ஈழத்திற்காக தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. தற்கொலைகள் அசட்டுதனமானவை என்ற எண்ணம் எப்போதும் என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது. படிக்க சிரமாக இருக்கிறது, வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்ற காரணங்கள் முதற்கொண்டு சமூகத்தின் ஏளனத்தால், கடன் தொல்லையால், கௌரவத்தின் இழுக்கால் என தற்கொலைக்கு பல முகங்கள். கொள்கைக்காக உயிர் துறப்பது என்பதை கொஞ்சம் மாறுபட்டே எண்ணத் தோன்றுகிறது. தன்னலத்தையும் தாண்டி நிற்கின்ற அந்த செயல் கொஞ்சம் மனம் நெகிழ வைக்கிறது. ஆனால் அதன்பின்னே அந்த தற்கொலைகள் செய்தவைகள் என்ன?. உண்மையைச் சொன்னால் பலன் பூஜ்ஜியம்தானே. இப்படி வீனாகப்போன ஒரு தியாகத்தின் நினைவு நாள் பொருட்டு கொளத்தூர் பகுதியில் நிகழ்ந்தவைகள் இங்கே.
குளத்தூர் வேலவன் நகரின் சாலை, பிரதான சாலை என்றெல்லாம் சொல்ல முடியாத சாலை. என்னுடைய அலுவலகம் உள்ள இங்குதான், இறந்த முத்துக் குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்ததாகவும், அருகில் எங்கேயோ அவரின் வீடு இருப்பதாகவும் கூறினார்கள். சென்ற வருடம் இன்றைவிட பிரம்மாண்டமாக இருந்ததாக நினைவு. பூக்களால் அளங்கரிக்கப்பட்ட கூம்பு இம்முறை சிறுத்திருந்தது. மக்கள் கூட்டம், கடைகள், பேனர்கள் என எல்லாவற்றிலும் வறுமை தெரிந்தது. சென்ற முறை திருமாவளவனை இங்கு பார்த்தேன். இன்று வைகோவை பார்க்க முடிந்தது. பிரபலங்களை தேடிச் சென்று பார்த்தாலே காணமுடியாத இன்னைய காலக்கட்டத்தில் இந்த வாய்ப்பு கொஞ்சம் பெரியதாகவேப்பட்டது. வைகோவை என் அலுவல மாடியில் இருந்தே தெளிவாக பார்க்க முடிந்தது. அது வரை எப்போதும் போல வெறிச்சோடியிருந்த சாலை பல்வேறு வாகனங்களால் திணறியது. ஆங்காங்கே நின்றிருந்த ஆண்,பெண் காவலர்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்து நின்றார்கள்.
வைகோவும், தாடிவைத்த ஒரு பெரியவரும் கோசம் போட சுற்றியிருந்த சிலர் அதை திருப்பிச் சொன்னார்கள். சென்ற வருடம் திருமா இதைதான் செய்தார். ஆனால் இம்முறை கைப்பேசியில் அதை காணொளி எடுத்துக் கொண்டேன். நீண்டதொரு முழக்கங்கள் நின்றபின் வைகோ வாகணத்திற்கு திரும்பினார். இரண்டு வீடியோ கேமராவுடன் நிருபர்கள் வர வைகோவை சுற்றி நிறைய பேர் சூழ்ந்து கொண்டனர். தொலைக்காட்சியில் வருதற்கு மக்களுக்குத்தான் எத்தனை ஆர்வம். வைகோ பேசுவதை என்னால் கேட்கமுடியவில்லை. அவர் வாகணத்தில் சென்று அமர்ந்து கொண்டார். அவர் கிளம்ப முற்படுகையில் சிவப்பு வண்ண கொடியேந்தி சிலர் வீரவணக்கம் கோசமிட்டபடி வந்தார்கள். அவர்கள் கையில் முத்துகுமாரின் மார்பளவு சிலையும், தீப்பந்தமும் இருந்தது. பின் அவர்கள் நினைவிடத்திற்கு வந்து கோசம் போடும்போது வைகோவும் வந்து சேர்ந்து கொண்டார்.
அவர்கள் மக்கள் மன்றம் சார்ந்தவர்கள் என அப்போது கூறினார். பின் மக்கள் மன்றத்தினர் கொண்டுவந்த தீ்ப்பந்தம் வைத்து புகைப்படங்களுக்கும் வீடியோவிற்கும் போஸ் கொடுத்தார். மக்கள் மன்றத்தினர் அதை எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள் என தெரியவில்லை. அதன்பின் அலுவக வேலையில் ஈடுபட வேண்டியதாகிவிட்டது. திருமாவும் வந்திருந்தார் என நினைக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் வீரவணக்கம் என்று குரல் கேட்டது. இன்னும் எண்ணற்ற பிரபலமாகாத இயங்கள் வந்திருந்தார்கள்.
திமுக,அதிமுக,தேதிமுக ஏன் பாமக போன்ற கட்சிகளை காணவில்லை. வந்திருந்தவர்களும் நினைவிடத்தில் நின்று சிரித்துக் கொண்டே புகைப்படம் எடுத்துக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டினார்கள். புத்தகங்கள் விற்கப்பட்ட தற்காலிக கடையில் கோள்கள், ராசிகள் குறிப்பிட்ட வரைபடத்தில் கோள்களை குறைசொல்ல மனிதனுக்கு அருகதையேயில்லை என்று எழுதப்பட்டிருந்தது. சிலர் அணுமின் நிலையத்திற்கு எதிராக பேசிக் கொண்டார்கள். புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் எப்படிபட்ட நடவெடிக்கைகளை அரசு மேற்கொண்டிருந்தது என தெரிந்தவர்கள் நிச்சயம் அணுமின் நிலையத்தை வரவேற்க்க மாட்டார்கள் தான்.
குரல்களும் கோசங்களும் சிறிது சிறிது நேரம் கேட்டு ஓய்ந்து போயின.காலையில் சிலமணிநேரம் பரபரப்பாக இருந்த சாலை, மதியமே எப்போதும் போல அமைதியாக மாறிற்று. தியாகிகளின் புகைப்படத்தோடு வீரப்பனின் புகைப்படமும் இருப்பதாக சொன்னார்கள். அருகில் சென்று பார்த்தேன். எனக்கு செங்கொடியைத் தவிற வேறுயாரையும் தெரியவில்லை. வீரப்பனின் என்று சொல்லப்பட்டவர் வேறுமாதிரியாக தெரிந்தார். அங்கிருந்த மலர்வலையத்தில் மலருக்கு பதிலாக வெறும் தென்னங்கீ்ற்றுளே இருந்தன. இயக்கங்களின் பொருளாதார நிலையா இல்லை மனமா என வைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ஜனவரி 29 என்ற ஆவணப்படத்தின் சீடிகவர் வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த புகைப்படத்தில் இருப்பவர்களின் பெயர்களையாவது அறிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இனத்திற்காக இறந்தவர்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். வீட்டிற்கு வந்ததும் தொலைக்காட்சியில் எம்.ஜி.ஆர், அண்ணா சமாதிகளை சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருந்தது. ம்.. அங்கு நடக்காததா இங்கு நிகழ்ந்தது என மனம் நினைத்தது.
மேலும் -
வைகோ முத்துகுமாருக்கு வீரவணக்கம் செய்தமை காணொளியாகக் காண இங்கு சொடுக்கவும்.









