்கும் தமிழனின் வரலாற்றை மீட்டெடுப்பது மட்டுமே. பிரதிபலன் பாராது உழைக்கும் அவர்களுக்கு மத்தியில் பாராட்டுக்காக பெரும் தொடரை நிறுத்திய என்னை நினைத்து வெட்கம் வந்தது. தகுதியானவைகளுக்கு தகுந்த அங்கிகாரம் காலம் கடந்தபின்னாவது கிடைக்கும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். அதே உத்வேகத்துடன் இந்து மதம் ஒரு பொக்கிசம் இனி தொடராக இங்கு வெளிவரும்.

மேலும் பார்க்க -
தேவனூர் முகநூல் பக்கம்

நான் யார் தமிழ்தாயே!


தமிழ்த்தாயே,.

நீ ஒரு இந்துவாக இருப்பதால்
தமிழனாக இருக்க முடியாது என்கிறார்கள்

இஸ்லாமியனும், கிறிஸ்துவனும், ஜைனனும்
தமிழனாக இருக்கலாமாம்,.

வீட்டில் அரபு மொழி பேசுபவனும்,
தெலுங்கு, கன்னடம் பேசுபவனும்,
தமிழனாக இருக்கலாமாம்,.

நித்தம் நித்தம்
தமிழ் பேசும் என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

—-

பன்னிரு திருமுறைகள் தந்த எம் பாட்டன்கள்
தமிழன் இல்லையாமே…
தேவராத்திலும் திருவாசகத்திலும் இருக்கும் பாடல்கள்
தமிழில் இல்லையாமே..

கம்பன் பாடியதில் காமம் மட்டும் தெரிகிறதாமே,
சேக்கிலார் பாடியதில் காதல் மட்டும் வழிகிறதாமே,.
பக்தி இலக்கியத்தால் தாயே நீ வளரவில்லையாமே,.

நித்தம் நித்தம்
தமிழையே துதிக்கும் என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

பூவைத்து புடவை கட்டி
ஒய்யாரமாய் நீயும் வந்ததுவிடாதே,
பர்தாவும், கவுனும் அணியாதவர்களை
பாவப்பட்ட தமிழர்கள் ஏற்பதில்லை,.

இங்கே,..
சிறு தெய்வங்களெல்லாம் சாத்தானாக மாறி
பல வருடங்கள் ஆகின்றன.

இப்போது அவர்கள் வந்தால்
வேப்பிலையால் அடிப்பதில்லை,
விளக்கமாறால் அடிக்கிறார்கள்,..

முருகனும், இந்திரனும்,வருனனும்,
கொற்றவையும், திருமாலும் வடநாட்டு சாமிகளாம்,
அயல்நாட்டு சாமிகளான அல்லாவும் ஏசுவும்
தமிழ்நாட்டு சாமிகளாம்!.

அதெல்லாம் இருக்கட்டும்,..

நித்தம் நித்தம்
தமிழையே தாய்மொழி என நம்பியிருந்த என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

சொல்லிவிட்டுப் போ!..

அன்புடன்,

உன் மைந்தன் ஜெகதீஸ்வரன்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

விஷ்ணுபுரத்தின் வாசலில் ஒரு வாசகனாக – ஸ்ரீபாதம்

பொம்மைகள் விற்கப்படும் மிகப் பெரிய கடையில் ஒரு குழந்தையை மட்டும் முழு சுகந்திரத்தோடு விட்டால் என்ன ஆகும். அந்தக் குழந்தை கடை முழுவதும் ஓடும், கண்ணிகளில் படும் பொம்மைகளையெல்லாம் வாரி அனைத்து விளையாடும், சிலவற்றை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்திருக்கும், சிலவற்றை மதிக்காமல் செல்லும், கைக்கெட்டாத பொம்மைகளை நினைத்து ஏங்கும்,.. விஷ்ணுபுரத்தினை பெரும் பொம்மைக் கடையாக நினைத்துக் கொண்டால், அந்த குழந்தைதான் ஜெயமோகன். ஆம் விஷ்ணுபுரம் என்ற கற்பனை நகரில் ஜெயமோகன் ஓடிக்கொண்டே இருக்கிறார். கண்களில் படுபவனப் பற்றியெல்லாம் விவரிக்கிறார். சில கதைமாந்தர்களை புறக்கணிக்கிறார், சிலரை தொடர முடியாமல் தவிக்கிறார். விஷ்ணுவின் பாதத்தின் அழகிலிருந்து இருந்து தொடங்கி, தேவதாசி யோனியின் வலி வரை எல்லாவற்றையும் தன் எழுத்துகளில் வடித்திருக்கிறார்.  ஐம்பது அத்தியாங்களை ஸ்ரீபாதம் எனும் முதல் பகுதியில் படிக்கும் வரை இப்படிதான் தோன்றியது. அடுத்த சில அத்தியாங்கள் இது வரை நினைத்தவற்றை எல்லாம் நொறுக்கி எறிந்தன. நாவலின் மிகவும் அழகிய கட்டுமானம் விளங்கியது. அதுவரை தனித்தனியாக இருந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று அட்டகாசம் என்று சொல்ல வைக்கும். ஸ்ரீபாதத்தின் கடைசி வரிகளை படித்து முடித்தபின் புத்தகத்தினை மூடிவைத்துவிட்டு சிந்தனைக்குள் ஆழ்ந்தேன்.

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம்

அப்பப்பா,.. விஷ்ணுபுரத்தில்தான் எத்தனை செய்திகள், எத்தனை சாஸ்திரங்கள், எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நிகழ்வுகள்,… தொடக்கம் முதல் இறுதிவரை நடப்பவைகள் எல்லாம் கட்டுக்குழையாமல் இருக்கின்றன. சிறிது பிசங்கியிருந்தாலும் எழுத்தாளனை கேலி செய்ய வைத்துவிட்டு வாசகன் சென்றிருப்பான். ஆனால் இங்கு நாவல் வாசகனான என்னை பல இடங்களில் எள்ளி நகையாடியது.  பழங்கால இசைக் கருவிகளைப் பற்றி நாவல் சொல்லும் போது அவைகள் எப்படியிருக்கும், எந்த இசையை வெளிவிடும் என்பதெல்லாம் தெரியவில்லை, நகைகள் பற்றி கூறும்போதும், குதிரை, யானை சாஸ்திரங்களைப் பற்றி கூறும் போதும் கற்பனை வறட்சி ஏற்பட்டது. “தம்பி நீ சென்று இதையெல்லாம் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொண்டு வா”, பிறகு என்னைப் படிக்கும் போது சிறந்த அனுபவம் ஏற்படும் என்று சொல்லவது போல இருந்தது. ஒரே ஒரு ஆறுதல் நாவல் இந்து மதத்தினை தழுவி செல்வதுதான், அதனால் நாவல் கருடன், இந்திரன், ஸ்ரீசக்கரம் பற்றியெல்லாம் குறிப்படும் போது வர்ணனைகள் தேவைப்படாமலேயே அவைகளின் அமைப்பினை உணரமுடிந்தது. பௌத்தம் பற்றிய குறிப்புகள் வரும் போது மறுபடியும் பழைய நிலையே. இனி விஷ்ணுபுரம் ஸ்ரீபாதத்திற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்.

வானளவு பெரிய கோபுரங்களும், அதில் புதைந்திருக்கும் தேவர்களும் யட்சிகளும், செந்நிற சோனா நதியும், முகம், உடல், பாதம் என மூன்று பாகமாய் காட்சிதரும் மூலவரும், காற்றில் ஒலியெழுப்பும் காடா மணிகளும் நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவு பெரியது இந்த விஷ்ணுபுரம், என்ற எண்ணத்தை மனதில் நிறுத்திவிட்ட பின்பே விஷ்ணுபுரத்திற்குள் பிரவேசிக்கின்றோம். தொடக்கத்தில் விரிந்திடும் விஷ்ணுபுரத்தின் உருவகங்கள் எல்லாம் ஓரிடத்திற்கு மேல் பிரம்மாண்டத்தின் உச்சத்தினை கூற முடியாமல் எச்சமாக தொக்கி நிற்கின்றன. எல்லா பிரம்மாண்டமும் நமக்கு ஒருவித பயத்தினை தரும், அதை விஷ்ணுபுரமும் கொடுக்க தவறவில்லை. பிரம்மாண்டத்தின் கூறுகளை சிறு சிறு இடுகைகளாக பகிர எனக்கு விருப்பம். விஷ்ணுபுரத்தின் கட்டமைப்பை கதாபாத்தரங்களாக பிரித்து கூறுகிறேன். இது விஷ்ணுபுரத்தினை பிரித்து தனி தனி கதைகளாக்க இயலும் என்ற எண்ணமே காரணம். மாபெரும் இதிகாசமான மஹாபாரதம் போல எண்ணற்ற குறுங் கதைகளுக்கு விஷ்ணுபுரம் தளம் அமைத்து தருகிறது. நலன் தமயந்தி போல ஒரு காவியம் எழுத கூட பின்னால் வரும் எழுத்தாளர்களுக்கு விஷ்ணுபுரம் வாய்ப்பு தருகிறது. ஒரே சீர் நடையில் விஷ்ணுபுரத்தை விவரித்தால் நிறைய விசங்களை நான் தவற விடக்கூடும் எனவே பொறுத்தருள்க.

வீரன் -
விஷ்ணுபுரத்தின் வீதிகளில் தெருநாய்களைப் போல யானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதிலும் வீரன் என்ற யானை மிக எளிதாக மனிதில் பதிந்துவிடுகிறது. குறும்பு செய்யும் குட்டிநாயின் மீதும், குழந்தை மீதும் ஊற்றெடுக்கும் அன்பு அதன் மீது படுகிறது. நாம் வாஞ்சையும் அதனை தடவ நினைக்கையில், நவீன திரைப் படங்களின் முன்பாதியில் காதல் மிக அழுத்தமாக இருந்தால், காதலனோ, காதலியோ இறந்துவிடுவார்களே அது போல வீரனுக்கும் மரணம் நிகழ்கிறது. தேர்சக்கரத்தில் வீரனின் தும்பிக்கை அடிபட, வலி பொறுக்க இயலாமல் வீதியில் அது ஓட, கலவரத்தினை அடக்க வீரன் வீரபைரவன் என்ற யானையால் கொல்லப்படுகிறது. ரத்த சகதியில் அது மிதக்கின்ற தருனத்தில் நெஞ்சம் கனத்து புத்தகம் கையிலிருந்து விலகியது. எதற்காக வீரன் இங்கே கொல்லப்பட வேண்டும், ஜெயமோகன் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாமே என்று தொன்றியது. அதன் பின் வீரனை கொன்ற வீரபைரவனுக்கு கொடுக்கப்படுகின்ற பாராட்டுதல்கள் வேதனையை மேலும் அதிகப்படுத்தியது. வீரனின் கால்களில் மிதிபட்டு இறந்த இருபது பேரைப் பற்றி சிந்திக்கவோ, பரிதாபம் கொள்ளவோ ஏன் மனம் தயாராக இல்லை. இதைத்தான் எழுத்தாளனாக அவர் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். வீரனை வளர்த்து வைரவன் எனும் பாகன் அழுது புலம்புகையில் அவனோடு நாமும் சேர்கிறோம். ஸ்ரீபாதத்தில் வீரனின் மரணம் தவிர்க்க முடியாத விபத்தாகிறது. அதன் பின்வரும் அத்தியாயங்களில் வீரனின் மரணம் நிகழ்வதால் ஏற்படும் விளைவுகளை காண்கிறோம்.

சங்கர்ஷணன் -

அனிருத்தன், சுதா என்ற இரண்டு குழந்தைகளுடன் சங்கர்ஷணன், லட்சுமி தம்பதிகள் விஷ்ணுபுரத்திற்கு வருகின்றார்கள். சங்கர்ஷணன் ஒரு படைப்பாளி. லட்சுமி குடும்பப் பெண். அனிருத்தன் குறும்புக்காரச் சிறுவன். சுதா?.  காவியத்தை அரங்கேற்ற சங்கர்ஷணன் விழையும் போது சபையில் அவமானப்பட்டு திரும்புகிறான். தன்னுடைய ஆணவம் தன் முன்னாலேயே நிர்வாணமாக்கப்பட்டது கண்டு துயர்கொள்கிறான். பணம் வேண்டும் என்பதற்காக தாசிகளைப் புகழ்ந்து கவிதை எழுதவும் முடிவெடுத்து பத்மாட்சி என்பவளிடம் செல்கிறான். அவளிடம் இருந்து கொண்டே காவியத்தை மீண்டும் எழுத தொடங்குகிறான். இதற்கிடையே அனிருத்தன் கோபுரமொன்று சரிந்து விழுகின்ற விபத்தில் இறந்துவிடுகிறான். அதன் பின் சங்கர்ஷணன் லட்மியிடம் செல்லாமல், பத்மாட்சியுடனேயே தங்கிவிடுகிறான். லட்சுமியும் சுதாவும் தெருக்களில் பஜனை செய்யும் கோஸ்டியுடன் இணைந்துவிடுகின்றார்கள். காவியம் முழுமை பெற்றதும், சபையில் பத்மாட்சியை அருகில் வைத்துக் கொண்டு காவியத்தை இயற்றுகிறான். அதன் பின் அவனுக்கு ஒன்றுமேயில்லை என தோன்ற பத்மாட்சியிடமிருந்து வலகி மீண்டும் லட்சுமியுடன் சேர்கிறான். இருவரும் விஷ்ணுபுரம் இனி வேண்டாம் என முடிவெடுத்து, தூங்கிக் கொண்டிருக்கும் சுதாவுடன் விஷ்ணுபுரத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

வீரன், சங்கர்ஷணனோடு இந்த இடுகையை முடித்துக் கொள்கிறேன். அடுத்த இடுகையில் மற்றவர்களைப் பற்றி பார்ப்போம்.

நன்றி.

இருவேறு படைப்புகள், அரவான் – காவல்கோட்டம்

காவல் கோட்டம் படிக்கும் முன், அரவான் படத்தை பார்த்துவிடுங்கள். இல்லையென்றால் அரவான் படத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும்,… ஒரு வேளை நீங்கள் அரவான் படத்தை பார்த்துவிட்டு காவல் கோட்டத்தை படிக்காமல் விட்டிருந்தால்,.. மேலும் தொடருங்கள்.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் இன்னும் 30 அதிகாரங்களைத்தான் முடித்திருக்கிறேன். அந்த பெரும்மாய மகிழ்ச்சிக்கு இடையே அரவான் படம் வந்து குறுக்கிட்டது. திரைப்படமாக காவல்கோட்டத்தின் கதை வருகிறது என்றவுடன், படம் பார்த்த பிறகு புத்தகத்தினை படிக்கலாம் என முடிவு செய்திருந்தேன். காரணம் கதைமாந்தர்களை நாம் என்னதான் கற்பனை செய்தாலும் படமிட்டு காட்டுவதை போல கற்பனை செய்ய முடியாது. மேலும் அவர்களின் இடங்கள், ஆபரணங்கள், செய்கைகள் போன்றவற்றை ஆசிரியர் சொன்னால் மட்டுமே சரியாக கற்பனை செய்ய முடியும். சென்ற வாரம் அரவான் படத்தினை பார்த்துவிட்டு வந்தபிறகு, வசந்தபாலனுடன் மதன் அவர்களின் பேட்டியை காண நேர்ந்தது. அதில் எகப்பட்ட தகவல்களை அள்ளி வீசினாரர் வசந்தபாலன்.

காவல் கோட்டம் நாவலின் “மாயண்டி கொத்து” எனும் பகுதிதான் படமென்றார். அஞ்சலி வரும் காட்சிகளையும், சின்ன ராணி வருவதையும் தன்னுடைய சேர்க்கை என்றார். ஒருவர் கற்பனையை கடனாக பெற்று அதையே தன் கற்பனையில் மாற்றி கொடுத்திருப்பதை உணர்ந்தேன். சு.வெங்கடேசனின் உண்மையான அரவான் கதை என்ன என்பதை அறிய காவல் கோட்டத்தை கையில் எடுத்து புரட்டினேன். “நான்கு ஐந்து பேர்தான் மாயாண்டியோட கொத்து” என்ற வரி 282ம் பக்கத்தில் சிக்கியது. அடுத் சில பக்கங்களில் “சின்னான்” என்பதைக் கண்டதும். தேடியது கிடைத்துவிட்டது என்ற மகிழ்வு கிட்டியது.

அலுவலகத்தின் உணவு இடைவெளியி்ல் காவல் கோட்டத்தில் கலந்தேன். கொம்பொதிக்கு பதில் மாயாண்டி என்று தொடங்குகையிலேயே நாவலில் இருந்து திரைப்படம் வேறுபட்டிருப்பதை உணர்ந்து கொண்டேன். அரவான் படத்தில் சொல்லாத சில இருப்பதையும், சொல்லிய பல இல்லாமல் இருப்பதையும் கதையுடன் பயணிக்கையில் கண்டுகொண்டேன். திரைப்படத்தின் நடுநடுவே வந்த கேள்விக்கெல்லாம் பதில் நாவலில் இருக்கிறது.

நீங்கள் அரவான் படத்தை பார்த்திருந்தால்,.. சின்னான் களவு செய்ய தவளும் போது தேவையில்லாமல் ஒரு பூனை குறுக்கே செல்வதை கவணித்திருக்கலாம். எல்லோரும் கயிறை எடுத்து மலையில் ஏறுவது போல இருக்கும் கோட்டையூரில் கொம்பொதியை காப்பாற்ற அத்தனை மாடுகள் எப்படி நுழைந்தன என்ற கேள்வி எழுந்திருக்கலாம். சின்னானை கண்டுபிடிக்க செல்லும் கொம்பொதியைப் பார்த்து எகத்தாளமாக சிரிக்கும் ஆந்தை அங்கிருப்பதற்கான காரணத்தையும், களவிற்கு முன் மொண்டிக்கொம்பை கன்னம் இட்ட சுவறுக்குள் விட்டு கருப்பின் உத்திரவு வாங்குவதன் பின்புலமும் நாவலை படித்தால் மட்டுமே புரியும். உதாரணத்திற்கு இறுதியாக சொன்ன மொன்டிக்கொம்பு பழக்கத்தை எடுத்துக் கொள்வோம், நடுவப்பாளையம் கனகலிங்கம் பிள்ளை வீட்டுக்கு கன்னம் வைக்கப்போன தாதனூர் ராக்கன் கொத்து கிளம்பிச் சென்று கன்னம் வைத்த துளை வரியாக மொண்டி உள்ளே தலையை விட்டபோது தலை கரகரவென்று அரியப்பட்டு காலைப்பிடித்து இழுத்தவர்களுக்கு முண்டம் மட்டும் கிடைப்பதும், கொங்குப் போரில் மூக்கு அறுபட்ட மொண்டியின் தலை ஒரு ஆதாரமாக ஆகும் என்று உணர்ந்து ஓடிப்போன தாதனூர் ராக்கன் குழு திரும்பி வந்து அந்தத் தலையை அழிப்பதும் இன்னொரு உத்வேகமான அடுத்த சித்தரிப்பு.

அதிலிருந்து கன்னம் வழியாக முதலில் ஒரு கம்பில் துணி சுற்றி உள்ளேவிடும் மரபு உருவாகிறது. அதற்கு மொண்டிக்கொம்பு என்றுபெயர்நடுவப்பாளையம் கனகலிங்கம் பிள்ளை வீட்டுக்கு கன்னம் வைக்கப்போன தாதனூர் ராக்கன் கொத்து கிளம்பிச் சென்று கன்னம் வைத்த துளை வரியாக மொண்டி உள்ளே தலையை விட்டபோது தலை கரகரவென்று அரியப்பட்டு காலைப்பிடித்து இழுத்தவர்களுக்கு முண்டம் மட்டும் கிடைப்பதும், கொங்குப் போரில் மூக்கு அறுபட்ட மொண்டியின் தலை ஒரு ஆதாரமாக ஆகும் என்று உணர்ந்து ஓடிப்போன தாதனூர் ராக்கன் குழு திரும்பி வந்து அந்தத் தலையை அழிப்பதும் இன்னொரு உத்வேகமான அடுத்த சித்தரிப்பு. அதிலிருந்து கன்னம் வழியாக முதலில் ஒரு கம்பில் துணி சுற்றி உள்ளேவிடும் மரபு உருவாகிறது. அதற்கு மொண்டிக்கொம்பு என்றுபெயர்.

திரைப்படத்தின் கதை -
வேம்பூரில் ராஜகளவு செய்யும் கொம்பொதி தன் ஊர் பெயர் சொல்லி களவு செய்யும் அனாதையான வரிபுலியை கண்டுபிடிக்கிறான். வரிபுலி களவாண்ட ராணி அட்டிகையை திருப்பி கொடுக்க 100 கோட்டை நெல் கிடைக்கிறது. வரிபுலின் களவாடும் திறன் கண்டு கொம்பொதி தன் கொத்துடன் இணைத்துக் கொள்கிறான். ஊரில் சிலர் வரிபுலியை நம்பாமல் மலையில் குடிலை அமைத்து தங்க சொல்கின்றார்கள். களவு செய்யும் இடத்தில் கொம்பொதி மாட்டிக் கொள்ள வரிபுலி காப்பாற்றி வருகிறான். அதை அறிந்த கொம்பொதி தங்கை வரிபுலி மேல் காதல் கொள்கிறாள். தொடர்ந்து வரிபுலியின் செயல்களை கண்காணித்தும் அவனுடைய வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறான் கொம்பொதி.

ஒரு கட்டத்தில் ஜல்லிக்கட்டில் கொம்பொதியை மாடு முட்டிவிட, அவனை காப்பாற்ற தான் காத்துவந்த ரகசியத்தை கூறிவிடுகிறான் வரிபுலி. அதன் பின்பு சின்னிவீரம்பட்டி என்ற ஊரில் இறந்துபோனவனை கொன்றவன் யார்யென தெரியாமல், இறந்தவன் ஊர் மக்களின் கோபத்தை தனிக்க பலிஆளாக தேர்ந்தெடுக்கப்பட்டவன் தான் இந்த வரிபுலியென்றும், அவனுய பெயர் சின்னான் என்பதும் தெரியவருகிறது. காலங்கள் பின்நோக்கி செல்கிறது, சின்னிவீரம்பட்டி மாத்துர் இடையே இருக்கும் பகை நடுவே மாத்துக்காரன் ஒருவன் சின்னிவீரம்பட்டில் இறந்து கிடக்கிறான். மாத்தூர் மனிதர்களின் ரத்தவெறி அடங்க, பாளையக்காரர் ஒருவர் நாட்டாமை போல தீர்ப்பு சொல்கிறார்.

அதுதான் இறந்தவனுக்கு நிகரான இளவட்ட வாலிபன் ஒருவனை பலிதருவது, அதில் சின்னான் தேர்ந்தெடுக்கப்படுகிறான். 30நாள் குறித்து அவனை பலியிடும் நாளை அறிவிக்கின்றார்கள். அதற்குள் சின்னானை காதலிக்கும் ஒரு பெண் அவனையே திருமணம் செய்து கற்பமாகிறாள். சின்னானும் இன்னும் சிலரும் இறந்து போனவனை கொன்றது யார் என தேடுகிறார்கள். இறுதியில் தீர்ப்பு வழங்கிய பாளையக்கார்தான் உண்மையான குற்றவாளி என்று சின்னான் அறியும் தருவாயில் பாளையக்காரர் இறந்துவிடுகிறார். எந்த ஆதாரமும் இல்லாத சின்னான் இறுதியாக மாத்தூர்காரர்கள், சின்னிவீரம்பட்டி, வேம்பூர்காரர்கள் முன்நிலையில் தன்னைதானே வெட்டிக்கொண்டு இறக்கிறான்.

நாவலின் கதை -
(ஜெயமோகன் அவர்கள் எழுதிய கதைசுருக்கம். நன்றி.)
தாதனூர் பெயரைச் சொல்லி தாதனூர்காரர்களுக்கு முன்னதாகவே சென்று திருடும் சின்னானை மாயாண்டி கண்டு பிடிக்கிறான். மாயாண்டி ராஜகளவு செய்யும் தாதனூர்காரன். அந்த நிபுணத்துவத்தை மெச்சி சின்னானை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். ஆனால் பிற ஒருவனை களவூராகிய தாதனூர் ஊருக்குள் விடுவதில்லை. ஆகவே சின்னான் அமணர் மலையின் குகைகளில் தங்கிக் கொள்கிறான். அவனும் தாதனூர் கொடிவழிதான் என்பதை மாயாண்டி அறியும் இடம் தாதனூரின் மாறாத ஆசாரத்திற்கும் குல முறைகளுக்கும் சான்று. தேவிபட்டினத்திலிருந்து திரும்பி வரும் வழியில் கருப்பு கோயிலில் ஒரு தூக்கம் போடுகிறார்கள். அப்போது சின்னான் தாதனூரின் குலதெய்வமாகிய சடச்சி ஆலமரத்தின் பெரும் தூர் பக்கமாகச் சென்று ரகசியமாக அதைக் கும்பிட்டுவிட்டு வந்துதான் கருப்பனைக் கும்பிடுகிறான். ஆகவே அவன் தாதனூர்க்காரனே என்று தெரியவருகிறது.

சின்னானை விரும்பி ஊர்ப்பெண் ஒருத்தி அவனுடன் சென்று அமண மலையில் குடித்தனம் இருக்கிறாள். ஆனால் சின்னான் தான் யார் என்பதை அவளிடமும் கூறவில்லை. கடைசியில் அது தெரியவருகிறது. சின்னிவிரன் பட்டியைச் சேர்ந்த நல்லையாதான் அவன். பக்கத்து ஊரைச்சேர்ந்த ஒருவன் சின்னிவீரம்பட்டியில் வந்து இரவு தூங்கும்போது தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொல்லப்பட்டவனின் ஊர் பழிவாங்க வரும்போது சின்னிவீரம்பட்டிக்காரர்கள் சமரசம் பேசுகிறார்கள். அதன்படி நல்லையாவை பதிலுக்குப் பலி கொடுக்க ஒத்துக்கொள்கிறார்கள்

நல்லையாவை ஊரே கொண்டாடுகிறது. உணவூட்டுகிறது. சீராட்டுகிறது. அவன் மரணநாள் நெருங்கி வருகிறது. உயிருக்குப் பயந்த அவன் தன் தாயின் ஊரான தாதனூருக்குச் சென்றுவிடுகிறான். தாதனூரின் வாக்கை உதறி வாழ்க்கைப்பட்டு போன ஒரு பெண்ணின் மகன் அவன். நல்லையாவுக்குப் பதிலாக பகை ஊருக்கு பலி அளிக்கப்பட்டவனின் பிள்ளைகளுக்கு நல்லையா என்ற சின்னானை பலிகொள்ள உரிமை இருக்கிறது. அவர்கள் வந்து சின்னானை கொல்கிறார்கள். தாதனூர் அவனை சின்னிவீரம்பட்டியிடம் இருந்து காப்பாற்றவில்லை.

வசந்தபாலன் இதெல்லாம் சின்ன விஷயம் என்று விட்டுவிட்டவையெல்லாம் பெரியாதாக தெரிகின்றன. அதற்காக அவரை ஒட்டு மொத்தமாக குறை சொல்லிவிட முடியாது. குறைசொல்லவும் கூடாது. கதாநாயகியின் மார்பு மடிப்புகளில் மயங்கிக் கிடக்கும் திரையுலகை கள்ளர்களின் வரலாற்று பக்கங்களை பதிவு செய்து 10 ஆண்டு கால வெங்கடேசனின் உழைப்பை எளிய மக்களுக்கும் சென்று சேர்த்தமைக்கும், பசுபதி, ஆதி போன்ற நடிகர்களை திறன்பட பயன்படுத்தியமைக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். இருந்தாலும் குமணாண்டியின் தங்கை செல்லாயி கணவனுக்கு துருப்பு கொடுத்துவிட்டு வந்து, ஆசைப்பட்ட சின்னானை திருமணம் செய்வதை ஒருதலை காதலாக ஏன் மாற்றினார் என்று வசந்தபாலனை நிச்சயம் கேட்கவேண்டும். இப்படி பெண்கள் செய்வதை எல்லாம் மறைத்து மறைத்து வைத்துதான், இன்று வரை இந்த உலகம் பெண்களுக்காக ஒரு புனித தன்மை உண்டாக்கி தன்னை தானே ஏமாற்றி கொண்டிருக்கிறது. அதுசரி யார் அந்த குமணாண்டி யார் என கேட்கின்றீர்களா. காவல் கோட்டத்தின் 282ம் பக்கத்தை புரட்டுங்கள் நண்பர்களே…

சுதந்திர தேவி சிலைப் பற்றி சில தகவல்கள்

சுதந்திர தேவி சிலை

சில வாரங்களுக்கு முன் தொலைக்காட்சியில் நேஸ்னல் ரிடசர்ஸ் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தின் ஓரிடத்தில் நாம் மிகவும் அறிந்த சுகந்திர தேவின் சிலை உலகில் மூன்று இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டு, உலக அதியத்தில் ஒன்றான ஈபில் டவரின் பின்புறம் ஒரு சுகந்திர தேவி சிலை இருப்பதை காட்டியிருப்பார்கள். சுகந்திர தேவி சிலையை அமேரிக்காவிற்கு பிரான்ஸ்தான் கொடுத்தது என்பதை கேள்வியுற்றிருந்ததால், மனதிற்குள் அந்தக் காட்சியில் பார்த்தது உண்மையாக இருக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. பேச்சுவாக்கில் நண்பர்களிடம் கேட்ட போது ஹாலிவுட்டில் எதைவேண்டுமானாலும் கற்பனை செய்வார்கள் அதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளாதே என்றார்கள். இருந்ததும் கொஞ்சம் நப்பாசையில் இணையத்தில் தேடியபோது கிடைத்தவையே இனி,..

சுதந்திரதேவி அளவுகள்

சுதந்திரதேவி சிலையின் அளவுகள்

சுகந்திர தேவி சிலை அமெரிக்கைவின் நியூயார்க் நகரின் துறைமுக நுழைவு வாயிலில் உள்ளது. ஒரு கையில் புத்தகத்தினை அனைத்தப்படி, மறுகையில் ஜோதியை உயர்த்தியபடி வைத்திருக்கும் இந்த சிலையின் உயரம் 151 அடி. ரோமானிகளின் சுகந்திர கடவுளின் உருவமான இந்த சிலையின் கால்களில் உடைந்த சங்கிலி அமைப்பு உள்ளது. இப்போது புரிந்திருக்கும் சுகந்திர தேவியென்று. பிரான்ஸ் மக்கள் அமெரிக்காவின் 100 சுகந்திர தினத்திற்காக தந்தமையால் “சுகந்திர தேவி சிலை”யென அழைக்கப்பட்டாலும், பிரான்ஸில் இதன் பெயர் “Liberty Enlightening the World” என்றே கூறப்பட்டது. Frédéric Bartholdi என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அவருடைய முழுப்பெயர் Frederick Auguste Batholdi என்பதாகும். சுதந்திரதேவி சிலைக்கு ஆதாரமான வடிவம் “Statue of Freedom” என்றழைக்கப்படும் சிலையிலிருந்து பெறப்பட்டது. இதனை தாமஸ் க்ராஃபோர்ட் என்பவர் வடிவமைத்தார். இந்த பெண் சிலை வலது கையில் போர்வால் ஒன்றை பிடித்தபடி, இடது கையில் கேடயத்தோடு மலர்வளையம் ஒன்றையும் அணைத்துள்ளது. மேலும் தலையில் இராணுவ ஹெல்மெட் போன்றதை அணிந்து கொண்டுள்ளது. இந்த சிலை ஒய்யாரமாக நிற்பதை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

பூங்காவிலும் தீவிலும் இருக்கும் சுகந்திர தேவிகள்

திரைப்படத்தில் குறிப்பிட்டது போல நியூயார்க் துறைமுகத்தில் மட்டுமல்லாமல்,.. பாரிசின் Seine நதியில் Swan Ally தீவிலும், Luxembourg பூங்காவிலும் உள்ளது இந்த சுகந்திரதேவி சிலையுள்ளது. தீவில் உள்ள சிலை பிரான்ஸ் புரட்சியின் நினைவாக நிறுவப்பட்டது. இதன் உயரம் 35 அடி. மிகவும் புகழ்பெற்ற ஈபில் டவர் அருகே அமைந்துள்ளது என்பதால் இரண்டையும் ஒரு சேர பார்க்கலாம் என்பதே சிறப்பு. அடுத்ததாக பூங்காவில் இருப்பது எல்லாவற்றையும் விட சிறியது. 15ந்தே அடி என்றாலும் மற்றவை போல தனிதீவில் இல்லாமல் அழகான பூங்காவில், பூக்களோடும் மரங்களோடும் இருப்பது வித்தியாசமான ஒன்று.

முத்துக்குமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

ஈழத்திற்காக தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. தற்கொலைகள் அசட்டுதனமானவை என்ற எண்ணம் எப்போதும் என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது. படிக்க சிரமாக இருக்கிறது, வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்ற காரணங்கள் முதற்கொண்டு சமூகத்தின் ஏளனத்தால், கடன் தொல்லையால், கௌரவத்தின் இழுக்கால் என தற்கொலைக்கு பல முகங்கள். கொள்கைக்காக உயிர் துறப்பது என்பதை கொஞ்சம் மாறுபட்டே எண்ணத் தோன்றுகிறது. தன்னலத்தையும் தாண்டி நிற்கின்ற அந்த செயல் கொஞ்சம் மனம் நெகிழ வைக்கிறது. ஆனால் அதன்பின்னே அந்த தற்கொலைகள் செய்தவைகள் என்ன?. உண்மையைச் சொன்னால் பலன் பூஜ்ஜியம்தானே. இப்படி வீனாகப்போன ஒரு தியாகத்தின் நினைவு நாள் பொருட்டு கொளத்தூர் பகுதியில் நிகழ்ந்தவைகள் இங்கே.

குளத்தூர் வேலவன் நகரின் சாலை, பிரதான சாலை என்றெல்லாம் சொல்ல முடியாத சாலை. என்னுடைய அலுவலகம் உள்ள இங்குதான், இறந்த முத்துக் குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்ததாகவும், அருகில் எங்கேயோ அவரின் வீடு இருப்பதாகவும் கூறினார்கள். சென்ற வருடம் இன்றைவிட பிரம்மாண்டமாக இருந்ததாக நினைவு. பூக்களால் அளங்கரிக்கப்பட்ட கூம்பு இம்முறை சிறுத்திருந்தது. மக்கள் கூட்டம், கடைகள், பேனர்கள் என எல்லாவற்றிலும் வறுமை தெரிந்தது. சென்ற முறை திருமாவளவனை இங்கு பார்த்தேன். இன்று வைகோவை பார்க்க முடிந்தது. பிரபலங்களை தேடிச் சென்று பார்த்தாலே காணமுடியாத இன்னைய காலக்கட்டத்தில் இந்த வாய்ப்பு கொஞ்சம் பெரியதாகவேப்பட்டது. வைகோவை என் அலுவல மாடியில் இருந்தே தெளிவாக பார்க்க முடிந்தது. அது வரை எப்போதும் போல வெறிச்சோடியிருந்த சாலை பல்வேறு வாகனங்களால் திணறியது. ஆங்காங்கே நின்றிருந்த ஆண்,பெண் காவலர்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்து நின்றார்கள்.

தலைவர்களின் வருகைக்கு முன்-பின்

வைகோவும், தாடிவைத்த ஒரு பெரியவரும் கோசம் போட சுற்றியிருந்த சிலர் அதை திருப்பிச் சொன்னார்கள். சென்ற வருடம் திருமா இதைதான் செய்தார். ஆனால் இம்முறை கைப்பேசியில் அதை காணொளி எடுத்துக் கொண்டேன். நீண்டதொரு முழக்கங்கள் நின்றபின் வைகோ வாகணத்திற்கு திரும்பினார். இரண்டு வீடியோ கேமராவுடன் நிருபர்கள் வர வைகோவை சுற்றி நிறைய பேர் சூழ்ந்து கொண்டனர். தொலைக்காட்சியில் வருதற்கு மக்களுக்குத்தான் எத்தனை ஆர்வம். வைகோ பேசுவதை என்னால் கேட்கமுடியவில்லை. அவர் வாகணத்தில் சென்று அமர்ந்து கொண்டார். அவர் கிளம்ப முற்படுகையில் சிவப்பு வண்ண கொடியேந்தி சிலர் வீரவணக்கம் கோசமிட்டபடி வந்தார்கள். அவர்கள் கையில் முத்துகுமாரின் மார்பளவு சிலையும், தீப்பந்தமும் இருந்தது. பின் அவர்கள் நினைவிடத்திற்கு வந்து கோசம் போடும்போது வைகோவும் வந்து சேர்ந்து கொண்டார்.

அவர்கள் மக்கள் மன்றம் சார்ந்தவர்கள் என அப்போது கூறினார். பின் மக்கள் மன்றத்தினர் கொண்டுவந்த தீ்ப்பந்தம் வைத்து புகைப்படங்களுக்கும் வீடியோவிற்கும் போஸ் கொடுத்தார். மக்கள் மன்றத்தினர் அதை எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள் என தெரியவில்லை. அதன்பின் அலுவக வேலையில் ஈடுபட வேண்டியதாகிவிட்டது. திருமாவும் வந்திருந்தார் என நினைக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் வீரவணக்கம் என்று குரல் கேட்டது. இன்னும் எண்ணற்ற பிரபலமாகாத இயங்கள் வந்திருந்தார்கள்.

திமுக,அதிமுக,தேதிமுக ஏன் பாமக போன்ற கட்சிகளை காணவில்லை. வந்திருந்தவர்களும் நினைவிடத்தில் நின்று சிரித்துக் கொண்டே புகைப்படம் எடுத்துக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டினார்கள். புத்தகங்கள் விற்கப்பட்ட தற்காலிக கடையில் கோள்கள், ராசிகள் குறிப்பிட்ட வரைபடத்தில் கோள்களை குறைசொல்ல மனிதனுக்கு அருகதையேயில்லை என்று எழுதப்பட்டிருந்தது. சிலர் அணுமின் நிலையத்திற்கு எதிராக பேசிக் கொண்டார்கள். புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் எப்படிபட்ட நடவெடிக்கைகளை அரசு மேற்கொண்டிருந்தது என தெரிந்தவர்கள் நிச்சயம் அணுமின் நிலையத்தை வரவேற்க்க மாட்டார்கள் தான்.

குரல்களும் கோசங்களும் சிறிது சிறிது நேரம் கேட்டு ஓய்ந்து போயின.காலையில் சிலமணிநேரம் பரபரப்பாக இருந்த சாலை, மதியமே எப்போதும் போல அமைதியாக மாறிற்று. தியாகிகளின் புகைப்படத்தோடு வீரப்பனின் புகைப்படமும் இருப்பதாக சொன்னார்கள். அருகில் சென்று பார்த்தேன். எனக்கு செங்கொடியைத் தவிற வேறுயாரையும் தெரியவில்லை. வீரப்பனின் என்று சொல்லப்பட்டவர் வேறுமாதிரியாக தெரிந்தார். அங்கிருந்த மலர்வலையத்தில் மலருக்கு பதிலாக வெறும் தென்னங்கீ்ற்றுளே இருந்தன. இயக்கங்களின் பொருளாதார நிலையா இல்லை மனமா என வைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ஜனவரி 29 என்ற ஆவணப்படத்தின் சீடிகவர் வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த புகைப்படத்தில் இருப்பவர்களின் பெயர்களையாவது அறிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இனத்திற்காக இறந்தவர்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். வீட்டிற்கு வந்ததும் தொலைக்காட்சியில் எம்.ஜி.ஆர், அண்ணா சமாதிகளை சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருந்தது. ம்.. அங்கு நடக்காததா இங்கு நிகழ்ந்தது என மனம் நினைத்தது.

மேலும் -

வைகோ முத்துகுமாருக்கு வீரவணக்கம் செய்தமை காணொளியாகக் காண இங்கு சொடுக்கவும்.

வாசிப்பின் இடைவேளையில் சில வரிகள்

இந்த வருட புத்தக கண்காட்சிக்கு புத்தகங்களை தேர்வு செய்யும் போது, இலக்கியத்துவமான படைப்புகளை தேர்ந்தெடுத்தேன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்பு. எண்ணற்ற சிபாரிசுகளும், சாகித்ய அகாதமி விருதும் இந்த புத்தகத்தினை தேர்வு செய்ய வைத்தன. நாஞ்சில் எழுத்துகளை முதன்முறையாக நான் படிக்கப்போகிறேன் என்ற ஆவல் இருந்ததே தவிற வேறு ஒன்றும் பெரியதாக தோன்றவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் என் வாசிப்பு அனுபவத்தை புரட்டி போடப் போகிறது என்பதை எண்ணிக் கூட பார்க்கவில்லை.

இப்போது நான்கு கதைகளை தான் படித்து முடித்திருக்கிறேன். அதற்குள் இதுதான் சிறுகதை என இதுநாள் வரை நான் நினைத்திருந்த பின்பத்தை உடைத்தெரிந்துவிட்டன இந்த சிறுகதைகள். இயல்பான காட்சியமைப்பு இறுதியாக ஒரு மாறுபட்ட முடிவு என குமுதம், குங்குமம் வாரப் புத்தகங்களில் ஒரு பக்கத்தில் வருவதையோ, சில பக்கங்களில் காட்சிகளை விளக்கி நீதி சொல்லும் நீதிநெறிக் கதைகளோ, பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகளையோ வடிவத்தில் ஞாபகம் செய்யாமல் செல்லுகின்ற ஒவ்வொரு கதைகளையும் ரசித்து ரசித்து படித்தேன்.

இன்னும் படிக்க பதினொரு கதைகள் இருக்கின்றன என்பது, ஏதோ புதையலில் கிடைத்த தங்க காசுகளைப் போல மகிழ்ச்சியை தந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையின் தொடக்கமும் மிகுந்த கவணத்தோடு காட்சிகளை விவரிக்கின்றன. அந்தக் காட்சிகள் மனகண் முன் விரிகையில் அது கதை என்பதை மறந்து போயி அதற்குள் புதைந்து விடுகிறேன். தாய்கிழவியின் கணிவோடு தான் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக அந்தக் கதை சொல்லிவிட்டு முடிந்துவிடுகிறது. அதன்பின் அந்தக் கதையின் மாந்தர்கள் அதன் நிகழ்விடங்களில் சிறுது நேரம் மனத்திற்குள் வாழ்கின்றார்கள். அவர்களை அப்படியே விட்டுவிட்டு மனம் வேறு காரியங்களில் நுழைய மறுத்து மௌனமாக இருக்கிறது.

ஏதேனும் ஒரு கனத்தில் நான் உணர்ந்தவைகளை எழுத்தின் வடிவில் பார்ப்பது, எனக்கும் அந்த கதைகளுக்குமான இடைவெளியை இல்லாமல் செய்துவிடுகின்றன. கதைகள் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். சிலருக்கு இது வெறும் பிதற்றலாக தோன்றலாம். சிலருக்கு வேடிக்கையாக கூட இருக்கலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கருதும் ஒரு மகிழ்வான கனத்தினை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

கல்கியின் பார்த்திபன் கனவிற்கு அடுத்து இப்போதுதான், பெரும் எதிர்பார்ப்புடன் ஒரு நாவலை படிக்க தொடங்கியிருக்கிறேன். அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல். பார்த்திபன் கனவினை படிக்கும் போது, நான் பள்ளி செல்லும் மாணவன். மாலையில் கிடைக்கும் நேரத்தி்ல் எல்லாம் நாவல் என்னுடன் இருந்தது. குதிரையின் குளம்படி சத்தமும், வால்களில் ஓசையும், அந்தபுற ராணிகளின் குதுகல ஒலிகளும் மனகாதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்ததன. ராஜேஸ்குமார், சுபா என திரில் நாவல்களை படிக்கும் போது, அப்பா திட்டியிருக்கிறார். ஆனால் பார்த்திபன் கனவினை படிக்கும் போது ஒன்றும் சொல்லவில்லை. இந்த வாசி்ப்பு தளம் நோக்கி என்னை பயணப்பட வைத்தது அவர்தான் என நினைக்கிறேன். இதற்குதான் அவர் ஆசைப்பட்டிருக்கவும் கூடும்.

சரி விஷ்ணுபுரத்திற்கு வருவோம். வலைப்பூவில் ஜெயமோகன் அவர்களின் எழுத்துகளையும், சில கதைகளையும் படித்திருக்கிறேன். அவரை சிலர் இந்துத்துவாதி என குறிப்பிடுகின்றனர். எப்படி அமெரிக்காவில் கிருஸ்துவம் பற்றிய நிறைய படைப்புகள் வருகின்றனவோ, அதுபோல இங்கே இந்துமதம் பற்றிய படைப்புகள் வருகின்றன. அது வியாபார தந்திரமோ, சுற்றியிருக்கும் சமூகத்தின் காரணமாகவோ, இல்லை பெரும் காவியங்களின் பாதிப்போ எதுவென தெரியவில்லை. இந்து மதம் பிடிக்காத நடிகர்களை கூட வேலு, வேலாயுதம் என நடிக்கவைக்கும் காரணமும் அதுவாகத்தான் இருக்கும்.

இப்போதுதான் விஷ்ணுபுரத்திற்குள் நுழைந்திருக்கிறேன். பிரம்மாண்டமான கோவிலைக் கொண்ட விஷ்ணுபுரத்தில் விஷ்ணு படுத்திருப்பதைப் போல அங்கே ஒரு குஸ்டரோகியும் படுத்திருக்கிறான். அதைக் கண்டு ஒருவன் நிறைய சிந்தனை செய்கிறான். இல்லாத ஒரு கற்பனை நகரமன அதை எண்ணாமல், எங்கள் திருச்சி மாவட்டத்தின் திருவரங்கத்தினை மனதில் நிறுத்தி கதையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். விஷ்ணுபுரமும், திருவரங்கமும் எனக்கு ஒன்றாகவே தோன்றுகின்றன. என் கற்பனையில் விஷ்ணுபுரம் திருவரங்கத்தின் பெரும் உருவகமாகவே தோன்றுகிறது. காற்றில் ஒலியெழுப்பும் தூண்கள், மிகப் பிரம்மாண்டமான கோபுரங்கள், விஷ்ணு படுத்திருக்கும் விதம் என எல்லாம் ஏற்கனவே அறிமுகமானவையாக இருப்பதால், இது புனைவு என்பதை அடிக்கடி மறந்து போகிறேன். தொடக்கமே அலாதியாக இருக்கிறது. இன்னும் சரியாக பத்து அத்தியாங்கள் கூட படிக்காமல் விஷ்ணுபுரம் பற்றி மேலும் கூற இயலாது. எல்லாம் படித்துவிட்டு வருகிறேன். என்னுடைய வாசிப்பு அனுபவம் போல நீங்களும் உணர்ந்திருந்தால் நிச்சயம் அந்த புத்தகம் பற்றி கருத்துரையில் மறக்காமல் குறிப்பிடுங்கள் நண்பர்களே.

குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி

ஒரு புறம் தேவைகள் இன்றி குவிந்து கிடக்கும். மறுபுறம் தேவைகள் இருந்தும் ஒன்று கூட இருக்காது. பெரும்பாலும் பணம் பற்றி கூறப்படும், இந்த வாசகம், ஏனோ எல்லாவளங்களுக்கும் பொருந்திப் போகிறது. “அந்த சனியன் இந்த தடவையும் பொண்ணையே பெத்து தொலைச்சுட்டா சார்” என்று சலித்துக் கொள்ளும் அப்புவுக்கும், “போகாத இடமில்ல சார், அவ வயித்துல புழு கூட வைக்க மாட்டேங்கு”துன்னு ஏக்கமாய் சொல்லும் சுப்புவுக்கும் சுமையும், சுகமும் குழந்தைதான். “மேடுகளை உடைத்து பள்ளங்களை நிரப்புங்கள்” என்ற தத்துவ வார்த்தையின் மதிப்புமிக்க செயல்தான் “தத்து”. என் உறவினர் ஒருவர் தத்து எடுப்பதற்காக குழந்தையின் பெற்றோரிடம் வாய்மொழி அனுமதி பெற்று குழந்தையை வளர்த்து வந்தார், சில காலம் கழித்து அந்தக் குழந்தையின் தாய்க்கு குழந்தை திரும்ப பெறுகின்ற எண்ணம் வந்துவிட்டதால், தத்து எடுத்த குழந்தை மீண்டும் பெற்றோரையை அடைந்தது. பேச்சு வார்த்தை மூலமோ, பூஜைகளோ செய்து வி்ட்டு குழந்தைகளை தத்து எடுத்தல் இப்போதெல்லாம் செல்லாது என்பதை அவர் உணர்ந்தார். சட்டங்களை அறிவது பற்றிய கவணக்குறைவு எல்லாக் காலங்களிலும் நம்முடன் வருவது.

சட்டப்பூர்வமாக தத்து எடுப்பது பற்றியும், தத்து கொடுப்பது பற்றியும் அறிந்து கொள்ள இந்த புத்தக கண்காட்சியில் “குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி,..” என்ற புத்தகம் கிடைத்தது, அந்தப் புத்தகம் குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்கள் இனி,..

அரசு அனுமதி பெற்ற தத்து கொடுக்கும் அமைப்புகள் (Licenced Adoption/Placement agencies) மூலம்தான் தத்து பெறமுடியும். இவற்றை FIT person Institute என்று மத்திய அரசு அழைக்கிறது.

தத்து எடுப்பது தொடர்பான சட்டங்கள் -
1. Hindu Adoption and Maintenance Act(HAMA) – 1956 இந்துக்களுக்கானது.
2. Guardians and wards Act – 1890(GWA) மற்ற மதத்தினருக்கானது.

சில விதிமுறைகள் -

  1. குழந்தை தத்து எடுத்துக் கொள்ளப்பட சட்ட விதிகளின்படி தடையின்றி இருக்க வேண்டும்.
  2. குழந்தை 6-வயதிற்கு மேல் இருந்தால் வாய்மொழி மற்றும் எழுத்து மூலம் தத்து எடுத்துக் கொள்ளப்படுவதாக குழந்தை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  3. உடன்பிறந்தோர் – இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கக் கூடாது.
  4. தம்பதியருக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்கதாலும் தத்து எடுக்கலாம்.
  5. ஒற்றைப் பெற்றோரும்(ஆண் / பெண் தத்து எடுக்கலாம்
  6. ஒரு ஆண், பெண்ணைத் தத்து எடுக்க விரும்பினாலும் அல்லது பெண், ஆணைத் தத்து எடுக்க விரும்பினாலும் தத்து எடுப்பவருக்கு குழந்தையை விட 21 வயது அதிகமாக இருக்க வேண்டும்.
  7. தாய் அல்லது தந்தை வயது 35-க்குள் இருப்பது நல்லது.
  8. குழந்தை தனது சொந்தப் பெற்றோரிடமிருந்து மொத்தமாகப் பிரிய வேண்டும். வயது வந்த பிறகு சொந்த பெற்றோரோடு சேர நினைத்தாலும் முடியாது.

திருமணம் ஆகாத ஆண், பெண், முறையான விகாரத்து பெற்றவர்கள் அல்லது வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். தத்து எடுத்துக் கொள்பவர்களுக்கு 18 வயதிற்கு மேலும் நல்ல மனநலத்துடனும் இருக்கவேண்டும். ஆனால் திருமணம் ஆனவர்கள் வாழ்க்கைத் துணைவர்/துணைவி சம்மதத்துடன் தத்து எடுக்கலாம். ஒன்றிக்கும் மேற்பட்ட வாழ்க்கை துணையிருந்தால் அனைவரின் சம்மதமும் அவசியம்.

பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் டாக்டர்.என்.கங்கா அவர்களால் எழுதப்பட்ட இப்புத்தகத்தில் இப்படி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் நிரம்ப இருக்கிறது. விலை 5 ரூபாய்.

35வது சென்னை புத்தக கண்காட்சி அனுபவங்கள்

சென்னை புத்தகாட்சிக்கான விளம்பரங்கள் வர ஆரமித்ததுமே ஏன்டா வேலை கிடைத்தது என இருந்தது. சென்ற வருடம் தினம் தினம் திருவிழாவிர்கு சென்று புத்தங்களோடு இருந்த மாதிரி இவ்வருடம் இருக்க முடியவில்லை. ஆனாலும் ஒரு ஆனந்தம் இம்முறை உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தினைக் கொண்டு புத்தகம் வாங்கியதுதான். ஞாயறு மட்டும் தான் எங்கள் அலுவலம் விடுமுறை. அன்று கண்காட்சிக்கு சென்றால் புத்தங்களை நெருங்கக் கூட முடியாது என்பதால், பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் முன் நாளை தேர்ந்தெடுத்தேன். இனி புத்தக திருவிழாவில் நான் தொலைந்து போனதைப் பற்றி,..

நேற்று (11.01.2012) அலுவகம் முடிந்து கண்காட்சிக்குள் நுழையவே 5.00 மணி ஆகியிருந்தது. இதற்கே அனுமதி வாங்கி அலுவலகம் முடியும் முன்பே கிளம்பியிருந்தேன். வழக்கமாக வாங்கும் புத்தகங்களை விடுத்து சில நல்ல இலக்கியங்களை தேடலாம் என சில நாட்களாக வலையில் எஸ்.ரா, ஜெயமோகன் சிபாரிசுகளை குறிப்பெடுத்திருந்தேன். அந்தப் பட்டியலோடு, புத்தக பதிப்பகங்களின் பெயர்களையும் எழுதிவைத்திருந்தேன். அந்தப் காகிதம் நம்பிக்கையை கொடுத்தது.

அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் மட்டுமே கொண்டாடும் மனிதர்களுக்கு மத்தியில் எழுத்தார்களை கொண்டாடும் வகையில் வழிநெடுகிலும் ப்ளாஸ்க் பேனர்கள் வரவேற்றன.சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ரா, சாரு, வைரமுத்து என பிரபல எழுத்தாளர்களு்ககு மத்தியில் புதியதாக சிலரும் இருந்தார்கள். அதிலும் குமுதத்தின் பேனர்களில் தமிழே தெரியாத சில நடிகைர்களும், நடிகைகளும் எங்களுக்கு பிடித்தது என சிலவற்றை சொல்லி வரவேற்றார்கள். தமிழனிடம் புத்தகம் வி்ற்க எந்தளவிற்கு நிறுவனங்கள் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருக்கின்ற என்பதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.

கண்காட்சியை முதலில் ஒரு முறை சுற்றிவந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வன் ஐந்து தொகுதிகளாகவும், ஒரே புத்தகமாகவும் பல்வேறு விலையில் விற்கின்றன. விகடன் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற பொன்னியின் செல்வன்தான் மிக அதிகமான விலையில் இருந்தது. வரலாற்று நாவல்களுக்கான வாசர்கள் எப்போதும் குறைவதேயில்லை. ரமணிசந்திரன், சாண்டல்யன், கல்கி என இப்போதும் எழுத்துகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுடன் சுஜாதாவும் சேர்ந்துவிட்டார். பல ஸ்டால்களில் ஆன்மீகம் ஊற்றெடுத்து ஓடியது. மழைக்கு கூட மக்கள் ஒதுங்காத சில ஸ்டால்களும் இருந்ததை பார்க்கும் போது பகிரென்றது. இன்று எல்லாவற்றையும் விளம்பரங்களே தீர்மானிக்கின்ற என்ற உண்மையை அவர்கள் உணர்ந்திருந்தால், இந்நிலை வந்திருக்காது என நினைக்கிறேன். இஸ்லாமிய ஸ்டால் சென்ற முறை பெரியதாக இருந்தது, அங்கு வாங்கிய குரான் இன்னும் பத்திரமாக இருக்கிறது. ஆனால் ஸ்டால் இம்முறை சிறியதாகிவிட்டது. அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர் சிவ புராணம் புத்தகத்தினை ஹிந்தியில் வேண்டுமென கூறியிருந்தார், கீதா பதிப்பகம் என்பதில் இருப்பதாக கூறினார்கள். அவரை கைப்பேசியில் அழைத்து செய்தியை சொன்னேன்.

அப்படியே பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களை குறித்துக் கொண்டேன். முதலில் பட்டியலிருந்த ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் நாவலை வாங்கி எனது புத்தக வேட்டையை ஆரமித்தேன். உலோகம் நாவலுக்காக கிழக்கு பதிப்பகத்தினை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் சடசடவென மழை பொழிய துவங்கியது. வெளியிலிருந்தவர்கள் உள்ளே வந்ததால் கூட்டம் அதிகமானது. எனக்கோ புத்தகங்களை எப்படி வீட்டிற்கு கொண்டு செல்வோம் என்ற கவலை வந்தது. அதானால் மழை நிற்கும் வரை புத்தகங்களை வாங்கமலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். வ.உ.சி பதிப்பகத்தில் மழை நீர் மிக அதிகமாவே ஊற்றியது, பிளாஸ்க் பேனர்கள் கைக் கொடுத்தன. வழி தடத்தில் ஒழுகியதை யாரும் பொருட் படுத்தவில்லை. குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி,.. என்ற புத்தகம் பாரதி புத்தகாலயத்தில் கிடைத்து. பழைய மர பாலத்தில் ஒரு சம்பவமும் புத்தகத்தினை தேடினேன். கிடைக்கவில்லை. அருகிலிருந்த உதவியாளரிடம் கேட்டேன், சிறிது யோசித்துவிட்டு இல்லையென்றார்.

கைப்பேசி தொடையை கிள்ளியது, நண்பன் அழைத்திருந்தான், “மச்சி எங்கிருக்க?” “புத்தக கண்காட்சியிலதான்”. “அங்க செம மழையாமே. டி.வியில சொன்னாங்க.”, “அதுக்குள்ள டி.விவரைக்கும் செய்தி வந்துடுச்சான்னு” எங்கள் உரையாடல் தொடர்ந்தது. அதற்குள் மழை சுத்தமாக நின்றுவிட்டது. திரும்பி வராது என்ற நம்பிக்கையில் மீண்டும், வேட்டையை தொடர்ந்தேன். அறிவியல் வெளியீடு பதிப்பகத்தில் அறிவியல் புனைகதைகள், போரின் பிடியில் பிஞ்சகள் என இரண்டு புத்தங்களை எடுத்துக் கொண்டேன். நாஞ்சிலின் சூடிய பூ சூடற்க நாவல் ஒன்றே ஒன்று இருந்தது, அதுவும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதை வாங்காமல் நடையை கட்டினேன். ஒரு பதிப்பக்ததில் எம்.ஜி.ஆர் நூல்களை அடுக்கி வைத்திருந்தார்கள், திருநாவுக்கரசு எழுதிடய புத்தத்தினை புரட்டினேன் ” கைது செய்யப்பட்ட சசிகலாவிற்காக அழுத ஜெயலலிதா” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றும் இருந்தது. இன்றைய நிலைய நினைத்துக் கொண்டே இடம் பெயர்ந்தேன்.

தமிழனி பதிப்பகத்தில் காவல் கோட்டம் புத்தகம் ஏறாளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கனத்தினை பார்த்து இறுதியாக எடுத்துக் கொள்ளலாம் என வைத்துவிட்டேன். எழுத்தாளர்களுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் எழுத்தாளர் வெங்கடேசன் வந்திருப்பதாக ஒலிப்பெருக்கியில் கூறினார்கள். ஆவலோடு சென்றேன். பதினெந்துக்கும் குறைவான நற்காளிகளைப் போட்டு ஒரே ஒரு மைக்கினை கொடுத்திருந்தார்கள். வாசகர்கள் கேள்வி கேட்கவும், அவர் பதில் சொல்லவும் மாற்றி மாற்றி அதேயே பயண்படுத்த வேண்டியிருந்ததால் சிரமாக இருந்தது.

காவல் கோட்டம் பத்து வருட உழைப்பு என்பது, அதனை எழுத முடியாது என அவர் மூன்று முறை ஒத்தி வைத்தது என பல சுவாரசியங்கள். மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு இளைஞர் தன்னுடைய மூதாதயர்கள் வாழ்ந்த ஊரினை தேடி வந்திருப்பதாகவும், அவர்கள் நாவலில் குறிப்படப்படும் அந்த புலம்பெயர்வில் மதுரையிலிருந்து வந்தவர்கள் என்பதையும் கூறினார். வியப்பாக இருந்தது. களவுக்கு ஆதாரவு தருகின்றீர்களா, குறிப்பிட்ட ஜாதியைப் பற்றி உயர்வாக எழுதியுள்ளீ்ர்களே, மதுரைக்கு எப்பவுமே நெகட்டிவ் கதைகளை களமாக கொள்ளப்படுகின்றதே என ஏகப்பட்ட கேள்விகள், ஏக்கங்கள். “பாண்டியர்கள், சோழர்கள்,.. என இப்படி இருக்கும் போது எப்போது தமிழன் என்ற பொதுப்பெயர் வந்தது” என்று ஒருவர் கேள்வி கேட்க,.. வெங்கடேசனை பார்க்கும் போது பாவமாக இருந்தது. ஒரு எழுத்தாளனுடனான சந்திப்பு இத்தனை சுவாரசியமாக இருக்கும் என அப்போதுதான் புரிந்தது.

ஜெயமோகனின் உலோகம் நாவலை வாங்க கிழக்கு பதிப்பகத்தில் நுழைந்தேன். ராஜேஸ்குமார் நாவலைப் போன்ற வடிவமைப்பில் உலோகம் இருந்தது. எஸ்.ராவின் உபபாண்டவத்தை வாங்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டே நடந்து வந்ததில் தமிழினி பதிப்பகம் மீண்டும் வந்தது. சரி இம்முறையாவது எஸ்.ராவை விட்டுவிடுவோம் என காவல் கோட்டத்தினை எடுத்துக் கொண்டு பணம் கட்டும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். அதற்குள் என்.டி டிவியில் வந்த ஒரு நிருபர் பணம் பெறுபவரிடம் இங்கே இயக்குனர்களெல்லாம் எந்த புத்தகத்தினை அதிகம் வாங்குகிறார்கள் என்று கேட்க, “எனக்கு இயக்குனர்கள் யாரையும் தெரியாது” என கடுப்படித்தார் அவர். “இளைஞர்கள் எந்தப் புத்தகங்களை வாங்குகின்றார்கள் என மீண்டும் அவர் கேட்க, நான் கண்களை சுழலவிட்டேன். நாஞ்சில் விளம்பரத்தில் சிரித்துக் கொண்டிருந்தார், கீழே சூடிய பூ சூடற்க என்று எழுதியிருந்தது. காவல் கோட்டத்தை அவரிடமே விட்டுவிட்டி நாஞ்சிலின் புத்தகத்தினை தேடி எடுத்துக் கொண்டு பணம் பெறுபவரிடம் வந்தேன். இரண்டிற்கும் பணம் கொடுத்த போது புன்னகையோடு பெற்றுக் கொண்டார்,. உண்மையில் இவருக்கு சினிமா இயக்குனர்களை தெரியாது என்று மனம் சொல்லியது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை புத்தக கண்காட்சியில் கண்டால்தான் உண்டு.

இறுதியாக புத்தக பட்டியலை சரிபார்த்தேன்,. இரண்டு புத்தகங்கள் விடுபட்டிருந்தன். பூம்புகார் பதிப்பகத்தின் ஆயிரத்தியொரு அரேபிய இரவுகள் புத்தகமும், பாரதி புத்தகாலயத்தின் பழைய மர பாலத்தில் ஒரு சம்பவமும் கிடைக்கவில்லை. கோடிக்கண்ககான புத்தகங்களுக்கு மத்தியில் நின்று கொண்டு இரண்டு புத்தகளுக்காக அழுவது சரியாக தோன்றவில்லை. பாரதி புத்தகாலயமாவது கண்களில் தென்பட்டது, பூம்புகாரை பார்க்கவேயில்லை. அண்ணா நூலகத்தில் உள்ளதுபோல ஒரு கணினியில் புத்தகங்களின் தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.