நண்பர் மனோ மின்னஞ்சலில் அனுப்பிய சுடலை ஆண்டவரின் கதையின் தொடர்ச்சி இது.
சுடலை ஆண்டவர் கதை – 1
இனிமே இந்த அம்மாளிடம் அடங்கி போனால்தான் காரியம் நடக்கும் என்று எண்ணிய சுடலை, அம்மா நான் கேட்பதற்குரிய பலியை நீ கொடுக்க மறுத்தாலும், வெள்ளியும் செவ்வாயும் எனக்கு விடுமுறை கொடு, எனக்கு வேண்டிய உணவுகளை நான் மயானத்தில் சென்று தின்று வயிறை நிறைத்து கொள்வேன் என்றார் சுடலை. அதற்க்கு அம்மாளும் சரியென்று சம்மதித்தார். அன்றையிலிருந்து சுடலை வெள்ளியும் செவ்வாயும் மயான வேட்டை ஆடிவருவது வழக்கம். நாட்கள் கடக்கிறது.
அதே சமயம், அதே அந்த மலையாளத்தில், நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, அந்த காலத்தில் 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வந்தார்கள். இந்த புலையன்மார்களுக்கு எல்லாம் ஒரு தலைவன், அவன் பெயர் காளிப்புலையன். இவர்களின் தொழில் மாந்திரீக தொழில். அதுவும் சாதாரணப்பட்ட மாந்திரீகம் அல்ல, அந்த புலையன்கள், வானத்தையே வில்லாக வளைத்திடுவார்கள், மணலிலேயே கயிறு திரித்திடுவார்கள், அவர்கள் உரலுக்குள் மையை வைத்து அதை இந்த உலகமெல்லாம் சுற்ற விடுவார்கள், அது உலகமெல்லாம் சுற்றி வீட்டுக்கு வரும், அம்மிக்குள் மையை வைத்து அதை இந்த அகிலமெல்லாம் பறக்க வைப்பார்கள், அது அகிலமெல்லாம் பறந்து வீட்டுக்கு வரும், சுளவு தட்டியையும் தொண்ணூறு காதவெளிக்கு பரக்கவிடுவார்கள், அது ஒற்று பார்த்து வரும், கரையாத பொருட்களையும் கரைக்க வல்லவர்கள், கனத்த உருக்களையும் அளிக்க வல்லவர்கள். இந்த மந்திரவாதி காளிப்புலையனின் மனைவி காளிப்புலச்சி.
இரண்டுபேருக்கும் வெகு நாளாக குழந்தை இல்லாது போக, அவன் மனைவி காளிப்புலச்சி, நந்தன் புனலூரில் ஒரு பாதாள கண்டி ஈஸ்வரி என்ற ஒரு அம்மன் கோவில், அங்கு பொய் 48 நாள் ஒரு மண்டல காலம் விரதம் இருந்தாள். ஒரு காகமானது அக்கிரகாரதிலே, அவ்வையார் விரதமிருந்த ஒரு ஆச்சி வீட்டிலிருந்து ஒரு மா கொளுகட்டையை கொண்டுவந்து, கரமேந்தி தவசிருந்த காளிப்புலச்சி கையில் போட்டது, கோவிலில் கிடைத்தால் பிரசாதமாக நினைத்து அதை எடுத்து உண்டாள் காளிப்புலச்சி. அன்று முதல் அவள் கருவுற்று பத்தாவது மாதம் பெண் குழந்தை பிறந்தது. தவமிருந்து கிடைத்த குழந்தை ஆதலால் சந்தொசமுற்ற காளிப்புலையன், ஊர்மெச்ச விழா எடுத்து கொண்டாடினான், அவனுக்கு குலதெய்வம் இசக்கி. மாப்பிண்டதிலே அவதாரம் ஆனதால், இரண்டயும் இணைத்து மாவிசக்கி என்று குழந்தைக்கு பெயர் நாமம் சூட்டினான். அந்த குழந்தை இனிதே வாளர்ந்தது. ஐந்து வயதிலிருந்து அறிய கலைகளை படிக்கவைதான். பதிமூன்றாம் வயதிலே பருவமடைந்தாள் மாவிசக்கி. அவள் அழகை உவமானம் சொல்ல யாராலும் முடியாது. ஊரே மயங்கும் பேரழகு, மகளை பார்த்த காளிப்புலையன் யோசித்தான், நம் மகளின் அழகுக்கு நிகரான நகைகள் பூட்டி அவளை அலங்காரம் செய்ய ஆசைப்பட்டான், ஆனால், அவன் நியாயமான முறையிலே ஆசைப்பட வில்லை, அவனது மாந்திரீக புத்தி, அவனை கெடு வழியில் செல்ல தூண்டியது,
அஞ்சணமை என்று ஒரு மை, அதை கண்ணில் இட்டால் பூமியிலிருக்கும் புதையல் கூட புலப்ப்படுமாம். அந்த அஞ்சணமையை எடுத்து வெற்றிலையில் தடவி பார்க்கிறான், அங்கே, கொட்டாரக்கரை, பகவதி வாசல், தெற்குமேட்டுகலுங்கு, திருவாத்தி மூட்டுக்குள்ளே ஏழு அண்டா திரவியம் அசையாமல் இருக்ககிறது. அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் சுடலை மயான வேட்டைக்கு சென்று விட்டார். இதுதான் நல்ல தருணம், அந்த திரவியத்தை களவெடுத்து, வந்து மகளுக்கு நல்ல அணிகலன்கள் செய்ய வேண்டும் என்று மாந்த்ரீக சாலத்தோடு பெரும்புலையன் கிளம்புகிறான். மாந்த்ரீக வேலையோடு கொட்டாரக்கரை பகவதி வாசல் வந்து, ஏழு அண்டா திரவியத்தில், ஒரு அண்டாவை பெரும் புலையன் கொள்ளை போட்டு வீட்டுக்கு வந்தான்.
மயானம் போன சுடலை கலுங்குக்கு வந்தார், ஏழு அண்டா திரவியத்தில் ஒரு அண்டா காலியாக இருக்க கண்டார். பகவதியிடம் வந்தார் சுடலை, அம்மா நான் காவல் காத்த திரவியத்தை எவனோ களவெடுத்து சென்றுவிட்டான், யார் அவன், அவன் திசையை சொல்லு என்று கேட்டார் மாயாண்டி சுடலை. அதற்கு அம்மாள் சொன்னாள், மகனே திரவியம் போனாலும் போகட்டும், அவனை பற்றி கேளாதே என்றார். ஏனென்றால் அவன் காலனை விட கொடியவன், கொடிய பாவி அவன், மகனே, நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வருகிறார்கள், அந்த புலையன்மார்களுக்கு எல்லாம் அவனே தலைவன், நமது திரவியத்தை களவெடுத்ததும் அவனே என்றாள் அம்மை. மேலும், பாம்பு கடித்து இறந்தார்கள் என்று யாரும் கண்டதே கிடையாது அவன் வாழும் தெருவிலே, தேள் கொட்டி அழுதவர்கள் அங்கு யாரும் இல்லை, அவர்களை எதிர்த்து சென்றவர்கள் திரும்பி வந்த சரித்திரமே இல்லை, அவளவு கொடிய மாந்திரவாதிகள் இருக்குமிடம், ஆகவே நீ போனால் உன்னையும் பிடித்து அடைத்து விடுவான், ஆகவே போக வேண்டாம் மகனே, போனது போகட்டும், நீ உள்ளே இரு என்றார் அம்மை. சுடலை கேட்கவில்லை, அம்மா, என்னுடைய காவலிலிருந்து ஒருவன் களவெடுத்து சென்ற பிறகும் நான் ஏனென்று கேட்க்காது இருப்பது முறையா. நீ ஒரு வார்த்தை சொல்லு. மகனே சுடலை சென்று வா, வென்று வா என்று ஒரு முறை ஆசி கொடுத்து அனுப்பு, வென்று வருகிறேன். எப்படி தெரியுமா ?
கொள்ளை கொண்டு சென்றவனை கொடியருத்து வாறேனம்மா, களவெடுத்து சென்றவனை கருவறுத்து வாறேனம்மா, மங்கவாய் வாயதிலே மண்ணள்ளி போட்டுவாரேன் எனக்கூறி, பலி வேகம் கொண்டு கொடும் சப்தமிட்டார். எல்லாம் கவனித்த அம்மாள் பார்த்தாள், இனி இவனை அடக்க முடியாது என்று உணர்ந்து, சென்று வா மகனே சென்று வா, புலையனை வென்று வா மகனே வென்று வா என்று வாழ்த்தி நல்ல விடை கொடுத்து, மந்திரித்த வல்லயத்தையும் கொடுத்து, திருநீறையும் கொடுத்து, சுடலையை, பகவதி அம்மையே அனுப்பி வைத்தாள்.
அங்கிருந்து வீர விகார வேசத்தோடு வந்த சுடலை அவன் வீடு நெருங்கியதும், யோசித்தார், இதற்கு அந்தப்புறம் நாம் இந்த சொருபத்தோடு செல்ல கூடாது. அந்த திருட்டு பயலை வேசம் போட்டுத்தான் மோசம பண்ணவேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் படியே ஒரு பாம்பாட்டி சித்தன் உருவம்பூண்டு, மகுடி எடுத்து ஊதினார், ஏகப்பட்ட பாம்புகள் வந்து கூடியது. அந்த ஆயிரம் பாம்பு கூட்டத்தில் ஒரு நாக பாம்பையும் ஒரு நல்ல பாம்பையும் பிடித்தார். பல தலை உடையதை நாகமென்றும், ஒரு தலை உடையததை நல்ல பாம்பு என்றும் சொல்வர். அந்த இரண்டு பாம்புகளையும் ஒரு கூடையில் அடைத்து, கூடையை தலை மேல் வைத்து, புலையர்களின் உயிரை கவரக்கூடிய ஒரு கூற்றுவனைபோல சுவாமி நடந்து வருகிறார். அப்படியே நான்கு சாலியர் தெருவை அடைந்த ஸ்வாமிகள், இங்குதான் பாம்பு வித்தை காட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படியே பாம்புகளை வெளியே எடுத்து , ஆட விட்டு பல கொடிய வேடிக்கைகளை செய்கிறார், அந்த வேடிக்கைகளை புலையன்மார்கள் பலர் வந்து பார்த்தாலும் காளிப்புலையன் வீட்டிலிருந்து எவரும் வரவில்லை. பார்த்தார் சுவாமி, வேடிக்கை காட்டுவது இப்போது முக்கியமில்லை, காளிப்புலையன் வரவில்லை என்றால் என்ன, நாமே அவன் இடத்திற்கு செல்வோம் என நினைத்த சுவாமிசுடலை, அந்த உருவை மாற்றி, ஒரு வயதான கிழவனைப்போல உருவெடுத்தார், அந்த உருவமானது, பழுத்த உடல் வெளுத்த தலையுமாகவும், உடலில் வெடித்த வெள்ளரி பழம் போன்ற வரிகளும், அந்த வரிகளில் வெள்ளி ஊசி போன்ற புழுக்களும் நெளிய, ஒரு வெறுக்கும் படியான உருவத்துடனும், காவி உடையோடு கழுத்திலே உத்திராட்சம், நெற்றியிலே விபூதி, ஒரு கையில் ஊன்றுகோல், மறு கையிலே திருவோடுமாக, தள்ளாடி தள்ளாடி, நடை நடந்து சுவாமி அந்த மாந்திரவாதியின் வீட்டு வடக்கு வாசலில் வந்து நின்றார்.
மாந்திரவாதி காளிப்புலையன் வீட்டில், அங்கு ஏழு அறைக்குள்ளே காளிப்புலையன் மகள் மாவிசக்கி தோளியர்களுடன் தன்னை தானே அலங்காரம் செய்து, அங்கு ஆடலும் பாடலுமாக மகிழ்ந்து கொண்டிருந்தாள். தாயும் தந்தையும் வெளியே சென்றிருந்தனர். உடனே சுவாமி வடக்கு வாசலில் நின்று பிச்சை கேட்பதுபோல, வீட்டில் யாரம்மா இருப்பது, ஒரு ஏழை ஆண்டி வந்திருக்கிறேன், கொஞ்சம் அன்னம் தாருங்கள் என்றார். அவளோ, யாசகம் கேட்பது சிவனடியார் என்று நினைத்து கையிலே கொஞ்சம் திணையை அள்ளிக்கொண்டு வந்தாள் மாவிசக்கி. இவள் வடக்கு வாசலில் வந்தால் சுவாமி தெற்கு வாசலில் நின்று, மீண்டும், அடியே பிட்சை போடு என்பார். மாவிசக்கி அங்கு சென்றால் உடனே அடுத்த வாசலுக்கு செல்வார். இப்படியே அவளை அலைக்கழித்தார். இதனால் கோபமடைந்த மாவிசக்கி சுடலையை பார்த்து, அடேய் கிளட்டுப்பயலே, மரியாதையாக தருவதை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு ஓடிவிடு என்று சத்தமிட, வந்தார் சுடலை, பெண்ணே நான் பிச்சைக்காக வந்தேன் என்று நினைத்தாயா, இல்லை, உனது அப்பனுக்கும் எனக்கும் ஒரு கணக்கிருக்கிறது, அதை முடிக்கவே நான் வந்தேன் என்று கூறி, மாரியாதை குறைவாக பேசினால் உன்னையும் இல்லாது அளித்திடுவேன் என்றார். அத்துடன், உன்னிடம் பேசி பேசி நாவறண்டு போனது கொஞ்சம் தண்ணீர் கொடு என்றார். அதற்க்கு மாவிசக்கி, அடேய் கிழவா நான் யாரென்று அறியாது பேசுகிறாய், அத்துடன், உனக்கு தர தண்ணீரும் இங்கு இல்லை, உனக்கு தண்ணீர் தரும்படியான இழிவான ஆட்களும் இங்கு இல்லை என்று அகங்காரமாக சொன்னாள். உடனே செஞ்சுடலை அவளை பார்த்து, அடி மாவிச்க்கி, உன் அப்பனுக்கு பசும பாலை கறந்து கொண்டு வந்து அலமாரியில் வைத்திருக்கிறாய், என்னிடமோ உனக்கு தர ஒன்றுமில்லை என்கிறாய், அது போக என்னை மிக இழிவாக பேசிவிட்டாய். கள்வனுக்கு பிறந்த நீயே இழிவானவள். ஆகவே இன்னும் எட்டு நாட்களுக்குள் உன்னை கன்னிகழித்து உன் அகங்காரத்தை அழித்து, அத்துடன், உன்னையும் உனது அப்பனையும் அவன் குடியையும் கருவறுத்து அளிப்பேன், இது தவறினால், நான் மயானத்தில் உருவெடுத்து கைலாசத்தில் வளரவும் இல்லை, என் தாய் பார்வதி தேவியாம் பேச்சியும் இல்லை, என்பெயர் சுடலையும் இல்லை என்று மார்தட்டி சபதம் வைத்த மாயாண்டி சுடலை மாயமாக மறைந்துவிட்டார்.
மாலை நேரம் சென்றதும் காளிப்புலையன் வீட்டிற்கு வந்தான். நடந்தது அனைத்தையும் சொன்னாள் மாவிசக்கி. அப்படியா என்வீட்டிலே வந்து ஒருவன் கருவருப்பானா, பார்கிறேன் நான் என்று கூறிய காளிப்புலையன், மை போட்டு பார்க்கிறான், சுடலை என்று அறிந்தான். திரவியதிற்கு காவல்காரன் வீடு தேடி வந்து விட்டான் இனி நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று புரிந்துகொண்ட காளிப்புலையன் காவலும் கட்டுமாக இருக்க, அதே அந்த மலையாளத்திலே ஆலடிப்புதூரிலே பளியன்மார்கள் எல்லாம் கூட்டு பங்காளியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் காக்காச்சி மலை தாண்டி கண்ணாடி சோலைக்குள்ளே, அக்காலத்திய முறைப்படி விவசாயம் செய்தார்கள். செய்த விவசாயம் அங்கே பயிரில் பலன் பிடிக்கும் நேரம். அதே நேரத்தில் சுடலை தான் போட்ட சபதத்தை முடிக்கவேண்டும் என்று, எட்டாம் நாள் சாமம், அந்த புலையனின் கோட்டைக்கு வந்தார். அங்கு ஏழு அறைக்குள்ளே எரும்ம்பு ரூபம் எடுத்து மாவிச்க்கியின் அறைக்குள்ளே நுழைந்து, மாவிசக்கியாளை கொண்ட கணவனைப்போல கூடவே படுத்திருந்து கற்பழித்தார், கற்பழித்து முடிந்ததும் வெளிப்பட்டார் சுடலை. அடுத்து நேராக, காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே மத யானை போல நுழைந்து அனைத்து பயிர்களையும் அடி முதல் வேர்வரை சர்வநாசம் செய்து அனைத்தயும் அழித்தார். அழித்துவிட்டு அப்படியே கொட்டாரக்கரை பகவதி வாசலுக்கு வந்தார்.
பளியன்மார்கள் மறுநாள் விவசாயத்தை பார்க்க வந்தார்கள். சோலையே அழிந்து போனது கண்டு திகைத்தவர்கள் புலையனிடம் ஓடிவந்தார்கள், நடந்ததை தெரிந்துகொண்ட புலையன், காரணம் கண்டுபிடிக்க மையிட்டு பார்த்தான், அங்கேயும் ஆடியது சுடலைதான் என்பதை கண்ண்டான். உடனே சுடலையை அடக்க என்ன வழி என்று அவனது மாந்திர சக்திவளியாக ஆராய்ந்து பார்க்கிறான். அவனது மாந்திர குறி சுடலை கேட்பதை கொடுத்தால் அவரை அடக்கலாம் என்று சொல்கிறது, சுடலையை அடக்கி அடைக்கவில்லை என்றால் பெரும் இழப்புக்கள் நேரும், ஆகையால், எப்படியாவது சுடலை கேட்பதை கொடுத்து அவரை அடக்கி நிலை கட்டநினைத்தான் புலையன். ஆகையால், மீண்டும் வெற்றிலையில் மை போட்டு சுடலையை அழைக்கிறான். மையில் சுடலைவந்தார். ஏய் கீழ் நெறி புலையனே, என்னை இப்போதுதான் அறிந்தாயா, நீ இல்லாததால், உன் மகளை கற்பழித்து, உன்னுடைய சோலை நடுவங்களையும் அளித்தது நான்தான், அடுத்து உன்னையும் அளிப்பேன் என்று வெறி கொண்டு சொன்னார். சுடலையின் சக்தி அறிந்து பயந்து போன புலையன், சுடலை எதை கேட்டாலும் அதைகொடுத்து அவரை எப்படியாவது அடக்க நினைத்து, என்ன நீ கேட்டாலும் தருகிறேன், உன் கோபம தீர நான் என்ன தரவேண்டும், எதை கேட்டாலும் தருகிறேன் என்றான். அதற்க்கு சுடலை, நீ யாருக்காக எனது கட்டு காவலை மீறி எனது அம்மையின் திரவியத்தை களவெடுத்தாயோ, அந்த மாவிசக்கியை கருவோடு கொடிபுடுங்கி எனக்கு காபூசை கொடுத்தால் உன் கட்டுக்குள் அகப்படுவேன், இல்லையென்றால் அடுத்து உன்னையும் அழிதிடுவேன் என்றார்.
எப்படியோ தான் தப்பினால் போதும் என்று எண்ணிய சிறு குணத்தான் புலையனவன், மாவிசக்கியை, அந்த காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே கொண்டு வைத்துக்கொண்டு, ஏழு பரண் போட்டு, ஏழுவிதமான பலிகளை கொடுத்தான். சுடலையோ, டேய் புலையனே சொன்னது போல உன் மகளை பழிபோட்டு கொடு இல்லையென்றால், நீ நினைத்தது நடக்காது என்று கர்ஜிக்க, தான் பெற்ற மகளென்றும் பாராமல் அந்த சண்டாளப்பாவி புலையன், சூல்கொண்ட ஒரு பசுவை கிடதுவதுபோல பரணின்மேல் கிடத்தி, கை கால்களை கட்டி, அவளது வயிற்றை கிழிக்க ஆயுதத்தை கையில் எடுத்தான்.
அப்போதுதான் தான் சாகப்போகிறோம் என்று மாவிச்க்கிக்கு தெரிந்தது. அட சண்டாளப்பாவி புலையனே, அருமை பெருமையாக வளர்த்து, எங்கோகண்ட பேய் படைக்கோ என்னை பலிகொடுக்க வந்துவிட்டாயே என்று அளுத்து புலம்பி பதறினாள். அவளின் பதரலை பார்த்த சுடலை, யாரும் அறியாது நொடி வேளையில் அவளின் மனதிற்குள் புகுந்து, பெண்ணே நீ முற்பிறவியில் செய்த பலன் படி இந்த கள்வனுக்கு மகளானாய், பெற்றோர் செய்யும் தவறுகளுக்கு பிள்ளைகளும் பதில் சொல்லவேண்டும், என் அம்மையின் பொருளென்று அறிந்தும் நீ அதை அனுபவிக்க துணிந்தாய், அதனால் இப்பிறவியிலும் தவரிளைத்தாய், ஆகவே எனது சட்டப்படி இவைகளுக்கு நான் வழங்கும் கூலி இதுவே என, நெறி புரிவித்து அதே நொடியில் வெளி வந்தார்.
வெளிவந்த சுடலை, டேய் வேளை தவறுகிறது என்று ஓங்கார சப்தமிட, தான் தப்பினால் போதும் என்று எண்ணிய புலையன், தான் பெற்ற மகளென்றும் பாராமல் மாவிசக்கியின் வயிற்றை கிழித்து, மாவோடு கருவோடு பிள்ளையை பிடுங்கி, தலைவாழை இலையில் வைத்து சுடலைக்கு வாரிக்கொடுத்தான். அதை ஏற்ற சுடலை அவன் சொல்லுக்கு கட்டுப்படுவது போல் அவன் சிமிளுக்குள்ளே நுழைந்தார். புலையன் சுடலையை சிமிழோடு ஒரு தாமிர தூருக்குள்ளே வைத்து குளத்திற்குள் புதைத்தான். அடுத்து அதே குளத்திற்கு புலையனின் மனைவி தண்ணீர் எடுக்க வந்தாள். தூரை வெடித்து சிமிழோடு வெளியான சுடலை புலையனின் மனைவியின் தண்ணீர் குடத்தினுள் சிமிளாக புகுந்து கொண்டார். குடம் வீட்டுக்குள் வந்ததும் குடத்திலிருந்து துள்ளி சிமிளாக வந்து அருகிலிருந்த புலையனின் இடது கால் தொடையில் அமர்ந்து கொண்ண்டார். பயந்து போன புலையன், இவன் நம்மை இன்னும் விட வில்லையே என்று நினைத்து, சிமிளை உரலில் இட்டு இரும்பு உலக்கையால் இடித்தான், சிமிழ் உடைந்து வெளிப்பட்ட தேரடிமாடன் மாயாண்டி சுடலை, வல்லயமும் தடியோடு வீர வேக உருவோடு நின்று, அந்த புலையனை ஒரே அடியாக அடித்து ஊட்டியை முறித்து உதிரத்தை குடித்து அவனை அளித்து, அவனது மனைவி காளிப்புலைச்சியையும் அளித்து, அந்த திரவியத்தை எடுத்து, பழையபடி கொட்டாரக்கரை, பகவதி வாசலுக்கு கொண்டு வந்து பகவதி அம்மையிடம் ஒப்படைத்தார்.
அம்மையிடம் ஆசிவாங்கி, மீண்டும் நம் நாட்டிலுள்ள எல்லா தீர்த்தங்களும் ஆடி, 1008 சிவ ஸ்தலங்கள், 108 திருப்பதிகளையும் மாயாண்டி சுடலை வணங்கி, எல்லா தெய்வங்களையும் தொழுத சுவாமி மாயாண்டி சுடலை ஆண்டவர், மீண்டும் தென்னாடு வந்து தென்நாட்டில் குற்றாலம் வழியாக சீவலப்பேரிக்கு வந்து சீவலப்பேரி சுடலையாக குடி கொண்டார். அங்கிருந்து பிடி மண் மூலம், வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவராகவும், ஆறுமுகமங்கலத்தில் ஆறுமுகமங்கல சுடலையாகவும், மற்றும் தென் நாடு முழுக்க பல இடங்களில் சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து வீற்றிருந்து இன்று தன் ஆட்சியை நடத்தி வருகிறார். தன்னை நம்பிவரும் பக்தர்களுக்கு நல்லருள் அருள் பாலிக்கிறார்.
நல்லோர் மனதை நடுங்க செய்பவர்கள், நட்டாற்றில் கையை நழுவ விடுபவர்கள், வரவுபோக்கிற்கு வழி அடைப்பவர்கள், வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள், கற்பு வழி நிற்கும் கன்னியரை அழிப்பவர்கள், பொது சொத்தை கொள்ளை அடிப்பவர்கள், பதவியை பயன்படுத்தி பகட்டு வேஷம் போடுபவர்கள் இன்னும் பல ஆயிரமாயிரம் நரித்தனம் செய்யும் நயவஞ்சக மனிதர்களை கழுவேற்றி காவுகொள்கிறார். கண்ணீருடன் சுடலையிடம் முறையிடுவர்களுக்காக இன்றும் துரோகிகளை பழிதீர்த்து நல்லவர்களை காப்பாற்றி வருகிறார். சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களின் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும். தனக்கு ஓர் துயர் நேர்ந்துவிட்டது என்று கண்ணீருடன் எந்த அப்பாவியும் முறையிட்டால் சுடலை சும்மா விடமாட்டார் என்பது வெறும் கதையல்ல ரத்தவரிகளால் எழுதப்பட்ட சரித்திரமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. சுடலை ஆண்டவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டு மென்றாலும் பூஜை செய்யலாம். அந்தணர்கள் உட்பட அனைத்து ஜாதியிலும் பூசாரிகள் உண்டு. பொதுவாக சுடலை நயவஞ்சகரை அழிப்பவராகவும் பொய் சத்யவாதியை வதைப்பவராகவும். தீய மந்திர சக்திகளை ஒழிப்பவராகவும் இருக்கிறார், பல எதிரிகளுக்கு ஆட்பட்டு வாழ்க்கையில் துயரப்படுபவர்கள் சுடலையை வணங்கினால் சத்ருகள் நாசமடைந்து சந்தோஷமான வாழ்வை பெறுவார்கள்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...