சென்னை புத்தகாட்சிக்கான விளம்பரங்கள் வர ஆரமித்ததுமே ஏன்டா வேலை கிடைத்தது என இருந்தது. சென்ற வருடம் தினம் தினம் திருவிழாவிர்கு சென்று புத்தங்களோடு இருந்த மாதிரி இவ்வருடம் இருக்க முடியவில்லை. ஆனாலும் ஒரு ஆனந்தம் இம்முறை உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தினைக் கொண்டு புத்தகம் வாங்கியதுதான். ஞாயறு மட்டும் தான் எங்கள் அலுவலம் விடுமுறை. அன்று கண்காட்சிக்கு சென்றால் புத்தங்களை நெருங்கக் கூட முடியாது என்பதால், பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் முன் நாளை தேர்ந்தெடுத்தேன். இனி புத்தக திருவிழாவில் நான் தொலைந்து போனதைப் பற்றி,..
நேற்று (11.01.2012) அலுவகம் முடிந்து கண்காட்சிக்குள் நுழையவே 5.00 மணி ஆகியிருந்தது. இதற்கே அனுமதி வாங்கி அலுவலகம் முடியும் முன்பே கிளம்பியிருந்தேன். வழக்கமாக வாங்கும் புத்தகங்களை விடுத்து சில நல்ல இலக்கியங்களை தேடலாம் என சில நாட்களாக வலையில் எஸ்.ரா, ஜெயமோகன் சிபாரிசுகளை குறிப்பெடுத்திருந்தேன். அந்தப் பட்டியலோடு, புத்தக பதிப்பகங்களின் பெயர்களையும் எழுதிவைத்திருந்தேன். அந்தப் காகிதம் நம்பிக்கையை கொடுத்தது.
அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் மட்டுமே கொண்டாடும் மனிதர்களுக்கு மத்தியில் எழுத்தார்களை கொண்டாடும் வகையில் வழிநெடுகிலும் ப்ளாஸ்க் பேனர்கள் வரவேற்றன.சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ரா, சாரு, வைரமுத்து என பிரபல எழுத்தாளர்களு்ககு மத்தியில் புதியதாக சிலரும் இருந்தார்கள். அதிலும் குமுதத்தின் பேனர்களில் தமிழே தெரியாத சில நடிகைர்களும், நடிகைகளும் எங்களுக்கு பிடித்தது என சிலவற்றை சொல்லி வரவேற்றார்கள். தமிழனிடம் புத்தகம் வி்ற்க எந்தளவிற்கு நிறுவனங்கள் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருக்கின்ற என்பதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.
கண்காட்சியை முதலில் ஒரு முறை சுற்றிவந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வன் ஐந்து தொகுதிகளாகவும், ஒரே புத்தகமாகவும் பல்வேறு விலையில் விற்கின்றன. விகடன் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற பொன்னியின் செல்வன்தான் மிக அதிகமான விலையில் இருந்தது. வரலாற்று நாவல்களுக்கான வாசர்கள் எப்போதும் குறைவதேயில்லை. ரமணிசந்திரன், சாண்டல்யன், கல்கி என இப்போதும் எழுத்துகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுடன் சுஜாதாவும் சேர்ந்துவிட்டார். பல ஸ்டால்களில் ஆன்மீகம் ஊற்றெடுத்து ஓடியது. மழைக்கு கூட மக்கள் ஒதுங்காத சில ஸ்டால்களும் இருந்ததை பார்க்கும் போது பகிரென்றது. இன்று எல்லாவற்றையும் விளம்பரங்களே தீர்மானிக்கின்ற என்ற உண்மையை அவர்கள் உணர்ந்திருந்தால், இந்நிலை வந்திருக்காது என நினைக்கிறேன். இஸ்லாமிய ஸ்டால் சென்ற முறை பெரியதாக இருந்தது, அங்கு வாங்கிய குரான் இன்னும் பத்திரமாக இருக்கிறது. ஆனால் ஸ்டால் இம்முறை சிறியதாகிவிட்டது. அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர் சிவ புராணம் புத்தகத்தினை ஹிந்தியில் வேண்டுமென கூறியிருந்தார், கீதா பதிப்பகம் என்பதில் இருப்பதாக கூறினார்கள். அவரை கைப்பேசியில் அழைத்து செய்தியை சொன்னேன்.
அப்படியே பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களை குறித்துக் கொண்டேன். முதலில் பட்டியலிருந்த ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் நாவலை வாங்கி எனது புத்தக வேட்டையை ஆரமித்தேன். உலோகம் நாவலுக்காக கிழக்கு பதிப்பகத்தினை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் சடசடவென மழை பொழிய துவங்கியது. வெளியிலிருந்தவர்கள் உள்ளே வந்ததால் கூட்டம் அதிகமானது. எனக்கோ புத்தகங்களை எப்படி வீட்டிற்கு கொண்டு செல்வோம் என்ற கவலை வந்தது. அதானால் மழை நிற்கும் வரை புத்தகங்களை வாங்கமலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். வ.உ.சி பதிப்பகத்தில் மழை நீர் மிக அதிகமாவே ஊற்றியது, பிளாஸ்க் பேனர்கள் கைக் கொடுத்தன. வழி தடத்தில் ஒழுகியதை யாரும் பொருட் படுத்தவில்லை. குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி,.. என்ற புத்தகம் பாரதி புத்தகாலயத்தில் கிடைத்து. பழைய மர பாலத்தில் ஒரு சம்பவமும் புத்தகத்தினை தேடினேன். கிடைக்கவில்லை. அருகிலிருந்த உதவியாளரிடம் கேட்டேன், சிறிது யோசித்துவிட்டு இல்லையென்றார்.
கைப்பேசி தொடையை கிள்ளியது, நண்பன் அழைத்திருந்தான், “மச்சி எங்கிருக்க?” “புத்தக கண்காட்சியிலதான்”. “அங்க செம மழையாமே. டி.வியில சொன்னாங்க.”, “அதுக்குள்ள டி.விவரைக்கும் செய்தி வந்துடுச்சான்னு” எங்கள் உரையாடல் தொடர்ந்தது. அதற்குள் மழை சுத்தமாக நின்றுவிட்டது. திரும்பி வராது என்ற நம்பிக்கையில் மீண்டும், வேட்டையை தொடர்ந்தேன். அறிவியல் வெளியீடு பதிப்பகத்தில் அறிவியல் புனைகதைகள், போரின் பிடியில் பிஞ்சகள் என இரண்டு புத்தங்களை எடுத்துக் கொண்டேன். நாஞ்சிலின் சூடிய பூ சூடற்க நாவல் ஒன்றே ஒன்று இருந்தது, அதுவும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதை வாங்காமல் நடையை கட்டினேன். ஒரு பதிப்பக்ததில் எம்.ஜி.ஆர் நூல்களை அடுக்கி வைத்திருந்தார்கள், திருநாவுக்கரசு எழுதிடய புத்தத்தினை புரட்டினேன் ” கைது செய்யப்பட்ட சசிகலாவிற்காக அழுத ஜெயலலிதா” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றும் இருந்தது. இன்றைய நிலைய நினைத்துக் கொண்டே இடம் பெயர்ந்தேன்.
தமிழனி பதிப்பகத்தில் காவல் கோட்டம் புத்தகம் ஏறாளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கனத்தினை பார்த்து இறுதியாக எடுத்துக் கொள்ளலாம் என வைத்துவிட்டேன். எழுத்தாளர்களுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் எழுத்தாளர் வெங்கடேசன் வந்திருப்பதாக ஒலிப்பெருக்கியில் கூறினார்கள். ஆவலோடு சென்றேன். பதினெந்துக்கும் குறைவான நற்காளிகளைப் போட்டு ஒரே ஒரு மைக்கினை கொடுத்திருந்தார்கள். வாசகர்கள் கேள்வி கேட்கவும், அவர் பதில் சொல்லவும் மாற்றி மாற்றி அதேயே பயண்படுத்த வேண்டியிருந்ததால் சிரமாக இருந்தது.
காவல் கோட்டம் பத்து வருட உழைப்பு என்பது, அதனை எழுத முடியாது என அவர் மூன்று முறை ஒத்தி வைத்தது என பல சுவாரசியங்கள். மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு இளைஞர் தன்னுடைய மூதாதயர்கள் வாழ்ந்த ஊரினை தேடி வந்திருப்பதாகவும், அவர்கள் நாவலில் குறிப்படப்படும் அந்த புலம்பெயர்வில் மதுரையிலிருந்து வந்தவர்கள் என்பதையும் கூறினார். வியப்பாக இருந்தது. களவுக்கு ஆதாரவு தருகின்றீர்களா, குறிப்பிட்ட ஜாதியைப் பற்றி உயர்வாக எழுதியுள்ளீ்ர்களே, மதுரைக்கு எப்பவுமே நெகட்டிவ் கதைகளை களமாக கொள்ளப்படுகின்றதே என ஏகப்பட்ட கேள்விகள், ஏக்கங்கள். “பாண்டியர்கள், சோழர்கள்,.. என இப்படி இருக்கும் போது எப்போது தமிழன் என்ற பொதுப்பெயர் வந்தது” என்று ஒருவர் கேள்வி கேட்க,.. வெங்கடேசனை பார்க்கும் போது பாவமாக இருந்தது. ஒரு எழுத்தாளனுடனான சந்திப்பு இத்தனை சுவாரசியமாக இருக்கும் என அப்போதுதான் புரிந்தது.
ஜெயமோகனின் உலோகம் நாவலை வாங்க கிழக்கு பதிப்பகத்தில் நுழைந்தேன். ராஜேஸ்குமார் நாவலைப் போன்ற வடிவமைப்பில் உலோகம் இருந்தது. எஸ்.ராவின் உபபாண்டவத்தை வாங்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டே நடந்து வந்ததில் தமிழினி பதிப்பகம் மீண்டும் வந்தது. சரி இம்முறையாவது எஸ்.ராவை விட்டுவிடுவோம் என காவல் கோட்டத்தினை எடுத்துக் கொண்டு பணம் கட்டும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். அதற்குள் என்.டி டிவியில் வந்த ஒரு நிருபர் பணம் பெறுபவரிடம் இங்கே இயக்குனர்களெல்லாம் எந்த புத்தகத்தினை அதிகம் வாங்குகிறார்கள் என்று கேட்க, “எனக்கு இயக்குனர்கள் யாரையும் தெரியாது” என கடுப்படித்தார் அவர். “இளைஞர்கள் எந்தப் புத்தகங்களை வாங்குகின்றார்கள் என மீண்டும் அவர் கேட்க, நான் கண்களை சுழலவிட்டேன். நாஞ்சில் விளம்பரத்தில் சிரித்துக் கொண்டிருந்தார், கீழே சூடிய பூ சூடற்க என்று எழுதியிருந்தது. காவல் கோட்டத்தை அவரிடமே விட்டுவிட்டி நாஞ்சிலின் புத்தகத்தினை தேடி எடுத்துக் கொண்டு பணம் பெறுபவரிடம் வந்தேன். இரண்டிற்கும் பணம் கொடுத்த போது புன்னகையோடு பெற்றுக் கொண்டார்,. உண்மையில் இவருக்கு சினிமா இயக்குனர்களை தெரியாது என்று மனம் சொல்லியது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை புத்தக கண்காட்சியில் கண்டால்தான் உண்டு.
இறுதியாக புத்தக பட்டியலை சரிபார்த்தேன்,. இரண்டு புத்தகங்கள் விடுபட்டிருந்தன். பூம்புகார் பதிப்பகத்தின் ஆயிரத்தியொரு அரேபிய இரவுகள் புத்தகமும், பாரதி புத்தகாலயத்தின் பழைய மர பாலத்தில் ஒரு சம்பவமும் கிடைக்கவில்லை. கோடிக்கண்ககான புத்தகங்களுக்கு மத்தியில் நின்று கொண்டு இரண்டு புத்தகளுக்காக அழுவது சரியாக தோன்றவில்லை. பாரதி புத்தகாலயமாவது கண்களில் தென்பட்டது, பூம்புகாரை பார்க்கவேயில்லை. அண்ணா நூலகத்தில் உள்ளதுபோல ஒரு கணினியில் புத்தகங்களின் தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.