கதைகளும் நானும் – மழலை ஞாபகங்கள் ன் தொடர்ச்சி,..
சிறுவர் மலரில் தொடங்கிய என் வாசிப்பனுவபம் வாரமலர், குமுதம், ஆனந்தவிகடன் என சிற்றிதழ்களாக நீண்டது. சிற்றிதழ் கதைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொஞ்சம் சிற்றின்பமும் இணைந்தன. மலரின் வாசனையில் மதிமயங்கிய வண்டென மனம் தள்ளாடின. அதன் புரிதலை நோக்கிய பயணத்தில் புராணக் கதைகளில் கூட இதுவரை தெரிந்த கதைகளிலேயே சில சம்பவங்கள் உடன் சேரத் தொடங்கின. பாஞ்சாலிக்கு ஐந்து கணவன்கள், தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள், இராமனின் மனைவிக்கு இராவணன் ஆசை கொண்டது என கதைகளின் அடிநாதம் காமமாக இருந்தது.
உடலுறவு என்பதை வெறுத்தோ, குழந்தைகளுக்கு சொல்ல மறுத்தோ புராண, இதிகாசங்களில் ஒரு நகைப்புக்குறிய விசயத்தினை செய்திருப்பார்கள். குமரன் சிவ நெற்றி பொறியில் இருந்து பிறந்தான், வினாயகன் சக்தியின் அழுக்கில் இருந்து பிறந்தான், ஐயப்பனை மன்னன் கண்டெடுத்தான் என்று கதையளந்திருப்பார்கள். மகாபாரதத்தில் பாண்டு இறந்தபிறகு குந்திக்கு ஐந்து மகன்கள் பிறந்தன என்றும், ஒவ்வொருவரின் தந்தையும் எமன்(தர்மனின் தந்தை), வாயு(பீமனின் தந்தை), இந்திரன்(அர்ஜூன்னின் தந்தை), அஸ்வினி தேவர்கள்(நகுலன்,சகாதேவனின் தந்தை) என்று சொன்னவர்கள். மந்திரத்தால் பிறந்தவர்களாக சுட்டியிருப்பார்கள். அதனால்தான் கண்ணனும், இயேசுவும் கன்னித்தாய்க்கு பிறந்தவர்களாக மாற்றியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
நல்லவேளை சிற்பிகளும் அவ்வாறு நினைக்காததால் பாலியல் கல்வி கோயில் சிற்பங்களாக இருந்துவந்துள்ளன. அம்மையும் அப்பனும் சொல்லிதர தயங்கும் சங்கதிகளெல்லாம் சப்தமின்றி அங்கிருந்தன. கோயிலே கதியென இருந்த அந்தகால மக்களுக்கு இதெல்லாம் சாத்தியப்பட்டு இருந்திருக்கலாம். கருவறை மட்டுமே பிரதானமாக மாறியிருக்கும் இந்த காலத்தில் நிச்சயம் கோவில்சிற்பங்களால் பலனில்லை. காரைக்கால் அருகே இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் 500 ரூபாய் தரிசன நபர்கள் மட்டுமே ராஜகோபுரம் வழியாக நுழைய முடியும். விழாக்காலங்களில் வாசலில் ஆரமிக்கும் இரும்பு தடுப்புகள், சனீஸ்வரை நமக்கு காட்டிவிட்டு மறுபடியும் வாசலுக்கே கொண்டுவந்து விட்டுவிடும். பிறகு எங்கிருந்து கோயில் சிற்பங்களை கண்டுகளிப்பதெல்லாம்.
ஒவ்வொரு ஆணின் பருவ வயது ஒரு சிக்கலான நூல்கண்டினைப் போன்றது. அதன் சிக்கல்களை நீக்க முடியாமல் நூல் முழுவதையும் வீணாக்கிவிடுகின்றதைப் போல வாழ்க்கையை வீணடித்த ஆண்களே இங்கு அதிகம். வெகுசிலரே அதன் சிக்கல்களை புரிந்துகொண்டு வாழ்கின்றார்கள். இந்த சமூகத்தின் கட்டமைப்பில் ஆண்களின் நிலையை விட பெண்ணின் நிலை மிகவும் தெளிவானதாக இருக்கிறது. அவளுக்கு அன்னை, பாட்டி என எல்லோரும் உதவி செய்ய காத்திருக்கின்றார்கள். போதாக்குறைக்கு சமூலநல இயக்கங்களும் உடனிருக்கின்றன. ஆனால் ஆணின் அருகில் வரக் கூட தகப்பன்மார்கள் விரும்புவதில்லை. சமூகமும் அதன் பொறுப்புணர்வில்லாமல் ஊமையாக இருந்துவிடுகிறது. அதனால் முட்டிமோதி பருவத்தினைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்படுகிறது.
என் சகவயது தோழர்களும் ஏறக்குறைய இதே நிலையில்தான் இருந்தார்கள். அவர்களிடமும் பல கேள்விகள் இருந்தன, விடையின்றி. எங்கிருந்து இதற்காக விடைபெறுவது. இணையம் அறிமுகம் இல்லா காலம் என்பதால் ஒரே உபாயம் புத்தகம் மட்டுமே. அறிமுகமானது குறுநாவல் படிக்கும் வழக்கம். ஒரு கதாநாயகன் கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதிலிருந்து கதை ஆரமிக்கிறது. அவன் அவளுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நேரம்கால கணக்கின்றி அவளை அனுபவிப்பதிலேயே குறியாக இருக்கிறான். அவள் அன்னையிடம் புகார் கூறும் போது, அன்னை அதை அலட்சியம் செய்கிறாள். இப்படி போகின்ற கதையின் இறுதியில் அவளின் தகப்பன் இறந்ததை கூட மறைத்து இரவு முழுதும் அவளுடன் கழித்துவிட்டு காலையில் சொல்கிறான். அதனால் கோபம் கொண்டு அவள் வெளியேறுவதாக முடிகிறது கதை. எது புரிந்த்தோ இல்லையோ, இவ்வகை கதைகளை படிப்பதால் கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று நன்கு புரிந்தது.
ஆனாலும் பருவக் கதைகள் சகதோழர்களிடம் ஏகம் இருந்தன. வழிவழியாக நாடோடிப் பாடல்களைப் போல கடத்தப்பட்டுவந்த அது, இன்னமும் வரிவடிவம் பெறாமல் இருக்கின்றன. சில எழுத்தாளர்கள் சுஜாதா, கி.ராஜநாராயணன் போல துணிந்து எழுதினாலும் அதெல்லாம் முதல் மழைதுளி போன்றதே. இன்றும் கடலளவு கதைகள் காற்றோடு காற்றாய் பரிமாறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. தேர்ந்த எழுத்தாளர்களால் எழுத்துருவம் பெறும் கதைகள் திரிதலுக்கும் உட்படுகின்றன. நாட்டார் பாடல்கள் போல அப்படியே ஆவணம் செய்தல் கடினமே. மூன்றாம் தர எழுத்தாளர்களால் எழுதப்படும் கதைகளில் நான் மேலே கூறிய எதையும் நீங்கள் பெற முடியாது. காமத்தினை காசாக்க நினைப்பவர்களின் கதையில் சதை வர்ணனை தவிற ஏதையும் எதிர்பார்க்க முடியாது. 13+, 18+ என வயதுவரையரை செய்தாலும் கதைகளுக்கு வயதில்லை.
இதில் ரசனை மிகுந்த நகைச்சுவை கதைகளும் ஏராளம். விடுதியின் ஞாயிறுகளில் மேடைமீதேறி ஒவ்வொருவராய் கதை பகிர்ந்திருக்கிறோம். மண்குடம் கதை சொல்லி நான் அமர்ந்த பிறகு அரங்கேறிய கதைகளால் விடுதியறை வெட்கம் கொண்டிருக்கும். குபீர் சிரிப்பலைகளை அடக்கி விடுதி கண்காணிப்பாளரிடமிருந்து தப்பிய அனுபவங்களை எத்தனை தோழர்கள் பகிர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதே கேள்விக் குறிதான். இறுக்கமாக இருக்கும் நம் சமூகத்திலேயே இத்தனை கதைகள் புழங்குகையில், வெளிநாடுகளில் எளிமையான காமிக்ஸ் வரை சென்றது வியப்புகுறியதல்ல.
பாலுறுப்புகளின் அமைப்பினையும், செயல்பாட்டினையும் பள்ளி பாடபுத்தகம் கற்றுக் கொடுத்தாலும், வாழ்வியல் சந்தேகங்களை அவைகள் கண்டுகொள்வதில்லை. காமகதைகளும் உதவாது என்றானபோது, ஏன்?ஏதற்கு?எப்படி? என்பதில் வாசகர் சுயஇன்பம் பற்றி கேட்ட கேள்விக்கு சுஜாதா விடை எழுதியிருந்தார். எதார்த்த உண்மையானது கதையில் வருவது போல கற்பனையல்ல என்று உணர்ந்த போது, நாராயணரெட்டி, ஷாலினி போன்ற மருத்துவர்களின் நூல்கள் கிடைக்க தொடங்கின. இதெல்லாம் இணையமென்ற பரந்தவெளி அறிமுகமி்ல்லா காலத்தில் நிகழந்த ஒரு விடலை வாழ்வியல் நிகழ்வுகள். இப்போதிருக்கும் விடலைகளுக்கு இதைவிட அதிக கதைகள் கிடைத்திருக்கலாம், இல்லை கிடைக்கப்பெறாமல் கூட போயிருக்கலாம். கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள் என்று சொல்லமுடியாத போது என்ன கவலை?
பி.கு –
விரசமின்றி எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இருப்பினும் விரும்பாதவர்கள் பொருட்செய்யாதீர்கள்.