பிள்ளைக்குப் பெயர் வைக்கும் படலம்

நண்பர்களே எங்களுக்கு கடந்த மாதம் 26ம் தேதி மகள் பிறந்திருக்கிறாள். அவளுக்காக பெயர்களை தேடும் பொழுது வீட்டில் எழுந்த கூத்துகளும் கும்மாளங்களும் அளவில்லாத மகிழ்ச்சி தருபவை. அதனை அவ்வப்போது முகநூல் பகிர்ந்து வந்திருந்தேன். அவற்றின் தொகுப்பு இங்கே.

நான்: அம்மா என்ன பேருமா வைக்கலாம்.
அம்மா: சோசியருக்கிட்ட கேட்டு பிள்ளை நட்சத்திரத்துக்கு ஏத்த மாதிரி எழுத்து தருவாரு.. அதை தெரிஞ்சுக்கிட்டு வைச்சுடலாம்.
நான்: அதுக்கு எதுக்குமா அவர்கிட்டயெல்லாம் போகனும். இணையத்திலேயே இருக்கே..
இணையம்: ட,டு, டி, மோ, மௌ
நாங்கள்:???

மாமா: பாப்பா பிறந்த தேதி என்ன?
நான்: 26-10-2016
மாமா:2+6+1+0+2+0+1+6 பதினெட்டு. 1+8=9. தம்பி.. வைக்கிற பேரு நியூமராலஜிப்படி ஒன்பது வர மாதிரி பார்த்துக்கோ..
நான்: அய்யோ.. இது வேறையா..

நேமாலஜி, நியூமிராலஜி போன்றவற்றோடு சோதிட முறையில் கூறப்படும் நட்சத்திர அட்சரங்களையும் வேண்டாமென மறுத்தோம். தூய தமிழில் வெகு இயல்பாய் அழைக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்றும், பெண் பிள்ளை என்பதால் அதிக பகடிக்கு ஆளாகா வண்ணம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.

ஆதிரை
இளவஞ்சி
உமையவள்
எயினி
எழினி
கலாமயில்
கொற்றவை
கொன்றை
செந்தமிழ் குழல்வாய் மொழி
செம்பாகத்தாள்
நறுமுகை
நன்முல்லை
பிறப்பறு செல்வி
புவியேழ் பூத்தவள்
பூங்குயில்
மகரி
மகிழ்
மஞ்சரி
மதங்கி
மதிராட்சி
மயூரி
மோதயந்தி
மோய்
மௌவை
யாழினி
வெண்ணி

என ஓரளவு ஈர்த்த பெயர்களை முகநூலில் இட்டபோது, கனடாவில் வாழுகின்ற தமிழறிஞர் செல்வக்குமார் ஐயா, தமிழ்ப்பரிதி மாரி, விஜி பழனியப்பன் போன்றவர்கள் இப்பட்டியலில் உள்ள தமிழல்லாதவைகளை இனம் கண்டு ஒதுக்க உதவினார்கள்.

செந்தமிழ் குழல்வாய் மொழி – மிக நெடியப் பெயர், கொற்றவை – வெம்மையின் தெய்வம், எயினி – இடையர் பெண் என்பதாலும் தொடக்கதிலேயே மறுக்கப்பட்டுவிட்டன. அதன் பின்பு வெண்ணி என்பதை பன்னி என்று பகடி செய்ய ஏதுவாக இருக்கும் எனவும், பூ என்பதை கல்லூரிப் பெண்கள் வேறு ஒன்றுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதால் பூங்குயிலும் விலகியது.

எழினி, கொன்றை, நறுமுகை, மகிழ், யாழினி இவைகளில் சிற்சிற மாறுபாடுகளோடு புதிய பெயர்களை இட்டுப் பார்க்கிறோம். எல்லாவற்றையும் விட மகிழினி, மகிழ் சிவனி, சிவக்கொன்றை, யாழிசை, யாழினி என விரிகிறது. அதிலும் யாழ் வகைகளுடன் இணைத்து யாழிசையும் யாழினையும் கொண்டுவர முயன்றோம்.

யாழ் – பண்டைய இசைக்கருவிகளில் ஒன்று. இதுவே தற்போதைய வீணையின் தாய்க்கருவி என்கிறார்கள். யாழைப் பற்றி எண்ணற்ற இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளது. எனினும் இங்கு அது வழக்கிலிருந்து அழிந்து போயிற்று. வெளிநாடுகளில் இன்னமும் யாழினைப் பயன்படுத்துகிறார்கள். மிகவும் போற்றப்படும் யாழ் வகைகளுள் மகர யாழ் கவர்ந்தது. அதனால் மகரயாழினி, மகரயாழிசை என்ற பெயர்களையும், மருத நிலத்தினை சார்ந்து எங்கள் குடும்பங்களில் பெயர் வைப்பது வழமை என்பதால் மருதயாழினி, மருதயாழிசை என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.

மகர யாழாள் – மகர யாழினை ஆள்பவள் –

finiyal

மகரயாழ் மீட்டும் பெண் – மகரயாழாள்

யாழினி, யாழிசை என்ற பெண் பெயர்கள் யாழின் இசையையும், அதன் இன்பத்தினையும் கூறுபவை. யாழை மீட்டுபவள் என்ற சொல்லாக்கத்திற்காக கௌதம் நீல்ராஜ் என்பவர் யாழ் மகிழி என்ற பெயரை கையாண்டுள்ளார். யாழினால் ஆன இசையால் மகிழுபவள் என விரித்து பொருள் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். யாழினை மீட்டுபவள் என்றே பொருள் தர யாழ் + ஆள் – யாழாள் என்பதே சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

இந்து தொன்மவியலில் மகரம் என்பது யானை, முதலை, பறவை, மீன் என உயிரினங்களின் கலவை. மகரயாழ் கிரேகத்திலிருந்து நமக்கு கிடைத்திருக்க கூடும் என்று கருதுகிறார்கள்.

மகர யாழில் பத்தொன்பது நரம்புகள் இருந்திருக்கின்றன. இதனுடைய இசை யானையையும் வீழ்த்தக் கூடியது என்றும், யாழினை ஒரு போர்க்கருவியாகவே தமிழர்கள் உபயோகித்தார்கள் என்றும் ஒரு தகவல் உள்ளது.

ஒரு முறை விக்கிப்பீடியாவிலும் இணையத்திலும் இயங்குகின்ற செங்கைப் பொதுவன் ஐயா, தன்னுடைய புத்தகத்திற்காக ஒரு ஓவியத்தினை கற்பனை செய்யும் படி கூறினார். அதில் ஒரு ஆண் யாழினை மீட்டும் பொழுது அருகே ஒரு யானை மயங்கி நிற்பதாக இருக்க வேண்டும் என்றார்.

வையம் உடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் – இவ்விரவில்
கேட்டவா என்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து.
– புகழேந்திப் புலவர் (நளவெண்பா)

கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்
– கம்பராமாயணம்

தகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகர யாழின் வான்கோடு தழிஇ – மணிமேகலை

மகர யாழ் வல்ல மைந்தன் ஒருவனைக்கண்ட மத்தப் புகர் முகக் களிற்றின்…”  மேருமந்திரப் புராணம் (வச்சிராயுதம்-31)

தமிழில் மகரம் என்பது மீனைக் குறிப்பது. மகரக்கொடியோன் என்ற மீனைக் கொடியாக உடைய மன்மதனைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். தமிழ்ப்படி பார்த்தால் மகர யாழ் என்பது மீனின் வடிவுடைய யாழ். ஆனால் சமசுகிருதத்தில் மகரமீன், மகரமச்சம் என்றெல்லாம் கையாளுகின்றனர். மகரம் என்பதே சமசுகிருதமாக இருக்கலாம் என்றொரு கருத்து இருந்தாலும், இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளது என்பதால் ஒரு துணிவு இருக்கிறது. மரகயாழினை மீன்யாழ் என மாற்றவும், அதுகுறித்தான இலக்கிய செறிவும் இல்லை. எனவே மகரத்தினை விட மனமில்லாமல் இருக்கிறோம்.

மருதயாழிசை –

தமிழரின் ஐந்திணைகளுள் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலம். இத்திணையில் மருதயாழ் இசைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த யாழினைப் பற்றியும் இலக்கியங்களில் செய்திகள் இருக்கின்றன. எனினும் இதன் அமைப்பு குறித்து சரியான ஆய்வு விளக்கம் இணையத்தில் இல்லை. இதனுடைய இசையானது எவ்வாறானது என்பது பற்றி மட்டுமே செய்திகள் உள்ளன. மதுர யாழ் என்பது அமைப்பு ரீதியில் இல்லாமல் ஒரு பண்ணாக மட்டுமே இருந்திருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.

பூம ரும்புனல் வயற்களம் பாடிய பொருநர்
தாம ருங்கிளை யுடன்றட மென்மலர் மிலைந்து
மாம ருங்குதண் ணீழலின் மருதயாழ் முரலுங்
காமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.
– சேக்கிலார் (பெரியபுராணம்)

நன்றி.

கதைகளும் நானும் – விடலை ஞாபகங்கள்

கதைகளும் நானும் – மழலை ஞாபகங்கள் ன் தொடர்ச்சி,..

சிறுவர் மலரில் தொடங்கிய என் வாசிப்பனுவபம் வாரமலர், குமுதம், ஆனந்தவிகடன் என சிற்றிதழ்களாக நீண்டது.  சிற்றிதழ் கதைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொஞ்சம் சிற்றின்பமும் இணைந்தன.  மலரின் வாசனையில் மதிமயங்கிய வண்டென மனம் தள்ளாடின. அதன் புரிதலை நோக்கிய பயணத்தில் புராணக் கதைகளில் கூட இதுவரை தெரிந்த கதைகளிலேயே சில சம்பவங்கள் உடன் சேரத் தொடங்கின.  பாஞ்சாலிக்கு ஐந்து கணவன்கள், தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள், இராமனின் மனைவிக்கு இராவணன் ஆசை கொண்டது என கதைகளின் அடிநாதம் காமமாக இருந்தது.

உடலுறவு என்பதை வெறுத்தோ, குழந்தைகளுக்கு சொல்ல மறுத்தோ புராண, இதிகாசங்களில் ஒரு நகைப்புக்குறிய விசயத்தினை செய்திருப்பார்கள். குமரன் சிவ நெற்றி பொறியில் இருந்து பிறந்தான், வினாயகன் சக்தியின் அழுக்கில் இருந்து பிறந்தான், ஐயப்பனை மன்னன் கண்டெடுத்தான் என்று கதையளந்திருப்பார்கள். மகாபாரதத்தில் பாண்டு இறந்தபிறகு குந்திக்கு ஐந்து மகன்கள் பிறந்தன என்றும், ஒவ்வொருவரின் தந்தையும் எமன்(தர்மனின் தந்தை), வாயு(பீமனின் தந்தை), இந்திரன்(அர்ஜூன்னின் தந்தை), அஸ்வினி தேவர்கள்(நகுலன்,சகாதேவனின் தந்தை) என்று சொன்னவர்கள். மந்திரத்தால் பிறந்தவர்களாக சுட்டியிருப்பார்கள். அதனால்தான் கண்ணனும், இயேசுவும் கன்னித்தாய்க்கு பிறந்தவர்களாக மாற்றியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

நல்லவேளை சிற்பிகளும் அவ்வாறு நினைக்காததால் பாலியல் கல்வி கோயில் சிற்பங்களாக இருந்துவந்துள்ளன. அம்மையும் அப்பனும் சொல்லிதர தயங்கும் சங்கதிகளெல்லாம் சப்தமின்றி அங்கிருந்தன. கோயிலே கதியென இருந்த அந்தகால மக்களுக்கு இதெல்லாம் சாத்தியப்பட்டு இருந்திருக்கலாம். கருவறை மட்டுமே பிரதானமாக மாறியிருக்கும் இந்த காலத்தில் நிச்சயம் கோவில்சிற்பங்களால் பலனில்லை. காரைக்கால் அருகே இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் 500 ரூபாய் தரிசன நபர்கள் மட்டுமே ராஜகோபுரம் வழியாக நுழைய முடியும். விழாக்காலங்களில் வாசலில் ஆரமிக்கும் இரும்பு தடுப்புகள், சனீஸ்வரை நமக்கு காட்டிவிட்டு மறுபடியும் வாசலுக்கே கொண்டுவந்து விட்டுவிடும். பிறகு எங்கிருந்து கோயில் சிற்பங்களை கண்டுகளிப்பதெல்லாம்.

ஒவ்வொரு ஆணின் பருவ வயது ஒரு சிக்கலான நூல்கண்டினைப் போன்றது. அதன் சிக்கல்களை நீக்க முடியாமல் நூல் முழுவதையும் வீணாக்கிவிடுகின்றதைப் போல வாழ்க்கையை வீணடித்த ஆண்களே இங்கு அதிகம். வெகுசிலரே அதன் சிக்கல்களை புரிந்துகொண்டு வாழ்கின்றார்கள். இந்த சமூகத்தின் கட்டமைப்பில் ஆண்களின் நிலையை விட பெண்ணின் நிலை மிகவும் தெளிவானதாக இருக்கிறது. அவளுக்கு அன்னை, பாட்டி என எல்லோரும் உதவி செய்ய காத்திருக்கின்றார்கள். போதாக்குறைக்கு சமூலநல இயக்கங்களும் உடனிருக்கின்றன. ஆனால் ஆணின் அருகில் வரக் கூட தகப்பன்மார்கள் விரும்புவதில்லை. சமூகமும் அதன் பொறுப்புணர்வில்லாமல் ஊமையாக இருந்துவிடுகிறது. அதனால் முட்டிமோதி பருவத்தினைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்படுகிறது.

என் சகவயது தோழர்களும் ஏறக்குறைய இதே நிலையில்தான் இருந்தார்கள். அவர்களிடமும் பல கேள்விகள் இருந்தன, விடையின்றி. எங்கிருந்து இதற்காக விடைபெறுவது. இணையம் அறிமுகம் இல்லா காலம் என்பதால் ஒரே உபாயம் புத்தகம் மட்டுமே. அறிமுகமானது குறுநாவல் படிக்கும் வழக்கம். ஒரு கதாநாயகன் கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதிலிருந்து கதை ஆரமிக்கிறது. அவன் அவளுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நேரம்கால கணக்கின்றி அவளை அனுபவிப்பதிலேயே குறியாக இருக்கிறான். அவள் அன்னையிடம் புகார் கூறும் போது, அன்னை அதை அலட்சியம் செய்கிறாள். இப்படி போகின்ற கதையின் இறுதியில் அவளின் தகப்பன் இறந்ததை கூட மறைத்து இரவு முழுதும் அவளுடன் கழித்துவிட்டு காலையில் சொல்கிறான். அதனால் கோபம் கொண்டு அவள் வெளியேறுவதாக முடிகிறது கதை. எது புரிந்த்தோ இல்லையோ, இவ்வகை கதைகளை படிப்பதால் கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று நன்கு புரிந்தது.

ஆனாலும் பருவக் கதைகள் சகதோழர்களிடம் ஏகம் இருந்தன. வழிவழியாக நாடோடிப் பாடல்களைப் போல கடத்தப்பட்டுவந்த அது, இன்னமும் வரிவடிவம் பெறாமல் இருக்கின்றன. சில எழுத்தாளர்கள் சுஜாதா, கி.ராஜநாராயணன் போல துணிந்து எழுதினாலும் அதெல்லாம் முதல் மழைதுளி போன்றதே. இன்றும் கடலளவு கதைகள் காற்றோடு காற்றாய் பரிமாறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. தேர்ந்த எழுத்தாளர்களால் எழுத்துருவம் பெறும் கதைகள் திரிதலுக்கும் உட்படுகின்றன. நாட்டார் பாடல்கள் போல அப்படியே ஆவணம் செய்தல் கடினமே. மூன்றாம் தர எழுத்தாளர்களால் எழுதப்படும் கதைகளில் நான் மேலே கூறிய எதையும் நீங்கள் பெற முடியாது. காமத்தினை காசாக்க நினைப்பவர்களின் கதையில் சதை வர்ணனை தவிற ஏதையும் எதிர்பார்க்க முடியாது. 13+, 18+ என வயதுவரையரை செய்தாலும் கதைகளுக்கு வயதில்லை.

இதில் ரசனை மிகுந்த நகைச்சுவை கதைகளும் ஏராளம். விடுதியின் ஞாயிறுகளில் மேடைமீதேறி ஒவ்வொருவராய் கதை பகிர்ந்திருக்கிறோம். மண்குடம் கதை சொல்லி நான் அமர்ந்த பிறகு அரங்கேறிய கதைகளால் விடுதியறை வெட்கம் கொண்டிருக்கும். குபீர் சிரிப்பலைகளை அடக்கி விடுதி கண்காணிப்பாளரிடமிருந்து தப்பிய அனுபவங்களை எத்தனை தோழர்கள் பகிர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதே கேள்விக் குறிதான். இறுக்கமாக இருக்கும் நம் சமூகத்திலேயே இத்தனை கதைகள் புழங்குகையில், வெளிநாடுகளில் எளிமையான  காமிக்ஸ் வரை சென்றது வியப்புகுறியதல்ல.

பாலுறுப்புகளின் அமைப்பினையும், செயல்பாட்டினையும் பள்ளி பாடபுத்தகம் கற்றுக் கொடுத்தாலும், வாழ்வியல் சந்தேகங்களை அவைகள் கண்டுகொள்வதில்லை. காமகதைகளும் உதவாது என்றானபோது, ஏன்?ஏதற்கு?எப்படி? என்பதில் வாசகர் சுயஇன்பம் பற்றி கேட்ட கேள்விக்கு சுஜாதா விடை எழுதியிருந்தார். எதார்த்த உண்மையானது கதையில் வருவது போல கற்பனையல்ல என்று உணர்ந்த போது, நாராயணரெட்டி, ஷாலினி போன்ற மருத்துவர்களின் நூல்கள் கிடைக்க தொடங்கின. இதெல்லாம் இணையமென்ற பரந்தவெளி அறிமுகமி்ல்லா காலத்தில் நிகழந்த ஒரு விடலை வாழ்வியல் நிகழ்வுகள். இப்போதிருக்கும் விடலைகளுக்கு இதைவிட அதிக கதைகள் கிடைத்திருக்கலாம், இல்லை கிடைக்கப்பெறாமல் கூட போயிருக்கலாம். கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள் என்று சொல்லமுடியாத போது என்ன கவலை?

பி.கு –

விரசமின்றி எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இருப்பினும் விரும்பாதவர்கள் பொருட்செய்யாதீர்கள்.