ஒரு புறம் தேவைகள் இன்றி குவிந்து கிடக்கும். மறுபுறம் தேவைகள் இருந்தும் ஒன்று கூட இருக்காது. பெரும்பாலும் பணம் பற்றி கூறப்படும், இந்த வாசகம், ஏனோ எல்லாவளங்களுக்கும் பொருந்திப் போகிறது. “அந்த சனியன் இந்த தடவையும் பொண்ணையே பெத்து தொலைச்சுட்டா சார்” என்று சலித்துக் கொள்ளும் சுப்புவுக்கும், “போகாத இடமில்ல சார், அவ வயித்துல புழு கூட வைக்க மாட்டேங்கு”துன்னு ஏக்கமாய் சொல்லும் சுப்புவுக்கும் சுமையும், சுகமும் குழந்தைதான். “மேடுகளை உடைத்து பள்ளங்களை நிரப்புங்கள்” என்ற தத்துவ வார்த்தையின் மதிப்புமிக்க செயல்தான் “தத்து”. என் உறவினர் ஒருவர் தத்து எடுப்பதற்காக குழந்தையின் பெற்றோரிடம் வாய்மொழி அனுமதி பெற்று குழந்தையை வளர்த்து வந்தார், சில காலம் கழித்து அந்தக் குழந்தையின் தாய்க்கு குழந்தை திரும்ப பெறுகின்ற எண்ணம் வந்துவிட்டதால், தத்து எடுத்த குழந்தை மீண்டும் பெற்றோரையை அடைந்தது. பேச்சு வார்த்தை மூலமோ, பூஜைகளோ செய்து வி்ட்டு குழந்தைகளை தத்து எடுத்தல் இப்போதெல்லாம் செல்லாது என்பதை அவர் உணர்ந்தார். சட்டங்களை அறிவது பற்றிய கவணக்குறைவு எல்லாக் காலங்களிலும் நம்முடன் வருவது.
சட்டப்பூர்வமாக தத்து எடுப்பது பற்றியும், தத்து கொடுப்பது பற்றியும் அறிந்து கொள்ள இந்த புத்தக கண்காட்சியில் “குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி,..” என்ற புத்தகம் கிடைத்தது, அந்தப் புத்தகம் குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்கள் இனி,..
அரசு அனுமதி பெற்ற தத்து கொடுக்கும் அமைப்புகள் (Licenced Adoption/Placement agencies) மூலம்தான் தத்து பெறமுடியும். இவற்றை FIT person Institute என்று மத்திய அரசு அழைக்கிறது.
தத்து எடுப்பது தொடர்பான சட்டங்கள் -
1. Hindu Adoption and Maintenance Act(HAMA) – 1956 இந்துக்களுக்கானது.
2. Guardians and wards Act – 1890(GWA) மற்ற மதத்தினருக்கானது.
சில விதிமுறைகள் -
- குழந்தை தத்து எடுத்துக் கொள்ளப்பட சட்ட விதிகளின்படி தடையின்றி இருக்க வேண்டும்.
- குழந்தை 6-வயதிற்கு மேல் இருந்தால் வாய்மொழி மற்றும் எழுத்து மூலம் தத்து எடுத்துக் கொள்ளப்படுவதாக குழந்தை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- உடன்பிறந்தோர் – இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கக் கூடாது.
- தம்பதியருக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்கதாலும் தத்து எடுக்கலாம்.
- ஒற்றைப் பெற்றோரும்(ஆண் / பெண் தத்து எடுக்கலாம்
- ஒரு ஆண், பெண்ணைத் தத்து எடுக்க விரும்பினாலும் அல்லது பெண், ஆணைத் தத்து எடுக்க விரும்பினாலும் தத்து எடுப்பவருக்கு குழந்தையை விட 21 வயது அதிகமாக இருக்க வேண்டும்.
- தாய் அல்லது தந்தை வயது 35-க்குள் இருப்பது நல்லது.
- குழந்தை தனது சொந்தப் பெற்றோரிடமிருந்து மொத்தமாகப் பிரிய வேண்டும். வயது வந்த பிறகு சொந்த பெற்றோரோடு சேர நினைத்தாலும் முடியாது.
திருமணம் ஆகாத ஆண், பெண், முறையான விகாரத்து பெற்றவர்கள் அல்லது வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். தத்து எடுத்துக் கொள்பவர்களுக்கு 18 வயதிற்கு மேலும் நல்ல மனநலத்துடனும் இருக்கவேண்டும். ஆனால் திருமணம் ஆனவர்கள் வாழ்க்கைத் துணைவர்/துணைவி சம்மதத்துடன் தத்து எடுக்கலாம். ஒன்றிக்கும் மேற்பட்ட வாழ்க்கை துணையிருந்தால் அனைவரின் சம்மதமும் அவசியம்.
பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் டாக்டர்.என்.கங்கா அவர்களால் எழுதப்பட்ட இப்புத்தகத்தில் இப்படி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் நிரம்ப இருக்கிறது. விலை 5 ரூபாய்.

arumai ana takaval nantre
நன்றி நண்பரே..