31. 1933 – 34 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். அவர் காந்தியவாதியாகவும், காந்தியை நேசிப்பவராகவும் எப்போதும் இருந்தார். “புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?” என்று பாடியவருக்கு, புத்தர், ஏசுவை விட காந்தியை மிகவும் பிடிக்கும். “காந்தி மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும், புத்தரும் கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்” என்பார்.
32. 1930ம் ஆண்டு வாக்கில் காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்த சமயம். காந்தியடிகள் காரைக்குடிக்கு வருகைதந்தார். அப்போது காந்தியை முதன்முதலாக பார்த்ததாக எம்.ஜி.ஆர் தெரிவித்திருக்கிறார்.
33. “காந்தியக் கொள்கைகளை முழுவதுமாக கடைபிடித்த தலைவர் அண்ணா மட்டுமே. அவருடைய புத்தகங்களை படித்தேன். அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான், தமிழகத்திற்கும், இந்திய துணை கண்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால் தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.” என்று தி.மு.கவில் இணைந்த போதும் காந்திய கொள்கையில் பற்றுள்ளவராகவே இருந்தார்.
34. காந்தியடிகளின் பல்வேறு கொள்கைகளை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். அதிலொன்று கதர் சட்டை உடுத்துதல். நாடக நடிகராக இருந்த பொழுதிலிருந்து கதர் மீது பாசம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இளம் வயதில் அணிந்திருந்த துளசிமாலையை துறந்தவிட்ட போது கூட, கதராடையை விடவில்லை.
35. அன்பே வா திரைப்படத்திற்கான படபிடிப்பு சிம்லாவில் நடைப்பெற்றது. படபிடிப்பு முழுவதும் முடிந்ததும், டெல்லியில் உள்ள காந்தி, நேரு போன்ற தலைவர்களின் சமாதிக்கு சென்றார் எம்.ஜி.ஆர். காந்தி சமாதியில் மலர்வளையம் வைத்து வணங்கியவர், சமாதியை ஒரு முறை சுற்றி வந்து வணங்கி அங்கேயே அமர்ந்து சில நிமிடங்கள் தியானமும் செய்திருக்கிறார்.
36. “காந்திஜி கூறிய உயர்ந்த கருத்துக்கள், தத்துவங்கள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மது விலக்கை பற்றி யாராவது வலியுறுத்தினால் அங்கே காந்தி இருக்கிறார். தீண்டாமையை எதிர்த்து எவரேனும் போராடினால் அங்கே காந்தி இருக்கிறார்.உண்மை, எளிமை, அன்பு, நேர்மை ஆகிய பண்புகள் எங்கெங்கு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் காந்தி இருக்கிறார்” என்று காந்தியை நேசித்த எம்.ஜி.ஆர் மதுவிலக்கையும் தீவிரமாக கடைபிடிக்க எண்ணினார்.
37. காந்தியின் கொள்கையில் மதுவிலக்கை மிகவும் நேசித்தார் எம்.ஜி.ஆர். மதுவிலக்கு கொள்கையை அண்ணா கொண்டுவந்த போது அகம் மகிழந்தார். இருந்தும் அரசியல் காரணங்களுக்காக அடுத்தமுறை தி.மு கழக அரசு அதை நிறுத்தியது. அக்காலக்கட்டத்தில் மதுவிலக்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்தார் எம்.ஜி.ஆர். “கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்” என்று யாழ்பாணத்தினைச் சேர்ந்த திரு நித்தி கனகரத்தினம் பாடிய பாடலை, தமிழ்நாட்டின் மதுவிலக்கு பாடலுக்கு தேர்ந்தெடுத்தார் எம்.ஜி.ஆர்.
38. “அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு தான் ஏற்பட்டது. அந்த புன் சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்றும் சித்திரமாக பதிந்து இருக்கின்றன.” என்று காந்தியை பார்த்த போது உணர்ந்தவற்றை பதிவு செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்
39. காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை கொண்டிருந்த எம்.ஜி.ஆர், உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் அரிசி அனுப்பாததைக் கண்டித்து முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர். 10 மணியிலிருந்து உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். உண்ணாவிரதம் தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே மத்திய உணவு மந்திரி ராவ்பீரேந்திரசிங் தொடர்பு கொண்டு டெல்லியில் வந்து பேசும் படி கூறினார். இருந்தும் எம்.ஜி.ஆர் திட்டமிட்டபடி மாலை 5 மணி வரை உண்ணாவிரததினை தொடர்ந்தார்.
40. காந்தியின் கொள்கைகளான மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சேவை, எளிமை, உண்மை, தேசிய உணர்வு என்று அனைத்தையும் நேசித்தவர் எம்.ஜி.ஆர். இதனை நான் கண்ட காந்தி என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழுக்கு பேட்டியாக தந்திருக்கிறார். காந்திப் படத்தையும், அண்ணா படத்தையும் வழிபட்ட பின்பே முதல்வர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
ஆயிரம் புகழ் மாலைகளை நோக்கி…