கல்கியின் மோகினித்தீவு ஒரு பார்வை

பொன்னியின் செல்வனுக்குப் பிறகு மீண்டும் கல்கியுடைய புதினமான மோகத்தீவைனை படித்தேன். இரண்டு நாள் மின்சார ரயில் பயணத்திலேயே புதினம் முடிந்துவிட்டது. பத்தே அத்தியாங்களில் சோழ பாண்டிய தேசத்தின் காதல் கதையை கல்கி புனைவாக கொடுத்துள்ளார். சோழ அரசனாக உத்தம சோழனை குறிப்பிடுவதால் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றுப் புனைவோ என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால் உத்தம சோழனுக்குப் பிறகு ராஜராஜனும், அவன் சந்ததிகளும் மட்டுமே ஆட்சி செய்தார்கள். இந்த புதினத்தில் உத்தம சோழனுக்கு மகன்கள் இருப்பதை பற்றியும், இராஜராஜனின் பெரிய கோவில் காலத்திற்கு பிறகு என்று கதை வருவதால் படிக்கும் போதே இப்புதினம் முழுமையான கற்பனை என்பதை அறிய முடிந்தது.

பாஸ்கர கவிராயரிடம் கதை கூறும் காதலர்கள்

திரையரங்கில் பாஸ்கர கவிராயர் என்ற நபரை சந்திக்கிறார் ஒருவர். இருவரும் கடற்கரைக்கு சென்று அங்கு பேசுகிறார்கள். பாஸ்கர கவிராயர் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு கப்பலில் வரும்போது, மோகினி தீவில் ஒரு இரவு தங்கியதாகவும், அந்த இரவில் ஒரு இளைஞனும், இளைஞியும் அவரிடம் கதையொன்றை தெரிவித்து மறைந்ததாகவும் கூறுகிறார்.

மோகினித் தீவு –

பராக்கிரம பாண்டியன் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்கிற பாளையக்கார மன்னன். பாண்டிய வம்சத்தவன் இல்லை என்ற மனக்கவலையில் உள்ளவன். பழமையான ராஜகுலத்தில் பிறந்தவனை தன்னுடைய ஒரே மகளான புவனமோகினியை திருமணம் செய்துவைக்க எண்ணுகிறான். அதற்காக தஞ்சை சென்று சோழ விருந்தினராக தங்குகிறான். உத்தம சோழ அரசனுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் சுகுமாரன் பட்டத்து இளவரசன். இரண்டாவது மகன் ஆதித்தன்.

சுகுமாரனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்துவிக்கும் ஆசையை உத்தம சோழனின் தெரிவிக்கிறான், பராக்கிரம பாண்டியன். குமரியிலிருந்து திருச்சிவரை பாண்டிய ராஜ்ஜியம் விரிந்து கிடக்கிறது. எண்ணற்ற படைவீரர்களை கொண்ட பெரும் படை பாண்டியனிடம் இருக்கிறது. ஆனால் குலப்பெருமை இல்லை. தஞ்சையை சுற்றிய சில நகரங்களை மட்டுமே உத்தம சோழன் ஆண்டாலும், அவனுக்கு குலப்பெருமையை நினைத்து கர்வம் உண்டு. அதனால் பாண்டியனின் ஆசையை எள்ளி நகையாடுகிறான். அத்துடன் பாண்டியன் மகளை குற்றேவல் புரியும் பணியாளாக வேண்டுமானால் சோழ அரண்மனையில் இருக்கலாம், பட்டத்தரசியாக இருக்க தகுதியில்லை என்று கிண்டல் செய்கிறான். அதனை கேட்ட பாண்டிய மன்னன் கோபம் கொள்கிறான். பெரும் படை திரட்டி தஞ்சையை கைப்பற்றுகிறான். உத்தம சோழரை தனது தேர்க்காலில் மாட்டி ஊர்வலமாக அழைத்துச் செல்கிறான். அதனை அரண்மனை மாடத்திலிருந்து கண்ட இளவரசி புவனமோகினி வருந்துகிறாள். பாண்டியன் உத்தமசோழரை சிறையில் அடைக்கின்றான். அச்சமயம் அவரின் இருமகன்களும் கொல்லிமலைக்கு சென்று பாதுகாப்பாக இருக்கின்றார்கள். உத்தம சோழரை சிறையிலிருந்து மீட்க செல்வது யாரென அவர்களுக்குள் பிரட்சனையாகிறது. அதை தவிர்க்க அதிக தூரம் வேல் எறிகின்ற போட்டி வைக்கின்றார்கள். அதில் பட்டத்து இளவரசன் சுகுமாறன் வெற்றிபெருகிறான். தந்தையை சிறையிலிருந்து மீட்க மதுரை சென்றவன் மதிவாணன் என்ற மாறுவேடத்தில் தேவேந்திர சிற்பியிடம் மாணவனாக சேர்கிறான்.

புவனமோகினிக்கு சிற்ப கலையில் ஆர்வம் அதிகம் என்பதால் தேவேந்திர சிற்பியின் சிற்பக் கூடத்திற்கு அடிக்கடி வருகிறாள். அவளை சந்திப்பதை தவிர்க்க மதிவாணன் பெண்களிடம் பேசுவதில்லை என்ற விரதம் பூண்டிருப்பதாக தேவேந்திர சிற்பியிடம் கூறுகிறான். சீடனின் விரதத்தினை இளவரசியிடம் கூறி அவனை சந்திக்கவிடாமல் செய்கிறார் குரு. மதிவாணன் வடித்த ஜீவனுள்ள சிற்பங்களும், தேவேந்திர சிற்பி, பணிப்பெண் பாராட்டுகளும் இளவரசிக்கு அவனை சந்திக்க வேண்டுமென்ற ஆவலை துண்டுகின்றன. அதனால் தந்திரமாக தேவேந்திர சிற்பியின் தமையன் மகன் கோவிந்தன் என்று ஆண்வேடமிட்டு அவனை சந்திக்கின்றாள். தன்னை மதிவாணன் தொட்டுப்பேசி சங்கடம் தரக்கூடாது என்பதற்காக தானும் ஒரு விரதம் இருப்பதாக பொய்யுரைக்கின்றாள்.

பாண்டிய இளவரசியும், சோழ இளவரசனும் தங்களுடைய உண்மைகளை மறைத்து வைத்து பழகினாலும், இனிமையான குணத்தினாலும், சிற்ப ஆர்வத்தினாலும் நட்பாகின்றார்கள். சோழ யுவன் ஒருவன் சிற்பக் கூடத்தில் இருப்பதை அறிந்து ஒற்றர் தலைவன் தினகரன் சந்தேகம் கொள்கின்றான். ஒரு முறை கோவிந்தன் வேடத்தில் இருக்கும் புவனமோகினிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போது, இளவரசி என்பதை அறிந்துகொள்கிறான். அதன் பிறகு பாண்டிய மன்னின் ஊர்வலம் நடக்கும் போது அதில் புவனமோகினியை கண்டு கோவிந்தன் என்ற மாறுவேடத்தில் வந்ததது அவள்தான் என மதிவாணன் அறிகிறான். உத்தம சோழரிடம் செப்பு சிற்பம் வார்க்கும் ரகசியம் அறிய வேண்டுமென்று பொய்யுரைத்து புவனமோகினிடம் முத்திரை மோதிரத்தை பெற்றுக் கொள்கிறான்.

புவன மோகினிடம் தாதிப்பெண் மோதிரம் கொடுத்தல்

சந்தேகம் கொண்டு சிற்பக்கூடத்தினை சுற்றிவரும் தினகரனுடன் சிறைகூடம் சென்று அங்கு அவனை சிறைபடுத்துவிட்டு உத்தம சோழருடன் பாண்டிய எல்லையை கடக்கிறான் சுகுமாறன். விரைந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கிறான். உத்தம சோழனை சிறைகூடத்தில் சந்திக்க செல்லும் இளவரசி தன்னை மதிவாணன் என்று ஏமாற்றிவிட்டதை அறிந்து சுகுமாறன் மேல் கோபம் கொள்கிறாள். பராக்கிரம பாண்டியன் உடல்நிலை குன்றியிருப்பதால், புவனமோகினியே படைக்கு தலைமைதாங்கி வருகிறாள். போர்நடக்கும் போதே பாண்டியன் இறந்துவிட, சுகுமாறன் புவனமோகியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக உத்தம சோழரிடம் அனுமதி கேட்கிறான். ஆனால் உத்தம சோழன் மறுத்துவிடுகிறான். புவனமோகினியை சிறைபடுத்திவரும் சுகுமாறனிடம் அவள் காதலித்தது சிற்பி மதிவாணனை தான் என்பதை தெரிவிக்கின்றாள். இளவரசனாக அல்லாமல் சிற்பியாக இருந்தால் புவனமோகினி தன்னை ஏற்றுக் கொள்வாள் என்பதால் ஆதித்தனுக்கு பட்டம் கட்டிவிட்டு, படைவீரர்கள், தேவேந்திரன் முதலிய சிற்ப கலைஞர்களோடு கப்பலில் புறப்படுகிறான். ஆயுதங்கள் அனைத்தையும் கடலில் போட்டுவிட்டு ஆளில்லா தீவொன்றை அடைந்து அனைவரும் நிம்மதியாக வாழ்கின்றார்கள். காலத்தால் அழியாத சிற்பங்களை வடிக்கின்றார்கள். புவன மோகனியும், சுகுமாறனும் அத்தீவுக்கு வருகின்ற நபர்களிடம் தங்களுடைய காதல் கதையை சொல்லி களிப்புருகின்றார்கள்.

சில இடங்களில் பொன்னியின் செல்வனை ஞாபகம் செய்தாலும், மோகினித்தீவு அருமையான நாவல்.

மேலும் –

பாலு அவர்களின் ஓவியத்துடன் கல்கியின் மோகினித்தீவு

ஜெயமோகனின் உலோகம் ஒரு பார்வை

கோவை மருத்துவமனையில் ஹார்ட் அட்டேக் வந்து ஐ.சி.யூவில் சேர்க்கப்பட்ட தந்தை, செய்வதறியாது திகைத்து நிற்கும் உறவுகள் என்ற இறுக்கமான சூழ்நிலையில் உலோகம் நாவலை படிக்கத் தொடங்கினேன். க்ளைமேக்சினை முதலில் காண்பித்துவிட்டு நடைபோடும் நவீன திரைப்பட பாணியில் எழுதப்பட்டது. பல்வேறான கொலைகள் நிகழ்ந்தாலும் ரெஜினா சார்லசை அடைவது வெகுவாக ஈர்த்தது. பெண்களுக்கு ஆண்களை அண்ணன் என்று அழைப்பது ஒரு தற்காப்பு தந்திரம். அவர்களுக்கு பாதுகாப்புணர்வு கொடுக்கும் உதட்டளவு வார்த்தை. எந்தவொரு பெண்ணும் உடன்பிறவாதவர்களை அண்ணன் என மனதளவில் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த வார்த்தை தேவைப்படாத சமயத்தில் அதனை புறக்கணிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. என்னுடைய அனுபவத்தினை ரெஜினா கதாப்பாத்திரம் பிரதிபளித்ததால், அவள் எனக்கு மிகவும் நெருக்கமாக தோன்றினாள்.( உங்களை சில தாய்மார்கள் தங்களுடைய குழந்தைக்கு அங்கிள் என்றே அறிமுகம் செய்துவைத்திருப்பதை கவனித்திருக்கின்றார்களா?. இல்லையென்றால் இனி கவனிப்பீர்கள்.)

கரிக்கட்டை எடுத்து கோட்டோவியம் வரைந்தவனை, கவிதை சிறுகதையென காவியங்களை படைத்தவனை காலம் கொலையாயுதமாக மாற்றுவதை படம்பிடித்து காட்டும் நாவல் உலோகம். எண்ணிக்கையில் அடங்குகின்ற கதைமாந்தர்களும், ஏமாற்றம் தராத அவர்களின் இயல்புகளும் நாவலின் பலம். இதனை ஒரு த்ரில்லர் நாவலென்று கூறுகிறார்கள். கிரைம் மன்னன் ராஜேஷ்குமாரின் நாவல் வாசித்தவர்களுக்கு இதிலுள்ள த்ரில்லர் போதாது. ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் நாவலை திருப்பங்கள் நிறைந்ததாக எதிர்ப்பார்த்து படிப்பது ஏமாற்றம் தரக்கூடியதாகவே அமையும். மற்றபடி கதாப்பாத்தரம் கோபம் கொண்டால் நாம் கோபம் கொள்கிறோம், காமம் கொண்டால் நாம் காமம் கொள்கிறோம் என்பது ஜெயமோகனின் எழுத்தாற்றல்.

புதினத்தின் பெயர் காரணம் –
புதினத்தின் கதாநாயகனான சார்லஸ் பலாலி போரில் ஈடுபட்டிருந்த போது சுடப்படுகிறான். அவனுடைய தொடையில் அகற்றப்படாத தோட்டா இருக்கிறது. விரலசைவின் முடிவில் எந்த கேள்வியும் கேட்காமல் உலோக தோட்டாவினை துப்புகின்ற துப்பாக்கியைப் போன்றது அவன் கதாப்பாத்திரம். உலோகத்தினை சுமந்து நடமாடி திரியும் கொலையாயுதமாக சார்லஸ் இருப்பதை உலோகம் என்ற புதினத்தின் பெயர் விளக்கி கொண்டுள்ளது.

உலோகத்தின் கதை –

பொன்னம்பலத்தாரின் கொலையுடன் நாவல் துவங்குகிறது. அவரை கொன்றது யார் என்று துப்பரியும் வேலை நமக்கில்லை. கொலைகாரனான சார்லஸ் தன்னை முதல் அத்தியாத்திலேயே அறிமுகம் செய்துகொள்கிறான். சுஜாதா, ஜெயகாந்தன் என எழுத்தாளர்களையும், குமுதம், ஆனந்தவிகடன், வீரகேசரி என ஜனரஞ்சக பத்திரிக்கைகளையும் அறிந்தவன். பள்ளிபருவத்தில் பெண்ணொருத்தியை மானசீகமாக காதல் செய்தவன். ஈழத்தின் ஏதோ ஒரு இயக்கத்தில் இருந்து பின் அகதியாக தமிழகம் வருகிறான். அகதிகள் முகாமில் ஜோர்ஜ் என்பவனை சந்திக்கிறான். அவன் மூலம் இங்கிருக்கும் இயக்கமொன்றில் இணைகிறான்.

இந்திய உளவு அமைப்பு நடத்துகின்ற ஒரு இயக்கத்தின் சிறு தலைவன் ஆகிறான். உளவு அமைப்பின் தலைவரான வீரராகவன் என்பவர் சிறீ மாஸ்டரை கொல்ல உத்தரவிடுகிறார். அவரை சந்திக்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த சார்லஸ் இயக்த்திற்கும், சிறீ மாஸ்டர் இயக்கத்திற்கும் தற்செயலாக மோதல் நாகடமொன்றை உருவாக்க திட்டமிடுகிறார்கள். ஜோர்ஜை சிறீ மாஸ்டர் இயக்கத்தினர் கொன்றுவிட வைக்கின்றார்கள், பதிலுக்கு விக்கி என்பவனை கொல்கிறார்கள். அவர்கள் நினைத்து போலவே சார்லஸை சந்திக்க சிறீ மாஸ்டர் விரும்புகிறார். அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி சிறீமாஸ்டரை கொன்று தப்புகிறான் சார்லஸ்.

ஜோர்ஜ் மனைவியான ரெஜினா சார்லஸையும், வீரராகவனையும் காமுரவைக்கிறாள். இருவரிடமிருந்தும் பணத்தினை பெற்றுக் கொள்கிறாள். இவ்வாறு இருக்கவேண்டாம், வேறு ஆணை திருமணம் செய்து கொள் என்று அறிவுரை கூறி டெல்லிக்கு செல்கிறான் சார்லஸ். அங்கே பொன்னம்பலத்தாரிடம் பாதுகாவலனாக சேர்கிறான். அவரை ஈழத்தில் உள்ள இயக்கம் துரோகி என்று நினைத்து கொல்ல திட்டமிடுவதை அறிந்து உயிர் பயம் கொண்டிருக்கிறார். அதனால் அவளுடய குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை அவரின் மகள் உணர்கிறாள்.

சார்லஸை நெருங்கி உறவு கொண்டு அவனிடம் தன்னுடைய தந்தை கொன்றுவிடும்படி கோரிக்கை வைக்கிறாள். காமத்தில் சார்லஸூம் கொல்வதற்கு சம்மதிக்கிறான். ரா அமைப்பினர் இதனை அறிந்து சார்லஸை வதைத்து உண்மையை அறிகிறார்கள். அதற்குள் தகவலறிந்த பொன்னம்பலத்தார் அவனை விடுவித்துவிடுகிறார். அவரை கொன்றுவிடும்படி இயக்கத்திலிருந்து கட்டளை வருகிறது. இருவரும் தனிமையில் இருக்கும் போது சார்லஸ் அவரை கொன்றுவிடுகிறான். தப்ப முயலும்போது காவலாளிகளால் பிடிக்கப்படுகிறான் என்பதோடு நாவல் முடிகிறது.

நாவலின் தன்மை –

இரு இடங்களில் எம்.ஜி.ஆரை நினைவு படுத்தியது இந்த நாவல். கதைநாயகன் சார்லஸ் போல உடலுக்குள் உலோகம் சுமந்து வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர் என்பது ஒன்று. இரண்டாவது இந்திய அரசு விடுதலைபுலிகளை தவிற மற்ற இயக்கங்களை வெகுவாக ஆதரித்தது. ஈழத்தின் போராட்ட அமைப்புகளுக்கு தொடக்க காலத்திலிருந்து இந்தியா உதவுவதை அறிந்தபின் தான் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளை அழைத்து பேசினார் என்கிற செய்தியை வாத்தியார் புத்தகத்தில் வாசித்ததாக நினைவு.

ஈழத்திலிருந்து வருகின்றவர்களுக்கு விமான சத்தம் உண்டாக்குகின்ற பயம். அவர்கள் தங்கவைக்கப்படும் முகாம்களின் அவலம். துணையிழந்த பெண் அகதியின் நிலை. இந்திய உளவு அமைப்புகளின் சதுரங்காட்டம். இயக்கங்களின் போலி சண்டைகள். வயதொத்த வாலிபர்களின் இச்சைகள். உயிர் பயம் கொண்டவரிகளின் மனநிலை. இவ்வாறு நாவலில் எண்ணற்ற நுட்பமான விசயங்கள் இருக்கின்றன. வாசிப்பனுபவம் வேண்டுபவர்கள் தவறவிடக்கூடாத நாவல்களில் இதுவும் ஒன்று.

மேலும் –
ஜெயமோகன் இணையதளத்தில் உலோகம் நாவல் வாசிக்க..

பொன்னியின் செல்வன் – திறனாய்வு

ஒரு புத்தகத்தினை படிக்கிறேன் என்று நண்பர்களிடமோ, உறவுகளிடமோ சொல்லும் போது, ஓ அப்படியொரு புத்தகம் இருக்கிறதா?. அதன் ஆசிரியர் பெயர் என்ன?. எதைப் பற்றிய கதை அது?. அந்த புத்தகத்தினை நான் படித்திருக்கிறேனே, நன்றாக இருக்கும் நீயும் படி போன்ற சம்பாசனைகள் வருவது வழக்கம். ஆனால் இம்முறை நான் பொன்னியின் செல்வன் படிக்கிறேன் என்றபோது “இப்போதுதான் படிக்கிறாயா அப்பனே!”என்று திருமலை கதாப்பாத்திரம் கூறுவது போன்ற கிண்டலான மறுமொழிதான் கிடைத்தது. பெரும்பாலும் எல்லோருமே பொன்னியின் செல்வனை படித்திருந்தார்கள். அவர்களிடம் நான் உங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரம் யாது?. நந்தினி வீரபாண்டியனின் மகளா மனைவியா?. ஆதித்த கரிகாலனை கொன்றவர் யாராக இருக்கும்?. போன்ற கேள்விகளை தொடுத்து என்னை காப்பாற்றிக் கொண்டேன். வலையுலகில் பெரிய ஆய்வே பொன்னியின் செல்வனைப் பற்றி நடந்துள்ளதை, நீங்கள் காணமுடியும். ஒருவர் ஏழுவயதில் பொன்னியின் செல்வனை படித்ததாக எழுதியிருந்த போது, அது சாத்தியமே என்று தோன்றியது. பொன்னியின் செல்வனை சிறுபிராயத்திலேயே படித்திருக்க முடியும், அதை புரிந்து கொள்ளவும் முடியும்.

பொன்னியின் செல்வனை நான் இதற்கு முன் ஒரு முறை வாசிக்க ஆசை கொண்டிருக்கிறேன். கோடை கால விடுமுறை நாட்களில் மணவாடி கிராமத்திற்கு சென்றிருந்தபோது, அங்கிருக்கும் சிறு நூலகத்தில் எங்கள் பக்கத்துவிட்டு தங்காள்தான் பொறுப்பு வகித்தாள். என்னை விட சிறுபெண்ணான அவளுக்கு இருந்த புத்தக ஆர்வத்தினால் நூலகர் போலவே செயல்பட்டாள். அவளுடைய உறுப்பினர் அட்டையை உபயோகம் செய்து புத்தகம் எடுத்து படித்துக் கொள்ள அனுமதி தந்தாள். நானும் அவளும் நூலகத்திற்கு சென்றோம், அங்கே கலைக்களஞ்சியம் போன்ற பருமனுடைய பொன்னியின் செல்வனை பார்த்தேன். கைகளில் முதல் பாகத்தினை எடுத்து விரிந்த கண்களுடன் நோக்கினேன். அத்துடன் நின்றிருக்கலாம். அதனருகே இருந்த ஐந்து பாகங்களையும் கண்டதும், ஐந்து பாகங்களை முடித்திட யுகமொன்று தேவைப்படுமென முடிவு செய்து கொண்டேன். ஏன் அந்தப் புத்தகத்தினை எடுத்துவிட்டு பின் வைத்துவிட்டாய் என்று கேட்டாள். அதை இந்த விடுமுறையில் படித்துமுடித்துவிட முடியும் என்று தோன்றிவில்லை என்று கூறி, சில சின்ன புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.

அதன்பிறகு பொன்னியின் செல்வனை பார்க்கிற பொழுதெல்லாம் எனக்கு பழைய நினைவுகள் வந்து, அதன் பெரும் கனம் பயம் செய்வித்தே வந்தது. கல்கி எழுத்தின் ருசியை பார்த்திபன் கனவில் கண்டேன். இருந்தும் பொன்னியின் செல்வனை மட்டும் தவிர்த்துவந்தேன். மதனுடைய ஒலிப்புத்தகங்கள் நன்றாக இருந்தமையினால் மேலும் சில புத்தகங்கள் ஒலிவடிவில் கிடைக்கின்றனவா என்று தேடியபோது, பொன்னியின் செல்வன் அகப்பட்டுக் கொண்டது. கேட்கதானே போகிறோம் என்ற உணர்வு இதுநாள் வரை இருந்த பயத்தினை நீக்கிவிட்டது. சில அத்தியாயங்களை கேட்டதுமே, பொன்னியின் செல்வனைப் பற்றி சகோதரன் வலைப்பூவில் எழுதலாம் என்ற எண்ணம் உதயமாயிற்று. ஆனால் ஏற்கனவே விஷ்ணுபுரம் போல தொக்கி நிற்க வேண்டாமென தீர்மானித்து முழுவதுமாக முடித்தபின்பே எழுத தொடங்கியிருக்கிறேன். இடையே சும்மா இருக்க முடியாமையினால் விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்து 30க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தொடங்கி, செம்மை படுத்தியிருக்கிறேன்.  அங்கு சில நண்பர்கள் எனக்கு உதவி செய்து பொன்னியின் செல்வன் குறித்தான பல சந்தேகங்களையும்,  தவறான புரிந்துணர்வினையும் நீக்கினார்கள்.  அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

பொன்னியின் செல்வன் வாசிப்பு முடிந்த பின், அதன் மைய நோக்கம், கதைமாந்தர் இயல்பு போன்றவற்றை அலசி பார்க்கலாம் என்று இந்த பதிவை தொடங்கியிருக்கிறேன்.

தியாக உள்ளம் – பொன்னியின் செல்வன் என்ற பெயரும், இறுதி பாகமான தியாக சிகரமும் அருள்மொழிவர்மனை (ராஜராஜன்) முன்வைத்தே கட்டமைக்கப்பட்டது. மதுராந்தக தேவனான தன் சித்தப்பனுக்கு சோழப் பேரரசை தியாகம் செய்த அருள்மொழியை கொண்டாடவே பொன்னியின் செல்வனை எழுதியதாக கல்கியே முடிவுரையில் குறிப்பிட்டுள்ளார். அருள்மொழியின் வீரத்திற்காக சம்பவங்களும், வாழ்வினையும், மனநிலையையும் கல்கி புனைவாக கூட சொல்லவில்லை. வானதி, அருள்மொழியின் திருமணம் கூட சொல்லப்படாமல் மறைந்திடுவதைப் பார்க்கும் போது, இந்த கோணத்தினை ஏற்றுக் கொள்வது சற்று கடினமான காரியம். மூன்றரை வருடங்கள் எழுதப்பட்ட போது, கல்கியின் மனம் மதுராந்தகனின் பட்டாபிசேகத்தோடு முடித்துவிடலாம் என்று எண்ணியிருக்கவும் கூடும்.

வந்தியத்தேவன் – இப்புதினத்தில் கதைநாயகன் என்று அங்கிகாரம் செய்யப்பட்டிருப்பவன் வந்தியத்தேவன்.  குந்தவை மீதான காதல், மணிமேகலையின் ஒருதலை காதல், ஆதித்த கரிகாலன், அருள்மொழி, சேந்தன் அமுதன், கந்தன் மாறன், திருமலையப்பன் என்று நட்பு பட்டியல், இப்படி நிகழ்பவைகளுக்கும் வந்தியத்தேவனுக்குமாக பிணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. மலையமான், வேளார், பழுவேட்டரையர் போன்றவர்களின் ஆதரவும் வந்தியத்தேவனுக்கு உண்டு. ஆனால் கூர்ந்து கவனிக்கும் போது நாவலின் மையம் வந்தியத்தேவன் அல்ல என்பது புலப்படும். நீரோட்டம் போன்ற புதின முறைக்கு வந்தியத்தேவனை கல்கி பயன்படுத்தியுள்ளார் என்பது மட்டுமே உண்மை.

நந்தினி – பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் எப்படி அங்கிகாரம் பெற்ற கதாநாயகனோ, அதுபோல அங்கிகரிக்கப்பட்ட வில்லி நந்தினி. ஆதித்த கரிகாலனின் உயிருக்குயிரான காதலியாக இருந்தவளை, அவன் உயிரை எடுக்கும் விரோதியாக விதி மாற்றுவதை காணலாம். ஆனால் ஒன்றினைச் செய்ய வேண்டாம் என்று கூறினால், அதை முன்வந்து செய்யக் கூடிய ஆதித்த கரிகாலனை நந்தினி முழுமையாக அறிந்திருந்தும். வீரபாண்டியனை கொல்ல வேண்டாம் என்று நந்தினி கூறியதன் காரணமும், தகப்பனை காதலன் என்று கூறியமையும் ஆதித்த கரிகாலனை கொலைகாரன் ஆக்குவதற்காகவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இரு துருவங்கள்- நேர் எதிர் குணாதிசயம் கொண்ட இரு பெண்களை இப்புதினத்தில் காணமுடிகிறது. ஒருத்தி பெருங்கடலில் தனியாக பயணம் செய்யக்கூடிய துணிவுள்ள படகோட்டும் பெண்ணான பூங்குழலி.  மறுபுறம் சிறுபார்வை சீண்டலுக்கே மயக்கமிட்டு விழும் கொடும்பாளூர் இளவரசி வானதி. சக்கரவர்த்தினியாக காதலை பயன்படுத்தும் பெண்ணான பூங்குழலி. அருள்மொழி மீதும், வந்தியத்தேவன் மீதும் அவள் வைக்கும் காதலுக்கு காரணமாக அரச பதவியை குறிப்பிடுகிறாள். சக்கரவர்த்தியானியாக வேண்டாம் என்பதற்காகவே காதலையும் விடத்துணியும் பெண்ணாக வானதி. அருள்மொழி மீதான அளவுகடந்த காதலை விடுவதற்கு அரச பதவியை காரணமாக குறிப்பிடுகிறாள். இருவரின் மனோரதமும் நிறைவேறியதாக கல்கி குறிப்பிடுகிறார்.

மூன்று குடும்பங்கள் – சுந்தர சோழர் குடும்பத்திற்கும், தியாகவிடங்கர் குடும்பத்திற்குமான தொடர்பாக கதை பின்னப்பட்டிருப்பதாக நினைத்தேன். இந்த இரு குடும்பங்களை தவிற வீர பாண்டியன் குடும்பமும் இறுதியாக இணைந்திருப்பது கதையின் இறுதியில்தான் புரிகிறது.வீரபாண்டியனின் ஒரு வாரிசு சோழ இளவரசனாக வளர்கிறது. மறு வாரிசு தியாகவிடங்கரின் உறவினர் வீட்டில் வளர்கிறது. சோழவாரிசு தியாகவிடங்கரின் சகோதரி வீட்டில் வளர்கிறது. இப்படி ஒரு குடும்பத்தின் வாரிசு மறு குடும்பத்தில் வளர்வதும், இறுதியாக உண்மை அறிந்து தத்தம் குடும்பங்களை சேர்வதும் கதையின் ஒரு கோணம். அரச குடும்பத்து வாரிசுகள் அரண்மனையில் வளராமல், குடிசையில் வளர்வதை கண்டாலும், குடிசையில் இருக்கும் வாரிசு எதுவும் அரண்மனையில் வாழவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆதித்த கரிகாலன் கொலை – புதினத்தின் முன் சிறுபகுதியையும், பின் சிறுபகுதியையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் ஆதித்த கரிகாலனின் கொலையே  நாவலின் மையப்புள்ளியாக இருப்பதை அறிய முடியும். ஆதித்த கரிகாலனை கொலை செய்ய திட்டமிடுதல் முதலிலும், கொலை நடுவிலும், கொலையின் விளைவால் எழுந்த ராஜ்ய சர்ச்சை இறுதியிலும் இடம்பிடிக்கின்றன.  ஆயிரம் வருடங்களுக்கு மேலாகியும் சிக்கல் நிறைந்த கொலையாக கருதப்படும் ஆதித்த கரிகாலன் கொலையை மேலும் சிக்கலாகவே கல்கி சொல்லியிருக்கிறார். வீரபாண்டியனை முறையற்று கொன்றமையால், ஆதித்த கரிகாலனை பாண்டிய ஆபத்துதவிகள் கொன்றார்கள் என்ற பழிவாங்கும் படலமே புதினத்தில் விரவியிருக்கிறது.  இருந்தும் பட்டத்து இளவரசர் கொலையை விதி என்று கூறி அனைவருமே ஜஸ்ட் லைக் தட் என்பது போல செல்வதும், ஆபத்துதவிகளை கண்டு கூட அவர்களை பிடிக்க சிரத்தியின்றி இருப்பது போலவுமான கதையமைப்பு ஆச்சரியமான ஒன்று.

பொன்னியின் செல்வனின் மைய நோக்கம் எதுவென கண்டறிவது சற்று கடினமான காரியம். ஒருவருக்கு இதுதான் பொன்னியின் செல்வன் கதை என்று தோன்றுவதும், இதுதான் இக்கதையின் நீதி என்று தோன்றுவதும் மற்றொருவருக்கு ஏற்க முடியாத அளவிற்கு இருப்பதை நான் உணர்கிறேன். மேலே கூறப்பட்ட ஐந்து கோணத்திற்கும் சம்மந்தமே இல்லாத கோணங்களும் உண்டு. அதனை கதாப்பாத்திரங்களின் திறனாய்வில் கூறினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

பி.கு –

ஒரு புதினத்தினை எடுத்து வாசித்த பின்பு அத்துடன் முடிந்தாக எண்ணாமல் இப்படி எதையாவது எழுதி நன்றாக படித்திருப்பவர்களை குழப்பினால் அதுதான் திறனாய்வு.  🙂

இருவேறு படைப்புகள், அரவான் – காவல்கோட்டம்

காவல் கோட்டம் படிக்கும் முன், அரவான் படத்தை பார்த்துவிடுங்கள். இல்லையென்றால் அரவான் படத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும்,… ஒரு வேளை நீங்கள் அரவான் படத்தை பார்த்துவிட்டு காவல் கோட்டத்தை படிக்காமல் விட்டிருந்தால்,.. மேலும் தொடருங்கள்.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் இன்னும் 30 அதிகாரங்களைத்தான் முடித்திருக்கிறேன். அந்த பெரும்மாய மகிழ்ச்சிக்கு இடையே அரவான் படம் வந்து குறுக்கிட்டது. திரைப்படமாக காவல்கோட்டத்தின் கதை வருகிறது என்றவுடன், படம் பார்த்த பிறகு புத்தகத்தினை படிக்கலாம் என முடிவு செய்திருந்தேன். காரணம் கதைமாந்தர்களை நாம் என்னதான் கற்பனை செய்தாலும் படமிட்டு காட்டுவதை போல கற்பனை செய்ய முடியாது. மேலும் அவர்களின் இடங்கள், ஆபரணங்கள், செய்கைகள் போன்றவற்றை ஆசிரியர் சொன்னால் மட்டுமே சரியாக கற்பனை செய்ய முடியும். சென்ற வாரம் அரவான் படத்தினை பார்த்துவிட்டு வந்தபிறகு, வசந்தபாலனுடன் மதன் அவர்களின் பேட்டியை காண நேர்ந்தது. அதில் எகப்பட்ட தகவல்களை அள்ளி வீசினாரர் வசந்தபாலன்.

காவல் கோட்டம் நாவலின் “மாயண்டி கொத்து” எனும் பகுதிதான் படமென்றார். அஞ்சலி வரும் காட்சிகளையும், சின்ன ராணி வருவதையும் தன்னுடைய சேர்க்கை என்றார். ஒருவர் கற்பனையை கடனாக பெற்று அதையே தன் கற்பனையில் மாற்றி கொடுத்திருப்பதை உணர்ந்தேன். சு.வெங்கடேசனின் உண்மையான அரவான் கதை என்ன என்பதை அறிய காவல் கோட்டத்தை கையில் எடுத்து புரட்டினேன். “நான்கு ஐந்து பேர்தான் மாயாண்டியோட கொத்து” என்ற வரி 282ம் பக்கத்தில் சிக்கியது. அடுத் சில பக்கங்களில் “சின்னான்” என்பதைக் கண்டதும். தேடியது கிடைத்துவிட்டது என்ற மகிழ்வு கிட்டியது.

அலுவலகத்தின் உணவு இடைவெளியி்ல் காவல் கோட்டத்தில் கலந்தேன். கொம்பொதிக்கு பதில் மாயாண்டி என்று தொடங்குகையிலேயே நாவலில் இருந்து திரைப்படம் வேறுபட்டிருப்பதை உணர்ந்து கொண்டேன். அரவான் படத்தில் சொல்லாத சில இருப்பதையும், சொல்லிய பல இல்லாமல் இருப்பதையும் கதையுடன் பயணிக்கையில் கண்டுகொண்டேன். திரைப்படத்தின் நடுநடுவே வந்த கேள்விக்கெல்லாம் பதில் நாவலில் இருக்கிறது.

நீங்கள் அரவான் படத்தை பார்த்திருந்தால்,.. சின்னான் களவு செய்ய தவளும் போது தேவையில்லாமல் ஒரு பூனை குறுக்கே செல்வதை கவணித்திருக்கலாம். எல்லோரும் கயிறை எடுத்து மலையில் ஏறுவது போல இருக்கும் கோட்டையூரில் கொம்பொதியை காப்பாற்ற அத்தனை மாடுகள் எப்படி நுழைந்தன என்ற கேள்வி எழுந்திருக்கலாம். சின்னானை கண்டுபிடிக்க செல்லும் கொம்பொதியைப் பார்த்து எகத்தாளமாக சிரிக்கும் ஆந்தை அங்கிருப்பதற்கான காரணத்தையும், களவிற்கு முன் மொண்டிக்கொம்பை கன்னம் இட்ட சுவறுக்குள் விட்டு கருப்பின் உத்திரவு வாங்குவதன் பின்புலமும் நாவலை படித்தால் மட்டுமே புரியும். உதாரணத்திற்கு இறுதியாக சொன்ன மொன்டிக்கொம்பு பழக்கத்தை எடுத்துக் கொள்வோம், நடுவப்பாளையம் கனகலிங்கம் பிள்ளை வீட்டுக்கு கன்னம் வைக்கப்போன தாதனூர் ராக்கன் கொத்து கிளம்பிச் சென்று கன்னம் வைத்த துளை வரியாக மொண்டி உள்ளே தலையை விட்டபோது தலை கரகரவென்று அரியப்பட்டு காலைப்பிடித்து இழுத்தவர்களுக்கு முண்டம் மட்டும் கிடைப்பதும், கொங்குப் போரில் மூக்கு அறுபட்ட மொண்டியின் தலை ஒரு ஆதாரமாக ஆகும் என்று உணர்ந்து ஓடிப்போன தாதனூர் ராக்கன் குழு திரும்பி வந்து அந்தத் தலையை அழிப்பதும் இன்னொரு உத்வேகமான அடுத்த சித்தரிப்பு.

அதிலிருந்து கன்னம் வழியாக முதலில் ஒரு கம்பில் துணி சுற்றி உள்ளேவிடும் மரபு உருவாகிறது. அதற்கு மொண்டிக்கொம்பு என்றுபெயர்நடுவப்பாளையம் கனகலிங்கம் பிள்ளை வீட்டுக்கு கன்னம் வைக்கப்போன தாதனூர் ராக்கன் கொத்து கிளம்பிச் சென்று கன்னம் வைத்த துளை வரியாக மொண்டி உள்ளே தலையை விட்டபோது தலை கரகரவென்று அரியப்பட்டு காலைப்பிடித்து இழுத்தவர்களுக்கு முண்டம் மட்டும் கிடைப்பதும், கொங்குப் போரில் மூக்கு அறுபட்ட மொண்டியின் தலை ஒரு ஆதாரமாக ஆகும் என்று உணர்ந்து ஓடிப்போன தாதனூர் ராக்கன் குழு திரும்பி வந்து அந்தத் தலையை அழிப்பதும் இன்னொரு உத்வேகமான அடுத்த சித்தரிப்பு. அதிலிருந்து கன்னம் வழியாக முதலில் ஒரு கம்பில் துணி சுற்றி உள்ளேவிடும் மரபு உருவாகிறது. அதற்கு மொண்டிக்கொம்பு என்றுபெயர்.

திரைப்படத்தின் கதை –
வேம்பூரில் ராஜகளவு செய்யும் கொம்பொதி தன் ஊர் பெயர் சொல்லி களவு செய்யும் அனாதையான வரிபுலியை கண்டுபிடிக்கிறான். வரிபுலி களவாண்ட ராணி அட்டிகையை திருப்பி கொடுக்க 100 கோட்டை நெல் கிடைக்கிறது. வரிபுலின் களவாடும் திறன் கண்டு கொம்பொதி தன் கொத்துடன் இணைத்துக் கொள்கிறான். ஊரில் சிலர் வரிபுலியை நம்பாமல் மலையில் குடிலை அமைத்து தங்க சொல்கின்றார்கள். களவு செய்யும் இடத்தில் கொம்பொதி மாட்டிக் கொள்ள வரிபுலி காப்பாற்றி வருகிறான். அதை அறிந்த கொம்பொதி தங்கை வரிபுலி மேல் காதல் கொள்கிறாள். தொடர்ந்து வரிபுலியின் செயல்களை கண்காணித்தும் அவனுடைய வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறான் கொம்பொதி.

ஒரு கட்டத்தில் ஜல்லிக்கட்டில் கொம்பொதியை மாடு முட்டிவிட, அவனை காப்பாற்ற தான் காத்துவந்த ரகசியத்தை கூறிவிடுகிறான் வரிபுலி. அதன் பின்பு சின்னிவீரம்பட்டி என்ற ஊரில் இறந்துபோனவனை கொன்றவன் யார்யென தெரியாமல், இறந்தவன் ஊர் மக்களின் கோபத்தை தனிக்க பலிஆளாக தேர்ந்தெடுக்கப்பட்டவன் தான் இந்த வரிபுலியென்றும், அவனுய பெயர் சின்னான் என்பதும் தெரியவருகிறது. காலங்கள் பின்நோக்கி செல்கிறது, சின்னிவீரம்பட்டி மாத்துர் இடையே இருக்கும் பகை நடுவே மாத்துக்காரன் ஒருவன் சின்னிவீரம்பட்டில் இறந்து கிடக்கிறான். மாத்தூர் மனிதர்களின் ரத்தவெறி அடங்க, பாளையக்காரர் ஒருவர் நாட்டாமை போல தீர்ப்பு சொல்கிறார்.

அதுதான் இறந்தவனுக்கு நிகரான இளவட்ட வாலிபன் ஒருவனை பலிதருவது, அதில் சின்னான் தேர்ந்தெடுக்கப்படுகிறான். 30நாள் குறித்து அவனை பலியிடும் நாளை அறிவிக்கின்றார்கள். அதற்குள் சின்னானை காதலிக்கும் ஒரு பெண் அவனையே திருமணம் செய்து கற்பமாகிறாள். சின்னானும் இன்னும் சிலரும் இறந்து போனவனை கொன்றது யார் என தேடுகிறார்கள். இறுதியில் தீர்ப்பு வழங்கிய பாளையக்கார்தான் உண்மையான குற்றவாளி என்று சின்னான் அறியும் தருவாயில் பாளையக்காரர் இறந்துவிடுகிறார். எந்த ஆதாரமும் இல்லாத சின்னான் இறுதியாக மாத்தூர்காரர்கள், சின்னிவீரம்பட்டி, வேம்பூர்காரர்கள் முன்நிலையில் தன்னைதானே வெட்டிக்கொண்டு இறக்கிறான்.

நாவலின் கதை –
(ஜெயமோகன் அவர்கள் எழுதிய கதைசுருக்கம். நன்றி.)
தாதனூர் பெயரைச் சொல்லி தாதனூர்காரர்களுக்கு முன்னதாகவே சென்று திருடும் சின்னானை மாயாண்டி கண்டு பிடிக்கிறான். மாயாண்டி ராஜகளவு செய்யும் தாதனூர்காரன். அந்த நிபுணத்துவத்தை மெச்சி சின்னானை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். ஆனால் பிற ஒருவனை களவூராகிய தாதனூர் ஊருக்குள் விடுவதில்லை. ஆகவே சின்னான் அமணர் மலையின் குகைகளில் தங்கிக் கொள்கிறான். அவனும் தாதனூர் கொடிவழிதான் என்பதை மாயாண்டி அறியும் இடம் தாதனூரின் மாறாத ஆசாரத்திற்கும் குல முறைகளுக்கும் சான்று. தேவிபட்டினத்திலிருந்து திரும்பி வரும் வழியில் கருப்பு கோயிலில் ஒரு தூக்கம் போடுகிறார்கள். அப்போது சின்னான் தாதனூரின் குலதெய்வமாகிய சடச்சி ஆலமரத்தின் பெரும் தூர் பக்கமாகச் சென்று ரகசியமாக அதைக் கும்பிட்டுவிட்டு வந்துதான் கருப்பனைக் கும்பிடுகிறான். ஆகவே அவன் தாதனூர்க்காரனே என்று தெரியவருகிறது.

சின்னானை விரும்பி ஊர்ப்பெண் ஒருத்தி அவனுடன் சென்று அமண மலையில் குடித்தனம் இருக்கிறாள். ஆனால் சின்னான் தான் யார் என்பதை அவளிடமும் கூறவில்லை. கடைசியில் அது தெரியவருகிறது. சின்னிவிரன் பட்டியைச் சேர்ந்த நல்லையாதான் அவன். பக்கத்து ஊரைச்சேர்ந்த ஒருவன் சின்னிவீரம்பட்டியில் வந்து இரவு தூங்கும்போது தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொல்லப்பட்டவனின் ஊர் பழிவாங்க வரும்போது சின்னிவீரம்பட்டிக்காரர்கள் சமரசம் பேசுகிறார்கள். அதன்படி நல்லையாவை பதிலுக்குப் பலி கொடுக்க ஒத்துக்கொள்கிறார்கள்

நல்லையாவை ஊரே கொண்டாடுகிறது. உணவூட்டுகிறது. சீராட்டுகிறது. அவன் மரணநாள் நெருங்கி வருகிறது. உயிருக்குப் பயந்த அவன் தன் தாயின் ஊரான தாதனூருக்குச் சென்றுவிடுகிறான். தாதனூரின் வாக்கை உதறி வாழ்க்கைப்பட்டு போன ஒரு பெண்ணின் மகன் அவன். நல்லையாவுக்குப் பதிலாக பகை ஊருக்கு பலி அளிக்கப்பட்டவனின் பிள்ளைகளுக்கு நல்லையா என்ற சின்னானை பலிகொள்ள உரிமை இருக்கிறது. அவர்கள் வந்து சின்னானை கொல்கிறார்கள். தாதனூர் அவனை சின்னிவீரம்பட்டியிடம் இருந்து காப்பாற்றவில்லை.

வசந்தபாலன் இதெல்லாம் சின்ன விஷயம் என்று விட்டுவிட்டவையெல்லாம் பெரியாதாக தெரிகின்றன. அதற்காக அவரை ஒட்டு மொத்தமாக குறை சொல்லிவிட முடியாது. குறைசொல்லவும் கூடாது. கதாநாயகியின் மார்பு மடிப்புகளில் மயங்கிக் கிடக்கும் திரையுலகை கள்ளர்களின் வரலாற்று பக்கங்களை பதிவு செய்து 10 ஆண்டு கால வெங்கடேசனின் உழைப்பை எளிய மக்களுக்கும் சென்று சேர்த்தமைக்கும், பசுபதி, ஆதி போன்ற நடிகர்களை திறன்பட பயன்படுத்தியமைக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். இருந்தாலும் குமணாண்டியின் தங்கை செல்லாயி கணவனுக்கு துருப்பு கொடுத்துவிட்டு வந்து, ஆசைப்பட்ட சின்னானை திருமணம் செய்வதை ஒருதலை காதலாக ஏன் மாற்றினார் என்று வசந்தபாலனை நிச்சயம் கேட்கவேண்டும். இப்படி பெண்கள் செய்வதை எல்லாம் மறைத்து மறைத்து வைத்துதான், இன்று வரை இந்த உலகம் பெண்களுக்காக ஒரு புனித தன்மை உண்டாக்கி தன்னை தானே ஏமாற்றி கொண்டிருக்கிறது. அதுசரி யார் அந்த குமணாண்டி யார் என கேட்கின்றீர்களா. காவல் கோட்டத்தின் 282ம் பக்கத்தை புரட்டுங்கள் நண்பர்களே…

பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன? – பத்மஹரி மென்நூல் தரவிரக்கத்துடன்

இந்தியாவில் 1990 வரைக்கும் ஆணுரையின் உபயோகம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க ஆட்கள் இல்லை. எகிறிக்கொண்டிருக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், எய்ட்ஸை தவிர்க்கவும் பீஹார் பகுதியில் சிலரை கட்டாயப்படுத்தி அனுப்பியது அரசு. அந்த சமூக சேவகர்கள் ஆணுரையை எங்கு மாட்டுவது என்று வெளிப்படையாக சொல்ல கூச்சப்பட்டுக் கொண்டு கட்டை விரலில் மாட்டிக் கொண்டு “இப்படி அணிந்து கொண்டால் எய்ட்ஸ் வராது” என்று சொன்னார்கள். விளைவு நீங்கள் நினைப்பதுதான், மக்கள் எல்லோரும் ஆளுக்கு ஒன்றை கட்டை விரலில் மாட்டிக் கொண்டார்கள், அதனால் பலனில்லை என்பதை அறியாமலேயே. இந்த சம்பவத்தினை விவரிக்க காரணம் கூச்சம் நம்மை தவறான பாதைக்கு இட்டு சென்றுவிடுவதோடு நம்மை சார்ந்தவர்களையும் கொண்டு செல்லும் என்பதை சொல்லவே. அதனால் கூச்சத்தினை இங்கேயே விட்டுவிட்டு தொடருங்கள்.

மேலிருப்பான் தளத்தினை நடத்தி வரும் நண்பர் பத்மஹரியை அறிந்திருப்பீர்கள். அறிவியலை தமிழ் மொழியின் வாயிலாக மக்களிடம் சேர்க்க வேண்டும். அதுவும் வலைப்பூவின் மூலமாக செய்ய வேண்டும் என்ற என் ஆசையில் ஒத்துப் போகும் மனம் அவருடையது. வீணான விவாதங்கள், தேவையற்ற தேடல்கள் என இல்லாமல் அறிவியலை மட்டுமே சொல்லும் வலைப்பூ அவருடையது. அவர் என்னுடன் இரண்டு முறை தொலைப்பேசியில் பேசியிருக்கிறார். அப்போது அதிகம் சொன்னதெல்லாம் மக்களுக்கு அறிவியலை கொண்டு செல்வதைப் பற்றியே. அவர் இப்போது துறை ரீதியாக டாக்டர் பட்டத்திற்கு முயன்று கொண்டிருக்கிறார். செக்ஸ் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன என்பதை டாக்டர் நாராயணரெட்டியின் “உயிர்” புத்தகத்தின் மூலம் அறிந்திருக்கிறேன். ஆனால் அவைகள் என்ன கூறுகின்றன என்பதைப் பற்றி, நண்பர் பத்மஹரியின் “பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன” புத்தகத்தின் மூலமாகதான் தெரியவந்தது. இந்த இடுகை அந்த நூலினைப் பற்றியதே!. இத்தனை வேலைகளுக்கிடையே எப்படி நூலினை தந்தார் என்பதே வியப்பாக இருக்கிறது.

மொத்தமாக 25 தலைப்புகளில் பல ஆய்வுகளைப் பற்றி விரிவாக விவரிக்கின்றார். முத்த வைரஸ் மற்றும் ஜேம்ஸ் பாண்டுக்கும் செக்ஸிற்கும் உள்ள சம்மந்தம் என சில சுவாரசியத்திற்காக இருக்கின்றன. போர்னோ வீடியோக்கள், மது, போதை மற்றும் உடல்பருமன் இவைகள் நம்முடைய செக்ஸ் வாழ்க்கை எப்படி பாதிப்படைகிறது என்பதைப் பற்றி தனிதனியாக அலசியிருக்கிறார். இப்படி புத்தகத்தில் உள்ள எல்லாவற்றையும் ஒரே இடுகையில் சுட்டிக்காட்ட முடியாது. எனவே நான் மிகவும் ரசித்த மூன்று பகுதிகளைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

1. குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு –
பாலியல் வக்கிரங்கள் என்பனவற்றில் ஓரினச்சேர்க்கை, மிருகப்புணர்ச்சி, குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு என சிலவற்றை சொல்லலாம். இவை எல்லாவற்றையும் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு பகுதியில் நண்பர் ப்த்மஹரி குறிப்பிடும் ஒவ்வொரு செய்தியும் மிகவும் ஆச்சிரியமானது. ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கஸ்டமாக இருக்கலாம், ஆனால் 2002 ஆம் ஆண்டு புள்ளிவிரப்படி 89,000 குழந்தைகள் பாதிக்கப் பட்டிருக்கின்றார்களாம். இன்னும் வேதனை என்னவென்றால் இந்த பாலியல் வக்கிரங்களுக்கு ஆளானவர்கள் அதே போல பாலியல் வக்கிரங்களை தொடர வாய்ப்புள்ளதாம். ஆய்வின் மூலம் நிருபித்திருக்கின்றார்கள். ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் குழந்தைகள் வக்கிரமான பாலியல் துன்புருத்தருலுக்கு ஆளாகின்றன எனும் போது கொஞ்சம் கலக்கம் ஏற்படுகிறது. இப்படி வியக்கத் தக்க பல ஆய்வின் முடிவுகளின் மூலம் இதனை தடுக்கும் முறையையும் மிக அழகாக சுட்டியிருக்கிறார். வக்கிர எண்ணத்தினை அகற்ற முயன்ற முயற்சிகளும், மருந்துகளும் என ஏகப்பட்ட செய்திகள்.

2. திருநங்கைகள் –
கல்லூரி காலம் வரை எனக்கு திருநங்கைகள் மேல் கவணம் இருந்தில்லை. ஆனால் கல்லூரியிலிருந்து ஒரு இன்பச் சுற்றுலா சென்ற போது, நாங்கள் சென்ற தொடர்வண்டியில் அவர்கள் செய்த அசிங்மான செயலால் எங்களுடன் வந்த மாணவிகள் பலர் அழுதே விட்டார்கள். எனக்கு மட்டுமல்ல என்னுடைய நண்பர்கள் பலருக்கும் மிகப் பெரிய வெறுப்பு தோன்றியது. ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகே, அவர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கின்றார்கள் என்ற கேள்வி தோன்றியது. அந்தக் கேள்வியின் பயனாக அவர்களைப் பற்றி அறியும் போது வெறுப்பு மறைந்து.

திருநங்கைகள் என்பவர்கள் உடலால் ஆணாக இருந்து மனதளவில் பெண்ணாகவோ, இல்லை உடலால் பெண்ணாக இருந்து மனதளவில் தன்னை ஆணாகவோ நினைத்துக் கொண்டிருக்கின்ற மனித இனம் என்று மிக எளிமையாக விளக்கம் சொல்கிறார். பெற்றவர்களும், மற்றவர்களும் ஒதுக்கிவிடும் அவர்களை மருத்துவம் சரியான பாதையில் செல்ல உதவுகிறது. இதற்கான அறுவைச் சிகிச்சை மிக எளிமையானதாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் பெண்ணிலிருந்து ஆணாக மாற கருப்பை, சினைப்பை, யோனி என எல்லாவற்றையும் அகற்றிவிட்டு புதிய ஆண்குறியையே உருவாக்க வேண்டும். ஆணிலிருந்து பெண்ணாக மாற விதைப்பை, ஆண்குறிமூலம் ஆகியவற்றை அகற்றி விட்டு பெண்குறி மூலத்தையும் யோனியையும் உருவாக்க வேண்டும் என்கிறார். அப்பப்பா எல்லாவற்றிற்கும் தனித் தனியான அறுவை சிகிச்சைகள் வேறு.

இத்தனை அறுவை சிகிச்சைகளையும் முடித்துவிட்டு ஹார்மோனுக்காக தனி சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இதில்லாமல் ரேசன் அட்டை முதற்கொண்டு பாஸ்போட் வரை தங்கள் பாலினத்தினையும், பெயரையும் மாற்ற வேண்டும். திருநங்கையாக வாழவேண்டாம் என நினைப்பவர்களே இத்தனை பிரட்சனைகளை தாண்டிவர வேண்டுமானால் திருநங்கையாக வாழ்பவர்களைப் பற்றி சொல்ல வார்த்தகளே இல்லை.

3. உச்சக்கட்டம் –
பாலியல் பற்றிய கொஞ்சம் அறிவு வந்தவுடனையே முதன் முதலாக எழும் கேள்வி இந்த உச்சக்கட்டத்தினைப் பற்றியதுதான். உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?. அல்லது உச்சக்கட்டம் என்றால் என்ன?. இந்த கேள்வியை மிக சாதாரணமாக ஒதுக்கிவிட இயலாது. ஏனென்றால் நண்பர்களிடம் இருந்து நிச்சயம் பதில் கிடைக்காது. உச்சக்கட்டம் பற்றி அறியாத்தால் மனைவியை திருப்தி செய்ய இயலாதோ என பயந்து, பல இளைஞர்கள் இதனை அறிந்து கொள்ள விபச்சாரிகளிடம் சென்று எய்ட்ஸை வாங்கிக் கொண்டு வருகின்றார்கள். சமீபத்தில் எய்ட்ஸால் இறந்த என் உறவினர் உட்பட இந்தக் கேள்வியால் பலியானவர்கள் அதிகம்.

சரி சட்டென உச்சக்கட்டம் பற்றி சொல்லுங்கள் என்றால் இதுதான் உச்சக்கட்டம் என வரையறுக்க இயலாது. என்ன சிரிப்பு வருகிறதா. ஆனால் உண்மை இதுதான். நண்பர் பத்மஹரி இதனை அழகாக கையாண்டிருகிறார். உச்சக்கட்டத்தினை மருத்துவ ரீதியாக, அனுபவ ரீதியாக, உளவியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக தனித்தனியாக அனுகி, அவற்றை விவரிக்கின்றார். இதன் சாரம்சத்தினை தொகுத்து வழங்க இயலாது என்பதால் உச்சக்கட்டத்தினைப் பற்றி நான் சொல்லப்போவதேயில்லை. புத்தகத்தில் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இவையில்லாமல் ஆண்களின் மூளையைப் பற்றி பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்களும், பெண்களின் மூளையைப் பற்றி ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்களும் மிகவும் அருமை. இன்னும் ஆறு ஏழு தலைப்புகளைப் பற்றி சொல்லவில்லை, அதற்குள்ளவே இடுகை நீளமாக போய்விட்டது. அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

மென்நூல் வடிவில் –

எல்லோரையும் சென்றடையட்டும் என்று பத்மஹரி அண்ணாச்சிக்கிட்டக் கூட சொல்லாம புத்தகத்தினை மென்நூலாக மாற்றிவிட்டேன். தரவிரக்கம் செய்ய இங்குசொடுக்குங்கள். (இம்மென்நூலில் இருப்பது முன்னுரை, கிடைக்கும் இடம் மற்றும் விமர்சனங்கள் மட்டுமே).

குறிப்பு –

என்னுடைய மனநிலையை வெளியிட்டதும், ஆறுதல் ஊக்கம் அறிவுரை என எனக்காக நேரம் ஒதுக்கி கருத்துகளை சொன்னவர்களுக்கு மிக்க நன்றி. முன்பை விட இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். பதிவே இடவில்லை என்றாலும் தினம் 1000 நண்பர்களாவது படித்துப் போகின்றார்கள். நாளுக்கு நாள் இடுகைகளைப் பற்றி குறிப்பஞ்சல்களை பெறுகின்றவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது. இது என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தெளிவாக காட்டுகிறது. வேலைதேடும் நேரம் தவிற மற்ற நேரங்களில் தீவிர வாசிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.  விரைவில் விதவிதமான கட்டுரைகளோடு சந்திக்கிறேன். ஆதரவுக்கு மிக்க நன்றி.

கடவுள் இருக்கிறாரா? – சுஜாதா

ஆயிஷா புத்தகத்தினை நாளொன்றுக்கு குறைந்தது 25 நண்பர்களாவது நம் தளம் மூலம் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். நல்ல விஷயங்கள் நம்மூலம் பரவுகின்றன என மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடந்த சில நாட்களாக இணையத்திலிருந்து மின்புத்தகங்களை தரவிரக்கம் செய்து படித்துக் கொண்டிருக்கிறேன். சில நல்ல புத்தகங்களைக் கூட படிக்காமல் நான் தவறவிட்டிருக்கிறேன் என அப்போதுதான் தெரிந்தது. கற்றது கையளவு என்ற பழமொழியை படித்தது என மாற்றுக்கொள்ள வேண்டும் போல,. அப்படி படிக்காத  ஒன்று சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா என்ற புத்தகம்.

எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவிடுவார் என்று நம்பியே புத்தகத்தினை புரட்டினேன். முதல் அத்தியாயத்தினை தொடுகையிலேயே எப்படிப்பட்ட புத்தகம் என புரிந்தது போனது. நம்மாழ்வார் சொல்வதற்கும் நவீன விஞ்ஞானம் சொல்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசிக் கொண்டே, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு முன் பிரபஞ்சத்தினை உருவாக்கியது கடவுளா என்ற கேள்விக்கு திரும்புகிறார். இன்னும் அத்தியாயங்களில் நுழைய நுழைய அத்தனையும் அறிவியல். கெப்ளர், நியூட்டன், ஐன்ஸ்டீன் என பிரபலங்களையும் அவர்கள் அறிவித்த சமன்பாடுகளையும் புரட்டி புரட்டி எடுக்கிறார்.

அறிவியல் பற்றி அதிக அறிவு எனக்கில்லை. தசவதாரம் வந்தவுடன் பதிவுலகில் அதிகம் பேசப்பட்டது “வண்ணத்துப்பூச்சி விளைவு”(கெயாஸ் தியரி). படத்தில் சொன்னதை விட பல பதிவர்கள் இன்னும் எளிமையாக விளக்கம் சொல்லியிருந்தார்கள். அதன் சாதங்களையும் பாதகங்களையும் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளினார்கள். அதன் பின் அறிவியல் பதிவுலகிலிருந்து விலகிக் கொண்டது. இப்போது INCEPTION படத்தினால் மீண்டும் ஒரு அறிவியல் அலை. பல விசயங்களை எளிமையாக மாற்றி பலர் தந்திருந்தார்கள். தமிழ் வலைப்பதிவுலகிற்கு அறிவியல் விளக்கம் அளிக்கும் பல தனி வலைப்பூக்கள் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். அதற்காக இப்போது ஒன்றுமே இல்லை என்று கூறவில்லை. இன்னும் அதிகமாக வேண்டும் என்றே பொருள் கொள்க.

எப்படி நம்மாழ்வரின் வரிகளுக்கு விளக்கத்தினை சொல்கிறாரோ. அதுபோலவே காஸ்மிக் விதிகளுக்கும் நல்லதொரு விளக்கம் சொல்கிறார். வாசகர்களுக்கு மிகவும் குழப்பமாகக் கூடும் என்று நினைக்கும் சில அறிவியல் விசயங்களை மட்டும் விட்டுவிட்டு தொடர்கிறார். பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை அறிவியல் விளக்கலாம். ஆனால் ஏன் தோன்றியது என்பதற்கு அதனால் பதில் கூற முடியாது என்று சொல்லும் போது, நாமும் அதனைப் பற்றி சிந்திக்க ஆரமிக்கிறோம். இது வரை நம்மாழ்வார் முதற்கொண்டு ஸ்டீஃபன் ஹாக்கிங் வரை என்ன சொல்லுகின்றார்கள் என்ற விரிவான செய்தியை மட்டுமே பதிக்கிறார்.

அறிவியலைக் கடந்து கணிதத்தின் பக்கம் பார்வை செல்கிறது. கலிலியோ, டெஸ்கார்ட்டஸ், ரோஜர் பென்ரோல் என மேதைகளின் கூற்றுகளை நினைவு கூறுகிறார். கேயாஸ் தியரியும், பிரைம் நம்பர்களையும் விவரிக்கையில், கடவுளை கண்டுபிடிக்க எத்தனை பெரிய தேடல்களை தாண்ட வேண்டியிருக்கிறது என புரிந்து கொண்டேன். அடுத்ததாக ராமானுஜம் வந்தபின்தான் தெம்பே வந்தது. கணிதமேதை என்ற போதும் கனவில் பல விடைகள் தெரிந்ததாக சொல்லியிருக்கிறார். கார்ல் காஸ், ஹென்றி பாயின்கேரே போன்ற கணித மேதைகளுக்கும் பல மாதங்கள் ஜகா வாங்கிய விடைகள் சட்டென ஒரு நாள் வந்ததாக கூறியிருக்கிறார்கள்.

கடவுள் இருப்பதை இன்னும் நம்புவதற்கு காரணம், எதிர்பாரா நிகழ்வுகளும், தனித்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கும் உயிரினங்களும் மட்டுமே. மிக உயரத்தில் பறக்கும் கழுகுகளுக்கு கண்கள் மிக கூர்மையாகவும், இரவில் உணவு தேடும் ஆந்தைகளுக்கு செவிதிறன் உயர்ந்து இருப்பதையும் காணும் போது பெரும் வியப்பு ஏற்படுகிறது. இந்த வியப்பின் ஓரத்தில்தான் கடவுள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் ஒளிந்திருக்கின்றன. கடவுளை சிலர் கணிதவடிவாகவும், சிலர் மனம் போல ஒரு சக்தி எனவும் கருதிவந்திருக்கின்றனர். ஆனால் இவைகளும் போதவில்லை.

இந்த விவாதங்களும் தேடல்களும் அறிவியலில் முடிவற்றதாக போய் நிற்கிறது. கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு சுஜாதா இறுதியாக சொல்லும் பதில்,..

கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் – இருக்கலாம். ஆன்மீக்த்தின் பதில் இருக்கிறார். என் பதில் it depends!

மிகவும் சாமர்த்தியமாக முடித்துவிட்டார். நாளுக்கு நாள் அறிவியலால் பலவற்றினை அறிந்து கொண்டிருக்கிறோம். முன்பு பிறப்பு இறப்பு என்ற இரண்டுமே மிக மர்மமாக இருந்தது,. இப்போது பிறப்பினை துள்ளியமாக அறிந்து கொண்டோம், இறப்பும் சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனை கடவுள் நேரடியாக படைத்தார் என்பதை டார்வினின் பரினாமக் கொள்கை பொய்ப்பித்திருக்கிறது. இது தொடர்ந்து கடவுள் இருக்கும் சாத்தியக் கூறுகளை கலைந்து கொண்டிருக்கும் அதே வேளையில், ஒவ்வொரு உயிரினத்தின் தனித்தன்மையையும் அதற்கான தகவமைப்பு, சூழ்நிலை இவற்றையெல்லாம் பார்த்து இவை எப்படி சாத்தியப்பட்டிருக்கின்றன என ஆச்சிரியம் கொள்ள வைக்கின்றன.

புத்தகத்தினை முழுவதுமாக படித்துவிட்டாலும், அறிவியல் விதிகளை அறிந்து கொண்டு மீண்டும் ஒரு முறை புரட்டினால் இன்னும் சில விஷயங்கள் தெளிவாகும் என நினைக்கிறேன். அதனால் இந்த தியரிகளை நமக்கு ஏற்றவாறு சொல்லியிருக்கும் வலைப்பூக்களை தேடிப்போகிறேன். இன்று கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும், வருங்காலம் கடவுளை கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கையில் முடித்துக் கொள்கிறேன்.

கடவுள் இருக்கிறாரா? – சுஜாதா எழுதிய புத்தகம் தரவிரக்கம்.

குறிப்பு – இந்த தரவிரக்கத்தில் முதல் 54 பக்கங்களிலேயே கடவுள் இருக்கிறாரா முடிந்துவிடுகிறது. அடுத்ததாக மிக எளிமையான என்ன ஆச்சிரியம் தொடங்குகிறது. இது ஏறக்குறைய கடவுள் இருக்கிறாரா புத்தகத்தின் தொடர்ச்சி போல தோன்றும். இதில் சுஜாதா தன்னுடைய அனுபவங்களையும், உலகமெங்கும் நடந்த அதிசயங்களையும் முன் வைக்கின்றார்.

அழவைத்த ஆயிஷா – இரா.நடராசனின் சின்னஞ்சிறு நாவல் பதிவிரக்கத்துடன்

ஆயிஷா, இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் கிடைத்த பொக்கிசம். பொதுவாக அழகான ஓவியங்களின் மீது எனக்கு தீராத காதல். புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் போது, பல சமயங்களில் மிக அழகான ஓவியங்களை அட்டைப்படமாக கொண்டவைகளை தேர்ந்தெடுப்பேன். அப்படிதான் ஆயிஷாவையும் தேர்ந்தெடுத்தேன்.
ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான புத்தகம் என்று பொறிக்கப்பட்டிருந்தது கூடுதல் கவர்ச்சி.

ஆனால் இந்தக் கவர்ச்சி மட்டும் இருந்து உள்ளே ஒன்றும் இல்லாமல் இருந்திருந்தால், ஆயிஷாவைப் பற்றி இங்கு எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஆனால் ஆயிஷா நெஞ்சை உலுக்கி கேள்வி கேட்டாள். இங்கிருக்கும் கல்வி முறையில் உடன்பாடில்லாத நிலை எனக்கு எப்போதும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இங்கிருப்பது கல்வியே இல்லை, “வாந்தி”.

ஒரு பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் சென்று, ஒரு விடுமுறைக் கடிதம் எழுதச் சொன்னால் நிச்சயம், எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் என்றே ஆரமித்திருப்பார்கள். எனக்கு நான்காம் வகுப்பிலேயே விடுமுறைக் கடிதம் எழுதுவது பற்றி சொல்லிக் கொடுத்தார்கள். அதை எழுதியே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். இடைப்பட்ட காலத்தில் போதிக்கப்பட்டது கடிதத்தினைப் பொருத்த வரை ஒன்றுமே இல்லை. ஒட்டுமொத்த கல்வி முறையில் இப்படி வளர்ச்சி பெறாத நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது.

அதனால்தான் இந்தக் கல்வி ஒரு ஓவியனையோ, கவிஞனையோ உருவாக்குவதற்கோ, அவனை மெருகேற்றவோ உதவுவதில்லை. அதிகாரிகளை உருவாக்குவதற்காகவாவது உதவுகின்றதா என்றுப் பார்த்தால் அதுவும் இல்லை. இன்று பி.இ முடித்தவர்கள் கூட வேலைக்கு தகுதியானவர்களாக இல்லை. இந்த தகுதியின்மை அவர்களை கொலை, கடத்தல், கற்பழிப்பு என தடம் மாறிச் செல்ல உதவியிருக்கிறது. பகுத்தறிவாதிகளும், கல்வியாளர்களும் காலம் காலமாக இருக்கும் தமிழ்நாடு இந்நேரம் சொர்க்கமாக மாறியிருக்க வேண்டும்.

ஆனால் வரதட்சனை முதற்கொண்டு கொலைகள் வரை படித்தவர்களே அலட்சியமாக செய்யும் நிலைதான் வந்திருக்கிறது. இதற்கு மூலக் காரணம் நம்முடைய கல்விமுறை என்பதை என்னால் அடித்துக் கூற இயலும். இந்தக் கல்வி முறையில் சில சில நல்ல விஷயங்களும் இப்போது மறைந்து கொண்டிருக்கின்றன என்பது இன்னும் வேதனையான செய்தி. கல்வியைச் சார்ந்த இரண்டு விசயங்களை ஞாநி அவர்கள் ஸ்டாலினுக்கும் பொன்முடிக்கும் இரண்டு கடிதங்கள் என்ற இடுகையில் குறிப்பட்டிருக்கிறார். அந்த விஷயங்கள் இந்த இடுகைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனையும் பதிக்கிறேன். முதல் விஷயம் 12ம் வகுப்பில் புகைப்படத்திற்கா தனியொரு பிரிவு இருக்கிறதாம். அது தமிழகத்திலேயே சூலைமேட்டில் மட்டும் இருப்பதாகவும், அதுவும் மூடப்படப் போவதாக வந்த செய்தி.

இரண்டாவது இன்றைய கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டில் சமர்ப்பிக்கும் புரோஜெக்ட் பற்றியது. பெரும்பாலும் எல்லா கல்லூரியிலும் ஆசிரியர்களின் சிபாரிகளிலேயே புரோஜெக்ட் விற்கப்படுகின்றன. முறைப்படி இறுதியாண்டு மாணவர்களுக்கு அந்த திறன் வந்திருக்க வேண்டும். ஆனால் கல்விமுறையில் உள்ள சீர்கேட்டால் அது நடைமுறைக்கு வருவதில்லை. எங்கள் கல்லூரியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே புரோஜெக்ட் செய்ய உதவி செய்தார். மற்ற எல்லோரும் அதற்காக இயங்கும் கடைகளுக்கே செல்ல வழியுருத்தினார்கள். நடைமுறையில் 216 கோடி இதில் புழங்குவதாக ஞாநி குறிப்பிடுகின்றார். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்தக் கல்வி முறைக்கும் ஆயிஷாவுக்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்கின்றீர்களா. ஆயிஷா இந்தக் கல்வி முறையால் பாதிக்கப்பட்ட லட்சக் கணக்கானவர்களில் ஒருத்தி. “பேப்பர் வந்தது. மார்க் சரியா போடல. கேட்டேன் சொந்த சரக்குக்கெல்லாம் மார்க் கிடையாதாம் நோட்ஸ்ல இருக்கிறத, அப்படியே எழுதனுமாம்.” என்று அவள் வேதனை கொள்கின்ற இடத்தில் என்னுடைய கடந்த காலங்கள் நினைவுக்கு வந்ததன. இன்றைய ஆசிரியர்களும் பிசாசுகாலாகவே இருக்கின்றார்கள். மாணவிகளை காம இச்சைக்கு ஆட்படுத்துவது, வேலைக்காரர்கள் போல வீட்டிற்கே அழைத்து சென்று வேலை வாங்குவது, கொடூரமான தண்டனைகள் தருவது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆசிரியப்பணியை சேவையாக செய்யும் மனிதர்கள் குறைந்து கொண்டே போகின்றார்கள். இங்கும் ஆசிரியரிடம் கேள்வி கேட்டதற்காக அடிகள், அவர்கள் நடத்தும் டியூசனுக்கு போகாததால் அடிகள், பரிட்சையில் கேள்விகளுக்கு சொந்த மூளையை உபயோகித்து எழுதியதால் கிடைத்த அடிகள் என அடிகளிலின் வலிகளிலிருந்து தப்பிக்க தானே கண்டறிந்த தவறான வலிநிவாரணியை தனக்குள் செலுத்தி இறந்து போகின்றாள் ஆயிஷா. ஆசிரியர்களின் அலட்சியங்களும், தவறான கல்விமுறையும் இந்தளவிற்கு கொடுமையான நிகழ்விற்கு காரணமாக இருந்திருகின்றது எனும் போது இன்னும் கூடுதலாக வேதனைதான் வருகிறது. இதனை மாற்ற முடியாதா என்று ஏக்கமான கேள்வியுடன் இந்த இடுகையை முடிக்கிறேன்.

ஆயிஷா புத்தகத்தினை தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு என எட்டு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு பெண்குழந்தையை காவு வாங்கிய கல்வி முறையை இதை விட சிறந்ததாக யாராலும் பதிவு செய்திருக்க முடியாது. இரா. நடராசன் இந்தப் புத்தகத்தினை தன்னுடைய இணையப் பக்கத்தில் இலவசமாகவே இணைத்திருக்கிறார். எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று அவர் ஆயிஷா புத்தகத்தினை தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள். ஆங்கிலத்தில் பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்,.

நன்றி –

நடராசனின் வலைப்பூ

ஞாநி