நேற்று அதிகாலை “திருச்சியெல்லாம் இறங்கு” என்ற கண்டெக்டரின் குரல் கேட்டு கண்களைக் கசக்கிக் கொண்டு எழ முயற்சித்தேன். அங்கு தென்பட்டதெல்லாம் ரஜினியின் பிறந்த நாளுக்காக தொண்டர்களால் வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ் வாழ்த்துகள். இதெல்லாம் ரஜினி என்ற சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்களால் செய்யப்பட்டது, என்று கூறிவிட்டு சொல்லமுடியாது. ரசிகன் என்பதையும் மீறி விசுவாசியாக இருக்கின்றார்கள்.
மனுஷ்ய புத்திரன் அவர்கள் ரஜினியை “தோன்ற மறுத்த தெய்வம்” என்று குறிப்பிடுகிறார். தொண்டன் ஒரு படி கடவுளை நோக்கி ஏறினால், தெய்வம் நூறு படி இறங்கி வரும் என்பார்கள். ஆனால் ரஜினி விசயத்தில் இது தலைகீழாக நடக்கிறது. ரஜினியைப் பார்க்கும் போதெல்லாம் வியப்பு ஏற்படுவதற்கு பதில் ஒரு வித சோகம் தலையெடுப்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு காரணம், ரஜினிக்கும் சிவாஜிராவிற்கும் இடையே அவர் தனக்குள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம்.
நான் பள்ளியில் படித்த காலக் கட்டத்தில் ரஜினியும், கமலும் பழைய தலைமுறை நடிகர்களாக மாறிவிட்டிருந்தார்கள். இருந்தும் அவர்களைப் பற்றிய வாதங்கள் இன்று வரை எல்லோரிடமும் இருப்பது வியப்பானதுதான். ரஜினியை எம்.ஜி.ஆரோடும், கமலை சிவாஜியோடும் ஒப்பீடு செய்வது இயல்பானது, ஆனால், கமலின் பளிங்கு நிறமும், உடற்கட்டும், புதியமுயற்சிகளும் எம்.ஜியாரிடம் இருந்தவை. ரஜினியின் வில்லன் வேட திறனும், நகைச்சுவை உணர்வும் அப்படியே சிவாஜியிடம் இருந்தவை,.. இருந்தும் இந்த ஒப்பீடுகள் புறக்கணிக்ப்படுகின்றன. ஊடகங்கள் தங்களின் தேவைக்காக சிலரை மிகைப்படுத்தி பரப்பிவிட்டு காசுபார்க்க பயன்படுத்திக் கொள்ளும், அந்த விஷயத்தில் ரஜினியும் விதிவிலக்கல்ல.
ஒரு பக்கம் கோடிக்கணக்கான ரசிகர்கள், கோடிகளைத் தர தயாரக இருக்கும் தயாரிப்பாளர்கள், தலைக்காட்டினாலே போதும் என தவிக்கும் சக நடிகர்கள், பலருக்கும் வாய்க்காத அன்பான குடும்பம், ஆனால் இதையெல்லாம் விட்டு விட்டு ரஜினி தேடிக் கொண்டிருப்பதோ,… ஆன்மீக ஞானத்தினை. மற்ற நடிகர்களைப் போல இந்து மக்களைக் கவர நடத்தப்படும் நாடகமாக இது இல்லாமல், உண்மையாக இருப்பதை எல்லோரும் உணர்வார்கள். ரஜினியிடம் நான் மயங்கிப் போன இடம் அவரின் தனிப்பட்ட வாழ்க்கைதான்.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போல ரசிகர்களை தொண்டர்களாக மாற்றியிருக்கலாம். கொஞ்சம் விட்டிருந்தால் ரசிகர்களே எம்,ஜி,ஆருக்கு செய்த்து போல ரஜினிக்கும் செய்திருப்பார்கள், ரஜினி தப்பிவிட்டார். அதில் எம்.ஜி.ஆரை மிஞ்சிவிட்டார். எம்.ஜி.ஆர் தன்னுடைய சொட்டை தலையை மக்களிடம் காட்டி தன் கதாநாயக பின்பத்தினை உடைத்துக் கொள்ள விரும்பவில்லை. விளைவு, கருப்பு கண்ணாடியோடு தொப்பியும் அவர் அடையாளமாக மாறிப் போனது. ரஜினி நினைத்திருந்தால் மறைத்திருக்க முடியும், கார்த்தி, விஜயகாந்த் போல விக் வைத்து அலைந்திருக்க முடியும். திரைக்கு முன் விக் வைத்துக் கொண்டு பேத்தி வயதில் இருப்பவரோடெல்லாம் டூயட் ஆடி, அரசியல்வாதிகளிடமிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் மக்களை காப்பாற்றிவிட்டு, திரைக்குபின் ஆன்மீகத்தினை தேடி, ரசிகனிடமிருந்து ஓடி, அரசியலிருந்து தப்பித்து சிவாஜிராவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நம்மிடையே போலியாக வாழும் பலருக்கு மத்தியில் ரஜினியைப் போல சில மனிதர்கள் தங்கள் சுய அடையாளங்களை மீட்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு சமர்ப்பனமாக இந்த இடுகை இருக்கட்டும். நன்றி.



சரியாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் ரஜினிகாந்த் அவர்களைப் பற்றி.
நன்றி
நன்றி தேவி அவர்களே..
epadi ellam neega sariyaga so illuvatal neegalum superstar tan
நன்றி நண்பரே!.
ஹ்ம் நல்ல பதிவு:)
நன்றி நண்பரே