இந்தியாவில் 1990 வரைக்கும் ஆணுரையின் உபயோகம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க ஆட்கள் இல்லை. எகிறிக்கொண்டிருக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், எய்ட்ஸை தவிர்க்கவும் பீஹார் பகுதியில் சிலரை கட்டாயப்படுத்தி அனுப்பியது அரசு. அந்த சமூக சேவகர்கள் ஆணுரையை எங்கு மாட்டுவது என்று வெளிப்படையாக சொல்ல கூச்சப்பட்டுக் கொண்டு கட்டை விரலில் மாட்டிக் கொண்டு “இப்படி அணிந்து கொண்டால் எய்ட்ஸ் வராது” என்று சொன்னார்கள். விளைவு நீங்கள் நினைப்பதுதான், மக்கள் எல்லோரும் ஆளுக்கு ஒன்றை கட்டை விரலில் மாட்டிக் கொண்டார்கள், அதனால் பலனில்லை என்பதை அறியாமலேயே. இந்த சம்பவத்தினை விவரிக்க காரணம் கூச்சம் நம்மை தவறான பாதைக்கு இட்டு சென்றுவிடுவதோடு நம்மை சார்ந்தவர்களையும் கொண்டு செல்லும் என்பதை சொல்லவே. அதனால் கூச்சத்தினை இங்கேயே விட்டுவிட்டு தொடருங்கள்.
மேலிருப்பான் தளத்தினை நடத்தி வரும் நண்பர் பத்மஹரியை அறிந்திருப்பீர்கள். அறிவியலை தமிழ் மொழியின் வாயிலாக மக்களிடம் சேர்க்க வேண்டும். அதுவும் வலைப்பூவின் மூலமாக செய்ய வேண்டும் என்ற என் ஆசையில் ஒத்துப் போகும் மனம் அவருடையது. வீணான விவாதங்கள், தேவையற்ற தேடல்கள் என இல்லாமல் அறிவியலை மட்டுமே சொல்லும் வலைப்பூ அவருடையது. அவர் என்னுடன் இரண்டு முறை தொலைப்பேசியில் பேசியிருக்கிறார். அப்போது அதிகம் சொன்னதெல்லாம் மக்களுக்கு அறிவியலை கொண்டு செல்வதைப் பற்றியே. அவர் இப்போது துறை ரீதியாக டாக்டர் பட்டத்திற்கு முயன்று கொண்டிருக்கிறார். செக்ஸ் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன என்பதை டாக்டர் நாராயணரெட்டியின் “உயிர்” புத்தகத்தின் மூலம் அறிந்திருக்கிறேன். ஆனால் அவைகள் என்ன கூறுகின்றன என்பதைப் பற்றி, நண்பர் பத்மஹரியின் “பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன” புத்தகத்தின் மூலமாகதான் தெரியவந்தது. இந்த இடுகை அந்த நூலினைப் பற்றியதே!. இத்தனை வேலைகளுக்கிடையே எப்படி நூலினை தந்தார் என்பதே வியப்பாக இருக்கிறது.
மொத்தமாக 25 தலைப்புகளில் பல ஆய்வுகளைப் பற்றி விரிவாக விவரிக்கின்றார். முத்த வைரஸ் மற்றும் ஜேம்ஸ் பாண்டுக்கும் செக்ஸிற்கும் உள்ள சம்மந்தம் என சில சுவாரசியத்திற்காக இருக்கின்றன. போர்னோ வீடியோக்கள், மது, போதை மற்றும் உடல்பருமன் இவைகள் நம்முடைய செக்ஸ் வாழ்க்கை எப்படி பாதிப்படைகிறது என்பதைப் பற்றி தனிதனியாக அலசியிருக்கிறார். இப்படி புத்தகத்தில் உள்ள எல்லாவற்றையும் ஒரே இடுகையில் சுட்டிக்காட்ட முடியாது. எனவே நான் மிகவும் ரசித்த மூன்று பகுதிகளைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.
1. குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு –
பாலியல் வக்கிரங்கள் என்பனவற்றில் ஓரினச்சேர்க்கை, மிருகப்புணர்ச்சி, குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு என சிலவற்றை சொல்லலாம். இவை எல்லாவற்றையும் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு பகுதியில் நண்பர் ப்த்மஹரி குறிப்பிடும் ஒவ்வொரு செய்தியும் மிகவும் ஆச்சிரியமானது. ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கஸ்டமாக இருக்கலாம், ஆனால் 2002 ஆம் ஆண்டு புள்ளிவிரப்படி 89,000 குழந்தைகள் பாதிக்கப் பட்டிருக்கின்றார்களாம். இன்னும் வேதனை என்னவென்றால் இந்த பாலியல் வக்கிரங்களுக்கு ஆளானவர்கள் அதே போல பாலியல் வக்கிரங்களை தொடர வாய்ப்புள்ளதாம். ஆய்வின் மூலம் நிருபித்திருக்கின்றார்கள். ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் குழந்தைகள் வக்கிரமான பாலியல் துன்புருத்தருலுக்கு ஆளாகின்றன எனும் போது கொஞ்சம் கலக்கம் ஏற்படுகிறது. இப்படி வியக்கத் தக்க பல ஆய்வின் முடிவுகளின் மூலம் இதனை தடுக்கும் முறையையும் மிக அழகாக சுட்டியிருக்கிறார். வக்கிர எண்ணத்தினை அகற்ற முயன்ற முயற்சிகளும், மருந்துகளும் என ஏகப்பட்ட செய்திகள்.
2. திருநங்கைகள் –
கல்லூரி காலம் வரை எனக்கு திருநங்கைகள் மேல் கவணம் இருந்தில்லை. ஆனால் கல்லூரியிலிருந்து ஒரு இன்பச் சுற்றுலா சென்ற போது, நாங்கள் சென்ற தொடர்வண்டியில் அவர்கள் செய்த அசிங்மான செயலால் எங்களுடன் வந்த மாணவிகள் பலர் அழுதே விட்டார்கள். எனக்கு மட்டுமல்ல என்னுடைய நண்பர்கள் பலருக்கும் மிகப் பெரிய வெறுப்பு தோன்றியது. ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகே, அவர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கின்றார்கள் என்ற கேள்வி தோன்றியது. அந்தக் கேள்வியின் பயனாக அவர்களைப் பற்றி அறியும் போது வெறுப்பு மறைந்து.
திருநங்கைகள் என்பவர்கள் உடலால் ஆணாக இருந்து மனதளவில் பெண்ணாகவோ, இல்லை உடலால் பெண்ணாக இருந்து மனதளவில் தன்னை ஆணாகவோ நினைத்துக் கொண்டிருக்கின்ற மனித இனம் என்று மிக எளிமையாக விளக்கம் சொல்கிறார். பெற்றவர்களும், மற்றவர்களும் ஒதுக்கிவிடும் அவர்களை மருத்துவம் சரியான பாதையில் செல்ல உதவுகிறது. இதற்கான அறுவைச் சிகிச்சை மிக எளிமையானதாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் பெண்ணிலிருந்து ஆணாக மாற கருப்பை, சினைப்பை, யோனி என எல்லாவற்றையும் அகற்றிவிட்டு புதிய ஆண்குறியையே உருவாக்க வேண்டும். ஆணிலிருந்து பெண்ணாக மாற விதைப்பை, ஆண்குறிமூலம் ஆகியவற்றை அகற்றி விட்டு பெண்குறி மூலத்தையும் யோனியையும் உருவாக்க வேண்டும் என்கிறார். அப்பப்பா எல்லாவற்றிற்கும் தனித் தனியான அறுவை சிகிச்சைகள் வேறு.
இத்தனை அறுவை சிகிச்சைகளையும் முடித்துவிட்டு ஹார்மோனுக்காக தனி சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இதில்லாமல் ரேசன் அட்டை முதற்கொண்டு பாஸ்போட் வரை தங்கள் பாலினத்தினையும், பெயரையும் மாற்ற வேண்டும். திருநங்கையாக வாழவேண்டாம் என நினைப்பவர்களே இத்தனை பிரட்சனைகளை தாண்டிவர வேண்டுமானால் திருநங்கையாக வாழ்பவர்களைப் பற்றி சொல்ல வார்த்தகளே இல்லை.
3. உச்சக்கட்டம் –
பாலியல் பற்றிய கொஞ்சம் அறிவு வந்தவுடனையே முதன் முதலாக எழும் கேள்வி இந்த உச்சக்கட்டத்தினைப் பற்றியதுதான். உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?. அல்லது உச்சக்கட்டம் என்றால் என்ன?. இந்த கேள்வியை மிக சாதாரணமாக ஒதுக்கிவிட இயலாது. ஏனென்றால் நண்பர்களிடம் இருந்து நிச்சயம் பதில் கிடைக்காது. உச்சக்கட்டம் பற்றி அறியாத்தால் மனைவியை திருப்தி செய்ய இயலாதோ என பயந்து, பல இளைஞர்கள் இதனை அறிந்து கொள்ள விபச்சாரிகளிடம் சென்று எய்ட்ஸை வாங்கிக் கொண்டு வருகின்றார்கள். சமீபத்தில் எய்ட்ஸால் இறந்த என் உறவினர் உட்பட இந்தக் கேள்வியால் பலியானவர்கள் அதிகம்.
சரி சட்டென உச்சக்கட்டம் பற்றி சொல்லுங்கள் என்றால் இதுதான் உச்சக்கட்டம் என வரையறுக்க இயலாது. என்ன சிரிப்பு வருகிறதா. ஆனால் உண்மை இதுதான். நண்பர் பத்மஹரி இதனை அழகாக கையாண்டிருகிறார். உச்சக்கட்டத்தினை மருத்துவ ரீதியாக, அனுபவ ரீதியாக, உளவியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக தனித்தனியாக அனுகி, அவற்றை விவரிக்கின்றார். இதன் சாரம்சத்தினை தொகுத்து வழங்க இயலாது என்பதால் உச்சக்கட்டத்தினைப் பற்றி நான் சொல்லப்போவதேயில்லை. புத்தகத்தில் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
இவையில்லாமல் ஆண்களின் மூளையைப் பற்றி பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்களும், பெண்களின் மூளையைப் பற்றி ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்களும் மிகவும் அருமை. இன்னும் ஆறு ஏழு தலைப்புகளைப் பற்றி சொல்லவில்லை, அதற்குள்ளவே இடுகை நீளமாக போய்விட்டது. அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
மென்நூல் வடிவில் -
எல்லோரையும் சென்றடையட்டும் என்று பத்மஹரி அண்ணாச்சிக்கிட்டக் கூட சொல்லாம புத்தகத்தினை மென்நூலாக மாற்றிவிட்டேன். தரவிரக்கம் செய்ய இங்குசொடுக்குங்கள். (இம்மென்நூலில் இருப்பது முன்னுரை, கிடைக்கும் இடம் மற்றும் விமர்சனங்கள் மட்டுமே).
குறிப்பு -
என்னுடைய மனநிலையை வெளியிட்டதும், ஆறுதல் ஊக்கம் அறிவுரை என எனக்காக நேரம் ஒதுக்கி கருத்துகளை சொன்னவர்களுக்கு மிக்க நன்றி. முன்பை விட இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். பதிவே இடவில்லை என்றாலும் தினம் 1000 நண்பர்களாவது படித்துப் போகின்றார்கள். நாளுக்கு நாள் இடுகைகளைப் பற்றி குறிப்பஞ்சல்களை பெறுகின்றவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது. இது என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தெளிவாக காட்டுகிறது. வேலைதேடும் நேரம் தவிற மற்ற நேரங்களில் தீவிர வாசிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் விதவிதமான கட்டுரைகளோடு சந்திக்கிறேன். ஆதரவுக்கு மிக்க நன்றி.

மிக அருமையான தகவல்…பகிர்ந்தமைக்கு நன்றி!
நன்றி நண்பரே@
புத்தக மதிப்புரை எழுத உங்களை மிஞ்ச ஆளில்லை என காட்டிவிட்டீர்கள்.
பத்மஹரிக்கு வாழ்த்துகள். இயன்றால் புத்தகம் வாங்குகிறேன்.
மிக்க நன்றி!
நூல் மதிப்புரைக்கு ஏதாவது விருது கொடுக்குறாங்கன்னா அது கண்டிப்பா உங்களுக்குத்தான். நூலை அறிமுகப்படுத்திய விதமும்,, சார்பின்றி நடுநிலையான விமர்சனமும் அழகு. தோழி தேவிகா அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. இந்நூலின் மூலம் மக்களுக்கு நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் மதிப்புரை. நன்றிகள் பல ஜெகதீஸ்வரன்!
மிகவும் சந்தோசமாக இருக்கிறது நண்பரே!. தேவிகாவும், நீங்களும் கொடுத்த இந்த பாராட்டுகளே எனக்கு பெரியவிருது.
நன்றி! நண்பரே!.
[...] [...]