இந்த வருட புத்தக கண்காட்சிக்கு புத்தகங்களை தேர்வு செய்யும் போது, இலக்கியத்துவமான படைப்புகளை தேர்ந்தெடுத்தேன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்பு. எண்ணற்ற சிபாரிசுகளும், சாகித்ய அகாதமி விருதும் இந்த புத்தகத்தினை தேர்வு செய்ய வைத்தன. நாஞ்சில் எழுத்துகளை முதன்முறையாக நான் படிக்கப்போகிறேன் என்ற ஆவல் இருந்ததே தவிற வேறு ஒன்றும் பெரியதாக தோன்றவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் என் வாசிப்பு அனுபவத்தை புரட்டி போடப் போகிறது என்பதை எண்ணிக் கூட பார்க்கவில்லை.
இப்போது நான்கு கதைகளை தான் படித்து முடித்திருக்கிறேன். அதற்குள் இதுதான் சிறுகதை என இதுநாள் வரை நான் நினைத்திருந்த பின்பத்தை உடைத்தெரிந்துவிட்டன இந்த சிறுகதைகள். இயல்பான காட்சியமைப்பு இறுதியாக ஒரு மாறுபட்ட முடிவு என குமுதம், குங்குமம் வாரப் புத்தகங்களில் ஒரு பக்கத்தில் வருவதையோ, சில பக்கங்களில் காட்சிகளை விளக்கி நீதி சொல்லும் நீதிநெறிக் கதைகளோ, பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகளையோ வடிவத்தில் ஞாபகம் செய்யாமல் செல்லுகின்ற ஒவ்வொரு கதைகளையும் ரசித்து ரசித்து படித்தேன்.
இன்னும் படிக்க பதினொரு கதைகள் இருக்கின்றன என்பது, ஏதோ புதையலில் கிடைத்த தங்க காசுகளைப் போல மகிழ்ச்சியை தந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையின் தொடக்கமும் மிகுந்த கவணத்தோடு காட்சிகளை விவரிக்கின்றன. அந்தக் காட்சிகள் மனகண் முன் விரிகையில் அது கதை என்பதை மறந்து போயி அதற்குள் புதைந்து விடுகிறேன். தாய்கிழவியின் கணிவோடு தான் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக அந்தக் கதை சொல்லிவிட்டு முடிந்துவிடுகிறது. அதன்பின் அந்தக் கதையின் மாந்தர்கள் அதன் நிகழ்விடங்களில் சிறுது நேரம் மனத்திற்குள் வாழ்கின்றார்கள். அவர்களை அப்படியே விட்டுவிட்டு மனம் வேறு காரியங்களில் நுழைய மறுத்து மௌனமாக இருக்கிறது.
ஏதேனும் ஒரு கனத்தில் நான் உணர்ந்தவைகளை எழுத்தின் வடிவில் பார்ப்பது, எனக்கும் அந்த கதைகளுக்குமான இடைவெளியை இல்லாமல் செய்துவிடுகின்றன. கதைகள் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். சிலருக்கு இது வெறும் பிதற்றலாக தோன்றலாம். சிலருக்கு வேடிக்கையாக கூட இருக்கலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கருதும் ஒரு மகிழ்வான கனத்தினை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
கல்கியின் பார்த்திபன் கனவிற்கு அடுத்து இப்போதுதான், பெரும் எதிர்பார்ப்புடன் ஒரு நாவலை படிக்க தொடங்கியிருக்கிறேன். அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல். பார்த்திபன் கனவினை படிக்கும் போது, நான் பள்ளி செல்லும் மாணவன். மாலையில் கிடைக்கும் நேரத்தி்ல் எல்லாம் நாவல் என்னுடன் இருந்தது. குதிரையின் குளம்படி சத்தமும், வால்களில் ஓசையும், அந்தபுற ராணிகளின் குதுகல ஒலிகளும் மனகாதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்ததன. ராஜேஸ்குமார், சுபா என திரில் நாவல்களை படிக்கும் போது, அப்பா திட்டியிருக்கிறார். ஆனால் பார்த்திபன் கனவினை படிக்கும் போது ஒன்றும் சொல்லவில்லை. இந்த வாசி்ப்பு தளம் நோக்கி என்னை பயணப்பட வைத்தது அவர்தான் என நினைக்கிறேன். இதற்குதான் அவர் ஆசைப்பட்டிருக்கவும் கூடும்.
சரி விஷ்ணுபுரத்திற்கு வருவோம். வலைப்பூவில் ஜெயமோகன் அவர்களின் எழுத்துகளையும், சில கதைகளையும் படித்திருக்கிறேன். அவரை சிலர் இந்துத்துவாதி என குறிப்பிடுகின்றனர். எப்படி அமெரிக்காவில் கிருஸ்துவம் பற்றிய நிறைய படைப்புகள் வருகின்றனவோ, அதுபோல இங்கே இந்துமதம் பற்றிய படைப்புகள் வருகின்றன. அது வியாபார தந்திரமோ, சுற்றியிருக்கும் சமூகத்தின் காரணமாகவோ, இல்லை பெரும் காவியங்களின் பாதிப்போ எதுவென தெரியவில்லை. இந்து மதம் பிடிக்காத நடிகர்களை கூட வேலு, வேலாயுதம் என நடிக்கவைக்கும் காரணமும் அதுவாகத்தான் இருக்கும்.
இப்போதுதான் விஷ்ணுபுரத்திற்குள் நுழைந்திருக்கிறேன். பிரம்மாண்டமான கோவிலைக் கொண்ட விஷ்ணுபுரத்தில் விஷ்ணு படுத்திருப்பதைப் போல அங்கே ஒரு குஸ்டரோகியும் படுத்திருக்கிறான். அதைக் கண்டு ஒருவன் நிறைய சிந்தனை செய்கிறான். இல்லாத ஒரு கற்பனை நகரமன அதை எண்ணாமல், எங்கள் திருச்சி மாவட்டத்தின் திருவரங்கத்தினை மனதில் நிறுத்தி கதையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். விஷ்ணுபுரமும், திருவரங்கமும் எனக்கு ஒன்றாகவே தோன்றுகின்றன. என் கற்பனையில் விஷ்ணுபுரம் திருவரங்கத்தின் பெரும் உருவகமாகவே தோன்றுகிறது. காற்றில் ஒலியெழுப்பும் தூண்கள், மிகப் பிரம்மாண்டமான கோபுரங்கள், விஷ்ணு படுத்திருக்கும் விதம் என எல்லாம் ஏற்கனவே அறிமுகமானவையாக இருப்பதால், இது புனைவு என்பதை அடிக்கடி மறந்து போகிறேன். தொடக்கமே அலாதியாக இருக்கிறது. இன்னும் சரியாக பத்து அத்தியாங்கள் கூட படிக்காமல் விஷ்ணுபுரம் பற்றி மேலும் கூற இயலாது. எல்லாம் படித்துவிட்டு வருகிறேன். என்னுடைய வாசிப்பு அனுபவம் போல நீங்களும் உணர்ந்திருந்தால் நிச்சயம் அந்த புத்தகம் பற்றி கருத்துரையில் மறக்காமல் குறிப்பிடுங்கள் நண்பர்களே.

























