முத்துக்குமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

ஈழத்திற்காக தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. தற்கொலைகள் அசட்டுதனமானவை என்ற எண்ணம் எப்போதும் என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது. படிக்க சிரமாக இருக்கிறது, வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்ற காரணங்கள் முதற்கொண்டு சமூகத்தின் ஏளனத்தால், கடன் தொல்லையால், கௌரவத்தின் இழுக்கால் என தற்கொலைக்கு பல முகங்கள். கொள்கைக்காக உயிர் துறப்பது என்பதை கொஞ்சம் மாறுபட்டே எண்ணத் தோன்றுகிறது. தன்னலத்தையும் தாண்டி நிற்கின்ற அந்த செயல் கொஞ்சம் மனம் நெகிழ வைக்கிறது. ஆனால் அதன்பின்னே அந்த தற்கொலைகள் செய்தவைகள் என்ன?. உண்மையைச் சொன்னால் பலன் பூஜ்ஜியம்தானே. இப்படி வீனாகப்போன ஒரு தியாகத்தின் நினைவு நாள் பொருட்டு கொளத்தூர் பகுதியில் நிகழ்ந்தவைகள் இங்கே.

குளத்தூர் வேலவன் நகரின் சாலை, பிரதான சாலை என்றெல்லாம் சொல்ல முடியாத சாலை. என்னுடைய அலுவலகம் உள்ள இங்குதான், இறந்த முத்துக் குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்ததாகவும், அருகில் எங்கேயோ அவரின் வீடு இருப்பதாகவும் கூறினார்கள். சென்ற வருடம் இன்றைவிட பிரம்மாண்டமாக இருந்ததாக நினைவு. பூக்களால் அளங்கரிக்கப்பட்ட கூம்பு இம்முறை சிறுத்திருந்தது. மக்கள் கூட்டம், கடைகள், பேனர்கள் என எல்லாவற்றிலும் வறுமை தெரிந்தது. சென்ற முறை திருமாவளவனை இங்கு பார்த்தேன். இன்று வைகோவை பார்க்க முடிந்தது. பிரபலங்களை தேடிச் சென்று பார்த்தாலே காணமுடியாத இன்னைய காலக்கட்டத்தில் இந்த வாய்ப்பு கொஞ்சம் பெரியதாகவேப்பட்டது. வைகோவை என் அலுவல மாடியில் இருந்தே தெளிவாக பார்க்க முடிந்தது. அது வரை எப்போதும் போல வெறிச்சோடியிருந்த சாலை பல்வேறு வாகனங்களால் திணறியது. ஆங்காங்கே நின்றிருந்த ஆண்,பெண் காவலர்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்து நின்றார்கள்.

தலைவர்களின் வருகைக்கு முன்-பின்

வைகோவும், தாடிவைத்த ஒரு பெரியவரும் கோசம் போட சுற்றியிருந்த சிலர் அதை திருப்பிச் சொன்னார்கள். சென்ற வருடம் திருமா இதைதான் செய்தார். ஆனால் இம்முறை கைப்பேசியில் அதை காணொளி எடுத்துக் கொண்டேன். நீண்டதொரு முழக்கங்கள் நின்றபின் வைகோ வாகணத்திற்கு திரும்பினார். இரண்டு வீடியோ கேமராவுடன் நிருபர்கள் வர வைகோவை சுற்றி நிறைய பேர் சூழ்ந்து கொண்டனர். தொலைக்காட்சியில் வருதற்கு மக்களுக்குத்தான் எத்தனை ஆர்வம். வைகோ பேசுவதை என்னால் கேட்கமுடியவில்லை. அவர் வாகணத்தில் சென்று அமர்ந்து கொண்டார். அவர் கிளம்ப முற்படுகையில் சிவப்பு வண்ண கொடியேந்தி சிலர் வீரவணக்கம் கோசமிட்டபடி வந்தார்கள். அவர்கள் கையில் முத்துகுமாரின் மார்பளவு சிலையும், தீப்பந்தமும் இருந்தது. பின் அவர்கள் நினைவிடத்திற்கு வந்து கோசம் போடும்போது வைகோவும் வந்து சேர்ந்து கொண்டார்.

அவர்கள் மக்கள் மன்றம் சார்ந்தவர்கள் என அப்போது கூறினார். பின் மக்கள் மன்றத்தினர் கொண்டுவந்த தீ்ப்பந்தம் வைத்து புகைப்படங்களுக்கும் வீடியோவிற்கும் போஸ் கொடுத்தார். மக்கள் மன்றத்தினர் அதை எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள் என தெரியவில்லை. அதன்பின் அலுவக வேலையில் ஈடுபட வேண்டியதாகிவிட்டது. திருமாவும் வந்திருந்தார் என நினைக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் வீரவணக்கம் என்று குரல் கேட்டது. இன்னும் எண்ணற்ற பிரபலமாகாத இயங்கள் வந்திருந்தார்கள்.

திமுக,அதிமுக,தேதிமுக ஏன் பாமக போன்ற கட்சிகளை காணவில்லை. வந்திருந்தவர்களும் நினைவிடத்தில் நின்று சிரித்துக் கொண்டே புகைப்படம் எடுத்துக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டினார்கள். புத்தகங்கள் விற்கப்பட்ட தற்காலிக கடையில் கோள்கள், ராசிகள் குறிப்பிட்ட வரைபடத்தில் கோள்களை குறைசொல்ல மனிதனுக்கு அருகதையேயில்லை என்று எழுதப்பட்டிருந்தது. சிலர் அணுமின் நிலையத்திற்கு எதிராக பேசிக் கொண்டார்கள். புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் எப்படிபட்ட நடவெடிக்கைகளை அரசு மேற்கொண்டிருந்தது என தெரிந்தவர்கள் நிச்சயம் அணுமின் நிலையத்தை வரவேற்க்க மாட்டார்கள் தான்.

குரல்களும் கோசங்களும் சிறிது சிறிது நேரம் கேட்டு ஓய்ந்து போயின.காலையில் சிலமணிநேரம் பரபரப்பாக இருந்த சாலை, மதியமே எப்போதும் போல அமைதியாக மாறிற்று. தியாகிகளின் புகைப்படத்தோடு வீரப்பனின் புகைப்படமும் இருப்பதாக சொன்னார்கள். அருகில் சென்று பார்த்தேன். எனக்கு செங்கொடியைத் தவிற வேறுயாரையும் தெரியவில்லை. வீரப்பனின் என்று சொல்லப்பட்டவர் வேறுமாதிரியாக தெரிந்தார். அங்கிருந்த மலர்வலையத்தில் மலருக்கு பதிலாக வெறும் தென்னங்கீ்ற்றுளே இருந்தன. இயக்கங்களின் பொருளாதார நிலையா இல்லை மனமா என வைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ஜனவரி 29 என்ற ஆவணப்படத்தின் சீடிகவர் வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த புகைப்படத்தில் இருப்பவர்களின் பெயர்களையாவது அறிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இனத்திற்காக இறந்தவர்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். வீட்டிற்கு வந்ததும் தொலைக்காட்சியில் எம்.ஜி.ஆர், அண்ணா சமாதிகளை சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருந்தது. ம்.. அங்கு நடக்காததா இங்கு நிகழ்ந்தது என மனம் நினைத்தது.

மேலும் -

வைகோ முத்துகுமாருக்கு வீரவணக்கம் செய்தமை காணொளியாகக் காண இங்கு சொடுக்கவும்.

வாசிப்பின் இடைவேளையில் சில வரிகள்

இந்த வருட புத்தக கண்காட்சிக்கு புத்தகங்களை தேர்வு செய்யும் போது, இலக்கியத்துவமான படைப்புகளை தேர்ந்தெடுத்தேன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்பு. எண்ணற்ற சிபாரிசுகளும், சாகித்ய அகாதமி விருதும் இந்த புத்தகத்தினை தேர்வு செய்ய வைத்தன. நாஞ்சில் எழுத்துகளை முதன்முறையாக நான் படிக்கப்போகிறேன் என்ற ஆவல் இருந்ததே தவிற வேறு ஒன்றும் பெரியதாக தோன்றவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் என் வாசிப்பு அனுபவத்தை புரட்டி போடப் போகிறது என்பதை எண்ணிக் கூட பார்க்கவில்லை.

இப்போது நான்கு கதைகளை தான் படித்து முடித்திருக்கிறேன். அதற்குள் இதுதான் சிறுகதை என இதுநாள் வரை நான் நினைத்திருந்த பின்பத்தை உடைத்தெரிந்துவிட்டன இந்த சிறுகதைகள். இயல்பான காட்சியமைப்பு இறுதியாக ஒரு மாறுபட்ட முடிவு என குமுதம், குங்குமம் வாரப் புத்தகங்களில் ஒரு பக்கத்தில் வருவதையோ, சில பக்கங்களில் காட்சிகளை விளக்கி நீதி சொல்லும் நீதிநெறிக் கதைகளோ, பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகளையோ வடிவத்தில் ஞாபகம் செய்யாமல் செல்லுகின்ற ஒவ்வொரு கதைகளையும் ரசித்து ரசித்து படித்தேன்.

இன்னும் படிக்க பதினொரு கதைகள் இருக்கின்றன என்பது, ஏதோ புதையலில் கிடைத்த தங்க காசுகளைப் போல மகிழ்ச்சியை தந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையின் தொடக்கமும் மிகுந்த கவணத்தோடு காட்சிகளை விவரிக்கின்றன. அந்தக் காட்சிகள் மனகண் முன் விரிகையில் அது கதை என்பதை மறந்து போயி அதற்குள் புதைந்து விடுகிறேன். தாய்கிழவியின் கணிவோடு தான் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக அந்தக் கதை சொல்லிவிட்டு முடிந்துவிடுகிறது. அதன்பின் அந்தக் கதையின் மாந்தர்கள் அதன் நிகழ்விடங்களில் சிறுது நேரம் மனத்திற்குள் வாழ்கின்றார்கள். அவர்களை அப்படியே விட்டுவிட்டு மனம் வேறு காரியங்களில் நுழைய மறுத்து மௌனமாக இருக்கிறது.

ஏதேனும் ஒரு கனத்தில் நான் உணர்ந்தவைகளை எழுத்தின் வடிவில் பார்ப்பது, எனக்கும் அந்த கதைகளுக்குமான இடைவெளியை இல்லாமல் செய்துவிடுகின்றன. கதைகள் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். சிலருக்கு இது வெறும் பிதற்றலாக தோன்றலாம். சிலருக்கு வேடிக்கையாக கூட இருக்கலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கருதும் ஒரு மகிழ்வான கனத்தினை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

கல்கியின் பார்த்திபன் கனவிற்கு அடுத்து இப்போதுதான், பெரும் எதிர்பார்ப்புடன் ஒரு நாவலை படிக்க தொடங்கியிருக்கிறேன். அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல். பார்த்திபன் கனவினை படிக்கும் போது, நான் பள்ளி செல்லும் மாணவன். மாலையில் கிடைக்கும் நேரத்தி்ல் எல்லாம் நாவல் என்னுடன் இருந்தது. குதிரையின் குளம்படி சத்தமும், வால்களில் ஓசையும், அந்தபுற ராணிகளின் குதுகல ஒலிகளும் மனகாதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்ததன. ராஜேஸ்குமார், சுபா என திரில் நாவல்களை படிக்கும் போது, அப்பா திட்டியிருக்கிறார். ஆனால் பார்த்திபன் கனவினை படிக்கும் போது ஒன்றும் சொல்லவில்லை. இந்த வாசி்ப்பு தளம் நோக்கி என்னை பயணப்பட வைத்தது அவர்தான் என நினைக்கிறேன். இதற்குதான் அவர் ஆசைப்பட்டிருக்கவும் கூடும்.

சரி விஷ்ணுபுரத்திற்கு வருவோம். வலைப்பூவில் ஜெயமோகன் அவர்களின் எழுத்துகளையும், சில கதைகளையும் படித்திருக்கிறேன். அவரை சிலர் இந்துத்துவாதி என குறிப்பிடுகின்றனர். எப்படி அமெரிக்காவில் கிருஸ்துவம் பற்றிய நிறைய படைப்புகள் வருகின்றனவோ, அதுபோல இங்கே இந்துமதம் பற்றிய படைப்புகள் வருகின்றன. அது வியாபார தந்திரமோ, சுற்றியிருக்கும் சமூகத்தின் காரணமாகவோ, இல்லை பெரும் காவியங்களின் பாதிப்போ எதுவென தெரியவில்லை. இந்து மதம் பிடிக்காத நடிகர்களை கூட வேலு, வேலாயுதம் என நடிக்கவைக்கும் காரணமும் அதுவாகத்தான் இருக்கும்.

இப்போதுதான் விஷ்ணுபுரத்திற்குள் நுழைந்திருக்கிறேன். பிரம்மாண்டமான கோவிலைக் கொண்ட விஷ்ணுபுரத்தில் விஷ்ணு படுத்திருப்பதைப் போல அங்கே ஒரு குஸ்டரோகியும் படுத்திருக்கிறான். அதைக் கண்டு ஒருவன் நிறைய சிந்தனை செய்கிறான். இல்லாத ஒரு கற்பனை நகரமன அதை எண்ணாமல், எங்கள் திருச்சி மாவட்டத்தின் திருவரங்கத்தினை மனதில் நிறுத்தி கதையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். விஷ்ணுபுரமும், திருவரங்கமும் எனக்கு ஒன்றாகவே தோன்றுகின்றன. என் கற்பனையில் விஷ்ணுபுரம் திருவரங்கத்தின் பெரும் உருவகமாகவே தோன்றுகிறது. காற்றில் ஒலியெழுப்பும் தூண்கள், மிகப் பிரம்மாண்டமான கோபுரங்கள், விஷ்ணு படுத்திருக்கும் விதம் என எல்லாம் ஏற்கனவே அறிமுகமானவையாக இருப்பதால், இது புனைவு என்பதை அடிக்கடி மறந்து போகிறேன். தொடக்கமே அலாதியாக இருக்கிறது. இன்னும் சரியாக பத்து அத்தியாங்கள் கூட படிக்காமல் விஷ்ணுபுரம் பற்றி மேலும் கூற இயலாது. எல்லாம் படித்துவிட்டு வருகிறேன். என்னுடைய வாசிப்பு அனுபவம் போல நீங்களும் உணர்ந்திருந்தால் நிச்சயம் அந்த புத்தகம் பற்றி கருத்துரையில் மறக்காமல் குறிப்பிடுங்கள் நண்பர்களே.

குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி

ஒரு புறம் தேவைகள் இன்றி குவிந்து கிடக்கும். மறுபுறம் தேவைகள் இருந்தும் ஒன்று கூட இருக்காது. பெரும்பாலும் பணம் பற்றி கூறப்படும், இந்த வாசகம், ஏனோ எல்லாவளங்களுக்கும் பொருந்திப் போகிறது. “அந்த சனியன் இந்த தடவையும் பொண்ணையே பெத்து தொலைச்சுட்டா சார்” என்று சலித்துக் கொள்ளும் அப்புவுக்கும், “போகாத இடமில்ல சார், அவ வயித்துல புழு கூட வைக்க மாட்டேங்கு”துன்னு ஏக்கமாய் சொல்லும் சுப்புவுக்கும் சுமையும், சுகமும் குழந்தைதான். “மேடுகளை உடைத்து பள்ளங்களை நிரப்புங்கள்” என்ற தத்துவ வார்த்தையின் மதிப்புமிக்க செயல்தான் “தத்து”. என் உறவினர் ஒருவர் தத்து எடுப்பதற்காக குழந்தையின் பெற்றோரிடம் வாய்மொழி அனுமதி பெற்று குழந்தையை வளர்த்து வந்தார், சில காலம் கழித்து அந்தக் குழந்தையின் தாய்க்கு குழந்தை திரும்ப பெறுகின்ற எண்ணம் வந்துவிட்டதால், தத்து எடுத்த குழந்தை மீண்டும் பெற்றோரையை அடைந்தது. பேச்சு வார்த்தை மூலமோ, பூஜைகளோ செய்து வி்ட்டு குழந்தைகளை தத்து எடுத்தல் இப்போதெல்லாம் செல்லாது என்பதை அவர் உணர்ந்தார். சட்டங்களை அறிவது பற்றிய கவணக்குறைவு எல்லாக் காலங்களிலும் நம்முடன் வருவது.

சட்டப்பூர்வமாக தத்து எடுப்பது பற்றியும், தத்து கொடுப்பது பற்றியும் அறிந்து கொள்ள இந்த புத்தக கண்காட்சியில் “குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி,..” என்ற புத்தகம் கிடைத்தது, அந்தப் புத்தகம் குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்கள் இனி,..

அரசு அனுமதி பெற்ற தத்து கொடுக்கும் அமைப்புகள் (Licenced Adoption/Placement agencies) மூலம்தான் தத்து பெறமுடியும். இவற்றை FIT person Institute என்று மத்திய அரசு அழைக்கிறது.

தத்து எடுப்பது தொடர்பான சட்டங்கள் -
1. Hindu Adoption and Maintenance Act(HAMA) – 1956 இந்துக்களுக்கானது.
2. Guardians and wards Act – 1890(GWA) மற்ற மதத்தினருக்கானது.

சில விதிமுறைகள் -

  1. குழந்தை தத்து எடுத்துக் கொள்ளப்பட சட்ட விதிகளின்படி தடையின்றி இருக்க வேண்டும்.
  2. குழந்தை 6-வயதிற்கு மேல் இருந்தால் வாய்மொழி மற்றும் எழுத்து மூலம் தத்து எடுத்துக் கொள்ளப்படுவதாக குழந்தை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  3. உடன்பிறந்தோர் – இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கக் கூடாது.
  4. தம்பதியருக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்கதாலும் தத்து எடுக்கலாம்.
  5. ஒற்றைப் பெற்றோரும்(ஆண் / பெண் தத்து எடுக்கலாம்
  6. ஒரு ஆண், பெண்ணைத் தத்து எடுக்க விரும்பினாலும் அல்லது பெண், ஆணைத் தத்து எடுக்க விரும்பினாலும் தத்து எடுப்பவருக்கு குழந்தையை விட 21 வயது அதிகமாக இருக்க வேண்டும்.
  7. தாய் அல்லது தந்தை வயது 35-க்குள் இருப்பது நல்லது.
  8. குழந்தை தனது சொந்தப் பெற்றோரிடமிருந்து மொத்தமாகப் பிரிய வேண்டும். வயது வந்த பிறகு சொந்த பெற்றோரோடு சேர நினைத்தாலும் முடியாது.

திருமணம் ஆகாத ஆண், பெண், முறையான விகாரத்து பெற்றவர்கள் அல்லது வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். தத்து எடுத்துக் கொள்பவர்களுக்கு 18 வயதிற்கு மேலும் நல்ல மனநலத்துடனும் இருக்கவேண்டும். ஆனால் திருமணம் ஆனவர்கள் வாழ்க்கைத் துணைவர்/துணைவி சம்மதத்துடன் தத்து எடுக்கலாம். ஒன்றிக்கும் மேற்பட்ட வாழ்க்கை துணையிருந்தால் அனைவரின் சம்மதமும் அவசியம்.

பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் டாக்டர்.என்.கங்கா அவர்களால் எழுதப்பட்ட இப்புத்தகத்தில் இப்படி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் நிரம்ப இருக்கிறது. விலை 5 ரூபாய்.

35வது சென்னை புத்தக கண்காட்சி அனுபவங்கள்

சென்னை புத்தகாட்சிக்கான விளம்பரங்கள் வர ஆரமித்ததுமே ஏன்டா வேலை கிடைத்தது என இருந்தது. சென்ற வருடம் தினம் தினம் திருவிழாவிர்கு சென்று புத்தங்களோடு இருந்த மாதிரி இவ்வருடம் இருக்க முடியவில்லை. ஆனாலும் ஒரு ஆனந்தம் இம்முறை உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தினைக் கொண்டு புத்தகம் வாங்கியதுதான். ஞாயறு மட்டும் தான் எங்கள் அலுவலம் விடுமுறை. அன்று கண்காட்சிக்கு சென்றால் புத்தங்களை நெருங்கக் கூட முடியாது என்பதால், பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் முன் நாளை தேர்ந்தெடுத்தேன். இனி புத்தக திருவிழாவில் நான் தொலைந்து போனதைப் பற்றி,..

நேற்று (11.01.2012) அலுவகம் முடிந்து கண்காட்சிக்குள் நுழையவே 5.00 மணி ஆகியிருந்தது. இதற்கே அனுமதி வாங்கி அலுவலகம் முடியும் முன்பே கிளம்பியிருந்தேன். வழக்கமாக வாங்கும் புத்தகங்களை விடுத்து சில நல்ல இலக்கியங்களை தேடலாம் என சில நாட்களாக வலையில் எஸ்.ரா, ஜெயமோகன் சிபாரிசுகளை குறிப்பெடுத்திருந்தேன். அந்தப் பட்டியலோடு, புத்தக பதிப்பகங்களின் பெயர்களையும் எழுதிவைத்திருந்தேன். அந்தப் காகிதம் நம்பிக்கையை கொடுத்தது.

அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் மட்டுமே கொண்டாடும் மனிதர்களுக்கு மத்தியில் எழுத்தார்களை கொண்டாடும் வகையில் வழிநெடுகிலும் ப்ளாஸ்க் பேனர்கள் வரவேற்றன.சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ரா, சாரு, வைரமுத்து என பிரபல எழுத்தாளர்களு்ககு மத்தியில் புதியதாக சிலரும் இருந்தார்கள். அதிலும் குமுதத்தின் பேனர்களில் தமிழே தெரியாத சில நடிகைர்களும், நடிகைகளும் எங்களுக்கு பிடித்தது என சிலவற்றை சொல்லி வரவேற்றார்கள். தமிழனிடம் புத்தகம் வி்ற்க எந்தளவிற்கு நிறுவனங்கள் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருக்கின்ற என்பதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.

கண்காட்சியை முதலில் ஒரு முறை சுற்றிவந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வன் ஐந்து தொகுதிகளாகவும், ஒரே புத்தகமாகவும் பல்வேறு விலையில் விற்கின்றன. விகடன் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற பொன்னியின் செல்வன்தான் மிக அதிகமான விலையில் இருந்தது. வரலாற்று நாவல்களுக்கான வாசர்கள் எப்போதும் குறைவதேயில்லை. ரமணிசந்திரன், சாண்டல்யன், கல்கி என இப்போதும் எழுத்துகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுடன் சுஜாதாவும் சேர்ந்துவிட்டார். பல ஸ்டால்களில் ஆன்மீகம் ஊற்றெடுத்து ஓடியது. மழைக்கு கூட மக்கள் ஒதுங்காத சில ஸ்டால்களும் இருந்ததை பார்க்கும் போது பகிரென்றது. இன்று எல்லாவற்றையும் விளம்பரங்களே தீர்மானிக்கின்ற என்ற உண்மையை அவர்கள் உணர்ந்திருந்தால், இந்நிலை வந்திருக்காது என நினைக்கிறேன். இஸ்லாமிய ஸ்டால் சென்ற முறை பெரியதாக இருந்தது, அங்கு வாங்கிய குரான் இன்னும் பத்திரமாக இருக்கிறது. ஆனால் ஸ்டால் இம்முறை சிறியதாகிவிட்டது. அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர் சிவ புராணம் புத்தகத்தினை ஹிந்தியில் வேண்டுமென கூறியிருந்தார், கீதா பதிப்பகம் என்பதில் இருப்பதாக கூறினார்கள். அவரை கைப்பேசியில் அழைத்து செய்தியை சொன்னேன்.

அப்படியே பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களை குறித்துக் கொண்டேன். முதலில் பட்டியலிருந்த ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் நாவலை வாங்கி எனது புத்தக வேட்டையை ஆரமித்தேன். உலோகம் நாவலுக்காக கிழக்கு பதிப்பகத்தினை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் சடசடவென மழை பொழிய துவங்கியது. வெளியிலிருந்தவர்கள் உள்ளே வந்ததால் கூட்டம் அதிகமானது. எனக்கோ புத்தகங்களை எப்படி வீட்டிற்கு கொண்டு செல்வோம் என்ற கவலை வந்தது. அதானால் மழை நிற்கும் வரை புத்தகங்களை வாங்கமலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். வ.உ.சி பதிப்பகத்தில் மழை நீர் மிக அதிகமாவே ஊற்றியது, பிளாஸ்க் பேனர்கள் கைக் கொடுத்தன. வழி தடத்தில் ஒழுகியதை யாரும் பொருட் படுத்தவில்லை. குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி,.. என்ற புத்தகம் பாரதி புத்தகாலயத்தில் கிடைத்து. பழைய மர பாலத்தில் ஒரு சம்பவமும் புத்தகத்தினை தேடினேன். கிடைக்கவில்லை. அருகிலிருந்த உதவியாளரிடம் கேட்டேன், சிறிது யோசித்துவிட்டு இல்லையென்றார்.

கைப்பேசி தொடையை கிள்ளியது, நண்பன் அழைத்திருந்தான், “மச்சி எங்கிருக்க?” “புத்தக கண்காட்சியிலதான்”. “அங்க செம மழையாமே. டி.வியில சொன்னாங்க.”, “அதுக்குள்ள டி.விவரைக்கும் செய்தி வந்துடுச்சான்னு” எங்கள் உரையாடல் தொடர்ந்தது. அதற்குள் மழை சுத்தமாக நின்றுவிட்டது. திரும்பி வராது என்ற நம்பிக்கையில் மீண்டும், வேட்டையை தொடர்ந்தேன். அறிவியல் வெளியீடு பதிப்பகத்தில் அறிவியல் புனைகதைகள், போரின் பிடியில் பிஞ்சகள் என இரண்டு புத்தங்களை எடுத்துக் கொண்டேன். நாஞ்சிலின் சூடிய பூ சூடற்க நாவல் ஒன்றே ஒன்று இருந்தது, அதுவும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதை வாங்காமல் நடையை கட்டினேன். ஒரு பதிப்பக்ததில் எம்.ஜி.ஆர் நூல்களை அடுக்கி வைத்திருந்தார்கள், திருநாவுக்கரசு எழுதிடய புத்தத்தினை புரட்டினேன் ” கைது செய்யப்பட்ட சசிகலாவிற்காக அழுத ஜெயலலிதா” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றும் இருந்தது. இன்றைய நிலைய நினைத்துக் கொண்டே இடம் பெயர்ந்தேன்.

தமிழனி பதிப்பகத்தில் காவல் கோட்டம் புத்தகம் ஏறாளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கனத்தினை பார்த்து இறுதியாக எடுத்துக் கொள்ளலாம் என வைத்துவிட்டேன். எழுத்தாளர்களுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் எழுத்தாளர் வெங்கடேசன் வந்திருப்பதாக ஒலிப்பெருக்கியில் கூறினார்கள். ஆவலோடு சென்றேன். பதினெந்துக்கும் குறைவான நற்காளிகளைப் போட்டு ஒரே ஒரு மைக்கினை கொடுத்திருந்தார்கள். வாசகர்கள் கேள்வி கேட்கவும், அவர் பதில் சொல்லவும் மாற்றி மாற்றி அதேயே பயண்படுத்த வேண்டியிருந்ததால் சிரமாக இருந்தது.

காவல் கோட்டம் பத்து வருட உழைப்பு என்பது, அதனை எழுத முடியாது என அவர் மூன்று முறை ஒத்தி வைத்தது என பல சுவாரசியங்கள். மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு இளைஞர் தன்னுடைய மூதாதயர்கள் வாழ்ந்த ஊரினை தேடி வந்திருப்பதாகவும், அவர்கள் நாவலில் குறிப்படப்படும் அந்த புலம்பெயர்வில் மதுரையிலிருந்து வந்தவர்கள் என்பதையும் கூறினார். வியப்பாக இருந்தது. களவுக்கு ஆதாரவு தருகின்றீர்களா, குறிப்பிட்ட ஜாதியைப் பற்றி உயர்வாக எழுதியுள்ளீ்ர்களே, மதுரைக்கு எப்பவுமே நெகட்டிவ் கதைகளை களமாக கொள்ளப்படுகின்றதே என ஏகப்பட்ட கேள்விகள், ஏக்கங்கள். “பாண்டியர்கள், சோழர்கள்,.. என இப்படி இருக்கும் போது எப்போது தமிழன் என்ற பொதுப்பெயர் வந்தது” என்று ஒருவர் கேள்வி கேட்க,.. வெங்கடேசனை பார்க்கும் போது பாவமாக இருந்தது. ஒரு எழுத்தாளனுடனான சந்திப்பு இத்தனை சுவாரசியமாக இருக்கும் என அப்போதுதான் புரிந்தது.

ஜெயமோகனின் உலோகம் நாவலை வாங்க கிழக்கு பதிப்பகத்தில் நுழைந்தேன். ராஜேஸ்குமார் நாவலைப் போன்ற வடிவமைப்பில் உலோகம் இருந்தது. எஸ்.ராவின் உபபாண்டவத்தை வாங்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டே நடந்து வந்ததில் தமிழினி பதிப்பகம் மீண்டும் வந்தது. சரி இம்முறையாவது எஸ்.ராவை விட்டுவிடுவோம் என காவல் கோட்டத்தினை எடுத்துக் கொண்டு பணம் கட்டும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். அதற்குள் என்.டி டிவியில் வந்த ஒரு நிருபர் பணம் பெறுபவரிடம் இங்கே இயக்குனர்களெல்லாம் எந்த புத்தகத்தினை அதிகம் வாங்குகிறார்கள் என்று கேட்க, “எனக்கு இயக்குனர்கள் யாரையும் தெரியாது” என கடுப்படித்தார் அவர். “இளைஞர்கள் எந்தப் புத்தகங்களை வாங்குகின்றார்கள் என மீண்டும் அவர் கேட்க, நான் கண்களை சுழலவிட்டேன். நாஞ்சில் விளம்பரத்தில் சிரித்துக் கொண்டிருந்தார், கீழே சூடிய பூ சூடற்க என்று எழுதியிருந்தது. காவல் கோட்டத்தை அவரிடமே விட்டுவிட்டி நாஞ்சிலின் புத்தகத்தினை தேடி எடுத்துக் கொண்டு பணம் பெறுபவரிடம் வந்தேன். இரண்டிற்கும் பணம் கொடுத்த போது புன்னகையோடு பெற்றுக் கொண்டார்,. உண்மையில் இவருக்கு சினிமா இயக்குனர்களை தெரியாது என்று மனம் சொல்லியது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை புத்தக கண்காட்சியில் கண்டால்தான் உண்டு.

இறுதியாக புத்தக பட்டியலை சரிபார்த்தேன்,. இரண்டு புத்தகங்கள் விடுபட்டிருந்தன். பூம்புகார் பதிப்பகத்தின் ஆயிரத்தியொரு அரேபிய இரவுகள் புத்தகமும், பாரதி புத்தகாலயத்தின் பழைய மர பாலத்தில் ஒரு சம்பவமும் கிடைக்கவில்லை. கோடிக்கண்ககான புத்தகங்களுக்கு மத்தியில் நின்று கொண்டு இரண்டு புத்தகளுக்காக அழுவது சரியாக தோன்றவில்லை. பாரதி புத்தகாலயமாவது கண்களில் தென்பட்டது, பூம்புகாரை பார்க்கவேயில்லை. அண்ணா நூலகத்தில் உள்ளதுபோல ஒரு கணினியில் புத்தகங்களின் தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.