திருமாலின் திருமச்சம் – சிற்ப ஆய்வு

திருமச்சம் அல்லது சிறீ வத்சம் என்பது திருமாலின் மார்பிலுள்ள மச்சம் ஆகும். இது திருமாலின் வலது மார்பு பகுதியில் உள்ளது. இது முக்கோண வடிவு கொண்டது. இதனை மச்சம், மரு என்றும் கூறலாம்.உலோக சிற்பங்கள், கற் சிற்பங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும், மார்பில் திருமச்சம் உள்ளதென அறிந்தால் அச்சிற்பத்தை திருமால் என்று கூறலாம்.

மூன்று துளசி இலை வடிவ திருமச்சம்
லட்சுமி தேவி

திருமால் சிலையின் வலது மார்பில் முக்கோண வடிவிலான புடைப்பாக காட்சி தரும். முக்கோண பகுதியில் மூன்று துளசி இலைகளை கொண்டதாகவோ, திருமகளின் வடிவு கொண்டதாகவோ அமைகின்றன.திருமச்சம் திருமகளாக கருதப்படுவதால் அரூபதிருமகள் என்றும் திருமால் திருவுறை மார்பன் என்றும் அறியப்படுகிறார்.

ஓவியங்கள் – விக்கிப்பீடியா கட்டுரைக்காக வரைந்தது.

அர்ஜூன தவம் பகிரத தவம் – சிற்ப ஆய்வு

சைவ சமய புராணங்களில் இரண்டு தவங்கள் முக்கியமானவை.1. பகீரத தவம் – கங்கை நதியை பூமிக்கு கொண்டு வர சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.2. அர்ஜூன தவம் – பாசுபதம் எனும் ஆயுதம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.


பகீரத தவம் – பகீரதனின் முன்னோரான சகரரின் மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் மகன்கள், மற்றொரு மனைவியான கேசனிக்கு ஒரு மகன். அசுவமேத யாகத்தை மன்னர் சகரர் செய்கிறார். அதன்படி குதிரையை விடுவிக்கின்றனர். குதிரையானது கபிலர் எனும் முனிவரின் குகை வாயிலில் இருக்கிறது. குதிரையை காணாது தேடிவந்த 60 ஆயிரம் பேரும் கபில முனிவரிடம் சண்டைக்கு செல்கின்றனர். கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.
கேசியின் மகனுக்கு பிறக்கும் பகீரதன் அரசரானதும் தன்னுடைய முன்னோர்கள் 60 ஆயிரம் பேர் முக்தி அடையாமல் இருக்கிறார்கள் என அறிந்து வருந்துகிறான். அவர்களை முக்தி பெற வைக்க தேவலோகத்தில் இருக்கும் கங்கை நதியை பூமிக்கு வர வைக்க சிவபெருமானை நோக்கி தவமிருக்கிறான். பெருந்தவம் கங்கையை பூமிக்கு வர வைக்கிறது. 60 ஆயிரம் முன்னோர்களும் முக்தி அடைகிறார்கள்.


அர்ஜூன தவம் – பாண்டவர்கள் சூதாடி தோற்ற பிறகு வனவாசம் மேற்கொள்கின்றனர். அந்தக்காலத்தில் ‘பாசுபதம்’ எனும் ஆயுதத்தை பெற சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் அர்ஜூனன். மூகாசுரன் என்ற அசுரன் அர்ஜூனன் தவம் கலைக்க பன்றியாக உருவெடுத்து மோதி தொல்லை செய்தான். பன்றியை கொல்ல அர்ஜூனன் அம்பு எய்த.. மற்றொரு அம்பும் அந்த பன்றியை துளைக்கிறது. அந்த அம்புக்கு உரிமையாளர் வேடனாக வந்த சிவபெருமான். பன்றி யாருக்கு சொந்தம் என வேடனுக்கும், அர்ஜூனனுக்கும் ஒரு சண்டை நடந்து இறுதியில் சிவபெருமான் அர்ஜூனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தார்.
சிவாலயங்களில் ஒரு தவக்காட்சி சிற்பமாக இருக்கிறது. ஒரு ஆண் ஒற்றைக்காலை மட்டும் தரையில் ஊன்றி கடுமையாக தவமிருக்கிறார். அந்த தவம் செய்யும் மனிதர் அர்ஜூனனா? பகீரதனா என நமக்கு குழப்பம் நேரிடும். அதை எளிதாக வேறுபடுத்தி காட்டிட சிற்பி ஒரு உத்தியை கடைபிடிக்கிறார். அது பன்றி.


தவம் செய்யும் சிற்பம் அர்ஜூனன் என்றால் அவர் பின்புறமாக பன்றி சிற்பமும் சேர்த்து வடிக்கப்படும். பகீரதன் என்றால் அவர் மட்டுமே தவமிருப்பார்.

உரைப்பான் – பச்சிளம் குழந்தைக்கான செரிமான மருந்து

உரைப்பான்

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தாலும் அதனுடைய செரித்தல் திறனை மேம்படுத்த உரைப்பான் என்ற பெயரில் சில மருந்துப் பொருட்களை அரைத்து தருகிறார்கள். கீழ்கண்ட ஒன்பது பொருட்களில் கிடைக்கின்றவைகளை தாய்ப்பாலுடன் உரைப்பான் கல்லில் ஐந்து மூன்று என்ற கணக்கில் உரைத்து குழந்தைக்கு தருகிறார்கள்.

1) வசம்பு
2) சுக்கு
3) மாச்சக்காய்
4) சாதிக்காய்
5) சித்தரத்தை
6) முறுக்குத் திப்பிலி
7) ஒருதலைப் பூண்டு
8) பெருங்காயக் கட்டி
9) மான் கொம்பு

இப்பொருட்களில் வசம்பு என்பது புள்ளவளர்த்தி (பிள்ளை வளர்த்தி) என்றும் அழைக்கப்படுகிறது. மாலை நேரங்களில் இந்தப் பெயரைக் கூறாமல் பெயர் சொல்லாதது என்றும் வழங்குகிறார்கள். முறுக்குத் திப்பிலி என்பது குழந்தைகள் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்வதை தவிர்ப்பதற்காக சேர்க்கப்படுகிறது. இப்பொருட்களை சாணத்தில் வைத்து பதப்படுத்தி, விளக்கு சுடரில் காட்டி தீய்த்து உபயோகம் செய்கின்றார்கள். இப்பொருட்களில் பெரும்பாலானவை இன்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன.

நெடுங்காலமாக விளம்பரங்களில் குழந்தை அழுதால் உட்வான்ஸ் வாட்டர் கொடுங்கள் என்று கூறப்படும் பொருளுக்கு மாற்றாக கிராமங்களில் இந்த உரைப்பானே கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

#மகரயாழினி #நாட்டார்_சடங்குகள் #பிறப்பு_சடங்குகள்

2017 சனவரி மாதம் 12ல் முகநூலில் பதிவு செய்தது.

மழலை பாடல்கள்

2017 சனவரி 8 ல் எனது முகநூலில் மகரயாழிக்கான மழலை பாடலை பதிவு செய்திருந்தேன்.

என்னுடைய அம்மாச்சியும், கருப்பாயி என்ற உறவுக்காரப் பாட்டியும் நிறைய நாட்டார் பாடல்களை மகரயாழினிக்காக நேற்று பாடினார்கள். பல் போன பாட்டிகள் தங்களின் நினைவுப் பைகளிலிருந்து சில்லறைகளைப் போல நாட்டார் பாடல்களை சிதறவிடுகிறார்கள். கருத்திற்கோ, பொருளுக்கோ முக்கியத்துவம் இல்லாமல் ஓசைநயத்திற்கே அதிகம் முக்கியத்துவம் தருகின்ற பாடல்களாக அவை இருக்கிறன. மொழியே அறியாத மூன்று மாதங்கள் கூட நிரம்பாத அந்த மழலை மகிழ்ச்சியை பொக்கை சிரிப்பால் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இங்கு இங்கு இங்கு..
இது இங்கு குடிக்கிற சங்கு.
வார்த்தை கேட்கிற வண்டு.
பாட்டு கேட்கிற பாங்கி,
பேச்சு கேட்கிற பூச்சி
இது இங்கு கேட்கிற இளஞ்சியம்

இந்தப் பாடல் கேள்வியாகவும் முடியும் வண்ணமும் மாற்றிப் பாடுகிறார்கள்.

இது இங்கு குடிக்கிற சங்கா என்பதுபோல மழலையோடு உரையாடுவதாகவும் பாடுகிறார்கள். 🙂

இந்தப்பதிவிற்கு விக்கிப்பீடியரும், தமிழார்வருமான செல்வா ஐயா தன்னுடைய கருத்தினை பகிர்ந்திருந்தார்.

IMG_20181025_193624

செல்வா ஐயா குறிப்பிட்ட ஒந்து.. ஒந்து காசு பாடலை..

“உந்தி உந்தி காசு..
யார் கொடுத்த காசு..
மாமா கொடுத்த காசு..
மாயமாப் போச்சு..”

என ஊர் பக்கம் பாடுகிறார்கள். இதில் உந்தி உந்தி எனும் போது இடது உள்ளங்கையில் வலதுகை ஆள்காட்டி விரலை தொட்டு தொட்டு காட்டவும்.. மாயமாய் போச்சு எனும் கையை விரித்து ஆட்டி இல்லை என விவரித்தார்கள்.

#மகரயாழினி க்கு பிடித்த பாடலாகிப் போனது. “வூ..ம்.. வூ..ம்” என ஓசை எழுப்பிக் கொண்டு உள்ளங்கையில் ஆள்காட்டி விரலை தொட்டு தொட்டு காட்டுவாள்.. அப்படியானால் நாம் உந்தி உந்தி காசினை பாட வேண்டும்.

அவளின் அம்மா பாடி முடித்ததும்.. என்னுடைய அம்மாக்கள் பாட வேண்டும்..

வணக்கம் வைக்க இருகரம் கூப்பவும், குட்மார்னிங் வைக்க நெற்றியில் கை வைக்கவும் தொடங்கிய பிறகு இந்த உந்தி உந்தி காசு பாடல் மறையத் தொடங்கிவிட்டது.

#மகளதிகாரம்

பேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்

இம்முறை வீட்டு வருச சாமான்கள் வாங்குவதற்கு நாமக்கல் மாவட்டம் பேலுக்குறிச்சிக்கு செல்வது என்று அம்மா முடிவெடுத்தார். சென்ற முறை திருச்சிராப்பள்ளியில் வருச சாமான்கள் வாங்கியிருந்தாலும், மற்ற உறவினர்களிடம் அது குறித்து விசாரித்த போது விலை மலிவாக பேலுக்குறிச்சியில் கிடைப்பதை தெரிவித்தனர். அதனால் இம்முறை சென்ற சனிக்கிழமையன்று பேலுக்குறிச்சிக்கு சென்றோம்.
pellukurichi

வாசனைப்பொருள்களுக்கு என்று தனிக்கடைகளும், வருச சாமான்கள் எனப்படும் மிளகு, கடுகு, சீரகம் போன்றவற்றுக்கு தனிக்கடைகளும் இருக்கின்றன. இம்முறை மழைப் பொய்த்துப் போனதால் பாதிச்சந்தைக்கே வியாபாரிகள் இருப்பதாக வருடந்தோறும் சென்றுவரும் உறவினர் தெரிவித்தார். வியாபாரிகள் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு ரகம் வாரியாக பொருள்களை வைத்துள்ளார்கள். குறைவான விலைக்கு கேட்டால் தரம் குறைந்த பொருகளையும், தரத்தினை எதிர்ப்பார்த்தால் அதிக விலையும் உண்டு. இதுதான் வியாபாரம். சில கடைகளில் எடை ஏமாற்றும் வழக்கமும் உள்ளது என்பதால், உடன் வந்த உறவினர் வீட்டிலிருந்து படியொன்றினை எடுத்து வைத்திருந்தார். அதில்தான் தர வேண்டும் என்று வியாபாரிடம் சொன்ன போது, அவர் தன்னுடைய படியையும், உறவினர் படியையும் அளந்து சரி பார்த்தார். வியாபாரிடம் ஒரு லிட்டர் படி இருந்தது, உறவினர் கொண்டுவந்தது கிலோ படி.

லிட்டர் படியைவிட 100-200 கிராம் அளவுக்கு பொருள்கள் பிடித்தன. அதனால் செட் 1300 என நிர்ணயம் செய்து மூன்று செட்டுகளை வாங்கிக் கொண்டோம். ஒரு செட்டில் ஐந்து பொருள்கள், ஒவ்வொன்றும் நான்கு கிலோ,. ஆக 60 கிலோ பொருளுடன் நான் விடைப்பெற்று அருகிலிருந்த ஒரு கோயிலில் அமர்ந்து கொண்டேன். மற்றவர்கள் பூண்டு, மஞ்சள், பட்டாணி என வாங்கிக் கொண்டு திரும்பிவர அனைவரும் பேருந்து ஏறி அவரவர் இல்லத்தினை வந்தடைந்தோம்.

பேலுக்குறிச்சி சந்தையைப் பற்றி பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்றபட்டமைக்கு இரு காரணங்கள், 1) சங்கிலி கருப்பு 2) கூட்டாஞ் சோறு.

சங்கிலி கருப்பு – 

sangalikarupu

நாட்டார் தெய்வங்களில் முனியும், கருப்பும் மட்டும் எண்ணற்ற பெயர்களையும், அமைப்புகளையும் உடையது. மிகவும் உக்கிரமான கருப்பினை சில மந்திரவாதிகள் சங்கிலியால் கட்டி தங்களுக்கு சேவகம் செய்ய வைத்துள்ள கதைகளையும், ஊருக்கு நல்லது செய்ய சத்தியம் செய்து சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் கருப்பு கதைகளும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய நண்பன் ஒருவனின் குலதெய்வமான கருப்புசாமியை அவனுடைய தாத்தா அழைத்துவந்து கோயில்கட்டியமை குறித்து தெரிவித்திருக்கிறான். எனினும் இதுவரை சங்கிலி கருப்பினை கண்டதில்லை என்ற குறை இம்முறை அகன்றது.
பேலுக்குறிச்சி சந்தையின் முன்பகுதியில் சில பதிவுகளோடு, சங்கிலி கருப்பும் உள்ளார். ஆளுயர சிலை. மேலிருந்து கீழ் வரை சங்கிலி சுற்றப்பட்ட கருங்கல்லாக காட்சியளிக்கிறார். முன்பக்கத்தில் தமிழ்எழுத்துகள் இருக்கின்றன. பக்கவாட்டில் வட்டமிட்டு அதன் குறுக்காக கோடிட்டவாறு சின்னங்கள் உள்ளன. பின்பக்கம் செதில் செதிலாக உள்ளது. முகநூலில் சேலம் வரலாற்று ஆய்வு செய்யும் ஆர்வளர்களுக்கு தகவல் தந்துள்ளேன். எண்ணற்ற சிறு தெய்வங்கள் ஏதேனும் வரலாற்றுக்காக வைக்கப்பட்ட அரசுச் சின்னங்களாக இருப்பதை அவர்கள் கண்டு முன்பே தெரிவித்துள்ளார்கள்.

முகநூல் நண்பரான ராஜசேகரன் இது நெடுங்கல்லாகவோ, கோமாரிக்கல்லாகவோ இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். மாலை, ஆபரணம், துண்டு ஆகியவை இல்லாமல் வெறும் கல்லை மட்டும் படம்பிடித்திருந்தால் இந்நேரம் அது என்ன என்று தெரிந்திருக்கும். 🙂 கருப்புசாமியாக ஒரு வரலாறு மக்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சி. எனக்கு நெடுங்காலமாக கேள்விப்பட்ட சங்கிலி கருப்பைக் கண்டதில் மகிழ்ச்சி.

கூட்டாஞ் சோறு –

பேலுக்குறிச்சியில் எண்ணற்ற ஊர் மக்கள், பெரும்பாலும் மகளீர் ஒற்றுமையாக ஒரு கனரக மூன்று சக்கர, நான்கு சக்கர வண்டிகளில் வந்திறங்கி முழுச்சந்தையிலும் பொருள்களை வாங்கிக் கொண்டு ஒன்று சேர்ந்து திரும்புகின்றார்கள். பசியாறுவதற்கு வீட்டில் சமைத்துக் கொண்டு வரும் உணவை கோயிலில் அமர்ந்து பகிர்ந்து உண்கிறார்கள். பொருகளை மாற்றி மாற்றி தங்களுக்குள் ஒருவர் இருந்து காவல் காக்கின்றார்கள். இந்தக் காலத்திலும் இவ்வாறான ஒற்றுமையும், குழு மனப்பான்மையும் வியக்க வைக்கிறது.

நெருஞ்சி முள் – சிறுகதை

p20b-copy

எங்கள் பந்தாட்டம் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு போவது என முடிவெடுத்தோம். ரெட்ட வாயனும், கருங்காலனும் கிழக்குத் தெருவுக்கு போனானர்கள், வேணியக்காவும், சில்வண்டும் நானும் இந்தப் பக்கமாக வந்தோம். இந்த வினோதப் பெயர்களெல்லாம் அவளே எங்களுக்குச் சூட்டினாள். நாங்களும் அவளுக்குப் பட்டபெயர் வைக்க அவள் அனுமதி தரவில்லை. வேணி என்று பெயர் சொல்லியே எல்லோரும் கூப்பிட்டோம். ஆனால் அவளுடைய அம்மா கோவக்கரி, ஒரு முறை நாங்கள் வேணி,. வேணி.. என்று கூப்பிடுவதைப் பார்த்தி, ஏன்டா.. புண்டாமவனுங்க. உங்களோட பெரியவள பேரச் சொல்லித்தான் கூப்பிடுவிகளோ, இன்னொரு தடவ எவனாச்சும் வேணி, கேணின்னு சொல்லுங்க, அடியாப்புள தொங்கரத அறுத்துவிட்டறேன் என்றாள். சொன்னதை செய்தாலும் செய்துவிடுவாள் என்று நாங்கள் வலுக்கட்டாயமாக அவளுடையப் பெயருக்குப் பின் அக்காவையும் சேர்த்துக் கொண்டோம்.

அவள் எங்கள் குழுவின் இராணியாக இருந்தாள். நாங்கள் என்ன விளையாட்டு விளையாட வேண்டும், எப்போது வீடு திரும்ப வேண்டும், என்னக் கதை கேட்க வேண்டும் என எல்லாவற்றையுமே அவளே தீர்மானித்தாள். எங்களுக்குப் பெயர் வைக்கும் அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டாள். அவளுடையப் பேச்சு எங்கள் வீடுகளும் செல்லுபடியானது. அம்மா விளையாடப் போகாதே என்று தடுத்துவைத்திருந்தாளும், வேணியக்கா வந்து விளையாடக் கூப்பிட்டால், மறுப்பேதும் வருவதில்லை. அதனால் அவளைப் பற்றிய புகார்கள் எதுவும் எங்களுடைய வீடுகளில் எடுபடுவதில்லை. எப்போது வேண்டுமாலும் இந்தப் பெயரை மாற்றிவிட்டு வேறு பெயர் வைத்துவிடுவாள். போன வாரம் வரை மொட்டை முனியென்று சில்வண்டை கூப்பிட்டுவந்தாள். அவன் வீட்டார் குலதெய்வமான முனிக்கு மொட்டை அடித்துவந்த நாளிலிருந்து இப்படித்தான் கூப்பிடுவாள். எங்களையும் மொட்டை முனியென்றே அவனைக் கூப்பிடச் சொன்னாள். அவனுக்கு முடி வளர்ந்துவிட்டதும், சில்வண்டுபோல ஓயாமல் கத்துகிறான் என சில்வண்டு எனப் பெயரிட்டுவிட்டாள்.

எல்லோருக்கும் பெயர் மாத்தினாலும் எனக்கு மட்டும் அவள் பட்டப் பெயரை மாற்றுவதேயில்லை. எத்தனை முறை நான் கெஞ்சிப்பார்த்தாலும் அவள் அந்தப் பெயரையே சொல்லி அழைத்துவந்தாள். பிள்ளையார் கோயில் வந்ததும் சில்வண்டு அவனுடைய வீட்டிற்கு சென்றுவிட்டான். நானும் வேணியக்காவும் மட்டும் இடதுபக்கம் திரும்பி சென்றோம். அவளுடைய வீடு காத்தான் வீடு என்பார்கள். சுற்றிலும் தோட்டமிருக்க நடுவே அவளுடைய வீடு இருந்தது. அந்த வீட்டில் இருந்து பார்த்தால் இந்தப் பக்கமிருந்து பிள்ளையார் கோயில் வரை நடப்பது எல்லாமே தெரியும். அவங்க தாத்தா காலத்தில் ஒரு திருடன் ஊருக்குள் திருட வந்தபோது, ஏதோ சத்தம் கேட்குதேன்னு பார்தத வேணியோட தாத்தா சத்தம் போட திருடன் களவாண்ட பொருளையெல்லாம் போட்டுட்டு ஓடிட்டானாம். அதிலிருந்து அந்த வீட்டை காத்தான் வீடுன்னு சொல்லுவாங்க. ஒருவேள அந்த திருடன்கிட்ட காப்பாத்துனதால ஊருக்குள்ள வேணியெல்லாம் மதிக்கிறாங்க போலிருக்கு.

வேணிக்கா.. ஒனக்கு ஒரு ரகசியம் சொல்லிட்டுமா.
என்னடா.. ரகசியம்
எங்க வீட்டுல ஒரு கிளிக்குஞ்சு இருக்கு.
ஆ.. எங்கிருந்துடா புடுச்சீங்க.
எங்க சின்ன மாமா தொட்டியச்சி கோயில் மரத்துல இருந்து எடுத்துக்கிட்டு வந்திருக்கு.
காலையில வீட்டுக்கு வரும் போது ஏன்டா சொல்லைல… மொன்னை
போ.. உன் கிட்ட எத்தனை தடவை சொல்லிட்டேன் என்னைய மொன்னைன்னு கூப்பிடாத. நீ இப்படி கூப்பிட்டே உனக்கு கிளிக்குஞ்ச காமிக்க மாட்டேன்.
ஏன்டா.. மொன்னைன்னு உண்மைத்தான் சொன்னேன்.
போ.. உனக்கு கிளிக்குஞ்ச காமிக்கமாட்டேன் போ..
சரிடா.. அதான் உன் குஞ்சையே பார்த்துட்டேன்னே.. அதுமாதிரியே உன் கிளிக்குஞ்சும் மொன்னையாத்தான் இருக்கும்.
போடி.. நீ தான் மொன்னை.. என அவளைத் தள்ளிவிட்டுவிட்டு வீட்டுக்கு ஓடினேன். அவள் கீழே சரிந்து நெருஞ்சி முள்ளில் முகம் பதித்தாள். காத்தான் வீட்டிருந்து “வேணீ…” என்ற குரல் என்னை துரத்திக் கொண்டு வந்தது.

சீனிவசநல்லூர் குரங்கநாதர் கோயில் – ஓர் ஆய்வு

ஆய்வென்பது இரு வகையானது, கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளைக் கொண்டது, அல்லது களத்தில் சென்று நேரடியாக தரவுகளை சேகாரம் செய்து அதனடிப்படையில் எடுக்கப்பெறும் முடிவு.

இரண்டாவது ஆய்விற்கு நேரடியாக களத்தில் சென்று ஆய்வு செய்யும் அறிவு வேண்டும். கல்வெட்டுகளை படித்தல், வரலாறுகளின் அடிப்படையில் கோயிலின் அங்கங்களை அறிந்திருக்கும் அறிவு அதற்குத் தேவைப்படும். கோயிலின் அங்கங்கள் குறித்தும், கல்வெட்டுகள் குறித்தும் போதிய அறிவு இல்லையென்பதால், ஏற்கனவே அதனை ஆய்வு செய்து வெளியிட்ட அறிஞர்களின் கருத்தினை எடுத்துக் கொண்டு அதனடிப்படையில் சில முடிவுகளை கூறுகிறேன். மிகவும் எளிமையாக எல்லோராலும் கூறிவிடக்கூடிய முடிவுகளை எதற்காக வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்?. இந்த முடிவுகளை வைத்துக் கொண்டு மேலும் ஓர் படி ஆய்வினை நகர்த்த இயலும்.

சீனிவாசநல்லூர் வரலாறு –

முற்காலச் சோழர்களின் கலையம்சம் உள்ள இடம் சீனிவாசநல்லூர். மகேந்திரமங்கலம் எனும் ஊரானது சீனிவாசநல்லூருக்கு அருகே உள்ளது. இந்த மகேந்திரமங்கலம் என்பது முதலாம் மகேந்திரவர்மானால் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் அதன் நீட்சி சீனிவாசநல்லூர் வரை இருந்திருக்கலாம். இங்குள்ள கோயிலின் மூலவரை குரக்குத்துறைப் பெருமானடிகள் என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் கோயிலை திருக்கொருக்குத்துறை மகாதேவர் கோயில் என்றும் அழைத்துள்ளனர். இந்தக் கோயில் 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆதித்த சோழனால் கட்டப்பட்டது. அதன் பிறகு பராந்தகன் கண்டராதித்தர், ராஜராஜன் ஆகியோர் இக்கோயிலுக்கு வந்துள்ளனர். அவர்களின் கல்வெட்டுகள் உள்ளன.

கோயில் அமைப்பு –

20161001_123526-copy

நவீன கோயில்களைப் போல மிகவும் சிறியது. கருவறையும் அதனை ஒட்டிய நீட்சியான அர்த்தமண்டபமும் மட்டுமே நமக்கு எஞ்சியுள்ளன. இதனுடைய அருகே சண்டிகேசருக்கு நிச்சயமாக ஒரு சன்னதி இருந்திருக்க வேண்டும். மற்படி அம்மன் சன்னதி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை முருகன் என இப்போது காணும் சிவாலய அமைப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் தஞ்சைப் பெரியக் கோயிலைக் கட்டிய ராசராச தேவரே இந்த மூலவரையும், சண்டிகேசரையும் மட்டும் தான் அமைத்தான் என்று கூறிகிறார்கள். மகன் காலத்திலேயே இல்லையென்றால் அப்பா எப்படி கட்டியிருப்பார்.

ஆனால் இக்கோயில் கல்வெட்டில் சிறீபலிபூசை எனும் பலிபீடத்திற்கு செய்யப்படும் பூசை குறித்து இருந்த தகவல்களைப் பெற்றிருக்கிறார்கள். அதன் படி அட்ட திக்கு பாலகர்களுக்கு இந்த பலிபூசை கொடுக்கப்படுகிறது. உடன் ஈசன் பலி கொள்ளும் தேவர் என்றோ, அஸ்திரதேவராக வந்து பங்கு கொண்டிருக்கிறார். அதனால் கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோபுரத்திலும், திருச்சுற்றிலும் அட்டதிக்கு பாலகர்கள் இருந்திருக்கலாம். சுகாசனர், பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் திருவுருவங்களே இருக்கின்றன.

சிறிய வடிவங்களில் நடனமாடும் நங்கைகளும், இசைக்கும் புதகணங்களும், குறும்புகளும் பதிவாகியுள்ளன. சிவபெருமானின் கரிதோல் உரித்த பெருமான் மற்றும், ஊர்த்தவ தாண்டவ சிற்பங்கள் மிகவும் சிறிய அளவில் நயத்துடன் உள்ளன. இவ்விரண்டிலுமே அம்மை பயந்த நிலையில் இருப்பதால் சைவத்தோடு அம்மனையும் இணைத்த காலத்திற்கு பிறகானது என்பதையும் நினைவில் கூற வேண்டும்.

அப்படியானால் அம்மையும் அப்பனும் சரிபாதியாய் சரீரத்தினை பகிர்ந்த அர்த்தநாரீசுவரோ, திருமாலும் பிரம்மாவும் காண இயலாமல் தவித்த லிங்கோத்பவரோ கோயிலின் பின் பக்க கோஷ்டத்தில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்விடத்தில் சிறு துணுக்கு இல்லாமல் செய்துவிட்டார்கள். தற்போது வெற்றிடமாக இருக்கிறது. ஆமாம் வெற்றிடம் தானே நடராசத் தத்துவம். 🙂

இக்கோயிலின் மூலவர் விமான அமைப்பினைக் கொண்டு மணிக் கோயில் என்ற வகையிலானது என்கிறார்கள்.

யாரிந்த குரங்கு?

காவேரி நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோயின் நாதன் குரங்குநாதன் என்றால் ஏன் அப்பெயர் ஏற்பட்டது. நிச்சயமாக ஒரு குரங்கு வந்து வழிபாடு செய்திருக்க வேண்டும். யார் அந்தக் குரங்கு?

குரங்கினை நாம் எங்கு பார்த்தாலும் அடிமனதிலிருந்து ஒரு பெயர் எழும் அது மாருதி. ஒரு வேளை மாருதி வழிபாடு செய்திருப்பாரா. இருக்காது. ஏனென்றால் இராமாயணம் நன்கு தெரிந்தவர்களுக்கு அனுமான் சிவ அம்சம் என்பது தெரிந்திருக்கும். அத்துடன் இராமாயணத்தில் அனுமன் இராமனை மட்டுமே தெய்வமாக வணங்கும் குணம் கொண்டவர். அதனால் முதல் யோசனை தோல்வி.

சரி. குரங்கு என்றால் அனுமார்தானா. இராமாயணத்தில் பெரிய வானர இனமே அல்லவா சொல்லப்பட்டிருக்கிறது. அதில் யாராவது வணங்கியிருக்கலாமே. ஆமாம் வாய்ப்புள்ளது. அது யாராக இருக்க கூடுமானால், வானர இனத்தில் மிகுந்த சிவபக்தியைக் கொண்டவராக இருக்க வேண்டும். அவர் வணங்கியமைக்காகவே சிறப்பு பெற்றதாக சோழர்கள் கற்றளி அமைத்திருக்க வேண்டும். அத்தனை சிறப்பு மிக்க சிவபக்த குரங்கு யார்?

வேறு யார் வாலி. யாராலும் சமம் செய்ய இயலாத வலிமை பெற்றவன். சிறந்த சிவபக்தன். சரி.. வாலியே சிறந்த சிவபக்தன் என்றாலும் நம்மால் எவ்வாறு வாலி என்று உறுதியாக கூற முடியும். நம்மால் உறுதியாக கூற முடியவேண்டுமானால் கல்வெட்டில் வாலியைப் பற்றி குறிப்பு இருக்க வேண்டும். ஆனால் நம் போதாத காலம் அது இல்லை. எனவே அருகில் இருக்கும் ஊர்களில் உள்ள சிவாலயங்களை கவனத்தில் கொள்வோம்.

எங்கள் காட்டுப்புத்தூருக்கு அருகே இருக்கும் சீறிராமசமுத்திரம் எனும் அயிலூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் “வாலீசுவரர்” கோயில் என்பதாகும். அத்தலத்தில் வாலி காசியிலிருந்து கொண்டுவந்த லிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. அடுத்தது, அருகே இருக்கும் மாவட்டமான கரூரில் இருக்கும் திருமுக்கூடலூர் சிவாலயத்தின் வரலாறும் வாலியை சுட்டுகிறது. அங்குதான் முதலில் வாலி தன்னுடைய சிவலிங்கத்தினை அமைக்க வேண்டும் என எண்ணி வந்தார். ஆனால் அதற்கு முன்பே மணலில் அகத்தியர் லிங்கம் செய்து பூசை செய்துவிட்டார். வாலிக்கும் அகத்தியருக்கும் சண்டை உண்டாக, அகத்தியரோ தன்னுடைய மணல் லிங்கத்தினை எடுத்துவிட்டு முடிந்தால் வாலி கொண்டுவந்த லிங்கத்தினை வைத்து வழிபாடு செய்யுமாறு கூறியுள்ளார். வாலி அந்த மணல் லிங்கத்தினை அசைக்க முடியாமல் போக, அங்கிருந்து சீறிராமசமுத்திரத்தில் தன்னுடைய லிங்கத்தினை வைத்துப் பூசித்தார் என்று கூறப்படுகிறது. இந்த வரலாறுகளின் அடிப்படையில் வாலியே இத்தலத்தில் சிவபெருமானை பூசித்திருக்க வேண்டும் என்று கொள்ளலாம்.

குரங்குநாதர் கோயில் குழந்தைகள் 2

சென்றப்பதிவில் கையில் பூக்களுடன் இறைவனுக்காக கசிந்துருகும் பக்தன் சிலையைப் பார்த்தோம். இந்தப் பதிவில் தென்முகக் கடவுள் சிற்பத் தொகுதியை காணலாம்.

சனத்குமாரர்கள் எனும் நான்கு பிரம்ம மைந்தர்கள் ஞானத்தினைப் பெறுவதற்காக பிரம்மாவையும், திருமாலையும் கண்டு அவர்கள் தம்பதி சமேதராய் வாழ்வதாலேயே நிராகரித்தனர். தங்கள் குருவினைத் தேடி வருகையில் ஈசன் அவர்களுக்கு இளைஞன் வடிவெடுத்து ஆலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி என்ற வடிவமாக அமர்ந்தார். சிவாலயங்களின் கோஷ்டத்தில் தெற்குநோக்கியவாறு இருக்கும் அவரை இன்றைய பக்தர்கள் குருவென அழைத்து வியாழன் தோறும் சுண்டல்மாலையுடன் சந்திக்கிறார்கள். ஞானத்தின் தேடலுக்கு அவரும் அருள் செய்து கொண்டுள்ளார்.

அந்த தட்சணாமூர்த்தி குரங்குநாதர் கோயிலிலும் இருக்கிறார். சற்று சிதைந்து இருந்தாலும், முற்றிலுமாக அழிக்கப்படாமல் இருப்பது நம்மை மகிழச் செய்கிறது.  அவரும் அவரைச் சுற்றியிருக்கும் சிற்பங்களும் உயிரோட்டமாக உள்ளன. இத்தனை சித்திரவாதைகளுக்குப் பின்னும் உயிரோடு இருக்கும் சிற்பங்களை சிதைக்க கல்மனத்துக்காரர்களாலேயே முடியும்.

இனி நாம் தட்சிணாமூர்த்தியை கவனிப்போம். இறையின் அடியைப் பற்றினால்தானே மோட்சம். தட்சிணாமூர்த்தியின் அடியை கவனிப்போம். சிதைக்கும் எண்ணம் கொண்டவர்களால் சிதைக்க முடியாத பாதங்கள் மட்டும் அந்தரத்தில் இருந்து முயலகனின் மேல் இருக்கின்றன. ஆகா.. முயலகன். இந்து சமயத்தவர்களின் குறியீட்டு சின்னம் முயலகன். அறிவே வடிவான ஞானமூர்த்தி, அஞ்ஞானத்தினை காலடியிட்டு இட்டு மிதிக்கிறார் என்ற கருத்துருவின் வடிவு. முலகனை உற்று நோக்கினோல் அவன் தட்சிணாமூர்த்தியின் அழுத்ததால் ஆ.. வென கதறுவது தெரியும். சோழச் சிற்பியின் திறம்.

தட்சிணாமூர்த்தி சிற்பத் தொகுதி. கட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது, முயகனை மிதிக்கும் ஈசனின் பாதம்.

001

கால்கள் வெட்டப்பட்டாலும், சிதைவுறாமல் சேதி சொல்லும் பாதம். முயலகன் ஏறக்குறைய பூதவடிவில் குறுகைகளும், குறுகால்களும் கொண்டு இருக்கிறார்.

002

ஈசனின் திருவடி  முயலகனின் மீது இருப்பதும், முயலகனின் முக பாவனையும் தெரிகிறாதா.

003

இதோ “ஆ..” வென வாய் திறந்து அலறும் முகப்பாவம்.

004

திகைக்க வைத்த திருப்பதி பயணம் -2

திகைக்க வைத்த திருப்பதி பயணம் – 1

வழிகாட்டியாக வந்தவர் வாகன மண்டபம் என்ற இடத்தினை குறிப்பிட்டு காட்டி, தரிசனம் முடித்ததுமே இங்கு வந்துவிடுங்கள். தரிசனத்திற்கு நான் வரமாட்டேன் என்று கூறிவிட்டு திருப்பதி கோவிலுக்குள் அழைத்து சென்றார். வெள்ளை வெள்ளேறென கோபுரங்கள் இருக்க கலசங்கள் மட்டும் தங்க நிறத்தில் தகதகத்தன. கற்கோபுரங்களையும், வர்ண கோபுரங்களையும் விட ஈர்ப்பானது இல்லையென்றாலும் புதுமையாக இருந்தது. பிரகார வீதியிலிருந்து ஒரு மண்டபத்திற்கு வந்தோம். அங்கிருந்த வரிசையில் இணைந்தோம். எங்கள் காத்திருப்பு நேரம் கணக்கிடப்பட தொடங்கியது.

சிலர் கைகளில் வாட்டர் பாட்டில் வைத்திருந்தார்கள். நாங்கள் வாங்கியதை பேருந்திலேயே விட்டுவிட்டு வந்திருந்தோம். இதை கோவிலுக்குள் அனுமதிப்பார்களோ மாட்டார்களோ என்ற தயக்கமே காரணம். ஆனாலும் அதையெல்லாம் மறந்து புராணங்கள் பற்றியும், திரைப்படங்கள் பற்றியும் கதையடிக்க தொடங்கினோம். வரிசை மெதுவாக மெதுவாக ஊர்ந்து ஒரு சிறைபோன்ற அமைப்பினை எட்டியது. அதனை பெட்டி என்று சொன்னார்கள். ஏற்கனவே அமர்ந்திருந்த கூட்டத்துடன் ஐக்கியமானோம். அந்த அமைப்பின் வலது மூளையில் திடீறென திண்பன்டங்கள் விற்கப்பட்டன. ஈக்கள் மொய்ப்பது போல ஒரே கூட்டம். அது அடங்கியப் பிறகு முறுக்கு வாங்கிவந்து கொறிக்கத் தொடங்கினோம். அறையின் வெளியில் தண்ணீர் இருந்தது, கழிவறையும் கூட சுத்தமாக இருந்தது. எல்லாம் முடித்து அறைக்கு திரும்பினோம்.

இப்போது அதே வலது மூளையில் சாதம் தரப்பட்டது. முதலில் தின்பண்டங்கள் போல இதுவும் பணம் என்று அமைதியாக இருந்தோம். அருகில் உள்ளவர் இலவசம் என்றார். இது தெரிந்திருந்தால் முறுக்கு பாக்கெட்டை 40 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்க மாட்டோமே என்று க்ளுக்கென சிரித்துக் கொண்டோம். மீண்டும் ஈ போல மொய்க்கும் கூட்டம் குறைய பொறுத்திருந்தோம். ஒரு வழியாக சாப்பாடும் முடிந்தத போது மணி 2.30.பக்கத்து அறை கதவு திறந்து மக்கள் செல்ல அடுத்து நாம் தான் என அறைக்குள் இருந்த கூட்டம் வரிசையாக தொடங்கிற்று.

மீண்டும் வரிசையில் இணைந்தோம். எங்கள் அறைக் கதவுகள் திறக்கப்பட்டு மீண்டும் ஊர்ந்து ஊர்ந்து செல்ல தொடங்கினோம். அப்போதுதான் திருப்பதி கோவிலின் தங்க கோபுர தரிசனம் கிடைத்தது. அந்த இடத்திற்கு அருகே பெல்ட் மூலம் சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. இத்தனை நவீன வசதிகளுடன் வேலை நடப்பது வியப்புதான் என்றாலும், அவை பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்க செல்கின்ற என்பதை அங்கிருந்த முழுமையடையாத அமைப்புகள் தெரிவித்தன. எங்கள் மீது ஏசிக் காற்று படர்ந்தது, சிறிது தூரத்தில் வேறொரு வரிசையும் எங்களுடன் இணையத் தொடங்கிற்று. ஆகா நெருங்கிவிட்டோம் சந்நிதியை என்று குதுகலமானோம்.

“கோவிந்தா போலோ,. பாலாஜி போலோ” என்று பெரியவர் ஒருவர் கூற எல்லோரும் கோவிந்தா என்றே கூறிவந்தார்கள். போலோன்னா சொல்லுங்கள் தானே கோவிந்தா போலோன்னு சொல்லும் போதும் கோவிந்தான்னு சொல்லறாங்க, பாலாஜி போலோன்னு சொல்லும் போதும் கோவிந்தானே சொல்லறாங்க என்று கேள்விஞானம் கேள்விகளை கேட்க., அதைப் பற்றிய அக்கரை இன்றி அறை முழுதும் கோவிந்தா கோசங்கள் ஒலிக்க, தென்பட்டது சுவரில் இருந்த  கல்வெட்டுகள். அத்தனையும் அழகு தமிழில், நானும் நண்பனும் சேர்ந்து சில சொற்களைப் படித்தோம், பிரம்மிப்புடன் முன்நோக்கி நகர்ந்தோம். அது வரை அன்னியமாகவே இருந்த திருப்பதி நெருங்கிவந்தது போல இருந்தது. கோவிலை சுற்றி கல்வெட்டுகள் இருக்கும் என்று சொன்னபோது என் கற்பனையில் சிறிய அளவே கல்வெட்டுகளைப் பற்றிய சிந்தனை இருந்தது. ஆனால் நேரில் காணும்போது அதன் முழுஅளவு கண்டு திகைத்தேன், அந்த திகைப்புடன் தமிழன் என்ற பெருமை உடன் சேர்ந்தது. கொடிரத்தின் அடிப்பாகம் மட்டும் தெரிய, அதனைச் சுற்றி ஏதாவது சிற்பத்தினை அவதானிக்க முடிகிறதா என்று பார்த்தேன். அதற்குள் நுழைவுவாயில் வந்துவிட்டது.

உள்பிரகாரத்திற்குள் பிரசுவித்தோம், இருபுறமும் ஏதோ சந்நிதிகள் இருந்தன. உபதேவதைகள் பற்றிய கவலைகள் இன்றி மூலவரை நோக்கியே கூட்டம் நகர்ந்தது. நாமாவது செல்லலாமே என்று பார்த்தால் கயிறுகட்டி தடுத்திருந்தார்கள். அதைப் பற்றி மேலும் நினைக்க நேரமில்லை. மூலவரை நெருங்கினோம். வேங்கடநாதனின் படத்தினை எத்தனை முறை தெளிவாகவே பார்த்திருக்கிறேன். மார்பில் இருக்கும் முக்கோணம் முதற்கொண்டு படித்தும் இருக்கிறேன். ஆனால் திரைப்படங்களில் காண்பிப்பது போல தெளிவாக தெரியவில்லை. கருவறையின் இருளில், விளக்கொளிகளின் மங்கிய வெளிச்சத்தில் யாருமின்றி தனியாக நின்றுகொண்டிருப்பதை கண்டேன். பூசை செய்ய வேண்டியவர்கள் வெங்கிக்கு முதுகுகாட்டிக் கொண்டு எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிரசாதங்களோ, சடரி சடங்குகளோ இல்லை. பின்னால் வரும் பக்தர்களுக்காக எங்களை தள்ளிக் கொண்டிருந்தார் ஒருவர். அவர் ஏதாவது சொல்கிறாரா என்று பார்த்தேன்.ம்ஹூம்., பேச்சேயில்லை செயல்தான்.

உள்பிரகாரத்தில் கண்ணாடியால் மூடப்பட்ட அமைப்பில் ஏகப்பட்ட காசுகள், நோட்டுகளை மக்கள் போட்டிருந்தார்கள். அதன் இடுக்குகளில் பணங்கள் இன்னும் சிக்கிக் கொண்டிருந்தன. இன்னும் சிலர் தங்கள் பங்கிற்கு சொருகி கொண்டிருந்தார்கள். நாங்கள் வேடிக்கை மட்டும் பார்த்தோம். நண்பர்களில் ஒருவன் தன்னுடைய பணம் இரண்டு ரூபாயை உண்டியலில் போட சென்றான். நாங்களும் பாதுகாப்பிற்கு உடன் சென்றோம். இரண்டு ரூபாய்க்காக என்று நினைத்துவிடாதீர்கள். நண்பனின் பாதுகாப்பிற்காக, அத்தனை கூட்டத்தில் தவற விடக்கூடாது அல்லவா. அதன் பின் அங்கே நடக்கும் கூத்துகள்தான் அதிகம் சிரிக்கவைத்தன. தங்க கோபுர தரிசனத்திற்காக மேடை போல சுற்றுப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கூட்டமே இல்லை. நாங்கள் சில சிலையமைப்பினை பார்த்துவிட்டு வெளியே செல்ல முயன்றோம். அப்போது சிலர் தங்க முலாம் பூசப்பட்ட சிலையின் காலடியில் ரூபாய் நோட்டுகளை வைப்பதையும், எடுப்பதையும் பார்க்க முடிந்தது. அந்த சிலை லட்சுமி சிலை. மூடநம்பிக்கைகளின் சாட்சியாய், சிலையின் கால்களில் தங்க முலாமே இல்லை. எல்லாவற்றையும் சுரண்டிவிட்டிருந்தார்கள். சுற்றுப் பிரகாரத்தில் இருக்கும் இரண்டு சந்நிதிகளைப் பார்க்க ஆளில்லை. இரண்டுமே மூடப்பட்டுக் கிடந்தது. ஒன்றிலாவது நரசிம்மர் என பார்த்து பார்க்க முடிந்தது. மற்றொரு சந்நிதிக்கு செல்ல வழியே இல்லை.

நரசிம்மர் சந்நிதியில் ஒரு கல் இருந்தது எல்லோரும் அதில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்கள். பெயராக இருக்குமோ என்று பார்த்தேன் அப்படி தெரியவில்லை. ஏதோ கணக்கு போல தெரிந்தது. நானும் விரல்களை வைத்து பார்த்தேன். வெண்ணெய் போல வலவலவென இருந்தது. நண்பன் ஒன்றை சுற்றிக் காட்டினான். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கோவிலின் கற்இடுக்குகளில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என நாணயங்கள் சொருகப்பட்டிருந்ததன. அதுவும் மிக வலிமையாக, அதனால் நாணயங்கள் வளைந்தும் நெளிந்தும் கிடந்ததன. அதைப் பார்த்து இன்னும் சிலர் அந்த கேடு கெட்ட செயலை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அடிக்கப்பட்டிருந்த நாணயங்களை பிடுங்க முயற்சித்தார்கள். திகைப்புடன் வெளியேற தொடங்கினோம், மீண்டும் வரிசை. வடிவேல் அவர்கள் குசேலன் படத்தில் கொடுப்பாரே அந்த அளவில் ஒரு லட்டு கொடுத்தார்கள்.

வழிநடத்துனர் கூறிய வாகன மண்டபத்திற்கு திரும்பினோம். எங்கள் குழுவில் சிலர் மட்டுமே வந்திருந்தார்கள். மீதம் இருப்பவர்கள் வருவதற்குள் லட்டு வாங்கிவரலாமே என்று எங்களை அழைத்தார். மஹா பிரசாதம் என பட்டனத்தில் பூதம் படத்தில் வரும் லட்டுபற்றி பேசிக்கொண்டு அவரை பின்தொடர்ந்தோம். 300 ரூபாய்க்கு லட்டு வழங்கும் இடம் என்பதில் நின்றோம். தள்ளுவண்டியில் கொண்டுவருகிறார்கள், பிளாஸ்டிக் கவரில் அதை டோக்கனுக்கு இத்தனை என்று தருகிறார்கள். கவர் ரூபாய் இரண்டாம். காசு கொடுத்தாலும் பிளாஸ்டிக்தான் என்றால் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதெல்லாம் எப்படி என தெரியவில்லை. லட்டுகளை பிரித்துக் கொண்டு, காலணிகளை, கொடுத்திருந்த பைகளை, அலைப்பேசிகளைப் பெற்றுக் கொண்டு ஒரு பேருந்தில் அனைவரும் ஏறினோம். மலையிலிருந்து பேருந்து கீழிறங்க தொடங்கியது.

திகைப்பு தொடரும்…

திகைக்க வைத்த திருப்பதி பயணம் -1

தரிசனத்திற்கு பணம், மக்கள் கூட்டம் இந்த இரண்டும் எனக்கு கோவிலில் பிடிக்காதது. இந்த இரண்டும் அதிகம் உள்ள இடம் திருப்பதி. அதனாலேயே இத்தனை வருடங்களாக திருப்பதி செல்வது பற்றிய சிந்தனையின்றி இருந்தேன். எல்லா இடங்களையும் ஒரு முறையாகவாவது சென்று பார்த்துவா என்று அம்மா சொல்லி சொல்லியே என் நிலையை மாற்றி விட்டார். இந்த மாதம் முதல் சனியன்று நண்பர்கள் இருவருடன் திருப்பதி செல்ல நேர்ந்தது. இதை ஆன்மீக பயணத்தில் சேர்க்க நான் விரும்பவில்லை. ஓர் அனுபவமாகவே எண்ணுகிறேன்.  என் பார்வையில் திருப்பதி எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ள வாருங்கள்.

திருப்பதி –

எ.பி.டூரிசம் என்பதில் ரூபாய் 1250க்கு புக் செய்திருந்தார்கள் நண்பர்கள். காலை 4.30 மணிக்கு தி.நகரில் நிற்கும் பேருந்தை பார்த்த போதுதான் ஆந்திர பிரதேஸ் என்பதன் சுருக்கமாக எ.பி உள்ளது என்பதை அறிந்தேன். ஒரு மாநில அரசே தனியாக டூரிசத்திற்கென இத்தனை தூரம் செயல்படுகிறது என்ற ஆச்சரியத்துடன் எங்கள் பயணம் 5.30 மணிக்கு தொடங்கியது. சிலர் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். அவர்களின் வரவாலேயே பேருந்து நிரம்பியிருந்தது. குட்டி குட்டி குழந்தைகளும் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதை பற்றிய கவலைகள் இல்லாமல் பயணிக்க, நானோ கொஞ்சமும் அறிமுகமே இல்லாத இடத்தினைப் பற்றிய பயத்துடேனே பயணித்தேன். உணவுக்காக பேருந்து நிறுத்தப்படும் போது மணி 10.30 இருக்கும். காலை உணவும், இரவு உணவும் பேக்கேஜில் வந்துவிடும் எனவே அவர்களே உணவுக்காக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

உணவினை முடித்து பேருந்து அடுத்து திருமலையின் பேருந்து நிலையத்தில் நின்றது. நிறைய மக்கள் பல் விளக்கி கொண்டு கழிவறை முன் நின்றுகொண்டிருந்தார்கள். அதிக மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையம் அதற்கான அறிகுறிகளுடனே இருந்தது. பேருந்து வந்து நிற்கும் போதே அதில் அமர முண்டியடிக்கும் கூட்டமும்,  குடும்பத்துடன் வந்தவர்கள் அடுத்த பேருந்திற்காக ஏக்கத்துடன் காத்திருப்பதையும் காண முடிந்தது.  திருமலை – திருப்பதி என்று ஏறக்குறைய எல்லா பேருந்துகளிலும் எழுதப்பட்டிருந்தது. அந்த பேருந்தின் பின்புறமும் பயணசீட்டுக்கான கட்டணம் பற்றிய விவரமும் இருந்தது. குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என தனித்தனியாக அந்த விவரம் புதுமையானதாகவும், வரவேற்கதக்கதாகவும் இருந்தது. திருப்பதி என்பது நகரம் திருமலை என்பதே நாம் செல்லும் இடம் நண்பர்களில் ஒருவன் விளக்கம் கொடுத்தான். எப்படிடா சரியாத்தான் சொல்லறீயா என்றேன். நாம் மலைக்கு தானே செல்கிறோம் அது திருமலைத்தான் என்றான். ஊரெல்லாம் திருப்பதி செல்கிறேன் என்று சொல்லிவந்தோமே உண்மையில் திருமலைக்கு செல்கிறேன் என்று சொல்லவேண்டுமா?.  நாங்கள் வந்த பேருந்தில் இருந்து வேறுஒரு பேருந்திற்கு மாறினோம். திருமலை நோக்கிய எங்கள் பயணம் இறுதி கட்டத்தினை நெருங்கியது.

திருப்பதி நகரில் கைகளில் துப்பாக்கியுடன் மில்டரி அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் நகரத்தில் உலா வருவதை கண்டோம். அவர்கள் அருகிலேயே கைகளில்  அம்மன் படதட்டுடன் மஞ்சள், சிவப்பு சேலைகளை அணிந்திருந்த மங்கைகள் சிலர் நோட்டிசுகளை பிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு புறம் மக்களை காவல்காக்கும் அதிகாரிகள், மறுபுறம் தங்கள் வயிற்றுக்காக மக்களை தொல்லை செய்யும் அவலக்காரிகள். சிந்தனை வேறுதிசைக்கு பயணிக்கும் முன் திருப்பதி மலைமீது பேருந்து தவழ்ந்து கொண்டிருந்தது. இருபுறமும் காடுகளும், சில பாதசாரியாக நடந்துவரும் மனிதர்களும் தென்பட்டார்கள். பல இடங்களில் சிறு சிறு கோவில்கள் தெரிந்தன. மரங்களை வளர்க்க புதிய கன்றுகளை பரமாரிப்பதும், பூங்காக்களைப்போல அழகான வடிவமைப்புடன் தாவரங்கள் இருப்பதையும் காண முடிந்தது.

திருப்பதி மலையின் உச்சியை அடைந்தோம். மொட்டை அடிக்க நிற்கும் கூட்டத்தினைப் பார்த்து அதிர்ந்தேன். இத்தனை கூட்டத்தில் நண்பர்கள் இருவர் எப்படி மொட்டை போடபோகிறேன் என்று வேறு சொல்லியிருந்தார்கள்.  திரும்பிய திசையெங்கும் மக்கள் கூட்டமே தெரிந்தது. முடிகாணிக்கை செய்யும் நபர்களின் குடும்பத்தினை மட்டும் இறங்க சொல்லி ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்றார். அங்கிருந்த வராண்டாவில் நிறைய மக்கள் ஓரமாய் கிடைக்கும் இடத்தில் படுத்திருந்தனர். சிலர் மூட்டைமுடிச்சுகளுன் அமர்ந்திருந்தனர். மேலும் சிலர் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்தனர். கவணித்து நடக்காவிட்டால் யாரையாவது மிதித்துவிடுவோம் என்ற அளவு மக்கள் கூட்டம் இருந்தது. வழிகாட்டி ஏதோ ரசிது வாங்கிக்கொண்டு வந்தார். அதற்கு அடுத்து பொருள்களை பாதுகாப்பாக வைக்கும் லாக்கர் பகுதியை பெரிய ஹால் போன்ற அமைப்பில் வைத்திருந்தார்கள். லாக்கர்கள் சுவரை சுற்றி இருக்க,. அதன் முன் மக்களின் கூட்டம் தூங்குவதும், சாப்பிடுவதுமாக இருந்தது.

அந்த ஹாலை கடந்தபின் முடியெடுக்கும் இடம். முடிகாணிக்கை செய்ய வந்தவர்கள் துண்டு, சாட்ஸ் என தங்களுக்கு வசதியானவற்றுக்கு மாறிக்கொண்டிருந்தார்கள். முடியின்றி ஏகப்பட்ட தாய்குலங்களும், தந்தை குலங்களும் மொட்டையாக இருந்தார்கள். முடி துறந்த மன்னர்களாக ஆண்கள் வலம் வந்தாலும், பெண்கள் தான் அழகு. முடியில்லையென்றாலும் கூட சில பெண்களின் முகம் ஹில்பாவினை ஞாபகம் செய்தது. திருப்பதி வந்தாலும் கூட நடிகைகளின் நினைப்பு விடுவதில்லை என மனதினை கடிந்துகொண்டேன். முழுக்க முழுக்க டையில்சால் ஆன இடத்தில் முடிகாணிக்கை எடுப்பதற்காக ஏகப்பட்ட நாவிதர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள்தான் இந்த மலையின் சொந்த மக்கள். அவர்கள் வழிபட்ட காளிதான் இப்போது திருமாலாக உள்ளது என்றெல்லாம் படித்த ஞாபகம். அந்த அறையின் ஓரத்தில் முடியை போட்டு வைக்கும் பெரிய டிரம் இருந்தது. கீழே முடிகளை சுத்தம் செய்ய தனி பணியாட்கள் இருந்தார்கள். அந்த அறைக்குள் செருப்பினை அணிந்துவருபவர்களை திருப்பி அனுப்புவதும் அவர்களின் வேலையாகவே இருந்தது. முடி மழித்தும் குளியல் செய்ய ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியான குளியல் அறைகள் வெளியே இருந்ததன.

வரிசையில் நண்பர்களுடன் நின்று கொண்டிருக்கும் வேலையில் கண்களை சுழல விட்டேன். அறையின் ஒருபுறம் வெங்கியின் படம் மாட்டப்பட்டிருந்தது. பிறகு எல்லா இடங்களும் நாவிதர்களுக்கு மேல் அவர்களுக்கு வழங்கப்பட்ட எண்கள் இருந்தன. நாம் வாங்கும் டோக்கனில் குறிப்பிடபட்டிருக்கும் எண்ணில் உள்ள நாவிதரிடம் சென்று நிற்க வேண்டும். பத்து பதினைந்து வினாடிகளில் அவர்கள்  மொட்டை அடித்துவிட்டார்கள். அவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் படியாக வரிசையில் நிற்கும் போது தண்ணீரில் தலையை ஊறவைக்கும் வேலையில் இறங்க வேண்டும். இல்லையென்றால் கெடவெட்டு போல தலையெங்கும் ரத்தத்துடன்தான் வரவேண்டும். நாவிதர்கள் ரத்தம் பற்றிய கவலைகள் இன்றியே இருக்கிறார்கள். சிறு குழந்தைகளுக்கும், பெண்பிள்ளைகளுக்கு மட்டுமே கொஞ்சம் கவனத்தினை கொள்கின்றார்கள். பெண்களின் முடிக்காக அவர்களின் அருகிலேயே ரப்பர் பேன்டும் வைத்திருக்கிறார்கள். குழந்தைக்கு முடியெடுத்தும் காணிக்கையாக தாயிடமிருந்து நூறு ரூபாயும், தந்தையிடமிருந்து நூறு ரூபாயும் பெற்றுக்கொள்கின்றார்கள். அவர்களிடம் பணம் தரக்கூடாது, வெறும் டோக்கன் மட்டுமே தாருங்கள் என்று அறிவிப்பு பலகை சொன்னாலும் நம் மக்கள் பெரும் வள்ளலாகவே உள்ளார்கள்.

நண்பர்கள் மொட்டை அடித்து,குளித்துமுடித்தவுடன் மற்றவர்களுடன் இணைந்து கொண்டு வந்திருக்கும் பொருள்களை பத்திரப்படுத்தும் இடத்திற்கு சென்றோம். வழிகாட்டியாக வந்தவர் ஒரு கடையை காண்பித்து அங்கு கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் கைப்பேசிகளை தரச்சொன்னார். அவர் எண்களை குறித்துக்கொண்டு டோக்கன் போட்டு வைத்துக் கொண்டார். கொண்டுவந்திருந்த பைகளை அங்கே வைத்துவிட்டு, காலணிகளை பத்திரப்படுத்தும் கடையை நோக்கி சென்றோம். அங்கு ஒரு சாக்கில் அனைத்து காலணிகளையும் போட்டுவிட்டு தரிசனத்திற்கு தயாரானோம். அப்போது மணி நண்பகல் 12.00.

திகைப்பு தொடரும்…