விக்கியில் எனது ஓவியங்கள்

வணக்கம் நண்பர்களே, சில காலம் கணினியில் போட்டோசாப் உதவியுடன் டிஜிட்டல் ஓவியங்களை வரைய கற்றுக் கொண்டேன். போட்டோசாப்பில் உள்ள பெண் என்ற டூலை வைத்து ஓரளவு ஓவியங்களை வரைந்தேன். அவற்றை சிறப்பான ஓவியங்கள் என்று கூற இயலாது என்றாலும் ஓரளவு மனநிறைவு தந்தன.

அதன் பிறகு ஸ்மார்ட் போன் வாங்கினேன். அதில் உள்ள ஆட்டோ டெஸ்க் ஸ்கெட் புக் என்ற செயலியைக் கொண்டு நன்றாக ஓவியங்களை வரைய கற்றுக் கொண்டேன். விக்கிப்பீடியாவிற்கு தேவையான ஓவியங்கள் சிலவற்றையும் வரைந்து பதிவேற்றம் செய்தேன். விக்கிப்பீடியாவின் காமன்ஸ் தளத்தில் எனக்கென ஒரு பகுப்பே உருவாக்கியிருக்கிறார்கள். ஆர்ட் ஒர்க் பை ஜெகதீஸ்வரன். என் என்ற பகுப்பில் என் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காண்க

https://commons.wikimedia.org/wiki/Category:Artwork_by_Jegadeeswaran.N.

ஓவியர் செல்வம்
நடிகர் வெள்ளை சுப்பையா
ஓவியர் ஏ. பி. செல்வராஜ்
ஓவியர் மாருதி

நன்றி.

கம்பீர கடவுளுக்கு என் காணிக்கை

பாரதி

பாரதியார்

கம்பன், வள்ளுவன் என கணக்கில்லா கலைத்தாயின் புதல்வர்கள் இங்கே உதித்ட்டிட்டாலும், கவிஞன் என்றதும் என் கண்முன் வருவது பாரதிதான். சக்தி, சிவன், வள்ளி, வேலன் மீது போற்றி பாடல்களை இயற்றியது பக்தி. பாடலில் கண்ணம்மா, வாழ்க்கையில் செல்லம்மா என காதலிலே வாழ்ந்து காட்டியது காதல். சுகந்திர உணர்வூட்டியது தேசப்பற்று, மாய,மன,சித்தாந்தம் அறிந்து வெளியிட்டது ஞானம். சாமர்த்தியமாய் சாதியை வடிவமைத்து வாழ்க்கையில் பிணைத்த பிராமண வயிற்றில் பிறந்தாலும், சாதிகள் இல்லையென்றது புரட்சி.

பக்திக்காக, பாப்பாவுக்காக, பாவைக்காக, பாரதத்திற்காக என பட்டியல் நீண்டு செல்கிறது. அத்தோடு இருநூறு ஆண்டுகள் பாரதத்தை  இறுக்கமாய் பற்றி ரத்தம் உறிஞ்சிய அட்டைப்பூச்சி ஆங்கிலேயர்களை  விரட்டியத்த வீரனின் (பாரதியின்) செல்லப் பெயர் சுப்பன்.  உறக்கவே கூறலாம் ஆங்கியனை விரட்டியடித்தவன் குப்பன் சுப்பனென. இங்கே சிலர் பாரதியின் திலகத்தினை அழித்து வெறியூட்டும் முகம் வரைந்து பாரதி என்கிறார்கள். என்னால் அந்த ஓவியத்தை பாரதியென ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. மூர்க்கதிற்கும் மிடுக்கிற்குமான வித்தியாசம் அழிக்கப்படுவதும், பாரதியின் இயல்பு முகம் மறைந்து மிருக முகம் ஏற்கப்படுதும் நாளைய சந்ததியனருக்கு நாம் செய்துபோகும் துரோகம்.

அவனுடைய இறுகிய தலைப்பாகையும், முறுக்கிய மீசையும் எத்தனையோ மனிதர்களை தமிழனென்ற இறுமாப்பு கொள்ள வைத்திருக்கிறது. அந்த கம்பீரமான கவிதைக் கடவுளுக்கு என் காணிக்கை இது.

பாரதியார் ஓவியம்

பாரதியார் ஓவியம்

தரவிரக்கம் செய்ய –

Mediafire
RapidShare
DropBox

தாய்க் கிழவி காத்திருக்கிறாள்

தாய்க் கிளவி

திகட்டாத பலநூறு கதைகளுடன்
திண்ணையில் காத்திருக்கிறாள்
இந்த தாய்க் கிழவி!

வாருங்கள் கதை கேட்க
குழந்தைகளாக மாறி…

– சகோதரன் ஜெகதீஸ்வரன்

டிஜிட்டல் ஓவியத்தை நம்மாலும் வரைய இயலும்

கணினி அறிமுகமானது முதல் அதில் ஓவியம் வரைய வேண்டும் என்று பல முறை முயற்சி செய்திருக்கிறேன். ஏறத்தாள அனைத்து முயற்சியுமே தோல்விதான். பென்சிலால் தாள்களில் வரைவதைப் போல மவுசைக் கொண்டு வரைய முடியவில்லை. நாம் ஒரு கோட்டை வரைய நினைத்தால் அது கோடாவே இல்லாமல் வளைந்து நெளிந்து பயனிக்கும். கணினி அடிப்படை ஓவிய கருவியான பெயின்ட் பல முயற்சிகளுக்குப் பிறகு படிந்தது. ஆனால் நிபுனர்களைப் போல அன்றி எளிமையான கோட்டோவியங்களே அதில் சாத்தியமாயிற்று. சகோதரன் வலைப்பூவில் இதற்கு முன் கருப்பு வெள்ளை ஓவியங்கள் எனும் தலைப்பில் சில ஓவியப்படைப்புகளை வெளியிடப்பட்டிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதற்கிடையே கோரல் டிரா, மாயா போன்ற மென்பொருள்களை கற்கும் முயற்சியில் இறங்கினேன். அதிலிலும் தோல்வி. ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆசையைத் தவிற, சிறந்த ஓவியங்களின் படைப்புகளை உற்று நோக்கவில்லை என்பதுதான் என் தோல்விக்கான காரணம் என்று புரிந்து கொண்டேன். ருத்ரன், மணிவர்மா போன்ற ஓவியர்களின் படைப்புகளை உற்றுக் கவனித்தேன். அதில் மணிவர்மா நெளிநெளியான கோட்டோவியங்களை மிகவும் திறமையான அழகான ஓவியங்களாக மாற்றும் வித்தையை தன் விரல் நுனியில் வைத்திருக்கிறார். வண்ணக் கலவைகளை கலந்து தந்து ஓவியமாக்கும் மாயாஜாலம் ருத்ரனுடையது.

போட்டோசாப் அடிப்படைகளை இணையத்தின் உதவியால் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதில் பிரஸ் போன்ற அடிப்படையான டூல்களை பயன்படுத்தும் விதத்தினைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். பெயின்ட் போலன்றி படங்களை லேயர்களாக அடுக்கிவைக்க போட்டாசாப்பில் முடிகிறது. அந்த லேயர் முறையை உபயோகம் செய்து கோட்டோவியமாக வரைகின்ற போட்டோவை முதலில் வைத்துக் கொண்டு, வண்ணங்களை அதன் பின் உள்ள லேயர்களில் இட்டு சரிபடுத்தி வரைய முயன்றேன். முதல் முயற்சியாக தஞ்சை தலையாட்டி பொம்மையை தேர்வு செய்து வரைந்தேன். முகநூலில் அதை இட்டு நண்பர்களுக்கு காட்டினால், ஒருத்தரும் விருப்பம் தெரிக்கவில்லை.

பிறகு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியை வரைந்தேன். போட்டோசாப் என்பதால் பல வண்ணங்களில் வரைந்ததை மாற்ற முடிந்தது. முகநூல் சோழிய வெள்ளாளர் குழுமத்திலும், வ.உ.சி பேரவை குழுமத்திலும் அதை நண்பர்களின் பார்வைக்கு வைத்த போது, சிலர் விருப்பம் தெரிவித்தார்கள். வ.உ.சியின் ஓவியம் நம்பிக்கை தந்தது என்றே கூற வேண்டும். நேற்று பிளிக்கர் இணையதளத்திலிருந்து வயலில் நாற்று நடும் பெண்ணின் புகைப்படத்தினை தேர்வு செய்து வரைந்தேன். கோட்டோவியத்தில் அதிக வண்ணங்களை வண்ணங்களை சேர்க்காமல் தேர்ந்தெடுத்த சில வண்ணங்களை மட்டுமே இட்டு முடித்தேன். மீண்டும் முகநூலில் நண்பர்களின் பார்வைக்கு கொண்டு சென்றேன். நண்பர்கள் சிலரின் விருப்பங்கள் கிடைத்தன.

Charcoal Large Smear, Hard Round 3 pixels, Hard Round 9 pixels இவை நான் பயன்படுத்திய பிரஸ்களின் பெயர்கள். கோட்டோவியம் வரைந்தது முதல் இறுதிக் கட்டம் வரை சிறு புகைப்பட தொகுப்பாக தந்துள்ளேன். இந்த இடுகையை வைத்துக் கொண்டு ஓவியம் வரைந்துவிட இயலாது என்று நினைத்துவிடாதீர்கள். படிப்படியாக விளக்கம் சொல்லும் அளவிற்கு இந்த ஓவியம் பெரிய விசயமில்லை. என்னுடைய பழைய இடுகையில் Try and try,one day …. என்று நண்பர் K.V.Rudra வழிகாட்டியிருந்தார். அவர் சொல்படி இது சாத்தியமாயிருக்கிறது என்றே மகிழ்கிறேன்.

டிஜிட்டல் 1

டிஜிட்டல் 2

டிஜிட்டல் 3

டிஜிட்டல் 4

மேலும் –

பிளிக்கர் இணையதளத்தில் எனது ஓவியங்கள்

என் ஓவிய ஆசிரியரின் ஓவியங்கள்

எங்கள் ஜமிந்தார் மேல்நிலைப் பள்ளியில் மனோகர் என்ற ஓவிய ஆசிரியர் பணிபுரிந்தார். என்னுடைய பள்ளி வாழ்க்கையில் எளிமையான ஓவியங்களை வரைய கற்றுக்கொடுத்தவர். அவர் வரைந்த ஓவியங்கள் சில என்னிடம் இருக்கின்றன. அழகான ஓவியங்களும் அதற்கான வர்ணங்களும் ஒன்று சேர்ந்து மனதினை கொள்ளை கொள்ளும்.

அந்த ஓவியங்கள் கி.பி 1977 மற்றும் 78ம் ஆண்டுகளில் வரையப்பட்டவை என்று அதன் அருகிலுள்ள குறி்ப்புகள் சொல்லுகின்றன. ஏறாத்தாள 34 வருடங்களை கடந்து விட்ட அந்த ஓவியங்கள், என் பெட்டியில் இருப்பதை விட பலரின் பார்வைக்கு செல்வதே நல்லது என்று தோன்றியது. அன்பு மிகுந்த ஆசிரியரின் இந்த ஓவியங்களை ரசனைமிக்க உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். [படங்களை பெரிதாக காண படத்தின் மீது சொடுக்குங்கள்]

மக்கள் திலகம்

காரைக்கால் அம்மைக் கோவில் ஓவியங்கள்

அதென்னமோ தெரியவில்லை, வெளிநாடுகளில் இருக்கும் சிறுசிறு கட்டிடங்களின் திறனையும், சின்ன சின்ன ஓவியங்களையும் கொண்டாடத் தெரிந்த நமக்கு நம் அருகில் இருக்கும் சிற்பங்களின் அமைப்பையும், ஓவியங்களின் அதிசயத்தையும் பற்றி சிந்திக்க கூட நேரமில்லை.

பேயுருவத்தில் காரைக்கால் அம்மையார்

காரைக்காலிற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, சென்றேன். கல்லூரி நாட்களில் தவறாது அருள் செய்த அம்மையை காலை முதல் வேளையாக தரிசிக்க சென்றேன். செருப்பினை விடும் வேளையில் எதற்ச்சையாக மேலே பார்க்க, காளையும், யானையும் ஒருசேர இருந்த சுவரோவியம் ஈர்த்தது. காளை, யானை இரண்டின் முகங்களும் ஒட்டியபடி இருக்கும், யானையின் உடலோடு தலையை தேடினால் யானை தெரியும், காளையின் உடலைக் கொண்டு தேடினால் காளை தெரியும்.

யானையும், காளையும் இணைந்திருக்கும் சிற்பம்

எங்கள் ஊரில் இருக்கும் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆஞ்சினேயர் கோவிலில் இந்த ஓவியத்தை சிற்பமாக கண்டிருக்கிறேன்.

அம்மைக்கு மாம்பழம் ஈசன் கொடுத்தல்

பிறகு அம்மையின் சுற்றுப்புறச் சுவர்களில் வரைந்திருந்த வாழ்க்கை வரலாறு ஓவியங்கள் மெய்சிலிர்க்க வைத்தன. தத்துரூபமான ஓவியங்கள். அம்மையின் பிறப்பு முதற்கொண்டு, திருமணம், மாங்கனி திருவிளையாடல், அம்மையின் பேயுருவம் என சகலமும் வரையப்பட்டிருக்கிறது. அம்மையின் சந்நிதியின் முன்புறம் இருக்கும் இரண்டு துவாரபாலகைகளின் உருவம் அம்மனுக்கு இணையான தெய்வீகத்தன்மையுடன் இருந்தது.

குரங்கின் ஓவியம் - காரைக்கால்

பனிரெண்டு ராசி ஓவியமும், இல்யுசன் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற அதிசயமான ஓவியங்களும் இருந்தன. அடுத்து நான் கண்டது, ஒரு தலை பல உடல்களுடன் பொருந்திய குரங்கின் ஓவியம். மிகவும் நேர்த்தியாக எல்லா உடல்களுடனும் அந்த ஒரே தலை பொருந்த இருப்பது ஆச்சிரியமான ஒன்று. இந்த ஓவிய அமைப்பை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அது திருச்சியில்.

குரங்கின் ஓவியம் - திருச்சி

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் சித்திரக் கூடம் என்ற ஒரு பகுதியுண்டு. அங்கே விதவிதமான ஓவியங்கள் இருக்கின்றன. நிர்வாணமாய் பெண்கள் முலைகள், யோனிகள் தெரிய ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி, ஏறியபடி என்றெல்லாம் இருப்பதைக் கண்டேன். “ச்சீ என்ன கண்றவி இது” என சிலர் ஓடிப்போனார்கள்.

ஆனால் அந்த ஓவியத்தினை தூரத்தில் இருந்து பார்த்தால் தான் அருமை தெரியும். அந்த ஓவியம் மயிலாக தெரியும். இது போல பல பல ஓவியங்கள். அது போலவே குரங்கின் ஓவியத்தினை முதலில் அங்குதான் பார்த்தேன். அவற்றை புகைப்படம் பிடிக்கவும் தடை உண்டு. அப்படியிருந்தும் என் சகோதரன் தன்னுடைய கைப்பேசியில் புகைப்படம் எடுத்தான்.

காரைக்காலிற்கு வருவோம், அங்கு மாங்கனி திருவிழா முடிந்து சில நாட்களே ஆனதால், விழாவிற்காக போடப்பட்டிருந்த கடைகள் அப்படியே இருந்தன. மற்றக் கடைகளைவிட வீட்டுச் சாமான்கள் இருந்த கடைகளிலும், அழகு சாதனங்கள் இருந்த கடைகளிலுமே அதிகக் கூட்டம். சில கடைகளில் இஸ்லாமியப் பெண்களும் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். எழுதப்பட வேண்டியது நிறைய இருந்தாலும், இடுகையில் படங்களை இணைப்பதால் பெரியதாக மாறக் கூடும் என சுருக்கிவிட்டேன்.

சில திருச்சி மலைக்கோட்டை ஓவியங்கள் –

மயிலாய் நிர்வாணப் பெண்கள்

முடிவறிய இயலாத பாம்புகள் - சித்திரக் கூடம்

ஐயோ என் மோனாலிசா!

மர்மம்!. இது 77 × 53 cm, 30 × 21 inches அளவே உள்ள மோனாலிசா ஓவியத்தின் ஒரு சிறப்பு பெயர். இதுவே பலதுறை வித்தகன் டாவின்சியின் வியக்கவைக்கும் படைப்புகளில் தலைசிறந்ததாக கொண்டாடப்படுகிறது.

மர்மப் புன்னகை –

மோனாலிசாவின் புன்னகை மிகவும் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அது சோகப் புன்னகையாகவும், அதே நேரத்தில் குரூரப் புன்னகையாகவும் சிலருக்கு தெரிகிறது.

ஆண் ரூபம் –

இந்த மோனாலிசாவை சற்று ஆண்மை கலந்த பெண்ணாக சிலர் குறிப்பிடுகின்றார்கள். சிலர் டாவின்சி தன்னையே பெண்ணாக வைரைந்திருக்கின்றார் என்றும் சொல்லுகின்றார்கள்.

ஆனால் இதைப் பற்றிய எந்தக் கவலையும் இன்றி நம் கலைரசிக சிகாமணிகள் செய்துள்ளமையை கீழே பாருங்கள்.

மர்மப் புன்னைக்கான விடை –

ராஜா ரவிவர்மா ஓவியங்கள்

ராஜா ரவிவர்மா தான் இந்து பெண் கடவுளுக்கு அழகிய சேலை கட்டி அழகு பார்த்தவர். அற்புதமான பல்வேறு ஓவியங்களை வரைந்திருந்தாலும் சில மட்டுமே மிகவும் புகழ்பெற்று திகழ்கின்றன.

மீசையுடன் சிவன், சித்தி புத்தி வினாயகர், வழிந்தோடும் சேலையுடன் கணவனிடம் அன்பு காட்டும் பெண் என எண்ணற்ற ஓவியங்கள் அவரது பெருமையை சொல்லிக் கொண்டே இருக்கும்.

உலகை பிரம்மிக்க வைத்த ஓவியங்கள் – டாவின் சி

அதி அற்புதமான ஓவியர் டாவின்சியின் படைப்புகளை இங்கு பதிவு செய்திருக்கின்றேன். டாவின் சி கேட் படத்திற்கு பிறகு தான் அவரது ஓவியங்களில் இருந்த கருத்துகள் புரிந்தன.

ரசனைமிக்க ஓவியங்களாக மட்டுமல்லாமல் சர்ச்சைக்கு உரியதுமாக மாறிப்போன ஓவியங்கள் இவருடையது.

சகோதரனின் கருப்பு வெள்ளை ஓவியங்கள்

ஓவியங்களைப் பற்றியப் புரிதல்கள் இல்லாத ஒருவனின் கம்பியூட்டர் கிறுக்கல்கள். உங்களுக்கு ஓவியங்கள் மீது ஆர்வமிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

இவை கிட்டத்திட்ட இரண்டு வருடங்களுக்கும் முன்பு வரைந்தபடங்கள். இப்போது வரைவதன் மேல் ஆர்வம் குறைந்துவிட்டது.

ஓவியங்களை பெரியதாக பார்க்க சொடுக்கவும்.

பி.கு –
வாழ்த்துகள் சொல்வோர்க்கு இப்போதே நன்றிகள் கூறிக்கொள்கிறேன்.