கரூர் – திண்டுக்கல் சாலையில் மணவாடி கிராமத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்திருக்கிறது நத்தமேடு கிராமம். மிகச் சமீபத்தில் பணக்காரர் ஒருவரால் புரணமைக்கப்பட்டு மிகச் சிறந்த சிவாலயமாக திகழ்கிறது வீரபாண்டீசுவரர் கோயில். சுற்றியிருக்கும் கிராம மக்களும் பிரதோச, சிவராத்திரி, சோமவார திங்கள் கிழமைகளுக்கு கூடுகிறார்கள். கடந்த சனிப் பிரதோசத்திற்கு அக்கோயிலுக்குச் சென்றபோது, அருகே இருக்கும் அம்மன் கோயிலொன்று கண்களில் பட்டது. அது திறந்திருக்கிறதா என காணச் சென்றேன்.
நல்ல வேளையாக திறந்திருந்தது. அம்மனின் காவல்தெய்வமாக கருப்புசாமி சன்னதி வாயிலுக்கு இடப்புறமும், சிம்ம வாகனம் மண்டபத்திற்கு வெளியேயும் அமைந்திருந்தது. மண்டபத்தில் சில நினைவுச் சிற்பங்களை அமைத்திருக்கிறார்கள். அவை குறித்தே இந்தப் பதிவு.
முதல் சிலை 1-
இடப்பக்க கொண்டை, கைகளில் கால்களில் ஆபரணங்கள், காதுகளில் குண்டலங்கள், மேலாடை இல்லாமல், கணுக்கால் வரை அமைந்துள்ள கீழாடை என கைகூப்பி நின்றபடி இருக்கும் சிற்பம் முதல் சிற்பமாக அமைந்துள்ளது. இடையில் குறுவாள் உள்ள சிற்பம் என்பதால் வீரராக இருக்க வாய்ப்புண்டு. சன்னவீரம் கண்களுக்குப் புலப்படவில்லை.
இரண்டாவது சிலை 2-
மகுடம் (துணியால் ஆனதாக இருக்கலாம்), காதுகளில் குண்டலங்கள், கழுத்து, கைகள், கால்கள் ஆகிவற்றில் ஆபரணங்கள், முட்டி வரையான இடையாடை, உடைவாள் ஆகியவற்றோடு வணங்கிய நிலையில் உள்ள சாந்த தவலும் சிலை. அழகிய மீசையுடன் இருப்பது வசீகரமாக இருக்கிறது. வலது மற்றும் இடது தோள்பட்டையிலிருந்து சிறிய அளவில் புடைப்பு தெரிகிறது. அது சன்னவீரமாக இருக்கலாம். அரசராகவோ, படைத் தளபதியாகவோ இருக்கலாம்.
மூன்றாவது சிலை –
மற்றச் சிலைகளைப் போல அல்லாமல் தம்பதிகளாக வடிக்கப்பட்ட சிற்பம். இருவரும் வலக்கையில் வாளும், தண்டமும் ஏந்தியவாறு இருக்கிறார்கள். இடப்பக்க கொண்டை, காதணிகள், கழுத்து மாலை, கை, கால் ஆபரணங்கள் இவற்றோடு இருக்கிறார்கள். ஆண் மேலாடையில்லாமல், கீழாடை தொடையளவு மட்டுமே உள்ளதாக இருக்கிறார். பெண்ணும் மேலாடையின்றி, கீழாடை கணுக்கால் வரை அணிந்து இருக்கிறார். ஆணின் இடக்கையில் குத்துவாள் உள்ளது. பெண்ணின் கையிலும் அவ்வாறு இருந்திருக்க வேண்டும். ஆனால் சிலை சிதைவுற்று காணப்படுகிறது.
நான்காவது சிலை –
தனித்த சிலைகளில் இச்சிலை சற்று வித்தியாசமாக வணங்கும் பொழுது, உடைவாளை இடக்கையால் உடலை அணைத்தவாறு அமைந்துள்ளது. இச்சிலை இடப்பக்க கொண்டை, கை, கால், கழுத்து ஆபரணங்கள் அணிந்தவாறு உள்ளது.
ஐந்தாவது சிலை –
ஐந்தாவது சிலையானது முன்னுள்ள சிலை போல அமைந்துள்ளது. இடப்பக்க கொண்டை இல்லாமல் வணங்கிய நிலையில் உள்ளது.
இந்தச் சிலைகளின் காலம் பற்றியோ, இவர்கள் யாராக இருக்க கூடும் என்ற அனுமானங்கள் கூறும் நிலையில் நானில்லை. இதைப் பற்றி ஆய்வாளர்கள் ஒன்றினைந்து ஆய்ந்தால் கரூர் மாவட்டத்திலுள்ள பல வரலாற்று தகவல்கள் கிடைக்க கூடும். நன்றி.