விக்கி விக்கி
எம்.ஜி.ஆரைப் பற்றிய சில கட்டுரைகளை விரிவு செய்ய வேண்டியிருந்ததால் நான் விக்கியிலேயே இரண்டு நாட்களாக சுற்றிக் கொண்டிருந்தேன். வேறு சில கட்டுரைகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருந்தேன். பாலின்ப இலக்கியம் என்ற கட்டுரைக்கு ஜெ தளத்திலுள்ள கம்பனும் காமமும் கட்டுரைக்கு இணைப்பு கொடுக்கலாம் என தெரிவித்திருந்தேன். புதுப்பக்கங்களை உருவாக்குவது, இணைப்பு தருவது என ஏகப்பட்டதை கற்றுக் கொண்டேன்.
இன்று ஜெயமோகன் என்ற புதுப்பயனர்ப் பக்கம் கண்டேன். நான் அங்கு ஜெவை எதிர்ப்பார்க்கவில்லை. சோடாபாட்டில் என்ற நபர் உண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனா பங்கேற்பது என்று தன் ஐயப்பாட்டினை தெரிவித்திருந்தார். அதற்கு ஜெ “ஜெயமோகனேதான். என் மின்னஞ்சலை பார்க்கலாமே. முன்பு பதிவுசெய்யாமல் இருந்தேன். இப்போது பதிவுசெய்து தகவல்களை அளிக்கிறேன். இலக்கியம் தொடர்பான தகவல்கள் இதில் இருக்கவேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன். என் இணையதளத்தில் உள்ள கட்டுரைகளில் இருந்து சிலவற்றை நான் வலையேற்றம் செய்கிறேன் -தகவல்கட்டுரைகளை. அவற்றுக்கு காப்புரிமை இல்லை. நீங்கள் செய்தாலும் சரி” என்று சொல்லியிருக்கிறார்.
வலைதளத்தில் வாசகர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தவர் இப்போது விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்திலும் பங்கேற்க வந்திருக்கிறார்.
20 சிறுகதைகளை 300 ரூபாய்க்கு விற்கும் அளவிற்கு எழுத்துகளை விலைபோகும் காலக்கட்டத்தில், இத்தனை இயல்பாக வியாபார நோக்கில்லாமல் அவர் எழுதுவது வியப்பாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
ஜெயமோகனுக்கு நன்றி -
கிராமங்களின் தெய்வங்களை கதையை கவணிக்க நேர்ந்த போது ஏகப்பட்ட குழப்பங்கள் எனக்குள் எழுந்தன. நாட்டாரியல் களத்தில் மட்டுமல்ல, வயதிலும் நான் சிறியன் என்பதால் யாரை அனுகினால் விடை கிடைக்கும் என தேடியபோது, ஜெயமோகன் ஞாபகத்திற்கு வந்தார். காசுக்காக மட்டுமே எழுதும் எழுத்தாளர்கள் மத்தியில் வாசகர்களுக்காக எழுதுபவர் ஜெயமோகன். எனவே தயங்காமல் என் கேள்வியை அனுப்பினேன். அதற்கு அழகாக பதிலளித்து அவரது வலைதளத்திலேயே இட்டுவிட்டார். அதற்கு நன்றி கூட சொல்லாமல் இருந்தால் எப்படி. அதற்காகதான் இந்த இடுகை.
அன்பு ஜெ,
உங்களுடைய வலைப்பூவை வாசிக்கும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். எல்லா விசயங்களையும் நீங்கள் அனுகும் முறை மிக அழகாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருக்கிறது. அதனால்தான் நெடுங்காலமாக எனக்குள் இருந்த இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். குல தெய்வங்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டு அவற்றின் கதைகளை சேகரிக்கத் தொடங்கினேன். பிச்சாயி, தொட்டியச்சி என பல கதைகள் கிடைத்தன அவர்கள் எல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம்மைப் போல மனிதர்கள் என அறிந்து பெரும் வியப்படைந்தேன். அந்த வரலாற்று இடங்களுக்கும் சென்று வந்தேன். மிகப் பெரிய அனுபவமாக அது இருந்தது. அந்தக் கதைகளில் ஒரு புறம் சைவமும் வைணவமும் ஆட்சி செய்கின்றன. (இதைப் பற்றி முன்பே நீங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள்.). மறுபுறம் கதைகள் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டிருக்கின்றன. ஒரு சில கதைகளைத் தவிற மற்றவை மிகவும் மோசமாக கற்பனைகளால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கின்றன. அவற்றை ஏதேனும் செய்து உண்மைக் கதையை கண்டறிய இயலுமா. மதுரைவீரன், சுடலை மாடன் என சில தெய்வங்களின் கதைகளில் மொத்த கதையையும் மாற்றாமல் ஒரு சில சம்பவங்கள் மட்டும் மாறுபட்ட கதைகள் வெவ்வேறுவிதமாக மக்களால் சொல்லப்படுகின்றன. இவற்றில் எந்த கதையை உண்மைக் கதையென நம்புவது என்பதே என்னுடைய கேள்வி. உங்களது விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்.
நன்றி,.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
அன்புள்ள ஜெகதீசன்
குலதெய்வங்களைப்பற்றிய ஆய்வுகளை இரு கோணங்களில் செய்யலாம். சமூகவியல் கோணத்தில் அல்லது இறையியல் கோணத்தில்.
இரு தளங்களிலுமே அவற்றை ‘அப்படியே’எடுத்துக்க்கொள்ள முடியாது. அவை ஒரு குறிப்பிட்ட வகையான மொழிபுகள் [Narration] . தாங்கள் அறிந்த உண்மைகளை அம்மக்கள் ஒரு வகையான கதைகளாக ஆக்கி சொல்கிறார்கள். அக்கதைகளில் வரலாறு, தரிசனம் ஆகிய இரண்டும் புனைவாக ஆக்கப்பட்டுள்ளன. அந்த புனைவுக்கு ஒரு முறைமை உள்ளது. அந்த முறைமையை நாம் முதலில் கற்றுக்கொள்ளவேண்டும். அதன்பின்னரே நம்மால் நாட்டாரியலுக்குள் செல்ல முடியும்.
சமூகவியல் ஆய்வுக்கு விரிவான சமூகவியல் புரிதல் ஒன்று தேவை. அதாவது சமூகத்தின் கட்டுமனம், அதன் அமைப்பு முதலியவற்றை பற்றிய ஒரு பொதுமனவரைபடம் என அதை சொல்லலாம். அந்த வரைபடத்தினை நிரப்ப நாம் நாட்டார் பாடல்கள் மற்றும் கதைகளில் இருந்து தகவல்களை எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல இறையியல் ஆய்வில் இந்த நாட்டார் கதைகளை தொன்மங்களாக, குறியீடுகளாகவே எடுத்துக்கொள்ளவேணாடும்
அதாவது அவற்றில் சமூகவியல் உண்மை, மதம்சார் உண்மை என பல தளங்கள் உள்ளன. நீங்கள் சமூகத்தையும் மதத்தையும் ஒட்டுமொத்தமாக ஆராயும்போது அவை உருவாக்கும் வினாக்களை ஒட்டியே இந்தக்கதைகளை பொருள்கொள்ள முடியும். அல்லாமல் இவற்றுக்குள் ஒரே ஒரு கதை அல்லது ஒரே ஒரு உண்மை மட்டும் ஒளிந்துகிடக்கவில்லை. அந்த உண்மையை இவற்றை மட்டும் ஆராய்ந்து கண்டுகொள்ள முடியாது.
உதாரணமாக பொன்னிறத்தாள் அம்மன் கதை. அது சமூகவியல் நோக்கில் அருங்கொலை செய்யப்பட்ட பெண், குறிப்பாக கர்ப்பிணிப்பெண், மீது அக்காலத்து மக்களுக்கு இருந்த குற்றவுணர்ச்சியையும் அச்சத்தையும் காட்டுகிறது. கொள்ளையடிக்கும் மறவர்கள் எத்தனை அஞ்சப்பட்டார்கள், வெறுக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. இபப்டி பல அர்த்தங்கள்
அதே கதை இறையியல் நோக்கில் மனிதர்கள் எப்படி தெய்வங்களாக ஆகிறார்கள் என்பதை காட்டுகிறது. அவர்கள் ஆவிகளாக ஆகிறார்கள். ஆவியாக இருக்கும்போது அவர்களிடம் உள்ள மன ஆற்றல் காரணமாக கடவுளை அடைந்து வரம்பெற்று தாங்களும் கடவுள்களாக ஆகிறார்கள். பெருந்தெய்வம் சிறு தெய்வத்தை உருவாக்குகிறது. இது ஒரு இறையியல் உண்மை.
இப்படி நாட்டாரியல் தரவுகளை நாம் நம்முடைய பார்வைக்கு எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதே முக்கியமானதாகும்.
இந்த தளத்தில் நா.வானமாமலை, பக்தவ்த்சல பாரதி, முதல் அ.கா.பெருமாள் வரையிலானவர்கள் எழுதிய நூல்கள் உங்களுக்கு உதவும்
ஜெ
குறிப்பு =
விக்கிற்கு வந்த ஜெயமோகனுக்கு நன்றி என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். இது சும்மா!. பிறகு முக்கியமான விஷயம் வேலை கிடைத்துவிட்டது. இனி அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டியதுதான் மிச்சம்.
மிக்க நன்றி!.










