சுடலை ஆண்டவர் கதை 2 – தமிழ் மண்ணின் சாமிகள்

நண்பர் மனோ மின்னஞ்சலில் அனுப்பிய சுடலை ஆண்டவரின் கதையின் தொடர்ச்சி இது.

சுடலை ஆண்டவர் கதை – 1

இனிமே இந்த அம்மாளிடம் அடங்கி போனால்தான் காரியம் நடக்கும் என்று எண்ணிய சுடலை, அம்மா நான் கேட்பதற்குரிய பலியை நீ கொடுக்க மறுத்தாலும், வெள்ளியும் செவ்வாயும் எனக்கு விடுமுறை கொடு, எனக்கு வேண்டிய உணவுகளை நான் மயானத்தில் சென்று தின்று வயிறை நிறைத்து கொள்வேன் என்றார் சுடலை. அதற்க்கு அம்மாளும் சரியென்று சம்மதித்தார். அன்றையிலிருந்து சுடலை வெள்ளியும் செவ்வாயும் மயான வேட்டை ஆடிவருவது வழக்கம். நாட்கள் கடக்கிறது.

அதே சமயம், அதே அந்த மலையாளத்தில், நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, அந்த காலத்தில் 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வந்தார்கள். இந்த புலையன்மார்களுக்கு எல்லாம் ஒரு தலைவன், அவன் பெயர் காளிப்புலையன். இவர்களின் தொழில் மாந்திரீக தொழில். அதுவும் சாதாரணப்பட்ட மாந்திரீகம் அல்ல, அந்த புலையன்கள், வானத்தையே வில்லாக வளைத்திடுவார்கள், மணலிலேயே கயிறு திரித்திடுவார்கள், அவர்கள் உரலுக்குள் மையை வைத்து அதை இந்த உலகமெல்லாம் சுற்ற விடுவார்கள், அது உலகமெல்லாம் சுற்றி வீட்டுக்கு வரும், அம்மிக்குள் மையை வைத்து அதை இந்த அகிலமெல்லாம் பறக்க வைப்பார்கள், அது அகிலமெல்லாம் பறந்து வீட்டுக்கு வரும், சுளவு தட்டியையும் தொண்ணூறு காதவெளிக்கு பரக்கவிடுவார்கள், அது ஒற்று பார்த்து வரும், கரையாத பொருட்களையும் கரைக்க வல்லவர்கள், கனத்த உருக்களையும் அளிக்க வல்லவர்கள். இந்த மந்திரவாதி காளிப்புலையனின் மனைவி காளிப்புலச்சி.

இரண்டுபேருக்கும் வெகு நாளாக குழந்தை இல்லாது போக, அவன் மனைவி காளிப்புலச்சி, நந்தன் புனலூரில் ஒரு பாதாள கண்டி ஈஸ்வரி என்ற ஒரு அம்மன் கோவில், அங்கு பொய் 48 நாள் ஒரு மண்டல காலம் விரதம் இருந்தாள். ஒரு காகமானது அக்கிரகாரதிலே, அவ்வையார் விரதமிருந்த ஒரு ஆச்சி வீட்டிலிருந்து ஒரு மா கொளுகட்டையை கொண்டுவந்து, கரமேந்தி தவசிருந்த காளிப்புலச்சி கையில் போட்டது, கோவிலில் கிடைத்தால் பிரசாதமாக நினைத்து அதை எடுத்து உண்டாள் காளிப்புலச்சி. அன்று முதல் அவள் கருவுற்று பத்தாவது மாதம் பெண் குழந்தை பிறந்தது. தவமிருந்து கிடைத்த குழந்தை ஆதலால் சந்தொசமுற்ற காளிப்புலையன், ஊர்மெச்ச விழா எடுத்து கொண்டாடினான், அவனுக்கு குலதெய்வம் இசக்கி. மாப்பிண்டதிலே அவதாரம் ஆனதால், இரண்டயும் இணைத்து மாவிசக்கி என்று குழந்தைக்கு பெயர் நாமம் சூட்டினான். அந்த குழந்தை இனிதே வாளர்ந்தது. ஐந்து வயதிலிருந்து அறிய கலைகளை படிக்கவைதான். பதிமூன்றாம் வயதிலே பருவமடைந்தாள் மாவிசக்கி. அவள் அழகை உவமானம் சொல்ல யாராலும் முடியாது. ஊரே மயங்கும் பேரழகு, மகளை பார்த்த காளிப்புலையன் யோசித்தான், நம் மகளின் அழகுக்கு நிகரான நகைகள் பூட்டி அவளை அலங்காரம் செய்ய ஆசைப்பட்டான், ஆனால், அவன் நியாயமான முறையிலே ஆசைப்பட வில்லை, அவனது மாந்திரீக புத்தி, அவனை கெடு வழியில் செல்ல தூண்டியது,

அஞ்சணமை என்று ஒரு மை, அதை கண்ணில் இட்டால் பூமியிலிருக்கும் புதையல் கூட புலப்ப்படுமாம். அந்த அஞ்சணமையை எடுத்து வெற்றிலையில் தடவி பார்க்கிறான், அங்கே, கொட்டாரக்கரை, பகவதி வாசல், தெற்குமேட்டுகலுங்கு, திருவாத்தி மூட்டுக்குள்ளே ஏழு அண்டா திரவியம் அசையாமல் இருக்ககிறது. அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் சுடலை மயான வேட்டைக்கு சென்று விட்டார். இதுதான் நல்ல தருணம், அந்த திரவியத்தை களவெடுத்து, வந்து மகளுக்கு நல்ல அணிகலன்கள் செய்ய வேண்டும் என்று மாந்த்ரீக சாலத்தோடு பெரும்புலையன் கிளம்புகிறான். மாந்த்ரீக வேலையோடு கொட்டாரக்கரை பகவதி வாசல் வந்து, ஏழு அண்டா திரவியத்தில், ஒரு அண்டாவை பெரும் புலையன் கொள்ளை போட்டு வீட்டுக்கு வந்தான்.

மயானம் போன சுடலை கலுங்குக்கு வந்தார், ஏழு அண்டா திரவியத்தில் ஒரு அண்டா காலியாக இருக்க கண்டார். பகவதியிடம் வந்தார் சுடலை, அம்மா நான் காவல் காத்த திரவியத்தை எவனோ களவெடுத்து சென்றுவிட்டான், யார் அவன், அவன் திசையை சொல்லு என்று கேட்டார் மாயாண்டி சுடலை. அதற்கு அம்மாள் சொன்னாள், மகனே திரவியம் போனாலும் போகட்டும், அவனை பற்றி கேளாதே என்றார். ஏனென்றால் அவன் காலனை விட கொடியவன், கொடிய பாவி அவன், மகனே, நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வருகிறார்கள், அந்த புலையன்மார்களுக்கு எல்லாம் அவனே தலைவன், நமது திரவியத்தை களவெடுத்ததும் அவனே என்றாள் அம்மை. மேலும், பாம்பு கடித்து இறந்தார்கள் என்று யாரும் கண்டதே கிடையாது அவன் வாழும் தெருவிலே, தேள் கொட்டி அழுதவர்கள் அங்கு யாரும் இல்லை, அவர்களை எதிர்த்து சென்றவர்கள் திரும்பி வந்த சரித்திரமே இல்லை, அவளவு கொடிய மாந்திரவாதிகள் இருக்குமிடம், ஆகவே நீ போனால் உன்னையும் பிடித்து அடைத்து விடுவான், ஆகவே போக வேண்டாம் மகனே, போனது போகட்டும், நீ உள்ளே இரு என்றார் அம்மை. சுடலை கேட்கவில்லை, அம்மா, என்னுடைய காவலிலிருந்து ஒருவன் களவெடுத்து சென்ற பிறகும் நான் ஏனென்று கேட்க்காது இருப்பது முறையா. நீ ஒரு வார்த்தை சொல்லு. மகனே சுடலை சென்று வா, வென்று வா என்று ஒரு முறை ஆசி கொடுத்து அனுப்பு, வென்று வருகிறேன். எப்படி தெரியுமா ?

கொள்ளை கொண்டு சென்றவனை கொடியருத்து வாறேனம்மா, களவெடுத்து சென்றவனை கருவறுத்து வாறேனம்மா, மங்கவாய் வாயதிலே மண்ணள்ளி போட்டுவாரேன் எனக்கூறி, பலி வேகம் கொண்டு கொடும் சப்தமிட்டார். எல்லாம் கவனித்த அம்மாள் பார்த்தாள், இனி இவனை அடக்க முடியாது என்று உணர்ந்து, சென்று வா மகனே சென்று வா, புலையனை வென்று வா மகனே வென்று வா என்று வாழ்த்தி நல்ல விடை கொடுத்து, மந்திரித்த வல்லயத்தையும் கொடுத்து, திருநீறையும் கொடுத்து, சுடலையை, பகவதி அம்மையே அனுப்பி வைத்தாள்.

அங்கிருந்து வீர விகார வேசத்தோடு வந்த சுடலை அவன் வீடு நெருங்கியதும், யோசித்தார், இதற்கு அந்தப்புறம் நாம் இந்த சொருபத்தோடு செல்ல கூடாது. அந்த திருட்டு பயலை வேசம் போட்டுத்தான் மோசம பண்ணவேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் படியே ஒரு பாம்பாட்டி சித்தன் உருவம்பூண்டு, மகுடி எடுத்து ஊதினார், ஏகப்பட்ட பாம்புகள் வந்து கூடியது. அந்த ஆயிரம் பாம்பு கூட்டத்தில் ஒரு நாக பாம்பையும் ஒரு நல்ல பாம்பையும் பிடித்தார். பல தலை உடையதை நாகமென்றும், ஒரு தலை உடையததை நல்ல பாம்பு என்றும் சொல்வர். அந்த இரண்டு பாம்புகளையும் ஒரு கூடையில் அடைத்து, கூடையை தலை மேல் வைத்து, புலையர்களின் உயிரை கவரக்கூடிய ஒரு கூற்றுவனைபோல சுவாமி நடந்து வருகிறார். அப்படியே நான்கு சாலியர் தெருவை அடைந்த ஸ்வாமிகள், இங்குதான் பாம்பு வித்தை காட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படியே பாம்புகளை வெளியே எடுத்து , ஆட விட்டு பல கொடிய வேடிக்கைகளை செய்கிறார், அந்த வேடிக்கைகளை புலையன்மார்கள் பலர் வந்து பார்த்தாலும் காளிப்புலையன் வீட்டிலிருந்து எவரும் வரவில்லை. பார்த்தார் சுவாமி, வேடிக்கை காட்டுவது இப்போது முக்கியமில்லை, காளிப்புலையன் வரவில்லை என்றால் என்ன, நாமே அவன் இடத்திற்கு செல்வோம் என நினைத்த சுவாமிசுடலை, அந்த உருவை மாற்றி, ஒரு வயதான கிழவனைப்போல உருவெடுத்தார், அந்த உருவமானது, பழுத்த உடல் வெளுத்த தலையுமாகவும், உடலில் வெடித்த வெள்ளரி பழம் போன்ற வரிகளும், அந்த வரிகளில் வெள்ளி ஊசி போன்ற புழுக்களும் நெளிய, ஒரு வெறுக்கும் படியான உருவத்துடனும், காவி உடையோடு கழுத்திலே உத்திராட்சம், நெற்றியிலே விபூதி, ஒரு கையில் ஊன்றுகோல், மறு கையிலே திருவோடுமாக, தள்ளாடி தள்ளாடி, நடை நடந்து சுவாமி அந்த மாந்திரவாதியின் வீட்டு வடக்கு வாசலில் வந்து நின்றார்.

மாந்திரவாதி காளிப்புலையன் வீட்டில், அங்கு ஏழு அறைக்குள்ளே காளிப்புலையன் மகள் மாவிசக்கி தோளியர்களுடன் தன்னை தானே அலங்காரம் செய்து, அங்கு ஆடலும் பாடலுமாக மகிழ்ந்து கொண்டிருந்தாள். தாயும் தந்தையும் வெளியே சென்றிருந்தனர். உடனே சுவாமி வடக்கு வாசலில் நின்று பிச்சை கேட்பதுபோல, வீட்டில் யாரம்மா இருப்பது, ஒரு ஏழை ஆண்டி வந்திருக்கிறேன், கொஞ்சம் அன்னம் தாருங்கள் என்றார். அவளோ, யாசகம் கேட்பது சிவனடியார் என்று நினைத்து கையிலே கொஞ்சம் திணையை அள்ளிக்கொண்டு வந்தாள் மாவிசக்கி. இவள் வடக்கு வாசலில் வந்தால் சுவாமி தெற்கு வாசலில் நின்று, மீண்டும், அடியே பிட்சை போடு என்பார். மாவிசக்கி அங்கு சென்றால் உடனே அடுத்த வாசலுக்கு செல்வார். இப்படியே அவளை அலைக்கழித்தார். இதனால் கோபமடைந்த மாவிசக்கி சுடலையை பார்த்து, அடேய் கிளட்டுப்பயலே, மரியாதையாக தருவதை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு ஓடிவிடு என்று சத்தமிட, வந்தார் சுடலை, பெண்ணே நான் பிச்சைக்காக வந்தேன் என்று நினைத்தாயா, இல்லை, உனது அப்பனுக்கும் எனக்கும் ஒரு கணக்கிருக்கிறது, அதை முடிக்கவே நான் வந்தேன் என்று கூறி, மாரியாதை குறைவாக பேசினால் உன்னையும் இல்லாது அளித்திடுவேன் என்றார். அத்துடன், உன்னிடம் பேசி பேசி நாவறண்டு போனது கொஞ்சம் தண்ணீர் கொடு என்றார். அதற்க்கு மாவிசக்கி, அடேய் கிழவா நான் யாரென்று அறியாது பேசுகிறாய், அத்துடன், உனக்கு தர தண்ணீரும் இங்கு இல்லை, உனக்கு தண்ணீர் தரும்படியான இழிவான ஆட்களும் இங்கு இல்லை என்று அகங்காரமாக சொன்னாள். உடனே செஞ்சுடலை அவளை பார்த்து, அடி மாவிச்க்கி, உன் அப்பனுக்கு பசும பாலை கறந்து கொண்டு வந்து அலமாரியில் வைத்திருக்கிறாய், என்னிடமோ உனக்கு தர ஒன்றுமில்லை என்கிறாய், அது போக என்னை மிக இழிவாக பேசிவிட்டாய். கள்வனுக்கு பிறந்த நீயே இழிவானவள். ஆகவே இன்னும் எட்டு நாட்களுக்குள் உன்னை கன்னிகழித்து உன் அகங்காரத்தை அழித்து, அத்துடன், உன்னையும் உனது அப்பனையும் அவன் குடியையும் கருவறுத்து அளிப்பேன், இது தவறினால், நான் மயானத்தில் உருவெடுத்து கைலாசத்தில் வளரவும் இல்லை, என் தாய் பார்வதி தேவியாம் பேச்சியும் இல்லை, என்பெயர் சுடலையும் இல்லை என்று மார்தட்டி சபதம் வைத்த மாயாண்டி சுடலை மாயமாக மறைந்துவிட்டார்.

மாலை நேரம் சென்றதும் காளிப்புலையன் வீட்டிற்கு வந்தான். நடந்தது அனைத்தையும் சொன்னாள் மாவிசக்கி. அப்படியா என்வீட்டிலே வந்து ஒருவன் கருவருப்பானா, பார்கிறேன் நான் என்று கூறிய காளிப்புலையன், மை போட்டு பார்க்கிறான், சுடலை என்று அறிந்தான். திரவியதிற்கு காவல்காரன் வீடு தேடி வந்து விட்டான் இனி நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று புரிந்துகொண்ட காளிப்புலையன் காவலும் கட்டுமாக இருக்க, அதே அந்த மலையாளத்திலே ஆலடிப்புதூரிலே பளியன்மார்கள் எல்லாம் கூட்டு பங்காளியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் காக்காச்சி மலை தாண்டி கண்ணாடி சோலைக்குள்ளே, அக்காலத்திய முறைப்படி விவசாயம் செய்தார்கள். செய்த விவசாயம் அங்கே பயிரில் பலன் பிடிக்கும் நேரம். அதே நேரத்தில் சுடலை தான் போட்ட சபதத்தை முடிக்கவேண்டும் என்று, எட்டாம் நாள் சாமம், அந்த புலையனின் கோட்டைக்கு வந்தார். அங்கு ஏழு அறைக்குள்ளே எரும்ம்பு ரூபம் எடுத்து மாவிச்க்கியின் அறைக்குள்ளே நுழைந்து, மாவிசக்கியாளை கொண்ட கணவனைப்போல கூடவே படுத்திருந்து கற்பழித்தார், கற்பழித்து முடிந்ததும் வெளிப்பட்டார் சுடலை. அடுத்து நேராக, காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே மத யானை போல நுழைந்து அனைத்து பயிர்களையும் அடி முதல் வேர்வரை சர்வநாசம் செய்து அனைத்தயும் அழித்தார். அழித்துவிட்டு அப்படியே கொட்டாரக்கரை பகவதி வாசலுக்கு வந்தார்.

பளியன்மார்கள் மறுநாள் விவசாயத்தை பார்க்க வந்தார்கள். சோலையே அழிந்து போனது கண்டு திகைத்தவர்கள் புலையனிடம் ஓடிவந்தார்கள், நடந்ததை தெரிந்துகொண்ட புலையன், காரணம் கண்டுபிடிக்க மையிட்டு பார்த்தான், அங்கேயும் ஆடியது சுடலைதான் என்பதை கண்ண்டான். உடனே சுடலையை அடக்க என்ன வழி என்று அவனது மாந்திர சக்திவளியாக ஆராய்ந்து பார்க்கிறான். அவனது மாந்திர குறி சுடலை கேட்பதை கொடுத்தால் அவரை அடக்கலாம் என்று சொல்கிறது, சுடலையை அடக்கி அடைக்கவில்லை என்றால் பெரும் இழப்புக்கள் நேரும், ஆகையால், எப்படியாவது சுடலை கேட்பதை கொடுத்து அவரை அடக்கி நிலை கட்டநினைத்தான் புலையன். ஆகையால், மீண்டும் வெற்றிலையில் மை போட்டு சுடலையை அழைக்கிறான். மையில் சுடலைவந்தார். ஏய் கீழ் நெறி புலையனே, என்னை இப்போதுதான் அறிந்தாயா, நீ இல்லாததால், உன் மகளை கற்பழித்து, உன்னுடைய சோலை நடுவங்களையும் அளித்தது நான்தான், அடுத்து உன்னையும் அளிப்பேன் என்று வெறி கொண்டு சொன்னார். சுடலையின் சக்தி அறிந்து பயந்து போன புலையன், சுடலை எதை கேட்டாலும் அதைகொடுத்து அவரை எப்படியாவது அடக்க நினைத்து, என்ன நீ கேட்டாலும் தருகிறேன், உன் கோபம தீர நான் என்ன தரவேண்டும், எதை கேட்டாலும் தருகிறேன் என்றான். அதற்க்கு சுடலை, நீ யாருக்காக எனது கட்டு காவலை மீறி எனது அம்மையின் திரவியத்தை களவெடுத்தாயோ, அந்த மாவிசக்கியை கருவோடு கொடிபுடுங்கி எனக்கு காபூசை கொடுத்தால் உன் கட்டுக்குள் அகப்படுவேன், இல்லையென்றால் அடுத்து உன்னையும் அழிதிடுவேன் என்றார்.

எப்படியோ தான் தப்பினால் போதும் என்று எண்ணிய சிறு குணத்தான் புலையனவன், மாவிசக்கியை, அந்த காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே கொண்டு வைத்துக்கொண்டு, ஏழு பரண் போட்டு, ஏழுவிதமான பலிகளை கொடுத்தான். சுடலையோ, டேய் புலையனே சொன்னது போல உன் மகளை பழிபோட்டு கொடு இல்லையென்றால், நீ நினைத்தது நடக்காது என்று கர்ஜிக்க, தான் பெற்ற மகளென்றும் பாராமல் அந்த சண்டாளப்பாவி புலையன், சூல்கொண்ட ஒரு பசுவை கிடதுவதுபோல பரணின்மேல் கிடத்தி, கை கால்களை கட்டி, அவளது வயிற்றை கிழிக்க ஆயுதத்தை கையில் எடுத்தான்.

அப்போதுதான் தான் சாகப்போகிறோம் என்று மாவிச்க்கிக்கு தெரிந்தது. அட சண்டாளப்பாவி புலையனே, அருமை பெருமையாக வளர்த்து, எங்கோகண்ட பேய் படைக்கோ என்னை பலிகொடுக்க வந்துவிட்டாயே என்று அளுத்து புலம்பி பதறினாள். அவளின் பதரலை பார்த்த சுடலை, யாரும் அறியாது நொடி வேளையில் அவளின் மனதிற்குள் புகுந்து, பெண்ணே நீ முற்பிறவியில் செய்த பலன் படி இந்த கள்வனுக்கு மகளானாய், பெற்றோர் செய்யும் தவறுகளுக்கு பிள்ளைகளும் பதில் சொல்லவேண்டும், என் அம்மையின் பொருளென்று அறிந்தும் நீ அதை அனுபவிக்க துணிந்தாய், அதனால் இப்பிறவியிலும் தவரிளைத்தாய், ஆகவே எனது சட்டப்படி இவைகளுக்கு நான் வழங்கும் கூலி இதுவே என, நெறி புரிவித்து அதே நொடியில் வெளி வந்தார்.

வெளிவந்த சுடலை, டேய் வேளை தவறுகிறது என்று ஓங்கார சப்தமிட, தான் தப்பினால் போதும் என்று எண்ணிய புலையன், தான் பெற்ற மகளென்றும் பாராமல் மாவிசக்கியின் வயிற்றை கிழித்து, மாவோடு கருவோடு பிள்ளையை பிடுங்கி, தலைவாழை இலையில் வைத்து சுடலைக்கு வாரிக்கொடுத்தான். அதை ஏற்ற சுடலை அவன் சொல்லுக்கு கட்டுப்படுவது போல் அவன் சிமிளுக்குள்ளே நுழைந்தார். புலையன் சுடலையை சிமிழோடு ஒரு தாமிர தூருக்குள்ளே வைத்து குளத்திற்குள் புதைத்தான். அடுத்து அதே குளத்திற்கு புலையனின் மனைவி தண்ணீர் எடுக்க வந்தாள். தூரை வெடித்து சிமிழோடு வெளியான சுடலை புலையனின் மனைவியின் தண்ணீர் குடத்தினுள் சிமிளாக புகுந்து கொண்டார். குடம் வீட்டுக்குள் வந்ததும் குடத்திலிருந்து துள்ளி சிமிளாக வந்து அருகிலிருந்த புலையனின் இடது கால் தொடையில் அமர்ந்து கொண்ண்டார். பயந்து போன புலையன், இவன் நம்மை இன்னும் விட வில்லையே என்று நினைத்து, சிமிளை உரலில் இட்டு இரும்பு உலக்கையால் இடித்தான், சிமிழ் உடைந்து வெளிப்பட்ட தேரடிமாடன் மாயாண்டி சுடலை, வல்லயமும் தடியோடு வீர வேக உருவோடு நின்று, அந்த புலையனை ஒரே அடியாக அடித்து ஊட்டியை முறித்து உதிரத்தை குடித்து அவனை அளித்து, அவனது மனைவி காளிப்புலைச்சியையும் அளித்து, அந்த திரவியத்தை எடுத்து, பழையபடி கொட்டாரக்கரை, பகவதி வாசலுக்கு கொண்டு வந்து பகவதி அம்மையிடம் ஒப்படைத்தார்.

அம்மையிடம் ஆசிவாங்கி, மீண்டும் நம் நாட்டிலுள்ள எல்லா தீர்த்தங்களும் ஆடி, 1008 சிவ ஸ்தலங்கள், 108 திருப்பதிகளையும் மாயாண்டி சுடலை வணங்கி, எல்லா தெய்வங்களையும் தொழுத சுவாமி மாயாண்டி சுடலை ஆண்டவர், மீண்டும் தென்னாடு வந்து தென்நாட்டில் குற்றாலம் வழியாக சீவலப்பேரிக்கு வந்து சீவலப்பேரி சுடலையாக குடி கொண்டார். அங்கிருந்து பிடி மண் மூலம், வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவராகவும், ஆறுமுகமங்கலத்தில் ஆறுமுகமங்கல சுடலையாகவும், மற்றும் தென் நாடு முழுக்க பல இடங்களில் சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து வீற்றிருந்து இன்று தன் ஆட்சியை நடத்தி வருகிறார். தன்னை நம்பிவரும் பக்தர்களுக்கு நல்லருள் அருள் பாலிக்கிறார்.

நல்லோர் மனதை நடுங்க செய்பவர்கள், நட்டாற்றில் கையை நழுவ விடுபவர்கள், வரவுபோக்கிற்கு வழி அடைப்பவர்கள், வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள், கற்பு வழி நிற்கும் கன்னியரை அழிப்பவர்கள், பொது சொத்தை கொள்ளை அடிப்பவர்கள், பதவியை பயன்படுத்தி பகட்டு வேஷம் போடுபவர்கள் இன்னும் பல ஆயிரமாயிரம் நரித்தனம் செய்யும் நயவஞ்சக மனிதர்களை கழுவேற்றி காவுகொள்கிறார். கண்ணீருடன் சுடலையிடம் முறையிடுவர்களுக்காக இன்றும் துரோகிகளை பழிதீர்த்து நல்லவர்களை காப்பாற்றி வருகிறார். சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களின் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும். தனக்கு ஓர் துயர் நேர்ந்துவிட்டது என்று கண்ணீருடன் எந்த அப்பாவியும் முறையிட்டால் சுடலை சும்மா விடமாட்டார் என்பது வெறும் கதையல்ல ரத்தவரிகளால் எழுதப்பட்ட சரித்திரமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. சுடலை ஆண்டவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டு மென்றாலும் பூஜை செய்யலாம். அந்தணர்கள் உட்பட அனைத்து ஜாதியிலும் பூசாரிகள் உண்டு. பொதுவாக சுடலை நயவஞ்சகரை அழிப்பவராகவும் பொய் சத்யவாதியை வதைப்பவராகவும். தீய மந்திர சக்திகளை ஒழிப்பவராகவும் இருக்கிறார், பல எதிரிகளுக்கு ஆட்பட்டு வாழ்க்கையில் துயரப்படுபவர்கள் சுடலையை வணங்கினால் சத்ருகள் நாசமடைந்து சந்தோஷமான வாழ்வை பெறுவார்கள்.

சுடலை ஆண்டவர் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

நன்றி – மனோ என்ற நண்பர் நம்முடைய சகோதரன் தளத்தில் பதியப்பட்டிருக்கும் சுடலையின் கதையை படித்துவிட்டு, வேறொரு கதையை அனுப்பியிருக்கிறார். ராமாயணம் உலகறிந்த கதையாக எழுத்து வடிவம் பெறப்பட்டு இருக்கும் போதே, பல இடங்களில் மாறுபட்ட ராமாயணம் சொல்லப்படுவதை அறிவோம். அச்சில் ஏறாத சுடலையின் கதையை மக்கள் மாறுபட்டு சொல்வது பெரும் வியப்பானதல்ல. நம்முடைய தேடலில் புதியதாக ஒரு நண்பர் இணைந்து கொண்டமைக்கு நன்றிகள். இதோ அவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கதை.

சுடலை ஆண்டவர் கதை – அன்று ஒருநாளில் புனிதமான கைலாச பார்வதத்தில், உலகையே கட்டி காக்கின்ற சிவனும் பார்வதியும் இடவலமாக வீற்றிருந்தார்கள். அங்கு மேலும் தேவர்கள், ரிஷிமார்கள், கம்போவர்கள், கணநாதர்கள், சாரணர்கள், சித்தர்கள் என கைலாசதிற்கானவர்களும் அங்கு இருந்தனர்.

உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும், எந்த உயிருக்கு எவ்வளவு என தெரிந்து, அறிந்து உணவளிப்பதும், ஈசனகிய சிவனின் பணிகளில் ஓன்று. அவ்வாறே அன்றும் பார்வதி தேவியிடம் ஈசன், நான் பூலோகம் சென்று அனைத்து உயிர்களுக்கும் அவைகளின் பிரவிப்பயனின் படியான கணக்குப்படி உணவளித்து வருகிறேன் என கூறி பூலோகம் சென்றார்.

பூலோகத்தில் ஈசன், எறும்பு முதல் யானைவரையிலும், உருவாகுகிற திசு முதல் வயிற்றிலிருக்கும் சிசு வரையிலும் எவற்றிற்கும் குறைவில்லாது படியளக்கும்போது, அங்கே கைலாசத்தில் இருக்கும் அம்மை பார்வதியாளுக்கு ஒரு சந்தேகம் சிவனின் மீது வந்தது. தினமும் ஈசன் படியளக்க போகிறேன் என்று செல்கிராரே அது எவ்வாறு, எவருக்கும் தவறாது எப்படி படியளக்க முடியும் என்று, ஈசனின் பணிமீது, தேவியின் மனதில் ஒரு சந்தேகம் வந்தது. எனவே இதை சோதித்து அறிய நினைத்தாள் அம்மை உமையவள்.

உடனே தேவலோக தேவ கட்சரிகளை அழைத்த தேவி, நீங்கள் சென்று ஒரு காஞ்சுராம் கம்பில் கடையப்பட்ட சிறு குமிழ் ஒன்றை செய்து வாருங்கள் என்றார். அவர்களும், மூடினால் காற்றுகூட புக முடியாத அளவில் துல்லியமான ஒரு காஞ்சிரங்குமிழை உருவாக்கி அம்மையிடம் அளித்தனர். உடனே தேவி பூலோகத்தில் இருந்து ஒரு சித்தெரும்பு ஒன்றை பிடித்து சிமிழுக்குள் அடைத்து, அதை தனது சேலை முடிப்பில் முடிந்து வைத்தாள்.

சிறிது நேரம் சென்றதும் ஈசன் அனைத்து உயிர்களுக்கும் படியளந்து மீண்டும் கைலாசம் வந்தார். இறைவனுக்கு அவர் வந்ததும் செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்த தேவி, இறைவனிடம் நீங்கள் எவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் படியளந்தீர்கள், ஒரு உயிர் கூட விடுபட்டிருக்காதா என்று ஈசனிடம் வினவ, அதற்கு ஈசன், ஒவ்வொரு உயிருக்கும், அந்த உயிர் அதன் முற்பிறவியில் செய்த நல்ல, கெட்ட காரியங்களின் கணக்குப்படி இந்த பிறவி வழங்கப்பட்டிருக்கும், அந்த பிறவிப்பலன் படி ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொரு நாளும் எவைஎவை வழங்கப்பட வேண்டும் என கணிக்கப்பட்டு வழங்கப்படும். இந்த கணக்கீட்டில் உணவும் அடங்குவதால், அதில் தவறு நேரக்கூடாது என்று நானே நேரில் சென்று என் கவனத்தில் வைத்து அளித்து வருகிறேன். எனவே தவறவே தவறாது என்றார்.

உடனே தேவி உமையாள் ஈசனிடம், ஈசனே நீங்கள் பூலோகம் சென்ற பிறகு என்னிடம் ஒரு உயிர் அகப்பட்டுக் கொண்டது. அது ஒரு வேளை உணவின்றி, உங்களை நம்பி உயிரை கூட விட்டிருக்கலாம் என்று கூறிக்கொண்டே முடிப்பை பிரித்து சிமிழை திறந்து பார்க்க, அதிர்ந்து போனாள். அங்கே அந்த சித்தெரும்பு வாயில் ஒரு திணை அரிசியை கவ்விக்கொண்டு குமிளுக்குள் சுற்றி சுற்றி வந்தது, அதனோடு இன்னொரு சித்தெரும்பும் துணைக்கு இருந்தது. உடனே தேவி இறைவனின் காலில் விழுந்து, ஈசனே தங்களின் பெருமையை நானே மறந்து, அறியாது தெரியாது மாபெரும் தவறை செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று நடுநடுங்கி அம்மை ஈசனிடம் மாப்பு கேட்க, ஈசனோ கண்கள் சிவந்து கடும் கோபம் கொண்டு அம்மை உமையவளுக்கு ஒரு சாபத்தை உதிர்த்தார்.

அந்த சாபம் என்னவெனில், கணவனை சொதித்ததால் காட்டு பேச்சியாக போகக்கடவது, மன்னனை சோதித்ததனால் மயான பேச்சியாக போகக்கடவது. பேயாக பிறந்தாலும் போதாது, நீ சுடுகாட்டு பேயாக போகவேண்டும், (பேச்சி என்று சொன்னால் தமிழில் பேய் என்று அர்த்தம). இப்படியாக பலவித சாபங்களை கொடுத்த சுவாமிகளிடம், அம்மை அழுது புலம்பியவாறே, ஈசனே இந்த அகோரமான சாபம் எனக்கு எப்போது தீரும் என்று கேட்க, அதற்க்கு ஈசன், நீ பேச்சியாக மயானத்தில் நின்று என்னை நினைத்து மாபெரும் தவம ஒன்று செய்தால், நான் அங்கு ஒரு ஆண் குழந்தையாக நான் அவதாரம் செய்வேன். நீ அந்த குழந்தையை கையால் தொட்டதும் உன் சாபம் தீரும் என்றார்.

ஈசனின் கோபத்தினால் சாபம்பெற்று பூலோகம் வந்த அம்மை உமையவள், பூலோகத்தில் தில்லைவன காடாகிய மயானபூமியில் ஐம்புலன்களையும் அடக்கி, ஈசனை நினைத்து, அம்மாள் பேச்சியாக ஒரு மபெரும் தவத்தை செய்யதார், அப்படியே அம்மையின் தவத்திற்கு இரங்கிய ஈசன் அங்கு பேச்சியான தேவிக்கு காட்சி கொடுத்தார். அப்படியே அம்மையிடம், உனக்கு என்ன வரம் வேண்டும் என்றார். அதற்க்கு அம்மை, ஈசனே நான் கணவன் உடன் சேராது ஒரு கைக்குழந்தை வேண்டும் என்றாள். உடனே ஈசன், பெண்ணே இந்த தில்லைவன காடாகிய மயானபூமியில், சிதையில் பிணம் கொடுஞ்சுடராக எரிந்துகொண்டு இருக்கும்போது, அந்த சுடரின் அருகாமையில் வந்து கண்களை மூடி முந்தாணி சேலையேந்தி என்னை நினைத்து நின்றால், ஒரு ஆண் குழந்தை அவதாரமாகும் என்றார். அப்படியே பேச்சி யாக அம்மை தவமிருக்க, மயானத்தில் பிணங்கள் எரிந்து வரும் சுடரிலிருந்து, சிவனின் திருவருளால் அம்மாவின் முந்தாணியில் சுடலை முத்துக்கள் வந்து விழுந்தன. அம்மா அவற்றை கூட்டி அள்ள அது ஒரு சதை பிண்டமாக உருவெடுத்தது. அந்த பிண்டதிற்கு உயிர் உள்ளது, ஆனால் அதற்கு எந்த உறுப்புகளும் இல்லை. உடனே அம்மை இறைவனை நினைத்து அழுது புலம்பி, ஈசனே பிள்ளைவரம் கேட்ட எனக்கு, ஒரு முண்டத்தை தந்து விட்டீரே, நான் என்னசெய்வேன் என்று முறையிட, ஈசனின் திருவருளினால் அந்த பிண்டம் அழகான ஒரு ஆண் குழந்தை வடிவம் பெற அம்மை மகிழ்ந்தாள். சுடரில் இருந்து உருவானதால் அந்தகுழந்தைக்கு சுடலை என்று பெயரிட்டாள்.

சுடலை குழந்தையாக இருக்க, அந்த குழந்தையின் அழகானது, ஏறு நெற்றி கூர்புருவத்துடனும், இருண்ட கண்கள், சிவந்த முகம், பவளம் போன்ற நிறத்துடனும் மாபெரும் அழகுடன் இருந்தது, உடனே அம்மை குழந்தைக்கு முத்தமிட்டு, நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, மயான பூமியில் வைத்தே சுடலைக்கு அமுதம் ஊட்டி, குழந்தையுடன் கைலாசம் வந்தாள் அம்மை உமையவள்.

கைலாசம் வந்த மாயக்குளந்தை சுடலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வேகமாக வளர்ந்து வருகிறது, நாட்கள் செல்கிறது, அப்படியே ஒருநாள் குழந்தைக்கு அமுதுஊட்டி தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு பார்வதி அரனுடைய பதிக்கு சென்றுவிட்டாள். அப்போது நாடு ஜாமம் 12 மணி, அந்த நேரதிலே தொட்டிலில் இருந்த திரு குழந்தைக்கு ஒரு விதமான வாசம் தென்பட்டது, அது பிணம எறியும் வாடை, உடனே சுடலை நினைக்கிறார், அந்த அம்மா நமக்கு அமுது ஊட்டி நேரமாகிவிட்டது, நமக்கு பசிக்கிறது, இனிமேல் இந்த அம்மா ஊட்டும் அமுதம் நமக்கு போதாது, தனது வயிறு இந்த வாடை வரும் பிணங்களை தின்றால்தான் நிறையும் என்று எண்ணி, எவருக்கும் தெரியாது, வடக்குவாசல் வழியாக, தில்லைவன காடகிய மயான பூமிக்கு சென்றார். அங்கோ ஏகப்பட்ட பிணங்கள் எரு அடுக்கி எரிந்துகொண்டிருக்க, அவற்றை பார்த்த சுடலை, வெந்து கொண்டிருந்த பிணங்களின் வலது சுற்றி இடமாக வந்து, எவளவு வேண்டுமோ அவ்வளவு பிணங்களை தின்று, அத்துடன் அங்கிருந்த பேய்களுக்கும் விருந்தளித்து, பேயோடு பேயாக பேச்சி மகன் சுடலை நடனமாடினார். நேரமானது, அப்படியே கைலாசம் வந்து தொட்டிலில் குழந்தையாக படுத்துக்கொண்டார் சுடலை. அத்துடன் நில்லாது வயிறு பசிப்பது போல குவா குவா என்று அழுதார் சுடலை, குழந்தை அழுவது கேட்டு ஓடிவந்த பார்வதி அம்மாள் அப்படியே குழந்தையை அள்ளி அணைக்க, குழந்தையின் வாயில் ரத்தம் வடிய, பிணவாடையும் வீச, பார்த்தாள் பார்வதி, ஐயோ என்று அலறி குழந்தையை வீசி எறிந்து, ஈசனே, இது என்ன சோதனை, குழந்தை வரம் கேட்ட எனக்கு பிணம் தின்னும் பேயை குழந்தையாக தந்து விட்டீரே என்று அழுதாள். உடனே வந்தார் பரமசிவன், உட்காரணம் இல்லாது எவையும் நடத்த மாட்டார் ஈசன். எனினும் காரணத்தை வெளிக்காட்டாது, அம்மையை பார்த்த சிவன், ஆம் தேவி இவன் பிணம் தின்றதால், சைவமான என்னுடைய கைலயதிற்கு ஆகமாட்டான் இவனை பூலோகத்திற்கு அனுப்பிவிடுகிறேன் என்று கூறி சுடலையை அழைத்தார்.

சிவன் அழைத்ததும் வந்தார் சுடலை. மகனே சுடலை, உடல் எரியும் மயான சுடரிலிருந்து அவதாரமானதால், அந்த சுடலையாண்டியும் நீதானப்பா, மயானத்தில் மாய உருவெடுத்ததால் மாயாண்டி சுடலையும் நீயே, பேய்களுக்கு அதிகாரி நீ, பேறுபெற்ற மாசுடலையும் நீயே என்று கூறி, மகனே நீ பூலோகம் செல் அங்கு உனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது என்றார், அதற்கு சுடலை, பகவானே, என்னை அவதரித்த நீங்களே என்னை பூலோகம் செல்ல பணிக்கும்போது, நான் என்ன செய்ய முடியும். உங்களின் மனம் படியே நான் செல்கிறேன். ஆனால், அப்பனே அங்கு நான் என்ன செய்ய வேண்டும், அங்கு உணவுக்கு என்ன செய்வேன், இப்படியே போனால் என்னை யார் மதிப்பார்கள், பூலோகத்தில் எங்கு இருப்பது என ஈசனிடம் கேட்க, அதற்கு ஈசன், மகனே, என் ஒரு கணி அசைவிற்க்கும் காரணம் உண்டு, நீ அங்கு சென்றதுமே நான் உன்னை நடத்துவேன். பூலோக இடுகாட்டு சிதைகளில் உனக்கு உணவு கிடைக்கும், அது போக மனிதர்கள் உனக்கு வில்லோடு முரசோடு வீரகண்டன் கொட்டோடு ஊட்டு போட்டு கோடை கொடுப்பார்கள் நீ போகலாம் என்று சொல்ல, சுடலையோ ஈசனை பார்த்து, பகவானே அதே ஊட்டு பூசையை இந்த கைலாசதிலேயே எனக்கு போட்டு தாருங்கள், அப்போதுதான் நான் பூலோகத்திலும் சென்று இதுபோல கேட்க முடியும் என்ன்று சொல்ல, படைப்பின் குணமறிந்து, கொடுப்பதை கொடுத்து இடத்தை மாற்ற நினைத்தார் சிவம்.

நித்ய சைவமான ஸ்ரீ கைலயதில், அனைத்து தேவதைகளும் அதிர்ச்சியில் நிற்க, சுடலைக்காக ஈசனே நின்று, கைலாச வாசலிலேயே பலவிதமான இரத்த பலிகளை கொடுத்தார். அந்த பலிகளானது, பரண் பரணாக ஆடு, எருமை, பன்றி, என பலவிதமான உயிர்வகைகளுடன் நிறைந்திருந்தது. அவற்றை உண்ட சுடலையோ, மீண்டும் ஈசனை பார்த்து, அப்பனே எனக்கு தகுந்த வரங்களை கொடு நான் செல்கிறேன் என்று சொல்ல, உடனே ஈசன் சில வரங்களை கொடுத்தார். அவைகளாவன, மகனே உனக்கு ஓங்கார பேய்களை எல்லாம் உருட்டி அடக்க வரம், தர்க்கமிடும் பேய்களை எல்லாம் தடி கொண்டு விரட்ட வரம், நீ மயான சாம்பலை கையிலெடுத்தால் தீராத வினைகளும், நோய் நொடிகளும் தீர்ந்தொளியும் என்றார். அதற்கு சுடலையோ, நல்லவை மட்டுமே செய்தால் போதாது அப்பனே, கேட்டவர்களுக்கு கேடும் செய்ய வேண்டும். நல்லவர்கள் என்னை அறியாவிட்டாலும், எனக்கு பணிவிடை செய்யாவிட்டாலும் நான் நல்லது செய்வேன், ஆனால் கெட்டவர்கள் மற்றும் துஷ்ட தனமானவர்கள், என் காலடி பணிந்தாலும் நான் கருவருப்பேன், அதற்கு வரம் தாருங்கள் என்று கேட்க, ஈசனோ கேள் தருகிறேன் என்றார்.

உடனே சுடலை அப்பனே, நான் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு இருப்பேன், நேரம் தப்பிய வேளையிலே, என் சட்டத்திற்கு விரோதமானவர்களோ, என்னை நம்பும் நல்ல குணவானுக்கு தீங்கு செய்பவனோ, மற்றும் துரோகிகளோ என் எல்லைக்குள் நுழைந்தார்களானால், அப்படியே, நேரம் தப்பி வருவோரை நெஞ்சடியாய் அடிக்கவரம், துரோகித்த, வாலிகளையும் சூலிகளையும் வஞ்சி கொண்டு குத்த வரம், மூன்று மாத சூலிகளை முட்டை போல நேரிக்கவரம், நிறை வயிராய் வருபவரை குறை வயிராய் ஆனுப்பவரம், என பலவகையான துஷ்டதனமான வரங்களை கேட்க, ஈசன் அனைத்தயும் கொடுத்தார்.

கயிலை நாதனாம் ஈசனிடமிருந்து, அனைத்து வரங்களையும் பெற்ற சுவாமி, வீர வேசம், விகாரமான சொருபத்தோடு, கைலாசத்தின் தெற்கு கோட்டை வாசல் வளியாக, பூலோகத்தில் இறங்க, தெற்கு நோக்கி அங்கே முதல் ஸ்தலம் திருக்கேதாரம், அடுத்து வரிசையாக, புத்த காசி, கெளரிகுண்டலம், உத்திரபிரயாதை, தேவபிரயாதை, ஹரித்துவாரம் என பலபல புனித ஸ்தலங்களை கண்டு வணங்கி, வடகாசியில் 64 தீர்த்தங்களில் நீராடி, அடுத்து இறக்க முக்தியாம் காசியிலும் மற்றும் பல தீர்த்தங்களிலும் நீராடி நமது தென்னாடு வந்தார். தென்னாட்டில் திருவேங்கடமலையில் திருவேங்கட நாதரையும், அடுத்து திருக்காளாத்தி ஈசனையும் வணங்கி, அடுத்ததாக பல்லவர்கள் ஆண்டு வரும் தொண்டை நாட்டிலே, பஞ்சபூத மண்டல ஸ்தலமாகிய காஞ்சியை கண்டார். அங்கு காஞ்சி அம்மாளையும், ஏகாம்பரநாதனயும் வணங்கி, அடுத்து திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் முக்திபெற்ற அண்ணாமலையாரையும், உண்ணாமுறைஅம்மாளையும் வணங்கி, மேலும் சிதம்பரம், சீர்காழி, திருவணைக்காவல் என பலபல ஸ்தலங்களை கண்டு வணங்கிய சுவாமி மாயாண்டி சுடலை, பாண்டியநாட்டு எல்லைக்கு வந்தார். அங்கு மதுரையில் வைகையில் தீர்த்தமாடி மதுரை மீனாட்சி அம்மாளையும், சோமசுந்தர பெருமாளையும் வணங்கினார். இப்படியே 1008 சிவ ஸ்தலங்கள், 108 திருப்பதிகளையும் மாயாண்டி சுடலை வணங்கிவந்தார். கடைசியாக மலையாள நாடு காணவிரும்பிய சுடலை, மலையாள மேற்ற்கு கடலோரம் கோகுர்ணம் என்று ஒரு புண்ணிய ஸ்தலம் அங்கு சென்று சிவத்தை வணங்கி, அடுத்ததாக வைக்கியம், குருவாயூர், திருவனந்தபுரம் என பல இடங்களை தரிசித்து கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தார். அந்த ஊரின் அருகில் பேச்சி பாறை மலை. அங்கே சென்ற சுவாமி அங்கிருந்து கீழ்த்திசையில் பார்க்க, அங்கே பகவதி என்ற பெண் தேவதை இருப்பதை கண்ண்டார்.

கொட்டார கரையிலிருந்து அந்த பகவதி அம்மன் என்ற தேவதை மலையாளத்தை ஆண்டு வருகிறது. பகவதி அம்மனுக்கு மாதம் இரண்டு திருவிழா, வருடம் இரண்டு தேரோட்டம் நடக்கிறது. அப்படியே பகவதி அம்மன் தேர் திருவிழாவுக்கு அன்றும் கொடியேறி ஒன்பதாவது நாள் ஆகையால் தேரோட்டம் நடந்தது. தேரிலே அமர்ந்து பகவதி அம்மன் தெருவழியே ஊர்வலம் வந்து கொண்டு இருந்தார். அங்கோ வேதர்கள் எல்லாம் வேதங்களை சொல்லிவர, தேவதாசிகள் தேருக்கு முன்னால் ஆடிவர, நட்டுவன் கொட்டிவர, ஆடலுடன் பாடலுமாக அந்த அம்மன் பகவதி தேர் பவனி வருகிறாள். பார்த்தார் மாயாண்டி சுடலை. எந்த தெய்வத்திற்கு தேர் பவனி நடக்கிறதோ அந்த தெய்வத்தின் கொடி அந்த ரதத்தில் பறக்கும். திருமாலுக்கு கருட கொடி, சிவனுக்கு காளை கொடி, பிரம்மாவுக்கு அன்ன கொடி, முருகனுக்கு சேவல் கொடி, விநாயகருக்கு எலி கொடி. ஆனால் இங்கு ரதத்தில் பறக்கும் கொடியோ சிங்க கொடி. பார்த்தார் செஞ்சுடலை மாயாண்டி. சிங்க கொடி பறப்பதால் அதுவும் நமது தாய்தான் என புரிந்து கொண்ட மாயாண்டி சுடலை, அங்கே பேச்சி பாறை மலையிலிருந்து ஒரே பாச்சலாக தேர் மீது பாய்ந்தார். தேரில் சுடலை விழவும் தேரின் அச்சாணி இரண்டாக முறிந்தது. அங்கே சிலர் தேரோட்டம் பார்க்காது பக்தி மார்கமின்றி, ஆடிவரும் தாசிகளை பார்த்து கொண்டு இருந்தார்கள், அதில் ஒருவன் தலையை பிடுங்கி அவன் ரசித்த தாசியின் முகத்தில் வீசினார். அலறி விழுந்து இருவரும் மாண்டனர். அங்கிருந்து ஒரே பாச்ச்சலாக பகவதி அம்மனின் கோட்டைக்கு வந்தார். கோட்டைக்குள் வந்து கதவை சாத்திக்கொண்டு, உள்ளே கடுமையான அட்டகாசங்களை செய்தார் மாயாண்டி சுடலை. கோட்டையை இடிக்கின்றார், கொடிமரத்தை அசைகின்றார், கொடிமரத்தில் ஒருகாலும் கோபுரத்தில் ஒருகாலும் வைத்து ஆதாழி செய்தார்.

அம்மை பகவதி பார்த்தாள், எவனோ ஒருவன், நம் ரதத்தை ஓடித்துவிட்டு கோட்டையிலும் சென்று ஆதாழி செய்கிறானே, இது என்ன விவகாரம் என்று மந்திரவாளோடு கடும் கோபத்தோடு கோட்டைக்கு வந்தாள். வாயில் கதவை தட்டி, யாரடா நீ, பகவதி கோட்டையில் வந்து ஆதாழி செய்ய உனக்கு என்ன தைரியம் என்று சத்ப்தமிட்டு, கதவை திறக்கிறாயா, அல்லது எனது மந்திர வாளுக்கு பலியாகிறாயா என்று கேட்க்க, பார்த்தார் மாயாண்டி சுடலை, அம்மை மிகவும் கோபமாக இருக்கிறார். இந்த ரூபத்துடன் அம்மை நம்மை கண்டால் அம்மையின் கோபம தீராது என்று எண்ணி, ஒரு ஏழு வயது சிறுவனின் உருவம் பூண்டு அம்மையின் முன்னே பாலகனாக நின்றார் மாயாண்டி சுடலை. அம்மை நேருக்கு நேராக பார்த்தாள் சுடலையை. இந்த பாலகனா இவளவு சேட்டை செய்தது, வேறு யாராவது கோட்டையில் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு சுடலையிடம் வந்து, யாரப்பா நீ, உன் குலம் கோத்திரம் என்ன, ஏன் அனாதையாக வந்து நிற்கிறாய் என்று, குழந்தையை கண்டவுடன் சோகம் உட்புகுந்து, இறக்க குணத்துடன் அம்மை சுடலையிடம் கேட்டார்.

சுடலை சொன்னார், அம்மையே என்னுடைய வரலாறே மிகவும் விசித்திரமானது, எல்லாரு இறந்த பிறகுதான் சுடுகாடு போவார்கள், ஆனால் நான் படைக்கப்பட்டதே மயான சுடலையில், சுடலையில் உருவானதால் எனக்கு சுடலை என்று பெயரிட்டார்கள். நான் பார்வதியாள் பிள்ளை, பரமனுடைய அமுஷம், பிறந்த இடம் உயர்ந்த இடம், நல்ல பிள்ளையாக இருந்திருக்கலாம், வீட்டுக்கு அடங்காமல் மாயானத்திலே போய் பிணத்தை தின்றுவிட்டு வந்துவிடவே அவர்கள், என்னை, நீ மாமிசத்தை தின்றதால் மாணிக்க கைலாயத்திற்கு ஆகாது எனவே, பூலோகத்திற்கு செல் என்று புறக்கணித்து அனுப்பிவிட்டார்கள். ஆகையால் தாயே இங்கு நான் தலை கீழாக வந்து விழுந்து விட்டேன்.

இந்த மண்ணுலகில் தாயே எனக்கு, அக்கமில்லை பக்கமில்லை ஆதரிப்பார் யாருமில்லை, திக்கு அற்ற பாவி போல இந்த தெருவில் நின்று தவிக்கின்றேன், நான் பார்வதிக்கு பிள்ளை என்றால் இந்த பகவதிக்கும் குழந்தைதானே, இப்போது வளப்பார் கை பிள்ளையாக வந்தேனம்மா உன்னிடத்தில், இருக்க ஒரு இடம் கொடு, நான் இருக்கின்றேன் உன்னுடனேயே என்றார் மாய சுடலை. பகவதி அம்மனுக்கு இரக்கமாகவும் இருந்தது, பார்த்தாள் பகவதி, இப்படி ஒருவன் நமக்கும் தேவைதான் என்று எண்ணி, மகனே நீ பார்வதிக்கு பிள்ளை எனில், நீ எனக்கும் பிள்ளைதான், அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீ வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். தாயிடத்தில் வந்தபிள்ளை இனி கவலை படவேண்டாம், சுடலையில் பிறந்தால் உனக்கு சுடலை என்று பெயரிட்டதாக சொன்னாய், நானும் உனக்கு பெயரிடுகிறேன், தேரின் அச்சை உடைத்ததால் உனக்கு தேரடிமாடன் என்று பெயரிடுகிறேன், உனக்கு தேரடியிலே ஒரு நிலையம், தெப்பக்குளத்தில் ஒரு நிலையம் , கொபுரத்திலே ஒரு நிலையம் , கொடிமரதிலே ஒரு நிலையம் போட்டு தருகிறேன், அது மட்டுமல்ல, எனக்கு இடது பக்கம் ஈசான மூலையில் தெற்குமேட்டுகலுங்கு திருவாத்தி மூட்டுக்குள்ளே ஏழு அண்டா திரவியம் தண்டயத்தில் அசையாது இருக்கிறது. அதை கள்வர்கள் கொண்டு செல்லாது மெய்க்காவல் காத்துவந்தால் உனக்கு வயிறார உணவு தருகிறேன் என்றார்.

அம்மை பகவதியின் மொழி கேட்ட சுடலையோ, அம்மா உன்னுடைய உணவு வேறு, என்னுடைய உணவு வேறு. உனக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் உனக்கு பூஜை செய்வதை இரு தினமாக நான் பார்க்கிறேன். உனக்கு ஒரு பித்தளை தாம்பாளத்தில் உப்பில்லாத பச்சரிசி சாதம் ஒரு கரண்டி வைத்து, ஒரு துணியை போட்டு மூடி, அதை, கணபதிகோயில் முதல் பைரவர் வரை அதையே படைக்கிறார். எனக்கு இந்த பூஜை போதாது, எனவே எனக்கு தனியாக ஒரு படப்பு போட்டு கொடு என்றார். அத்துடன், அந்த படப்பில் ஒரு நாளைக்கு ஒரு கோட்டை அரிசியை பொங்கி மூன்று உருண்டையாய் உருட்டி தரவேண்டும் என்றார். பகவதி அம்மையும் சரி என்று சம்மதிக்கவே, சுடலை ஆண்டவர் தன்னுடைய பூஜையை வாங்கிக்கொண்டு திரவியத்தை காத்து வருகிறார்.

அப்படியாக, கொஞ்ச நாளாக திரவியத்தை காத்து வருகிறார். ஆனால் சுடலையால் இருந்த இடத்தில அப்படியே இருக்க முடியவில்லை. அம்மை பகவதியை தரிசிக்க கோவிலுக்கு வருபவர்களில் யாரவது கெட்டவர்கள் மற்றும் துஷ்ட தனமானவர்கள் சுடலையின் பார்வையில் பட்டால், உடனே அவர்களை கொன்று தின்ன ஆரம்பித்தார். இதை தெரிந்துகொண்ட அம்மை வந்து தடுத்தாள், மகனே, கெட்டவர்கள் ஆனாலும் திருந்த வாய்ப்பு அளிக்கவேண்டும், அதற்காக இவளவு பெரிய கொலை தண்டனை கொடுக்க கூடாது, வேலியே பயிரை அளிக்க கூடாது, நீ காவல் தெய்வம், அதுவும் நம்மை வணங்க வருபவர்களை நாமே அடித்து கொல்லலாமா, தவறு செய்யாதே என்றார்.

அதற்கு சுடலை, அம்மா எனக்கு எல்லா நீதிகளும் தெரியும், எல்லா தர்மங்களும் தெரியும், நீ கொடுக்கும் தேங்காய் சில்லையும், பச்சரிசி சாதத்தையும் தின்று வயிறு நிறையவில்லை. நான் எவ்வளவு பசியில் இருந்தாலும் இங்கு வருபவர்களில் குணவன்களையும், நல்லவர்களையும் பார்க்கும்போது என் பசி மறந்து அவர்கள் என் பிள்ளைகளாக தெரிகின்றனர், அவர்களை, அவர்களுக்கு வரவிருக்கும் தீமைகளில் இருந்தும் துயரங்களில் இருந்தும் பிரித்து அவர்களை பாதுகாக்கிறேன். ஆனால், என்வயிறு நிறைந்து இருக்கும் போதும் கூட, துரோகிகளும் துஷ்ட தனமானவர்கள் என் கண்களில் பட்டாலே எனது வயிறு பசிஎடுத்து அவர்களை அழித்து தின்று விடுகிறேன். ஈசன் என்னை இப்படி படைத்தது விட்டார். நான் என்ன செய்வது என்றதுடன், அம்மையே உன்வருத்தம் எனக்கு புரிகிறது, ஆகையால், தினமும் உனக்கு மத்தியானம் உச்சிகால பூஜை நடக்கும்போது எனக்கு ஒரு சேவல் குடு, வெள்ளி கிழமையானால் ஒரு தீர்த்தம் வைத்து கொடு, மாதம் கடைசி செவ்வாய்க்கு ஒரு படுக்கை போட்டு குடு, வருடம் ஒரு தடவை உனது தேரோட்டத்துக்கு முன்னதா எனக்கு ஒரு ஊட்டு போட்டு குடு, அதன் பிறகு நான் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றார் சுடலை. பகவதி அம்மை சொன்னாள், அடேய் இது சிவகாம முறைப்படி பூஜை நடக்கும் திருத்தலம், இந்த சைவ பூஜையில் நீ இரத்தம் கேட்பது நியாயம் இல்லை, இஷ்டமானால் இரு, இல்லையெனில் இடத்தை காலிபண்ணு என்றார் அம்மை.

– சுடலை தொடர்வான்,…

வள்ளியம்மன் நம்பியண்ணன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்


தஞ்சையை சோழர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். பெரிய கண்டியண்ணன், சின்ன கண்டியண்ணன், முத்து கண்டியண்ணன் எனும் மூவர் காங்கேய நாட்டில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு தங்கை. அவள் பெயர் வள்ளியம்மாள். திருமண வயதை எட்டிய வள்ளிம்மாளுக்கு மூன்று அண்ணன்களும் கிழங்கு நாட்டைச் சார்ந்த நம்பியண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் பேட்டப்பாளையத்தில் இனிதே முடிந்து இல்லறம் தொடர்கிறது.

ஒருநாள் நம்பியண்ணன் மண்பாண்டச் சூளைக்கு சோகைகள் அடுக்க முற்படும் போது பாம்பு தீண்டி அதே இடத்தில் உயிர் துறந்தான். அதை அறிந்த வள்ளியம்மாள் “கணவனுடன் தீப்பூக தஞ்சை மன்னிடம் அனுமதி பெற்று வருகிறேன். அதுவரை கணவனின் உடலை பாதுகாத்து வைத்திருங்கள்” என உறவுகளிடம் சொன்னாள். அவர்களும் அதனை ஏற்றுக் கொள்ள தஞ்சை மன்னனிடம் செல்கிறாள்.

அங்கு மன்னன் மதம் பிடித்த பட்டத்து யானையை அடக்கி வந்தால் அனுமதி தருவதாக சொல்கிறான். வள்ளியம்மாளும் காவிரியில் குளித்து கொண்டுவந்த தீர்த்தத்தினை கணவனை வணங்கிவிட்டு யானையின் மீது தெளித்தாள். மதம் கொண்ட யானை அடங்கி அவளை வணங்கியது. பட்டத்து யானையின் மதத்தை அடக்கியது கண்டு மகிழ்ந்த மன்னன் அவளுக்கு தீயை தர, அதனை முந்தானையில் வாங்குகிறாள் வள்ளிம்ம்மாள். மன்னன் முதற்கொண்டு எல்லோரும் வியப்படைகின்றார்கள். மன்னன் தன்னுடைய பட்டத்து யானையை பரிசாக தருகிறான்.

அந்தயானையில் அமர்ந்து மோகனூருக்கு வருகிறாள் வள்ளியம்மாள். அந்த அதிசயத்தை கண்ட வாய்ப்பேசாத சிறுமி ஒருத்தி அம்மாவென அழைக்கிறாள். இறுதியாக கணவன் உடல் இருக்கும் இடத்திற்கு வந்தாள். அங்கு கூடியிருந்த உறவுகளிடம் “நான் கணவனோடு தீப் புகுந்த பின்பு, தீ ஏந்திவந்த முந்தானையும், சூடி இருக்கும் மலரும், கையில் இருக்கும் பழமும் எரியாமல் அப்படியே இருக்கும். அவற்றை எடுத்து வழிப்பட்டு வாருங்கள்” எனக் கூறினாள்.

பிறகு முந்தானையில் உள்ள தீயை கணவன் உடல் கிடத்தப்பட்டிருக்கும் சந்தனக் கட்டைகளின் மீது கொட்டிவிட்டு, எரிகின்ற தீயை சுற்றிவந்து வணங்கிவிட்டு தீப்புகுந்தாள். அவள் சொன்னது போலவே முந்தானை, மலர், பழம் என மூன்றும் எரியாமல் இருந்தன. பெரிய கண்டியண்ணன், சின்ன கண்டியண்ணன், முத்து கண்டியண்ணன் மூவரும் அதே இடத்தில் வள்ளிம்மனுக்கும், நம்பியண்ண்னுக்கும் கோவில் அமைத்திருக்கின்றார்கள்.

கோவில் –
வள்ளியம்மன் நம்பியண்ணன் கோவில்,
4/ 139, வேலூர் ரோடு,
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம்.

பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதை- தமிழ் மண்ணின் சாமிகள்

பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதைகளை பார்க்கும்போது நம்முடைய முன்னோர்களின் வாழ்கையில் பிரிவு என்பது மிகக் கொடூரமாக இருப்பதை அறிய முடிகிறது. இன்றைய காலக்கட்டத்திலும் காதல் செய்த பலரை பிரிப்பது சமூகமாகவோ, பொருளாதாரமாகவோ இருக்கிறது. ஆனால் இவர்கள் கொண்ட நட்பை வறுமை பிரிக்க பார்க்கிறது. கதையை படியுங்கள், இது மனம் கனக்கும் தோழிமார் கதை.

குடுமியான் மலை. புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமம். சில தலைமுறைக்கு முன்னால் ஊரே மழையின்றி காய்ந்து போனது. நிலம் காய்ந்து போனதால், விவசாயத்தையே நம்பி இருந்தவர்களுக்கு ஏழ்மை மட்டுமே எஞ்சியது. எங்கு நோக்கினும் வறுமை தாண்டவம் ஆடியுது.

பஞ்சம் தணியும் எனக் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனார்கள். இறுதியாக என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க ஊர்க் கூட்டம் போட்டார்கள். கூடத்தில் இருந்த ஒருவர் மதுரைக்குப் பக்கம் சென்றால் பிழைப்பு தேட வழியுண்டு என்று சொல்ல. ஊரை விட்டு ஒட்டுமொத்தமாய் வெறியேற முடிவெடுத்தார்கள். ஆனால் காலம்காலமாக பாட்டன், பாட்டனுக்குப் பாட்டன் வசித்த பூமியை எளிதாக விட்டுச் செல்ல முடியவில்லை.

மக்களெல்லாம் மண்ணைப் பிரியும் துக்கத்தில் இருக்க, இரண்டு பெண்கள் மடடும் தாங்கள் பிரியப்போவதை எண்ணி அழுது கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி பாப்பன வீட்டுப் பெண் பாப்பாத்தி, மற்றொருத்தி கருப்பாயி. இருவரும் சிறுவயது முதல் தோழிகள். ஆச்சாரம் என்று பாப்பாத்தியை கருப்பாயுடன் சேர அனுமதிக்காவிட்டாலும், சாதிய கட்டுப்பாடுகளை தகர்த்து எரிந்துவி்டடு கருப்பாயுடன் நட்பாக இருந்தால் பாப்பாத்தி. வெவ்வேறு சாதியை சார்ந்த பெண்களாக இருந்தாலும் ஒருவர்மேல் ஒருவர் அளவுகட்ந்த அன்பு வைத்திருந்தார்கள்.

தொலைதொடர்பு வசதியெல்லாம் இல்லாத காலம் அது. இருவர் பிரிந்து வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரமித்தால் மீண்டும் வாழ்க்கையில் சந்திப்பதே கடினம். ஆனால் கருப்பாயி சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் முதலில் ஊரைவிட்டு செல்வதென முடிவெடுத்தார்கள். மாட்டு வண்டியில் பொருட்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாரானார்கள். “பாப்பாத்தியுடனே இருந்து கொள்கிறேன்” என உறவுகளுடனும், பெற்றவர்களுடனும் செல்ல மறுத்தாள் கருப்பாயி. பாப்பாத்தியோ “அவர்களுடன் நானும் செல்கிறேன். அனுமதிகொடுங்கள்” என்று கெஞ்சினாள்.

இருவரின் சொற்களையும் காதில் போட்டுக்கொள்ளக் கூட யாரும் தயாராய் இல்லை. பாப்பாத்தியை அவர்கள் வீட்டிற்குள் அடைத்துவைத்தார்கள். கருப்பாயை அவளின் சொந்தங்கள் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்கள். இருவருக்கும் அழுவது தவிற வேறெதையும் செய்ய முடியவில்லை. கருப்பாயி உறவுகள் நெடு நேரம் நடந்து சென்றார்கள். இரவு நெருங்கியதும் ஓய்வெடுக்க முடிவெடுத்தார்கள். நல்ல இடமாக பார்த்து எல்லோரும் தூங்கத் தொடங்கினார்கள். வண்டிமாடுகள் கூட கண்கள் அசந்தன. ஆனால் கருப்பாயி மட்டும் பாப்பத்தியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.

திடிரென ஒரு முடிவுக்கு வந்தவளாய், வந்த வழியே ஓடத்தொடங்கினாள் கருபப்பாயி. அவர்கள் தங்கியிருந்தப் பகுதி அடர்ந்த காடு. தனியாக செல்கிறோமென்ற பயமும் அவளிடம் இல்லை. பாப்பாயை பார்த்தால் போதும் என சக்தி வந்தவளாய் ஆவேசமாய் ஓடுகினாள். பாதி வழியில் எதிரே ஒரு உருவம் வருவது தெரிகிறது. அருகில் சென்று பார்த்தால் அது பாப்பாத்தி. யாருக்கும் தெரியாமல் பாப்பாத்தியை தேடி கருப்பாயி ஓடிவந்தது போலவே பாப்பாத்தியும் வந்திருந்தாள்.

கருப்பாயிக்கு என்ன யோசனை தோன்றியதோ, அதுவே பாப்பாத்திக்கும் தோன்றியது. கருப்பாயின் உறவுகள் பாப்பாத்தியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பாப்பாத்தியின் உறவுகள் கருப்பாயை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே “உயிரோடு இருந்தால் தானே பிரிப்பார்கள். ஒன்றாய் இறந்து போனால் என்ன செய்வார்கள் ” என விபரீதமான முடிவை சேர்ந்தே எடுத்தார்கள்.

பொழுது விடிந்ததும் கருப்பாயை காணாமல் ஒரு புறம் அவளின் உறவுகள் தேட, பாப்பாத்தியை காணாமல் மறுபுறம் அவளின் உறவுகள் தேடினார்கள். இந்த இரண்டு கூட்டமும் நடுக்காட்டில் சந்தித்துக் கொள்ள, இருவரையும் சேர்ந்து தேடத் தோடங்கினார்கள். அடர்ந்த காட்டையும், ஊரையும் சல்லடைப் போட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, ஒரு மொட்டைக் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தார்கள், கருப்பாயும், பாப்பாத்தியும்.

வாழ வேண்டிய வயதில் இரண்டு கன்னிப் பெண்களின் சாவைக் கண்டு கதிகலங்கி போனார்கள் இரண்டு கூட்டமும். சாதி பேரைச் சொல்லி இழந்தது போதுன்னு இரண்டு பிணங்களையும் ஒன்னாவே எரித்துவிட்டு, சாதி பார்க்காம இரண்டு பேரையும் வணங்கத் தொடங்கினார்கள்.

நன்றி –

இயக்குனர் சேரனின் டூரிங் டாக்கிஸ் புத்தகம். அதில் சேரனின் பாட்டி சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. சொல் வழக்கிலிருந்து கதையாக மாற்றியுள்ளேன். சில இடங்களில் அவை சிரமாக இருந்தாலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக பாப்பாத்தி பிரமண குலத்தை சேர்ந்தவள். கருப்பாயி எந்த குலத்தை சார்ந்தவள் என தெரியவில்லை. அதை எப்படியோ சரி கட்டி கதையாக எழுதிவிட்டேன். விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் இணைக்க வசதியாக இருக்கும். வலைப்பூவில் இருவரின் புகைப்படமும் கிடைக்கவில்லை. எங்கள் ஊருக்கு அருகிலும் கோவில்கள் இருப்பதாக தெரியவில்லை. அம்மனின் படங்கள் கிடைக்கும் போது பதிக்கிறேன்.

பிச்சாயி அம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

பிச்சாயி அம்மன்

வீரய்யா

அது 17ம் நூற்றாண்டு. சைவமும் வைணவமும் தங்களுக்குள் கொண்ட போட்டியால் வளர்ந்து சிறு சிறு கிராமங்களுக்கும் சென்றடைந்துவிட்ட நேரம். அப்போது வாழ்ந்துவந்தார் வீரய்யா என்ற விவசாயி. பெருமாளின் பெரும் பக்தர். அருகிலிருக்கும் பெருமாள் மலையில் பெருமாளை தரிசனம் செய்து, மனமுருகி வேண்டியபின்பே உணவருந்துவது அவருடைய நாள் தவறாத வழக்கம்.

அன்று வயலில் வேலை அதிகமாக இருந்த்து வீரய்யாவுக்கு. அதிகமாக வேலை செய்ததால் விரைவில் பசியெடுக்க ஆரமித்தது. வேலைகளை செய்து முடித்துவிட்டு நன்நீரில் கைகால்களை சுத்தம் செய்தார். பின் மதிய உணவுக்காக காத்திருந்தார். பிச்சாயி நிறைமாத கற்பிணியாக இருந்தமையால் உச்சி வெயிலில் அவளால் வேகமாக வரமுடியவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல பசி அதிகமாகிக் கொண்டே போனது. பசிக் கோபமும் வீரய்யாவுக்கு வந்தது.

பிச்சாயி வீரய்யாவிடம் வரும் போது அவருக்கு பசியைவிட கோபமே அதிகமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திருநாமம் இட்டுக்கொள்ள நாமக்கட்டியை கேட்டார். ஆனால் அப்போதுதான் பிச்சாயிக்கு நாமக்கட்டியை மறந்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. வீரய்யா கோபமாக இருக்கிறார் என்பதை அறியாமல் தான் மறந்துவிட்டு வந்ததை பிச்சாயி தெரியப்படுத்த, பசிக்கோபத்துடன் இருந்தவரின் புத்தி தடுமாறியது.

அவளுக்கு தண்டனை தரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அருகில் கிடந்த மண் உருண்டையை பிச்சாயின் மீது கோபமாக வீசினார். ஏற்கனவே உச்சி வெயிலில் நடந்து வந்த களைப்புடன் இருந்தவள் தலையின்மீது மண் உருண்டை தாக்க உடனே மரணமடைந்தாள். நடந்த விபரீத்த்தை உணர்ந்த வீரய்யா தன்னையும் மாய்த்துக் கொண்டார். ஒரு சிறு கோபம் தம்பதிகள் இருவரின் மரணத்திற்கு காரணமானதை பிச்சாயி வீரய்யாவின் கதை எல்லோருக்கும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

கோவில் –

பிச்சாயி அம்மன், வீரய்யா கோவில்,
பெருமாள் மலை அடிவாரம்,
துறையூர்.

நன்றி –
பிச்சாயி தெய்வத்தினை நண்பர் பின்னோக்கியின் வலைப்பூவில் அறிந்தேன். அந்தக் கோவிலுக்கு சென்றேன். அங்கே வணங்க வந்த சிலரிடம் அந்தக் கோவிலின் மகிமையை கூறுமாறு கேட்டேன். ஆனாலும் நண்பர் சொன்ன அளவு யாரும் சொல்லவில்லை. கதையின் முழு சாரமும் அவரிடமிருந்து கேட்டு வாங்கியது. அவருக்கு மிக்க நன்றி.

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 4

பயணத்தின் இறுதி நாள். சிறுவயது முதல் கேட்டு வளர்ந்த பொன்னரையும் சங்கரையும் தேடி பயணப்பட்டோம். அண்ணன்மார் கதையின் ஆரம்பம் மதுக்கரையில் இருந்து ஆரமிக்கிறது. அந்த ஊர் எங்கள் ஊரின் அருகில் இருக்கிறது என்பது தகவல். கலைஞர் எழுதிய காவியத்தில் சீத்தப்பட்டி என்ற ஊர் வருவதாகவும், அதுவும் எங்கள் ஊருக்கு அருகில் இருப்பதையும் என் சிற்றன்னை குறிப்பிட்டார். கதையை அறியாமல் இடத்தின் மகிமையை அறிய இயலாது அதனால், மூன்று தலைமுறை கதையை எளிமையாக இங்கு சொடுக்கி படித்துவிட்டு வாருங்கள்.

என்ன கதை தெரிந்துவிட்டதா?. இனி பயணத்தினை தொடர்வோம். கரூர் நகரிலிருந்து வீரப்பூர் செல்ல அரைமணி நேரம் ஆனது. முதலில் பெரியகாண்டியம்மன் கோவிலுக்கு சென்றோம். இந்த அம்மன் தான் தங்கை அருக்காணிக்கு ஓமதீர்த்தம் தந்ததாக சொல்கின்றார்கள். கோவிலின் முன் திருவிழாக் கடைகள் நிரந்திரமாக இருக்கின்றன. அதைவிட பிச்சைக்காரர்களும் இருக்கின்றார்கள். குலதெய்வக்கோவில்களில் முதன் முதலாக பிச்சைக்காரர்களை அன்றுதான் பார்த்தேன்.

நாள்தோறும் வருகின்ற கூட்டத்திடம் கொஞ்சம் பணம் கிடைத்தாலே போதும் என்று நினைக்கின்றார்கள். இவர்களாவது தேவலாம் என்றிருந்தது, உள்ளே பூசாரிகள் அடிக்கும் கொள்ளை. தீபாராதனை காட்டுவார் ஒருவர், அர்ச்சனை செய்வார் ஒருவர், சந்தனப் பொட்டு வைக்கிறார் ஒருவர். ஆனால் எல்லோரும் காசு காசு என பிய்த்து எடுக்கின்றார்கள். கொஞ்சம் ஏமாந்தால் மொட்டை அடித்துவிடுவார்கள். கோவிலை சுற்றி வருகையில் கூட இரண்டு மூன்றுபேர் நிற்கின்றார்கள். தீர்த்தம் தெளிப்பதற்கு கூட தனியாக வசூல். ஆச்சிரியம் என்னவென்றால் பூசாரிகளெல்லாம் தங்கள் பணத்தினை தனித்தனியாக கேட்டு வாங்கிக்கொள்ள, பிச்சைக்காரர்கள் ஒற்றுமையாக ஒருவரிடம் கொடுத்துவிட்டு போங்கள் நாங்கள் பிரித்துக்கொள்கிறோம் என்றார்கள்.

அடுத்து சங்கரை பொன்னர் அடைத்துவைத்தாக சொல்லப்படுகின்ற இடத்திற்கு சென்றோம். அங்கே கன்னிமார்களும், பொன்னர், சங்கர், அருக்காணிக்கும் சிலை வைத்திருக்கின்றார்கள். ஒரு திருவிழா கூட்டமே அங்கிருந்தது. நாங்கள் செல்லும் போது, ஒரு பணக்காரப் குடும்பம் சமையல் செய்து கொண்டிருந்தது. அவர்களின் அருகே இருந்த சுமோவில் தி.மு.க பிரமுகரின் பெயர் கருப்பு சிவப்பில் மின்னிக்கொண்டிருந்தது. பூசாரிகளிடம் கதைகளைக் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டேன். ஆச்சரியமாக ஒத்துக்கொண்டார்கள். அந்த இடத்திற்கு அருகே மகாமுனியின் சிலை இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த காவல்தெய்வமாக அதை கொண்டாடுகின்றார்கள்.

அதன்பிறகு காலம்காலமாக மர்மமாகவே இருக்கும் படுகளம் பகுதிக்குச் சென்றோம். பெரிய மைதானம் போல இருந்தது படுகளம். சுற்றிலும் மதில் சுவர் எழுப்பியிருக்கின்றார்கள். அதற்குள் பொன்னர், சங்கர் தற்கொலை செய்து கொள்வது, வீரபத்திரன் முறசு கொட்டுவது என பல சிலைகள் சிமென்டால் செய்யப்பட்டிருக்கின்றன. மைதானத்தின் ஒரு பகுதியில் கோவில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டும், மறுத்துவிட்டார்கள். அதற்காக விட்டுவிட இயலுமா. பொன்னரும் சங்கரும் மனைவிகளுடன் இருந்ததை படம்பிடித்து கொண்டேன்.

இந்னும் இரண்டு இடங்கள் மீதம் இருப்பதாக சொன்னார்கள். ஒன்று போரில் சிந்தப்பட்ட ரத்தம் கற்களாக இருக்கும் பகுதி, மற்றொன்று பெரியக்கா தபசு என்கிற இடம். படுகளம் பகுதிக்கு அருகிலேயே போர் நடந்ததாக சொல்லப்படுகின்ற இடமும் இருக்கிறது. அந்தப்பகுதிக்கு சம்மந்தம் இல்லாத கற்கள் அங்கே கொட்டப்பட்டிருக்கின்றன. தூரத்திலிருந்து பார்க்கையில் கரிய நிற கற்களின் பரவலுக்கு மேல், ஒரு குடிசை தெரிகிறது. அதற்குள் வழக்கம் போல, பொன்னர் சங்கரின் சிலைகள். அங்கிருக்கும் கற்களை ரத்தம் என்று நம்ப முடியவில்லை. மற்ற கற்களைக் காட்டிலும் அந்தக் கற்கள் எடை குறைவாக இருந்தன. அங்கிருக்கும் பூசாரி ஒரு பெரிய கல்லை வைத்துக்கொண்டு இதுதான் உண்மையான ரத்தக் கல் என்று வருவோரின் தலையில் வைத்து, காசு வாங்கிக் கொண்டிருந்தார். அந்தக்கல்லின் எடை மிகவும் குறைவாக இருந்தது. அவ்வளவு ரத்தம் வந்திருந்தால் நிச்சயம் மனிதன் பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனால் மனிதனின் நம்பிக்கைகள் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை எந்பது வேறுவிசயம். இவைகளையெல்லாம் பார்ப்பதற்குள்ளவே மாலை நேரம் நெருங்கி விட்டது. அடுத்த முறை வந்தால், பெரியக்கா தபசை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

என்னுடைய பள்ளித் தோழியின் குலதெய்வம் பொன்னர் சங்கர். அவள் டியூசன் நேரத்தில் அந்தக் கதையை கூறுவாள். நமக்குதான் கதைகள் என்றாலே கொள்ளைப் பிரியமாயிற்றே. பட்ப்பை விட்டுவிட்டு நாள்தோரும் கதைகள் கேட்டுக்கொண்டே பொழுது போனது. வீரப்பூரின் ஒவ்வொறு இடங்களுக்கு செல்லுகையிலும் அவள் சொன்ன கதைகள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. இன்று அவள் எங்கிருக்கிறாள் என தெரியாது. ஆனால் வருடத்திற்கு ஒரு முறை அவள் குடும்பத்துடன் வந்துபோகும் இடத்திற்கு நானும் வந்திருக்கிறேன் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. பெரியசாமி கோவிலுக்கு போகும் போதெல்லாம் என்னுடைய பாட்டாவின் பெயர் கல்வெட்டில் பதியப்பட்டிருப்பதை பெருமையாக பார்த்துவிட்டு வருவேன். என்னுடைய எத்தனை தலைமுறைகள் அங்கே கால்தடம் பதித்திருக்கின்றன என எண்ணும் போதே, ஒரு இனம் புரியாத சினேகம் வருகிறது. காலம் காலமாக இந்தக் கதைகள் நம்மிடைய ஒரு பிணைப்பினை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. அதன் சாட்சியாக வீரப்பூர் போன்ற ஊர்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றின் பெருமைகளை உணர்ந்து நாம் அடுத்த தலைமுறைக்கும் இந்த வாய்ப்பை தருவதே மிகப்பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்.

முன்னோர்களைத் தேடி புறப்பட்ட எங்கள் முதல் பயணம் இனிதே நிறைவுற்றது. ஆனால் இது முடிவல்ல, ஒரு மாபெரும் தொடக்கம் என்றே தோன்றுகிறது.

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 3

மூன்றாம் நாள். கருவூர் என்ற அழைக்கப்பட்ட கரூர் மாநாகரிலிருந்து திண்டுக்கல் நகரை நோக்கி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. மணவாடி. இந்த இடத்தினை தொட்டியச்சி, முத்தாலம்மன் என்ற இரண்டு தெய்வப் பெண்களின் பாதம் பட்ட இடமாக சொல்கிறார்கள். ஒரு இடத்தில் ஒரு மூதாதையரின் கதை கிடைப்பதே அபூர்வம் என்கின்றபோது, ஒரு இடத்தில் இரண்டு மூதாதையரின் கதை கிடைத்தது அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.

தொட்டியச்சி கிராமத்திற்கு செல்லும் சாலையில் குடிகொண்டிருக்கின்றாள். ஒரு கல்லினை வைத்து இதுதான் தொட்டியச்சி என்று வணங்குகிறார்கள் ஊர்மக்கள். நவக்கன்னிகள், மாசி பெரியண்ண சுவாமி, கருப்பு என காவல் தெய்வங்களும் இருக்கின்றன. கற்கலால் அமைக்கப்பட்ட கோவிலோ, குடிசையோ அல்லாமல் திறந்தவேளியில் யாருக்கும் கட்டுப்படாதவளாக இருக்கிறாள். அவளுக்காக கோவில் அமைக்க எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும், மறுத்துவிடுகிறாள்.

இவளுக்கு அப்படியே நேர்எதிரானவள் முத்தாலம்மன். இவளுக்கு ஏக இடங்களில் கோவில்கள் இருக்கின்றன. கிராமத்திற்கு நேர் எதிரே சாலை கடந்து சென்றால், முத்தாலம்மனை தரிசிக்கலாம். அதிலும் இங்குள்ள கோவில் அழகு நிறைந்தது. அங்கிருக்கும் சிலையைப் பற்றியே தனி இடுகை இடலாம். அத்தனை கதைகள் சொல்கின்றார்கள். நான் தரிசனம் செய்துவி்ட்டு, கதைகள் கேட்டேன். அந்தசிலை மண் சிலை என்ற போது என்னால் நம்பவே முடியவில்லை.

அதை விடவும் நம்ப முடியாத விசயம். சின்னஞ்சிறு கோவிலில் இருக்கும் அவளுக்கு இருக்கும் சொத்துகள். கிராமத்தின் பெரும்பாலான நிலங்கள் அவளுக்கு சொந்தமானவை. இப்போது பராமரிக்க ஆளில்லாமல் எல்லாம் கைவிட்டு சென்று கொண்டிருக்கிறது. அதற்காக வருமானம் இல்லையென சொல்லிவிடமுடியாது. சமீபத்தில் கோவில் திருவிழாவின் போது ஒன்றறை லட்சம் பணம் வசூலாகி இருக்கிறதாம். அதுவும் முறை கட்டளை என யாரிடமும் காசே வசூலிக்கவில்லை. எல்லாம் அவர்களாகவே கொடுத்த காசு என்றார் கோவில் திருவிழாவை முன்நின்று நடத்தி வைத்த பெரியவர்.

அந்தக் கிராமத்தினைச் சுற்றி தொட்டியம் நாயக்கர் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். வேட்டையாடும் தொழில் செய்திள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் வேட்டைக்காக வைத்த பொறிகளைக் கூட சிலர் பார்த்திருக்கின்றார்கள். கடந்த ஐம்பது வருடங்களில் அவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. இப்போது எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொட்டியச்சி கதையும், முத்தாலம்மன் கதையும் நாயக்கர் மற்றும் வெள்ளாலர் இனமக்களோடு தொடர்புடையது.

தொட்டியச்சி கோவில்வீடு

தொட்டியச்சி நாயக்கர் இனத்தினை சார்ந்தவள். மிகுந்த திறமைசாலி. அவளுடன் சேர்ந்து எல்லோரும் வேட்டைக்கு சென்ற போது, அவள் மட்டும் வழி தவறிவிட்டாள். ஓரிரவு வெளியில் தங்கிய பெண்ணை ஏற்றுக்கொள்ளமாட்டார்களலாம் நாயக்கர் மக்கள். எனவே தொட்டியச்சி தீக்கிரையாகிப் போய்விட்டாள். அதை அறிந்த சில சோழிய வெள்ளாலர் இன பெரியவர்கள் இவளையே குலதெய்வமாக வணங்குவதாக முடிவெடுத்திருக்கின்றனர்.

இப்போதுகூட திருவிழாவிற்கு நாயக்கர் இனத்திலிருந்து ஒரு ஜோடி வந்து விருந்தினராக கலந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. அவர்கள் கைகளால் நீர் எடுத்துவந்து அபிசேகம் செய்து மக்களுக்கு வழங்குகிறார்கள். திருவிழாவிற்கு வர மறுத்துவி்ட்டாள் நாயக்கர் இன மக்களை தொட்டியச்சி தண்டித்துவிடுவாள் என்ற பயம் எல்லோர்க்கும் இருக்கிறது. வேறு சாதியை சார்ந்த பெண் என்றாலும் இங்கு வாழும் சோழிய வெள்ளாலர் இன மக்கள் அவளை குலதெய்வமாக போற்றி வழிபடுகின்றனர்.

பயணம் தொடரும்…

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 2

பயணத்தின் இரண்டாம் நாள். ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு முதலில் சென்றோம். ஆடுகளை பலி கொடுக்க பெரும் கூட்டம் நின்று கொண்டிருந்தது. கருவறையில் சாமிக்கு தீபம் காட்டகூட பூசாரிகள் இல்லை. ஆனால் திரும்பும் இடமெல்லாம் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார் பட்டவன்.

யார் இந்த பட்டவன் என்று தொன்றுகிறதா. இவர் உண்மையான மூதாதயரின் வடிவம். நன்கு வளர்ந்த மரம் திடீரென்று பட்டுபோனது என்பார்களே. அதே பொருளில் இறந்த மனிதனை பட்டவன் என்கிறார்கள்.

எத்தனையோ முறை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். தேர்திருவிழாவில் கடையில் விற்கும் மிட்டாய்களுக்காக ஏங்கியிருக்கிறேன்.ஆனால் அன்றுதான் கண்களில் பட்டார் பட்டவன். பட்டவனின் பெருமையை என்னுடைய அப்பாயி சொல்லிக் கொண்டு வர, நவலடியான் கோவில் வந்தது. நவலடி கருப்பு புகழ் பெற்றிருந்தாலும், மதுரைவீரனுக்கும் தனி சந்நதி உண்டு. அங்கிருக்கும் பூசாரி பூஜையின் போது சொல்வதை கேட்பதே இன்பமாக இருக்கும். ஏன் என்றால் அத்தனையும் தெளிவான தமிழ், நல்ல உச்சரிப்பு. அர்ச்சனையின் போது பால் பெருகுதலிருந்து ஆயுள் நீடிப்பு வரை அழகாக எடுத்து சொல்லுவார். தங்கள் இன மக்களின் முகவரியை பதிந்து வைத்திருக்கின்றார்கள் கோவில் நிர்வாகிகள். மூடியிறக்கும் இளம் குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு வரக்கூடாதென வெந்நீர் ஏற்பாடு செய்து தருகின்றாரகள். இந்த முறையை நான் இங்கு மட்டுமே பார்த்தேன்.

அடுத்து மோகனூரில் இருக்கும் மூன்று அண்ணன்மார்கள் கோவில். பேரைக்கேட்டதும், அண்ணன்களுக்காக கட்டப்பட்ட கோவில் என்று நினைத்தேன். ஆனால் அது தங்கைக்கு அண்ணன்கள் எழுப்பிய கோவில். சோழர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறிய தங்களுடைய தங்கைக்காக கோவில் எழுப்பியிருக்கின்றார்கள். வழக்கமான கோவில் அமைப்பு இல்லாமல் வெளித்தோற்றத்தில் மண்டபம் போல தோன்றினாலும், கருவறையில் வள்ளியம்மனுடன், நம்பியண்ணனும் காட்சிதருகிறார். அவர்களுடைய அண்ணன் குடிகள் 2160என 2001ம் ஆண்டு செதுக்கப்பட்ட கல்வெட்டு சொல்கிறது. 2010 நடந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னும் குடிகள் உயர்ந்திருக்க கூடும். இத்தனை குடிகளையும் ஒருங்கினைத்து பேணி வருவதை பார்க்கும் போது சிலிர்ப்பாக இருந்தது.

அந்த சிலிர்ப்பு அடங்குவதற்குள் திரௌபதி அம்மன் கோவிலை கடந்திருந்தோம். காப்பியத்தலைவி கண்ணகியை கடவுளாக வழிபாடுவது போலவே சில இடங்களில் திரௌபதிக்கும் கோவில்கள் உண்டு. அடுத்ததாக சென்றது ராசாராசாயி கோவில்.

ராஜா என்பதை ராசா என்றே உச்சரித்து பழக்கப்பட்ட மக்கள் ராணியை ராசாயி என்றே அழைக்கின்றனர். படையெடுப்புகளின் போது கன்னி வேட்டை நடத்துபவர்களோடு கோவிலின் புராணக் கதை சம்மந்தம் கொண்டிருக்கிறது. அங்கு ஆச்சரியம் கொள்ள வைத்த விசயம் கருவறையில் ராசா, ராசாயோடு முருகன் இருப்பதுதான். அந்த ராசா முருகனை வழிபட்டுவந்ததாக பூசாரி சொன்னார். அதே சமயம் கருப்பையும் வழிபட்டு வந்ததால் அதற்கென தனி சந்நதியும் அமைக்கப்பட்டிருந்தது.

கருப்புசாமி சந்நதிக்கு எதிரே பலியாடுகள் நின்றுகொண்டிருந்தன. கிடா வெட்ட வந்த ஒரு குடும்பம் (ஒரு ஊர் எனவே வைத்துக்கொள்ளாலாம் அவ்வளவு கூட்டம்) செய்வதறியாது நின்று கொண்டிருந்தது. காரணம் தலையில் ஒரு குடம் தண்ணீர் தெளித்தும் ஆடு அசரமல் நின்று கொண்டிருந்ததுதான். தெய்வக் குத்தம் என்று பயந்து சில பெண்கள் அழுதே விட்டார்கள். என்னுடைய அப்பா ஒரு யோசனை சொன்னார். ஐஸ் தண்ணீர் தெளித்தால் தலையை ஆட்டுமென. அப்படியே செய்தார்கள். நல்ல வேளையாக ஆடு இசைந்தது. அவர்கள் நெகிழ்ச்சியோடு நன்றி கூற, நாங்களும் மகிழ்ச்சியோடு புறப்பட்டோம். இரண்டாவது நாள் பயணம் இனிதே முடுவுற்றது.

பெரும்பாலான சிறுதெய்வ கோவில்களில் முதலில் தடைவிதிக்கப்படுவது இந்த பலிகளுக்குதான். இதன் அரசியல் மிக பயங்கரமானது. சுருக்கமாக சொன்னால் இது பாரம்பரிய மக்களை விரட்டிவிட்டு பாப்பான்களை கோவிலுக்குள் கொண்டும் செல்லும் வழி. அதுசரி தொட்டியச்சி, முத்தாலம்மன் பற்றி சொல்கிறேன் என்றேனே,… அது அடுத்த பகுதியில். ஆனால் சாதிகளின் வீச்சம் இல்லாமல் அந்த தெய்வங்களின் கதையை சொல்ல முடியாது. அதனால் சாதியை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பயணம் தொடரும்.

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 1

பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆன்மீகச் சுற்றுலாவாக குடும்பத்துடன் செல்லும் போது, கோவில்களின் வரலாறுகளையும், சிற்பக் கலையும் வெகுவாக ரசிப்போம். ஆனால் இந்த முறை கடவுள்களைத் தேடி பயணப்படவில்லை. நம் முன்னோர்களைத் தேடி பயணப் பட்டோம்.

துறையூயில் இருக்கும் மாசி பெரியசாமியை தரிசனம் செய்வது மட்டுமே என் பெற்றோர்களால் திட்டமிடப்பட்ட ஒன்று. மற்றவைகளை என்னிடமே விட்டுவிட்டார்கள். பிச்சாயி கதை நடந்த இடம் துறையூரி்ல் இருக்கும் பெருமாள் மலையின் அடிவாரம் என்று வலைப்பூவில் படித்திருந்ததை சொன்னேன். சரி முதலில் அங்கு செல்லாம் என்று சொன்னார்கள். அடுத்த சிலமணி நேரங்களில் பிச்சாயி,வீரய்யா கோவிலில் இருந்தோம்.

பிச்சாயி கோவில்

பிச்சாயி கதையும், கோவில் அமைப்பு பற்றியும் தனித்தனி இடுகையில் சொல்கிறேன். முக்கியமாக சொல்லப்பட வேண்டியது அழகு நிறைந்த அந்த குதிரைகள். அடுத்ததாக பெருமாள் மலையில் பெருமாளின் தரிசனம். தென் திருப்பதி என அழைக்கப்படுகிறதாம் பெருமாள் மலை. பிரகாரச் சிற்பங்கள் அழகாக இருந்தன. அதைவிடவும் சொல்லப்பட வேண்டியது. அங்கே இருந்த கருப்புசாமி சந்நதியைதான். பெருமால் கோவிலில் விபூதி பிரசாதத்துடன் ஒரு அடி குதிரையில் ஒய்யாரமாக இருக்கிறார். எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

வியப்பு தீருவதற்குள் வைரசெட்டி பாளையத்திலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் இருந்தோம். அங்கே இருக்கும் மாசி பெரியண்ணன்தான் எங்கள் குலதெய்வம். சிலர் அவரை சிவன் ரூபம் என்கின்றார்கள். சிலர் பெருமாள் என்கின்றார்கள். சைவ வைணவ பிரட்சனையில் எங்கள் சாமியின் தலையில் நாமமும், பட்டையும் மாறி மாறி விழுந்து கொண்டிருப்பது ஒரு பெரும்கதை.

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி

சாமியை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது “தம்பி மனுசனுங்கக் கூட விளையாடலாம், தெய்வத்தோட விளையாடாதே” என்று பயமுறுத்தினார் பூசாரி. “ஐயா, பெரியசாமி உன்னை எல்லா இடங்களுக்கும் கொண்டுப் போக அருள் செய். ” என்று வேண்டிக் கொண்டு புகைப்படம் எடுத்தேன். பூசாரிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. “நீ, சொன்னா கேட்கமாட்டியா தம்பி!” என்று அதட்ட, “ங், சாமிக்கிட்ட சொல்லிட்டுதான் படம் எடுக்கறேன். நீங்க செத்த சும்மாயிருங்க” என்று நான் வாதம் செய்ய வேண்டியதாயிற்று.

அருகிலிருக்கும் கல்லாத்துக் கோம்பைக்கு சென்றோம். அது பெரியசாமிக்கென தனியாக கோவில் இருக்கும் இடம். அங்கு பெரியசாமிக்கு சைவ வைணவ பிரட்சனையோடு சாதிப் பிரட்சனையும் உண்டு. ஒருபுறம் பழைய கோவில், அங்கு பூசாரி சோழிய வெள்ளாளர். இன்னொரு புறம் புதிய கோவில் அங்கு முத்தரையர் பூசாரி. ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மறுகோவிலுக்கு செல்வதில்லை. கடவுளுக்கே இந்த நிலையா என்று நொந்து கொண்டேன்.

நாமக்கல் அருகிலிருக்கும் எட்டுகை அம்மன் கோவிலுக்கு செல்லாம் என்றேன். எட்டுகை அம்மனை கொல்லிமலையில் தரிசித்திருக்கிறேன். ஆனால் கீரம்பூரில் அத்தனை பெரிய கோவிலில் குடிகொண்டிருப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை. ஏக்கர் கணக்கில் தங்கள் குலதெய்வத்திற்கு கோவிலை அமைத்திருக்கின்றார்கள் கொங்கு வெள்ளாளர் சமூகத்தினர்.

எட்டுகை அம்மன் கோவில்

குலதெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவாகத்தான் இருக்குமென நினைத்தேன். செம்பூதத்தான் பண்ணை குலமக்கள் கோவிலில் ஓர் அறிவிப்பு பலகையை வைத்திருந்தார்கள். தங்களுடைய குழந்தைகளின் கல்விக்கு உதவும் நோக்கத்தில் அவர்களின் செயல்பாடு பிரம்மிக்க வைத்தது. என்னுடைய அப்பா அதனை பாராட்டிக் கொண்டே இருந்தார். இதனைப் பற்றியும் தனி இடுகையில்.

ஊருக்கு செல்லும் வழியில் வலையப்பட்டிக்கு சென்றோம். அங்குள்ள குன்னிமரத்தான் கோவிலுடன் எங்களுடைய முதல்நாள் பயணம் முடிவடைந்தது.

சாதிகளைக் கொண்டு கடவுளையே இப்படி பந்தாடுகின்றவர்கள் இருக்கும் அதே வேளையில் சாதிகளை இணைக்கும் தொட்டியச்சி, முத்தலாம்மன் பற்றி வரும் இடுகையில்,…

பயணம் தொடரும்,..

தடிவீரசாமி கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

திருச்செந்தூர் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) சாதியைச் சார்ந்த சிலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் செம்பாரக்குடும்பன், சந்திரக்குடும்பன், ரியக்குடும்பன் கியோர். இவர்கள் மூன்று பேரும் பள்ளர் சாதியினர் வாழ்ந்த ஏழு ஊர்களிலும் (ஏழு ஊர்கள் முருகன்குறிச்சி, முனிக்குளம், வெள்ளக்கோயில், தெப்பக்குளம், பாளையன்கோட்டை, திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை எனக் கூறுவர்) உள்ள நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்தனர். இந்த நிலங்கள் அரசுக்குச் சொந்தமானவை. இந்த மூன்று பேர்களில் தலைவராகக் கருதப்பட்டவர் செம்பாரக் குடும்பன். இவர்தான் பயிர் செய்த நிலங்களின் வருமானத்தில் ஐந்தில் இரண்டு பஙகை வரியாக அரண்மனைக்குக் கொடுத்து வந்ததார்.

ஏழு ஊர்களிலும் உள்ள குடும்பன்மார்களுக்குத் துணி வெளுக்கும் பொறுப்பை நீலவண்ணான் என்பவன் கவனித்து வந்தான். இவன் சாதியில் புரத வண்ணான். இவனது மனைவி புரதமங்கை என்ற மாட வண்ணாத்தி . இவர்கள் இரண்டு பேரும் ஏழு ஊர்களில் வாழ்ந்த பள்ளர்களின் வீட்டில் அழுக்கை வெளுத்து வாழ்ந்து வந்தனர்.

நீலவண்ணாளுக்கு முப்பத்திரண்டு வயதானது. குழந்தை பிறக்கவில்லை. ஆகவே அவள் மனம் நொந்து இருந்தாள். குழந்தைககாக நேர்ச்சை செய்தாள். தண்ணீர் பந்தல் சுமைதாங்கி எனப் பலவும் செய்து வைத்தாள். தான தருமங்கள் செய்தாள். பரதேசிகளுக்கும் பிராமணர்களுக்கம் தானம் செய்தாள். பசுவையும் பூமியையும் தானமாகக் கொடுத்தாள். குருடர்களுக்குத் தானம் செய்தாள். இப்படிப் பலவகையான தான தர்மங்கள் செய்தாள். னால் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. இதனால் மிகவும் மனம் நொந்த புரதவண்ணாத்தி பிள்ளை இல்லாதவர்கள் வீட்டில் பெரியவர்கள் சாப்பிடமாட்டார்களே என்ன செய்வேன் என நொந்தாள்.

அவள் கணவனிடம் இரந்து கேட்டாள். கணவனே என் கணவனே நான் சொல்வதைக் கேட்பாய். எனக்கு சங்கரநயினார் கோவிலுக்குப் போகவேண்டும். மாதம் ஒருமுறை சென்று தவம் இருக்கவேண்டும் என்றாள். அவனும் அதற்கு இணங்கினான். அவள் நேர்ச்சைக்குரிய மாப்பலகாரம் பொரிவிளங்காய் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அந்தக்கோவிலுக்குப் பயணமானாள்.

அவள் ஏறாங்குடிப் பட்டணம், பண்டாரகுளம், தாழவூத்து, நஞ்சான்குளம், மாவிடி, மானூரு, தேவகுளம், பனைவிடலி போன்ற இடங்களக் கடந்து விடைப் பொய்கையில் தீர்த்தமாடினாள். பின் சங்கரன்கோவில் வந்தாள். அங்கு 41 நாட்கள் தவமிருந்தாள். அப்போது அக்கோவிலில் இருந்த இறைவன் சங்கரலிங்கம் கயிலைக்குச் சென்றார். சிவனைத் தரிசித்து புரதமங்கைக்கு குழந்தை வரம் கொடுக்கவேண்டும் என்றார். சிவனோ அவளுக்கு இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அவள் வயிற்றில் நீயே குழந்தையாகப் பிறப்பாய். நீ பதினெட்டு ஆண்டுகள் உயிரோடு இருப்பாய் என வரமளித்தார்.

பின்னர் சங்கரலிங்க பகவான் சங்கரன்கோவில் வந்தார். தவமிருந்த மங்கையிடம் உனக்கு ஒரு ண் குழந்தை பிறக்கும். அதற்கு 18 ம் வயதில் ஒரு தத்து உண்டு என்றார். அவளும் மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்குச் சென்றாள். சங்கரலிங்க பகவான் வரம் கொடுத்த பத்தாம் மாதத்தில் ஒரு ண் குழந்தை பெற்றாள். அதற்கு மந்திரமூர்த்தி எனப் பெயர் கொடுத்தாள்.

மந்திரமூர்த்தி சிறுவயதில் மந்திரங்கள் படித்தான். கூடு விட்டுக்கூடு பாயும் வித்தை கற்றான். அவனுக்கு 12 வயது னது. பூதப்பாண்டியில் உள்ள சாத்தப்பிள்ளை என்னும் பெண்ணை மணந்தான். அவள் தாமிரபரணிக் கரையில் குடில் அமைத்து, வெள்ளாவிப் பானை வைத்து வெளுப்புத் தொழிலை ஒழுங்காக நடத்தி வந்தாள்.

இப்படி இருக்கும்போது நாடார் குலத்தில் பிறந்த புதியவன் என்பவன் மந்திரமூர்த்தியிடம் மந்திர வித்தைகள்படிக்க வந்தான். மந்திரமூர்த்தியும் முறைப்படியான வித்தைகளை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தான். அவனும் வித்தைகளைக் கவனமாகக் கற்றான். ஒருமுறை புதியவன் மந்திரமூர்த்தியைப் பார்த்து என்ன இருந்தாலும் நீ ஈன சாதியினன் அல்லவா எனக் கேட்டுவிட்டான். அதனால் கோபமுற்ற மந்திரமூர்த்தி என்னை அவமானப்படுத்திய உன்னைப் பழி வாங்குவேன் என்று கூறிச் சென்றான்.

திருச்செந்தூர் நகரில் செம்பாரக் குடும்பனுக்கு ஏழு ண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு இளையவளாக சோணமுத்து என்ற பெண் பிறந்தாள். அவள் பத்து வயதில் பெரிய பெண் னாள். அவள் தோழிமார்களுடன் தாமிரபரணியாற்றில் நீராடப் புறப்பட்டாள். நீராடிவிட்டுப் புதிய சேலையை உடுக்க விரும்பினாள். அதற்கு மாற்றுச் சேலை வேண்டி வண்ணாரத் துறைக்கு வந்தாள். மந்திரமூர்த்தியைக் கண்டு சேலை வேண்டும் எனக் கேட்டாள்.

மந்திரமூர்த்தி சோணமுத்துவைக் கண்டான். இவள் சுந்தரியோ இந்தரியோ என மயங்கினான். அவள் பேரில் மையல் கொண்டான். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினாள். அவளுக்கு நல்ல சேலை தருவேன் என்றான். மந்திரம் படித்த அவன் சோணமுத்துவின் உருவையும் அவன் உருவையும் சேலையில் வரைந்து மந்திரம் உரு ஏற்றி அவளிடம் கொடுத்தான்.

சோணமுத்து சேலையை உடுத்ததும் மந்திரமூர்த்தியன் பேரில் சைப்பட்டாள். அன்று இரவு யாருக்கும் தெரியாமல் வகைவகையாய் சமைத்தாள். சம்பா அரிசி எடுத்து சோறு பொங்கினாள். ட்டுக்கறி, கோழிக்கறி வைத்தாள். கருவாட்டுக் குழம்பு வைத்து ஏழடுக்குச் சட்டியில் எடுத்துக்கொண்டு மோகினி ஒருத்தி பின்தொடர மந்திரமூர்த்தியின் குடிசைக்கு வந்தாள். வகைவகையாய் அவனுக்கு உணவு பரிமாறினாள். அவன் உண்ட மிச்சத்தை அவள் உண்டாள். பின்னர் இருவரும் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொண்டார்கள். மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். இருவரும் கட்டிலில் ஒன்றாகப் படுத்தார்கள். அவளை இறுக்கமுடன் கட்டித் தழுவினான் மந்திரமூர்த்தி.

இப்படியாக யாருக்கும் தெரியாமல் மந்திரமூர்த்தியைப் பலமுறை சந்திக்க வந்தாள் சோணமுத்து. ஒருநாள் புதியவன் நாடான் மந்திரமூர்த்தியின் குடிசையை அடுத்த பனையில் ஏறிக்கொண்டிருந்தபோது சோணமுத்துவும் மந்திரமூர்த்தியும் சேர்ந்திருப்பதைப் பார்த்தான். கா மந்திரமூர்த்தியைப் பழிவாங்க இதுதான் சமயம் என்று கருதினான்.

அடுத்தநாள் புதியவன் பனை ஏறிக்கொண்டிருந்தபோது சோணமுத்துவின் சகோதரர்கள் கள் குடிக்க வந்தார்கள். அப்போது புதியவன் அண்ணே உங்க்ள தங்கயை¨ வண்ணான் மந்திரமூர்த்தி வைப்பாக வைத்திருக்கிறான் தெரியாதா? என்றான்.

சகோதரர்களுக்கு வேசம் வந்தது. புதியன் சொன்னான். நாளை உன் தங்கை சோணமுத்து சந்திக்கும்போது கையும் களவுமாகப் பிடித்துக்கொள் என்றான். குடும்பர்களும் அவன் சொன்னபடியே மந்திரமூர்த்தியின் வீட்டின் அருகே மரத்தில் மறைந்து இருந்தான். சோணமுத்து அடுக்குபானையுடன் வந்தாள். மந்திரமூர்த்தியின் வீட்டிற்குள் நுழைந்தாள். இதைக்கண்ட சகோதரர்கள் அவன் வீட்டை வளைத்தனர்.

தனக்கு பத்து வருவதைஉணர்ந்தான் மந்திரமூர்த்தி. மாரண மையை சோணமுத்துவின் நெற்றியில் தடவினான். அவள் மாயமாய் மறைந்தாள். மந்திர மூர்த்தி பூனையாக மாரினான். குடும்பர்கள் இருவரையும் காணாமல் திகைத்தார்கள். புதியவன் மந்திர மையைப் போட்டுப் பார்த்தான். அந்தப் பூனையைத் துரத்திக் கொல்லுங்கள் என்றான். குடும்பர்களும் பூனையைத் துரத்தினர். பூனை பாம்பு அரணையாக மாறியது. அதையும் துரத்தினர் குடும்பர்கள். பாம்பு அரணை பல்லியாக மாறியது. பின் பல்லியாகவும் எலியாகவும் மாறி ஒரு வைக்கோல் படைப்பில் நுழைந்தான். குடும்பர் படைப்பில் தீ வைத்தனர். எலி வெள்ளெலியாக மாறி ஒரு மடைக்குள் நுழைந்தது. குடும்பர்கள் மிளகு வைத்து கொளுத்தினர். வெள்ளெலியோ புகையாக மாறி மறைந்தது. குடும்பர்கள் அவன் இறந்துபோனான் என்று கருதி வீட்டிற்குச் சென்றனர்.

மந்திரமூர்த்தி மாயமாக வீட்டிற்கு வந்ததும் வசிய மருந்து மூலம் சோணமுத்துவைத் தன் மீண்டும் வீட்டிற்கு வரவழைத்தான். அவர்கள் சேர்ந்திருந்தார்கள். அப்போது நடுநிசி. அந்த வேளையில் கொண்டையன் கோட்டு மறவர்கள் அங்கே வந்தனர். மந்திரமூர்த்தியின் வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்தனர் வீட்டினுள் எட்டிப் பார்த்தனர். அங்கே மந்திரமூர்த்தியும் சோணமுத்துவும் சேர்ந்திருப்பதைக் கண்டனர்.

கொண்டையன் கோட்டு வீரர்கள் இந்தச் செய்தியைக் குடும்பர்களிடம் கூறினர். அவர்கள் ஊர்க்காரர்களையும் திரட்டிக்கொண்டு வந்தனர். சட்டென்று உள்ளே புகுந்து மந்திரமூர்த்தியைப் பிடித்துக் கட்டினர். ஊர்த்தலைவர் வடமலையப்ப பிள்ளையிடம் கொண்டு சென்றனர். அவர் நடந்த நிகழ்ச்சிகளை விசாரித்துவிட்டு அவனை வெட்டிவிட ணையிட்டார். காவலர்கள் மந்திரமூர்த்தியக் காட்டுக்கு அழைத்துச் சென்று வடதிசை நோக்கி நிறுத்தினர். வாளால் வெட்டினர். னால் அவன் சாகவில்லை. அப்போது மந்திரமூர்த்தி என் உடலில் ஒரு மந்திரக்குளிகை உள்ளது. அது இருக்கும்மட்டும் நான் சாகமாட்டேன். நானே அதை எடுத்துத் தருகிறேன் என்று கூறியபடி அந்த குளிகையை எடுத்துத் தந்தான்.

இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு சாத்தப்பிள்ளையும் சோணமுத்துவும் அழுதபடி ஓடி வந்தனர். அவன் உடல் கிடந்த இடத்தில் தங்களை மாய்த்துக்கொண்டனர். இறந்துபோன மந்திரமூர்த்தி நடுநிசியில் வியாக புதியவனின் வீட்டிற்கு வந்து அவனைக் கொன்றான். பின் ஏழு ஊரிலும் ரவாரம் செய்தான். குடும்பர்கள் மந்திரமூர்த்திக்கு கோவில் எடுத்து தடிவீரய்யன் எனப் பெயர்கொடுத்து வழிபட்டனர்.